Thursday, December 04, 2014

ஃபிலிப் ஹ்யூஸின் மரணமும்..... மைக்கேல் க்ளார்க்கின் அற்புதமான அஞ்சலி உரையும்!





ஓர் 21 வயது ஆஸ்திரேலிய இளைஞன் "Baggy Green"   அணிந்து ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேச கிரிக்கெட் ஆடுவது அத்தனை எளிதான காரியமல்ல‌...... காரணம் அத்தனை வலுவானது ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட்டின் உள்கட்டமைப்பு! கில்கிறிஸ்ட், ஹேடன் போன்ற எத்தனையோ பேட்டிங் ஜாம்பவான்கள் தங்களின் சர்வதேச கேரியரின் முடிவில் அசாத்தியமான நம்பர்களைக் கைவசம் கொண்டிருக்காததின் காரணம் வயதின் அடிப்படையில் சற்று தாமதமாக தேசிய அணியில் இடம்பிடித்ததுதான்! அப்படிப்பட்ட ஆஸ்திரேலிய அணியில் இருபத்துஒன்று வயதே ஆன இளைஞனாகக் களமிறங்கிய ஓர் இளம் கிரிக்கெட் வீரன் இதோ தனது  25 வயதிலேயே, அணித்தலைவன் மைக்கேல் கிளார்க் உட்பட, எட்டுபேர் சுமக்கத் தனது இறுதிஊர்வலத்தையே முடித்துக்கொண்டு கல்லறைப் பெவிலியனில் உறங்கச் சென்றுவிட்டான்...... அந்தப்போட்டியில் அவனது ஸ்கோர் 63* ( நாட் அவுட்!)



23 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷான் அபாட் ஒரு மரணத்துக்குக் காரணமாகப்போகும் அந்த பயங்கர பவுன்சரை வீசியபோது நிச்சியம் உணர்ந்திருக்க மாட்டார் இந்தப் பந்தை ஏன் வீசினோமெனக் காலத்துக்கும் நினைத்து மருகப்போகிறோம் என்று! இன்னும் ஒரே வாரத்தில் 26  வயதில் அடியெடுத்து வைக்கவிருந்த ஃபிலிப் அந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 161 பந்துகளை சந்தித்து 63 ரன்களுடன் வலுவான அடித்தளத்துடன் பிட்சில் ஊன்றி நின்றுகொண்டிருக்கிறார்......
அபாட்டின் அதிவேகமான அந்தப் பந்து ஒரு துல்லியமான பவுன்ஸர்...... மிகச்சரியான அளவில் ஷார்ட்-லெங்தில் தரையைத் தொட்ட வேகத்தில் மேலெழும்பி எகிறியது!  பொதுவாகவே "ஹுக்" ஷாட்டில் வல்லவரான ஃபிலிப் ஹ்யூஸ் களத்தில் "இன்-ஃபார்"மில் நின்றுகொண்டிருக்கும்போது அந்தப் பவுன்சரைத் தற்காப்புடன் விலகிக்கொண்டு விட்டுவிட நினைக்கவில்லை....... லெக் ஸைடில் "ஹூக்" செய்ய பொஸிஷன் பிடித்தார்...... நேர்த்தியான ஃபுட் வொர்க்-குடன் சரியாகவே மட்டை வீசினாலும் அவரது கணிப்பு துளியளவு மிஸ்ஸானதற்குத்தான் தன் வாழ்க்கையையே விலையாகக் கொடுத்து விடைபெற்றிருக்கிறார் ஃபில்! பந்து வீசப்பட்ட வேகத்தை வைத்து ஷாட்டைக் கணித்த ஃபிலிப்பை, அபாட்டின் பந்து பிட்சில் குத்தி எகிறும்போது தனது வேகத்தை சற்று இழந்ததுதான் கொஞ்சம் ஏமாற்றிவிட்டது....... முழுவீச்சில் ஃபில் சுழற்றிய மட்டையில் சிக்காமல் லெக்-திசை நோக்கி முகம் திருப்பிய ஃபிலிப்பின் பின்னந்தலையை ஹெல்மெட்டையும் மீறிப் பந்து பதம் பார்த்தது! பந்தில் அடிபட்டு மிகச்சில நொடிகளே சுயநினைவுடன் இருந்தார்.... அரை நொடி நேரத்தில் மூளை செயலிழந்து ஓர் உடலாக "சொத்"தென்று ஃபிலிப் விழும் காட்சியைக் காணொளியில் கண்ட என்னாலேயே மறக்கமுடியவில்லை நேரடியாகக்கண்ட ஷான் அபாட் எப்படித்தான் அதை மறந்து மீண்டெழுந்து தன் கிரிக்கெட் வாழ்வைத் தொடரப் போகிறாரோ என்று தெரியவில்லை!

ஃபிலிப் இறுதிவரை சுயநினைவுக்குத் திரும்பாமலேயே விடைபெற்றுவிட்டார் ஒரேயடியாக!



ஃபிலிப்பைக் காப்பாற்றிவிடக் கடுமையாகப் போராடிய மருத்துவர்கள் இறுதியில் "பந்து தலையின் எந்தப் பகுதியைத் தாக்குகிறது என்பது மிகவும் முக்கியம்!" என்று சொல்லியிருக்கிறார்கள்.... செரிப்ரத்துக்குச் செல்லும் முக்கியமான மென்மை நரம்பை இந்த பவுன்சர் கடுமையாகத் தாக்கியதின் விளைவுதான் இந்த மரணம்! மேலும் மருத்துவர்கள்,' ஒரு மில்லிமீட்டர் விலகித் தலையில் பட்டிருந்தாலும் ஃபிலிப் உயிர்பிழைத்திருக்கலாம்' என்று அரிதினும் அரிதான அடிபட்டு ஃபிலிப் ஹ்யூஸ் த‌ன்னுயிர் இழந்திருப்பதாக இவ்விளையாட்டு விபத்தை விவரிக்கின்றனர்!



கிரிக்கெட் உலகமே ஸ்தம்பித்துப் போயிருக்கிறது....... ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் க்ளார்க் ஃபிலிப்புடன் மிகவும் தோழமையான உறவைக் கொண்டிருந்தவர் என்கிற முறையில் ஒவ்வொரு முறை இந்த மரணத்தைப் பற்றித் தான் மீடியாவுக்கு அறிவிக்கவேண்டியபோதும் உடைந்து அழுததை நாம் பார்த்தோம்! மேலும் நேற்று நடந்த இறுதி ஊர்வலத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் க்ளார்க் தனது ஆட்டக்கள சகோதரனான‌ ஃபிலிப் ஹ்யூஸின் நினைவுகளைத் தழுவி அழகான ஆங்கிலத்தில் ஓர் இலக்கிய உரையாற்றியுள்ளார் இந்த‌ இளம்வீரனின் இறுதி அஞ்சலிக் கூட்டத்தில்!



அந்தவுரையின் சாராம்சம் தமிழில்: 

" அவனுக்கு என்றுமே மேக்ஸ்வைலைப்  (ஃபிலிப்பின் சொந்தஊர்) பற்றியதொரு பெருமித உணர்வு உண்டு... அதன் காரனத்தை இதோ இப்பொழுது மிக எளிதாக உணர முடிகிறது!

வெறும் 25 வயதில் நம்மிடமிருந்து முழுமையாக எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டபோதும்........ எந்தவொரு நிமிடமும் அவனிடமிருந்து  வரக்கூடிய அவனது அழைப்புக்காகவோ அல்லது ஏதோவொரு மூலையில் அவன்முகம் தெரியப்போகும் கணத்திற்காகவோ நான் காத்திருக்கத்தான் போகிறேன்! இதனை அபத்தமென்று அறிந்திருந்தாலும் இதைத்தான் நாம் அவனது "ஆன்மா"வென்று அழைப்போமேயானால் அந்த அவனது "ஆன்மா" இன்னும் என்னுள் இருக்கின்றது அது என்றும் என்னைவிட்டு அகலாது!

வியாழனன்று இரவு சிட்னி மைதானத்தில் நடந்துபோய் அதன் நடுப்பகுதியில், அந்த ஆடுகளத்தில் சற்றுநேரம் நிற்கலானேன்!  அந்தப் புல்முனைகளில் என் பாதங்கள் நின்றிருக்க..... அதே புல்முனைகளின் மேல்பரப்பில் அவனும் நானும் மேலும் எத்தனையோ எங்கள் அணிவீரர்களும் பகிர்ந்துகொண்ட எவ்வளவோ பேட்டிங் பார்ட்னர்ஷிப்புகள்..... சிறுவர்களாக கிரிக்கெட் கனவுடன் எங்கள் தலையில் நாங்களே எழுதிக்கொண்ட கனவினை வாழ்ந்த தருணங்கள்....... இங்கிருந்து அவன் சேர்த்த ரன்களுக்காக இதோ சற்றே தொலைவிலிருக்கும் ஸ்டாண்டில் எழுந்து நின்று அவனுக்காய் ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம்...... இதோ இந்த ஆடுகளத்திலிருந்து அவன் பவுண்டரிக்குப் பந்துகளை எத்தனையோமுறை  அடித்தனுப்பிய சந்தோஷப் பொழுதுகள்.....! என்று எத்தனை நினைவுகள் இந்த ஆடுகளத்தில் பதிந்துகிடக்கின்றது! இன்று..... அவன் வாழ்வில் மீண்டெழமுடியாமல் வீழ்ந்துகிடந்ததும் இதே ஆடுகளப் புற்களின்மீதுதான்! அதே புற்களின் மேல் முழங்காலிட்டு ஒருமுறை அவற்றைத் தொட்டுப்பார்த்தேன்...... நாங்களிருவரும் இங்கு பேட்டிங் செய்த நாட்களில் ஃபிலிப்புடனான உரையாடல்கள்..... " தேநீர் இடைவேளைவரை நாமிருவரும் விக்கெட்டில் நிலைத்திருக்கவேண்டும்...."  என் அவன் சொன்ன தருணம்.... இன்னொரு தருணத்தில் நான் ஆடிய ஒரு லூஸ் ஷாட்டைப் பற்றி இதே ஆடுகளத்தில் அவன் அறிவுருத்தியது...... அன்றைய ஆட்டம் முடிந்ததும் இரவு என்ன படம் பார்க்கவேண்டுமென நாங்கள் பேசிக்கொண்டது.....மேலும் அர்த்தமில்லாத எத்தனையோ உரையாடல்களை நினைவுகூர்ந்தவனாய் நின்றிருந்தேன்!

"The heart of a man who lived his life for this wonderful game we play, whose soul enriched not just our sport but all of our lives."

"ஒரு மனிதனின் ஆனமா அவன் கால்பதித்த நிலங்களில் தன்னை இணைத்துக்கொள்கிறது" என்று பொதுவாகவே ஆஸ்திரேலியர்கள் நம்புகிறார்களே அதைத்தான் இந்த உணர்வு ஊர்ஜிதப்படுத்துகிறதா?! அவர்களின் கூற்று சரியானதுதான் என்றே நான் உணர்கிறேன் சிட்னி ஆடுகளத்தில் நின்றுகொன்டிருக்கும் இவ்வேளையில்..... அவனது ஆன்மா இந்த ஆடுகள நிலத்தைத் தொட்டிருக்கின்றது மேலும் இந்த ஆடுகளம் என்றும் என் வாழ்வில் புனிதமானதாகவே நினைவில்கொள்ளப்படும்..... அவனது உடனிருப்பை நான் என்றும் உணரும் களம் இது! மேலும் அவன் எப்படி இன்று உலகம் முழுதுமுள்ள இத்தனையாயிரம் மனித உள்ளங்களைத் தொட்டுவிட்டான் என்று எனக்கு எப்போதும் சொல்லப்போகும் நிலம் இது!

Is this what we call the spirit of cricket?!! கராச்சியில் வாழும் ஒரு சிறுமி தன் கைகளில் ஓர் எரியும் மெழுகுவர்த்தியை ஏந்தியவளாக என் சகோதரனுக்குத் தனது  அஞ்சலி செலுத்துகிறாள்.....  இந்த கிரிக்கெட் விளையாட்டின் மாஸ்டர்களான டெண்டுல்கரும், ஷேன் வார்னும், லாராவும் அவனது இழப்பினால் விழையும் தங்கள் துயரத்தை உலகுடன் பகிர்கிறார்கள்..... இதோ இந்த கிரிக்கெட்டின் ஆன்மாதான் எங்கள் அனைவரையும் ஒன்றாகப் பிணைக்கின்றது!

உலகக் கிரிக்கெட்டர்கள் அனைவரும் பகிரும் இந்த பிணைப்புதான் இன்று உலகின் அத்தனை கிரிக்கெட் வீரர்களையும் இன்று தங்கள் பேட்டைத் தொடவிடாமல் நிறுத்துகின்றது......... ஃபிலிப் யாரென்றே அறியாத மக்களைக் கூட லார்ட்ஸ் மைதான முகப்பில் அவனுக்காக மலர்களைக் குவிக்கச் செய்திருக்கின்றது..... இந்தப் பூமியில் கிரிக்கெட் ஆடப்படும் ஒவ்வொரு நாட்டிலும் ஃபிலிப்பிற்காகத் தங்களின் இதயப்பூர்வமான அஞ்சலிகளைக் காற்றில் கரைத்திருக்கின்றது! மேலும் எத்தனையோ வீரர்களை ஃபிலிப் தன் உயிருக்குப் போராடியபோது அவனைத் தேடி வரவைத்தது!

This is what makes our game the greatest game in the world.

நமது கிரிக்கெட்டில் கரைந்து என்றும் நிலைத்திருக்கப்போகும் ஃபிலிப்பின் ஆன்மா இதோ களத்தில் நாம் காதலிக்கும் இந்த ஆட்டத்தின் காவல்தெய்வமாக நிலைத்து நிற்கப்போகிறது.....  நாம் அவன் ஆன்மாவிற்கு செவிகொடுக்கவேண்டும்.....  ஆடுகளத்தில் அவன் ஆன்மாவுடன் கழித்த பொழுதுகளை அதே சந்தோஷத்துடன் உள்வாங்கி உளம்மகிழவேண்டும்..... அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்!


அமைதியில் உரைந்திடு என் இளைய சகோதரனே......... நானும் உன்னை சந்திப்பேன்! "


இந்த அற்புதமான உரையைத் தன் உயிர் மூச்சானது உணர்வுகளால் உதற, உணர்ச்சிப்பூர்வமாக வாசித்துமுடித்தார் மைக்கேல் க்ளார்க்!

உயிர்..... உன்னதமானது! வாழ்க்கை நிரந்தரமற்றது....... ஆன்மா அழிவில்லாதது! இந்த இளைஞன், இளம் வயதில் இன்னுயிர் நீத்துவிட்டபோதிலும், தன் ஆன்மாவைத் தனது சாதனைக் களத்தின் நிலப்பரப்பில் இணைத்துக்கொண்டுவிட்டான் ! இன்றுவரை வாழ அனுமதிக்கப்பட்டிருக்கும்  நமது சாம்பல்களும் என்றோ ஒருநாள் கங்கையிலோ காவிரியிலோ கரையட்டும்.... உடல்களும் மண்ணோடு உரமாகட்டும்...ஆனால் அழிவிலா நம் ஆன்மாக்கள் மட்டும்  நம் வினைகளாய் காற்றில் கரைந்து என்றென்றும் வாழட்டும்........ சம அலைவரிசைகளில் அது பேசிக்கொண்டே இருக்கட்டும்..... நாமும் அறியோம் என்று மறைவோமென்று......!

ஃபிலிப் ஹ்யூஸின் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலுடன்,

பிரபு எம்