Tuesday, September 26, 2017

”முதலமைச்சர் கமலஹாசன்” - மினி தொடர் - பாகம் 3 : ஆயுதம் அறிதல் (இறுதிப் பாகம்)

”தனிக்கட்சி துவங்குவது உறுதி.... அரசியலில் ஏற்கெனவே இறங்கிவிட்டேன்”

இரண்டாம் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்!




என்று கமல்ஹாசன் தெளிவாக அறிவித்தபின், தன்னிலையைச் சரியாக அவர் செதுக்குவதிலும், கூர் தீட்டுவதிலும் கவனம் காட்டிவருகிறார்.... நாம் நம்முடைய நிலையில்  நமக்கான எல்லைகளில் என்ன செய்வதென்ற தெளிவு கொள்ள முற்படுவோம்.....

இப்பொழுது நம்முன்னே இருப்பது அரசியலுக்கு வந்துவிட்ட, தனிக்கட்சி துவங்க அரசியல் சூழ்நிலைகளையும் மக்களின் மனநிலைகளையும் ஆராய்ந்து வரும் கமல்ஹாசன்!

இன்றைய சூழ்நிலையில் கமல்ஹாசனின் முன் இருக்கின்ற கடுமையான  சவால்களை எல்லாம் எதிர்கொண்டு வெற்றிகண்டு முதலமைச்சர் பொறுப்பு (பதவி அல்ல) என்னும் “முள்கிரீடம்” சூடுவது என்பது அத்தனை சாதாரணமான காரியம் அல்ல என்பதை அவரே அறிந்திருக்கிறார்... தனக்கான கொள்கைகளை, திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறார்....  நம்மளவில் நாம் நம் நிலைப்பாடுகளை வகுத்துக்கொண்டிருக்கிறோமா? மினிதொடரின் இறுதிப்பாகம் இதுவே - ஆயுதம் அறிதல்.

”கமல்ஹாசன் வேண்டுமானால் வெற்றிபெறலாம் ஆனால் மீதமுள்ள 233 தொகுதிகளுக்கு அவர் நிறுத்தப்போகும் வேட்பாளர்களால் வெல்ல முடியுமா? முதலில் அத்தனை வேட்பாளர்களை அவரால் அடையாளம் காட்ட முடியுமா?”  இதுபோன்ற கேள்விகளைத்தான் பலரும் முன்வைக்கின்றனர்.... இது போன்ற வாதங்களைக் கிழட்டுத்தனமானக் கோழைவாதங்களாகவே பார்க்கிறேன்..... காரணம் தனிக்கட்சி ஆரம்பித்து ஒரு மனிதர் தேர்தலை எதிர்க்கொள்ளப்போகிறேன் என்று அறிவித்தாலே அதற்கு 234 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றிக்காக உழைக்கப் போகிறேன் என்றுதானே அர்த்தம்?! அதில் வேட்பாளரை நிறுத்துவதும், வெற்றி பெற உழைப்பதும்  அவருடைய பிரச்னை.... முழுக்க முழுக்க அவரின் நேரம்... அவரின் உழைப்பு.... அவரின் முனைப்பு.... அவரின் வியூகம்..... எல்லாம் முடித்து தேர்தல் வந்தபின்பு அத்தனை தயாரிப்புகளும் முற்றுப்பெறப் போவது நமது இறுதி மதிப்பீட்டில் தானே!.... நம் முடிவுதான் நம்மை ஆளப்போகிறது... இதற்குமுன்பாக எதற்கு இந்த வேண்டாத ஆரூடம் நமக்கு? வெற்று ஆரூடங்கள்  தள்ளாமையின் அடையாளம்... இளமைக்கு அழகல்ல....!

இங்குதான் மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களாகிய நாமும் வேட்பாளர்களாகிய கமல் போன்றோரும் மாற்றத்தை நோக்கிய அவரவர் பாதைகளை முதலில் அறுதியிட்டுக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது....

சென்ற பாகத்தில் குறிப்பிட்டதுபோல தமிழகத்தின் அடுத்த தலைமுறைத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் மிக முக்கியமான தேர்வுக்களத்தில், வாக்குரிமை பெற்றத் தலைமுறையினராக நாம் இருக்கின்றோம்... நமது ஆகப்பெரிய பொறுப்பை ஆற்றுவதில் நம் அதிகபட்ச ஆயுதம் எதுவென முதலில் நாம் தேர்ந்துகொள்ள வேண்டும்.... ஜனநாயகம் அனுமதிக்கும் போராட்ட வடிவங்களில் பதாகைகளைத் தாங்கிக் களம் காணும் வலிமை கொண்ட அறவழி வீரர்கள் நம்மிடையே உண்டு. அவர்களுக்கு அகிம்சையெனும் ஆயுதமும் தொன்றுதொட்டு உண்டு அதை அவர்கள் அறிவார்ந்து கையாள வேண்டும். களமிறங்கிப் போராட வாய்ப்பில்லாதவர்களுக்கும் இறுதி ஆயுதம் ஒன்று உண்டு அதுவே ஆட்காட்டிவிரல் நம்மை ஆளப்போகும் ஆளைக் காட்டும் வாக்குரிமை ஆயுதம்!

ரோடுகளில் இருக்கும் மேடு பள்ளங்களுக்கு வளைந்துகொடுத்து, தெருவிளக்கு இல்லாத இருளுக்கு ஈடுகொடுத்து, உயிர்காத்து பயணிக்கும்போது, அடாவடியாக வழிமறித்து ஒரிஜினல் உரிமத்தைக் கேட்கும்போது  நரம்புகளில் எழுகின்ற கோப அழுத்தங்களை சேமிப்போம்.....  நாளும் பொழுதும் கண்விழித்துப் படித்துக் கனவுகளோடு கண்ணசந்த வேளையில் ’நீட்’டை இறக்கி இளந்தளிரைக் கண்மூடச்செய்த கயமை கண்டெழுந்த ரௌத்திரத்தை வடிந்திடாது பாதுகாப்போம்..... தலைவணங்கா தமிழினத்தை, இடுப்பெலும்பு வளைந்த ஈனகும்பல், அடக்குமுறை ஆணவக்கூட்டத்திடம் அடகுவைத்த ஒவ்வொரு கணத்தையும் கண்களில் பொருத்திக்கொண்டே தினம் கண்துயில்வோம்..... எத்தனை நாள் ஒத்திவைத்தாலும் தேர்தல் என்று ஒன்று வந்தே தீரும்..... அன்று காட்டுவோம் நம் ஆயுதபலத்தை.... ஆட்காட்டிவிரல் நுனியில்....!

அதுவரையில் நமக்கிருக்கும் அதிமுக்கியப் பணிகள்.....
ஒன்று எதிரிகளை ஒருமைப்படுத்துவது......
இரண்டு  நம்மில் இருக்கும் பலமான ஆளுமைகளை ஒருங்கிணைப்பது.....

ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்கும் நாளில் தான் வீழ்த்தப்போகும் முக்கிய எதிரியை இப்போதே இறுதிசெய்வோம்..... எவ்விதக் குழப்பமுமின்றி தெளிவுற நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது யாரை எதிர்த்து நாம் வாக்களிக்கப்போகிறோம் என்பதைத்தான் அந்தத் தெளிவுதான் யாருக்கு நம் வோட்டு என்ற தெளிந்த தேர்வை நோக்கி நம்மை வழிநடத்தும்..

அதைவிட முக்கியம் இப்போதைய மாற்றத்துக்கான ஆளுமைகளை ஒருமுகப்படுத்துவது! கமல்ஹாசனை மட்டும் இங்கே குறிப்பிடவில்லை.... என்போன்றோர் கமலை நம்புகிறோம்...... சிலர் திருமுருகன் காந்தி போன்றோரை உற்று நோக்குகிறார்கள்..... கரு.பழனியப்பனைக் கூர்ந்து கவனிக்கிறார்கள்.... இன்னும் பலவிதமான முயற்சிகளை அறம்சார்ந்து முன்னெடுத்துக்கொண்டிருக்கும் பலர் இருக்கிறார்கள் ஆனால் இவர்களுக்குள் நட்பு தேவையில்லை என்றாலும் பொதுவான எதிரியை வைத்துக்கொள்ளலாமே!

இவர்கள் ஒருவரையொருவர் நகங்களால் கீறீக்கொள்வதைத் தவிர்த்து ஆளும் சோம்பேறிகளுக்கு எதிராக முதலில் திரளலாமே! எதிரிகளை எழமுடியாத அளவு வீழ்த்தும்வரை ஒன்றாக செயல்படக்கூட வேண்டாம் ஒற்றை இலக்கை நோக்கி மாத்திரம் அவரவர் திசைகளிலிருந்தே அம்புகள் எய்யலாமே, அவர்களுக்குள்ளே கிழித்துக்கொள்ளாமல்! அயோக்கியனெல்லாம் ஒரே அணியில் இருக்கும்போது அம்புகளை ஒரே திசையில் குறிவைக்காமல் இன்னும் யாருடைய வில் வலியது என்று பட்டிமன்றம் எதற்கு என்பதுதான் புரியவில்லை! ஆதரவாளர்களாவது இதைப் பின்பற்றுவோமே..... கயவர்களை வீழ்த்தியபின்னர் உரிமைக்குப் போர் புரிதல் வீரருக்கு அழகு!

சென்ற பாகத்தின் முடிவில் அணுகியிருந்த கேள்வி-பதில்களில் திமுகவுடன் இணங்கித்தான் கமல் வருகிறாரா என்னும் சந்தேகத்துக்குச் சரியான பதில் சொல்லவில்லை என்று என் நண்பன் முகநூலில் குறிப்பிட்டிருந்தான் அதற்கு என்னளவிலான விளக்கம்....

திமுக தான் அதிமுகவுக்கு வலுவான எதிர்முகாம், அவர்கள் கட்சியில் தான் இணையப் போவதில்லை என்று கமல் அறிவித்துவிட்டார்.... தனிக்கட்சி என்று அறிவித்துவிட்டாலே அது திமுகவுக்கும் சேர்த்துத்தான் பின்னடைவு ஏற்படுத்தும்... பின்னாளில் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியங்களைப் பற்றி கமல்ஹாசன்தான் முடிவெடுக்க முடியும் அதை அங்கீகரிப்பதும் அங்கீகரிக்காததும் அவரவர் முடிவு.... சூழ்நிலைகளையும் மனத்தடைகளையும் பொறுத்தது! பொதுவாகவே எதிர்க்கட்சிகள் ஒன்றையொன்று விமர்சித்துக் கொள்வது என்னைப் பொறுத்தவரை குழப்பமான  அணுகுமுறை! (இதைத்தான் விஜயகாந்த் தெளிவாக செய்தார்!) எனவே இப்போதைக்கு ஆள்கிறவர்களை மட்டுமே கமல் கடுமையாக எதிர்ப்பது சரியான அணுகுமுறையே! சிந்தாமல் சிதறாமல் அடித்தால்தான் தகுதியின்றி ஆளும் கூட்டத்தை தடமின்றி அகற்ற முடியும்!

தெளிந்த மனதோடு கமல்ஹாசன் கொடுக்கும் பேட்டிகளை, கேள்விகளை நிதானமாக எதிர்கொள்ளும் பாங்கினை, மீடியாவின் பிரேக்கிங் நியூஸ் பசிக்கு இரையாகிவிடாத லாவகத்தை, பதற்றமும் அவசரமும் இன்றி ஊடகங்களை சந்திக்கும் துணிவை, தடுமாறாத தமிழை இயல்பாக ரசிக்க முடிகிறது...   நம்பகமான நகர்வுகள் மீது நம்பிக்கை கொள்ளத் தோன்றியவர்கள் நம்புகிறோம்! அதீத சந்தேகங்கள் யாவரின் மனதிலும் விரவிக் கிடக்கும் வேளையிது கமல்ஹாசன் போன்றோர் தங்களுடைய ஒவ்வொரு நகர்விலும் உச்சபட்ச கவனம் செலுத்தவேண்டியது அவசியம். கமல்ஹாசன் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளட்டும் நாம் நம்மைத் தயார்படுத்திக்கொள்வோம் யார்மீது நம்பிக்கை வருகிறதோ அவர்களையே நம்புவோம்....! மீண்டும் அழுத்திக் கூற விழைகிறேன் “நம்புவோம்”.

இத்துடன் இந்த மினிதொடர் முற்றுப்பெறுகின்றது! தொடர்ந்து வாசித்து, மறுமொழி கொடுத்து, அலைபேசியில் விவாதித்து என்னுடன் பங்குகொண்ட அத்தனை நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..... மாற்றத்தை வேண்டும் ஒரு கெஞ்சலின் ஒரு பகுதிதான் இந்தத் தொடர்..... அதீத எதிர்பார்ப்புகளை ஏறக்கட்டிவிட்டு அத்தியாவசியங்களை நிலைநாட்டும் ஏதேனும் ஒரு நிலையான ஆளுமையின் மேல் நம்பிக்கையை விதைக்க இதுவே ஏற்ற நேரம் விதைக்கும் காலத்தில் விழிப்புடன் இருக்குமாறு நட்புடன் கெஞ்சுகிறேன்.... அறுவடை நேரத்தில் சந்திப்போம்..... நம்பிக்கையுடன்!

தொடர் முற்றும்.... ஆனால் தொடர்ந்து பேசுவோம்!

அன்புடன்,

பிரபு எம்.


















Wednesday, September 20, 2017

”முதலமைச்சர் கமலஹாசன்” - மினிதொடர் - பாகம்-2 : எதிர்பார்ப்பு vs நம்பிக்கை

 நண்பர்கள் கொடுத்த பின்னூட்டங்களுக்கும், சமூக வலைதளப் பகிர்வுகளுக்கும் நன்றி.

மூன்றாம் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்
முதல் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்.



கமல் என்னும் தலைமையைப் பற்றிய உரையாடல்களிலும் சமூக வலைதளங்கள் மற்றும் பொது இணையதளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துகளில் பெரும்பான்மைக் கருத்துக்கள் அரசியல் கமலுக்கு ஆதரவானவையே! இருப்பினும் இந்தத் தொடருக்காக சேகரிக்கப்பட்டவை எதிர்க்கருத்துக்கள் மட்டுமே. எதிர்மறை எண்ணவோட்டங்களை  கட்டுடைத்து பார்த்து அவையெல்லாம்  குவியம் கொள்ளும் புள்ளிகளைத் தொட்ட சில கருத்துக்களையே இந்த தொடரின் இரண்டாம் பாகத்தில் விவாதிக்கிறோம்..... 

வாழ்க்கையில் வரப்போகும் இன்னல்களையும் துரதிர்ஷ்டங்களையும் வருமுன்பே எதிர்பார்ப்பது  மனதளவில் அவற்றின் தாக்கங்களை சற்று குறைக்கும் என்று சோதிடத்தில் நம்பிக்கை கொண்ட நண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்...... ஆனால் அதுவே வாழ்வின் இன்பங்களையும் வெற்றிகளையும் அதீதமான எதிர்பார்ப்புகளுடன் அணுகும்போது அவை நல்லதாகவே அமைந்தாலும்கூட எல்லையற்ற எதிர்பார்ப்புகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் உளரீதியாக சற்று தரம் குறைந்துதான் போகிறதோ என்னும் எண்ணத்தைப் பலமுறை வாழ்விலேயே கவனித்திருக்கிறேன். சம்பள அப்ரைசல் முதல் சமீபகால ஷங்கர் படங்கள் வரைக்கும் ”எதிர்பார்ப்புகள்” தான் ஏமாற்றங்களை எழச்செய்யும் முக்கிய காரணிகளாவதை உணர்ந்திருக்கிறேன்....!

ஆனால்... ஏமாற்றத்தையே எதிர்பார்த்து  இரு கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்துப் பழகிவிட்ட நாம், தமிழகத்தின் “தலைமை” வெற்றிடத்துக்கு விண்ணப்பிக்கும் புதியவர்களிடம் மட்டும் சற்று மிகுதியான ”எதிர்பார்ப்புகளைத்” திணித்துக் கொண்டிருக்கிறோமோ என்கிற எண்ணம் மேலோங்குவதைத் தவிர்க்க முடியவில்லை!

தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளை நாம் முற்றிலுமாக இழந்துவிட்டோம் இனி அவர்கள் இல்லை என்பதை முதலில் அழுத்தம் திருத்தமாக ஒவ்வொரு தமிழனும் அவசரமாகத் தங்கள் மனதில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய  கட்டாயத்தில் இருக்கிறோம்....  கூவத்தூர் கூத்துக்களையும், தெர்மாக்கூல் விஞ்ஞானத்தையும் பார்த்து அதிர்ந்தோம்,  வலிமையான போராட்டங்களில் கூட காவல்துறையின் வன்முறையால் உதிர்ந்தோம்,  நீட் பிரச்னையை ஆளாளுக்கு நீட்டி முழக்கியதில் அனிதாவின் இழப்பில் மனதளவில் இடிந்தோம்! ஆனால் இன்னும் இன்னும் இன்னும் ஒன்றை ஒன்று மிஞ்சிக்கொண்டு அனுதினமும் அரங்கேறும் பேரபத்த நகர்வுகளால்  நம் மாநிலத்தைக் கவ்வப்போகும் பேராபத்தை  நாம் உணர்ந்தும் உணராமல் இருப்பதற்கு ஒரே காரணம், இதுவரை சுயமரியாதை காத்த, மாநில இறையாண்மைக்கு இரும்பு அரண் அமைத்திருந்த இரண்டு முக்கிய ஆளுமைகளை நாம் முற்றிலுமாக இழந்துவிட்டதை இன்னும் நம் ஆழ்மனது ஏற்றுக்கொள்ளாததே ஆகும்! மரணங்களைக் கடந்து விடலாம் ஆனால் அதன் இழப்பை ஏற்றுக்கொள்ளத்தான் காலம் பிடிக்கும் என்பதுதான் அனுபவ அறிவு! ஆனால் தற்போது காலம் தாழ்த்த நம்மிடம் மணித்துளிகள் இல்லை எனும் நிதர்சனம்தான் அபாயச் சங்கு ஊதுகிறது!...... தற்கால போலித் தலைமைகள் முன்பிருந்த துதிபாடலைவிட இருமடங்கு அதிகமாய் வார்த்தைக்கு வார்த்தை முந்தைய தலைவர்களின் பெயர்களை வலுக்கட்டாயமாக உச்சரிப்பதன் தேவை இதுவேதான்...அதாவது அவர்கள் இனி இல்லவே இல்லை என்கிற  நிரந்தர வெற்றிடத்தை மக்களின் ஆழ்மனம் ஏற்றுக்கொள்வதைத் தங்களால் இயன்றவரை மக்கள் மனங்களிலிருந்து காலந்தாழ்த்தி அந்த இடைவெளியில் தாங்கள் வேர்விட்டுக்கொள்வது!

பழையன கழிந்தாயிற்று இனி புதிய தலைவர்களை அவர்களின் நோக்கம் ஆராய்ந்து நாம் தான் கை தூக்கி விடவேண்டும்! ஆனால் நாமோ எல்லையற்ற “எதிர்பார்ப்புகளை” அவர்கள் மீது திணிப்பதும், அரை நூற்றாண்டுகளாக நம் பாரம்பரியத் தலைமைகளையே திணறடித்த நீர், உழவு, மின்சாரம், கல்வி போன்ற நெடுங்காலப் பிரச்னைகளுக்கு ஒற்றைத் தீர்வை முன்மொழியச் சொல்லி முட்டுக்கட்டைப் போடுவதுமாய் மேதாவித்தனத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறோம்! இப்பொழுது இவர்களிடம் நாம் காட்டும் இந்த அதீத எச்சரிக்கை உணர்வை நம் ஓட்டுகள் விற்பனைக்கு விலைபேசப்படும் கலாச்சாரம் சகஜமாகி  போன போது எங்கே வைத்திருந்தோம்? இலவசங்களுக்கு இளித்த வாயுடன் வாக்களித்தபோதெல்லாம் இந்த அதிபுத்திசாலிக் கேள்விகளைக் கேட்க ஏன் மறந்தோம்?!

கேள்விகள் கேட்பதைப் பிழை சொல்லவே இல்லை கேள்விகள் மட்டுமே நம் ஆயுதம்... தமிழனின் ஒற்றை ஆயுதமான வினாக்களை நம் தமிழிலக்கணம் அறிவினா, அறியாவினா, ஐயவினா, கொளல்வினா, கொடைவினா, ஏவல்வினா என வகைப்படுத்தி வைத்துள்ளது! இதில் ”அறிவினா” என்பது கேள்விக்கான பதிலை அறிந்துவைத்துக்கொண்டு எதிராளியிடம் கேட்டுச் சோதிப்பது..... ”அறியாவினா” என்பது நமக்குத் தெரியாத பதிலைக் கேட்டறியத் தொடுப்பது!  நம்மை ஆளப்போகும் நம்மில் ஒருவனைத் தேர்ந்தெடுக்கும் நேர்காணல்களில் நமக்கே பதில் தெரியாத அறியாவினாக்களைக் கேட்பது நியாயமல்ல.... அறிவினாக்கள்தான் ஆள வருபவனை ஆய்ந்தறிய உதவும்! இதைத்தான் சொல்ல விழைகிறேன் கேள்வி கேட்பதன் நியாயத்தையும் பொறுப்புணர்வையும் உணரக்கோரும் ஒரு கெஞ்சல்தான் இது.

வருங்காலத் தமிழகத்துக்கு வரைபடத்தை முன்மொழியும் சமகால ஆளுமைகளில் ஆகச் சிறந்தவராகக் கமல்ஹாசன் என் கண்களுக்குத் தென்படும் காரணங்களை அடுத்த பாகத்தில்  தேவையிருந்தால் அலசலாம்!

இப்போது வருவோம் கமல்ஹாசன் மீது வைக்கப்படும் சில கேள்விகளுக்கு!

1) ஜெயலலிதா இருந்தபோது கமல்ஹாசன் எங்கேயிருந்தார்? அப்போதெல்லாம் இந்தச் சத்தம் கேட்கவில்லையே?

அதான் ஜெயலலிதா இருந்தாரே! அவரிடம் கலைஞர் என்றொருவர் நாளும் பல கேளிவிகளும் கடுமையான எதிர்ப்பறிக்கைகளும் எழுதிவந்தாரே?
ஜெயலலிதா இருந்திருந்தால் அனிதாவின் மரணம் நிகழ்ந்திருக்காது, நீட் தேர்வு வந்திருக்காது, காவிரி மேலாண்மை அமைந்திருக்கும், விவசாயம் செழித்திருக்கும் என்று ஆரூடம் கூறுபவர்கள்தான் மேற்படி கேள்வியையும் கேட்பவர்களாக இருக்கிறார்கள்..... பிறகு எதற்கு கமல்ஹாசனின் சத்தத்தைக் கேட்கவில்லை என்கிறார்கள்? தமிழகத்தைப் பார்த்துக்கொள்ள ஆளிருந்ததால் விவசாயிகள் விவசாயம் செய்துகொண்டிருந்தார்கள், மாணவர்கள் படித்துக்கொண்டிருந்தார்கள், கமல்ஹாசன் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தார்!


2) ட்விட்டரில் முழங்குவதுதான் கமலைப் பொறுத்தவரை அரசியலா?

அவர் முழங்குவது மக்களின் காதுகளுக்குப் போய் சேருகிறதே! அவை திசைகள் எங்கும் எதிரொலிக்கின்றதே, வேறு என்ன வேண்டும்? திருவள்ளுவர் ஏன் திருக்குறளை ஓலைச்சுவடியில் எழுதவேண்டும் என்று கேட்பீர்களா? அதைப் போல்தான் இருக்கிறது கமல்ஹாசன் ஏன் ட்விட்டரில் முழங்க வேண்டும் என்கிற கேள்வி.... கமல்ஹாசன் தன் கேள்விகளைப் பொதுவில் பதிவு செய்கிறார்..... அந்தக் கேள்விகளுக்குப் பதில் எங்கே? பதில் சொல்லவேண்டியவர்கள் எங்கே? பதில் சொல்லத் திராணி இல்லையா? அல்லது பதில்களே இல்லையா? முதலில் நம் மனதில் எழவேண்டிய கேள்வி இவையாக அல்லவா இருக்கவேண்டும்? மக்கள் கேள்வி கேட்கவேண்டும் என்று வற்புறுத்துபவர்கள் ஏன் மக்களில் ஒருவனாகக் கமல் கேட்கும் கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி கேட்கவேண்டும்?


3) கமலுக்குப் பின்னால் திமுக இருக்கிறதா? பிஜேபி கூட இருக்குமோ?

டீக்கடைகளில் இயற்றப்படும் அரசியல் அனுமானங்கள், நம் “துப்பறிவாளர்”களையெல்லாம் மிஞ்சக் கூடியது! மெய்ப்பொருள் காண்பதே அறிவு! என்னைப் பொறுத்தவரை கோடிகளில் சம்பாதிக்கும் நடிகர் கமல்ஹாசன், போத்தீஸ் விளம்பரத்துக்கும், பிக்பாஸுக்கும் அடியெடுத்து வைத்தாலே ஆயுளுக்கும் சம்பாதிக்கும் சாத்தியம் இருக்கும்போது இப்படிக் கட்சிகளுக்கு குடுகுடுப்பு வேலை பார்க்க வந்துத் தன் ஒரே மூலதனமான நன்மதிப்பை கெடுத்துக்கொள்ளத் துணிவாரா? அத்தகைய அறிவற்றவராகவா கமலை உங்கள் உள்ளுணர்வு சந்தேகிக்கிறது?


4) கமலின் கொள்கைகள் என்ன?

இதற்குப் பதிலைச் சொல்லாமலா முதலமைச்சர் ஆகிவிடப் போகிறார்?
தனது சித்தாந்தங்களுக்குப் பொருந்தும் கட்சிகள் இல்லாத காரணத்தினால்தான் தனிக்கட்சியை நோக்கி நகர்கிறேன் என்று கருத்து தெரிவித்திருக்கிறாரே..... தளிர் நிலையிலேயே சித்தாந்தரீதியாக அரசியல் பயணத்தைக் கட்டமைக்க எண்ணும் பக்குவம் கொள்கைகளை வகுத்துக்கொள்ளாமலா கட்சியைத் தோற்றுவிக்கும் என்று நினைக்கிறீர்கள்?
பல்வேறு நிலைகளில் பேச்சுக்கள் மற்றும் பேட்டிகள் மூலம் தனது கொள்கைகளைக் கமல்ஹாசன் தன் பொதுவாழ்வின் ஆரம்பத்திலிருந்தே பதிவு செய்துதான் வந்திருக்கிறார்.

5) முக்கியப் பிரச்னைகளில் கமலின் நிலைப்பாடு என்ன?

இதற்கான பதிலை முந்தைய பத்திகளிலேயே விவாதித்து விட்டோம்.

6) கமல் இதுவரை எந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்?

கமல் இதற்கு முன்னர் முன்னெடுத்த போராட்டங்களைப் பற்றி அவ்வப்போது பேசியிருக்கிறார் (சமீபத்தைய உதாரணம் இளமைக் காலத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடியது பற்றிப் பேசியது) ஆனால் தனது மகளைப் பள்ளியில் சேர்க்கையில் ஜாதியைக் குறிப்பிடமாட்டேன் என்று ஒரு போராட்டம் நடத்தியிருக்கிறார் அந்தத் தெளிவான போராட்டம் ஒன்று போதும் போலி அரசியல்வாதிகளின் போலித்தனமான போராட்டங்களைத் தோலுறித்துக் காட்ட!


இதுபோன்ற கேள்விகள் எல்லாம் என் மனதுக்கு சத்துள்ளவையாகத் தோன்றவே இல்லை ஆனால் ஒரு கேள்வி மட்டும் மனதில் சற்று ஆழமாக ஊடுறுவுகிறது.....

அதற்குக் கமல்ஹாசன்தான் பதில் சொல்ல வேண்டும்......

* கமல்ஹாசனுக்கு சினிமா தாகம் முற்றிலும் வற்றிவிட்டதா? சினிமாவை முற்றிலுமாக விட்டுவிடும் இந்த ஆகப்பெரிய முடிவைத் தடாலடியாக எப்படி எடுக்கத் துணிந்தார்? உண்மையில் கமல் தன் கலைப் பயணத்துக்கு மூட்டை கட்டிவிட்டு தலைமை தாங்க முழுமனதுடன் வந்துவிடுவாரா??

என்னும் கேள்விதான் அது!

கமல்ஹாசன் போன்ற ஒருவரை வருங்காலத் தலைமையாக ஏற்கும் என்போன்றோர் நிறைய பேர் இருக்கிறார்கள் என்றே அறிகிறேன்.... திட்டங்களைக் கமல் சரியாக வகுப்பார் என்னும் நம்பிக்கை இருக்கிறது.... சீக்கிரம் வகுக்க வேண்டும் எனும் தவிப்பும் இருக்கிறது!

என்னைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் உங்களின் மனது ஏற்றுக்கொள்ளும் தலைமையை ஆய்ந்தறியுங்கள் ஆனால் இந்த ஆட்டத்துக்கு உங்கள் தலைவன் மீதான “எதிர்பார்ப்புகளை” அடுக்குவது உதவாது மாறாக அவர்மீது வலுவானதொரு ”நம்பிக்கை”பிறக்கிறதா என்று மட்டும் பாருங்கள்! “எதிர்பார்ப்பு” முடிவில்லாத் தாமதத்தையே விளைவிக்கும் “நம்பிக்கை”எதிர்காலத்தைக் கட்டமைக்கும்!

எதிர்பார்ப்புகளுக்கு எல்லையற்றுப் போனால் ஏமாற்றமே மிஞ்சும்....
எல்லைகள் கடந்த நம்பிக்கை வைப்பது சாத்தியமானால் ஒரு தலைவன் உதயமாவான்!

அடுத்த பாகத்தில் சந்திப்போம்!

அன்புடன்,
பிரபு எம்












Monday, September 18, 2017

”முதலமைச்சர் கமலஹாசன்” - மினி தொடர் - பாகம் 1 : முன்னுரை

அடி பிறழாமல் கமல் போட்ட சில ட்வீட்களுக்கே கதி கலங்கிப்போனது பட்டெக்ஸில் பசை தடவி அரியணையில் அமர்ந்திருக்கும் இந்த அறம்கெட்ட அரசாங்கம்!

இரண்டாம் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்!



தமிழகத்துக்கு இப்படியா ஒரு சோதனைக்காலம் வரவேண்டும்?
இப்போதைய சூழலில் ஜெயலலிதாவின் மரணத்துக்கு திமுககாரர்களும் வருத்தப்படுகிறார்கள்... கலைஞரின் வெற்றிடத்தை அதிமுக அபிமானிகளும் வெறித்துப் பார்த்து வேதனைப்படுகிறார்கள்! சிங்கங்கள் இல்லாத காட்டுக்குள் ஓநாயும் நரியும் ஆட்சியைப் பிடித்துக்கொள்ள தூர தேசத்துக் கழுதைப் புலிகளும் காட்டு நாய்களும் அதிகாரத்துடன் மேற்பார்வை செய்கின்றன. 
தலையலடித்துக்கொண்டு அகிம்சையாய் வாழும் வரிப்புலிகளாய்த் தமிழர்கள்!

தலைமை என்ற ஒன்றின் அவசியத்தை ஒவ்வொரு குழுவும் புரிந்துணர்ந்து செயல்படத் தமிழனுக்குக் காலம் வைத்திருக்கும் அமிலச் சோதனையாய்த்தான் நகர்கிறது நிகழ்காலம். ஒரு கட்சியோ இயக்கமோ ஏன் குடும்பங்களில் கூட அடுத்தடுத்த அடுக்குகளில் ஒருவருக்கு மாற்றாக அடையாளம் காணப்படவேண்டிய தலைமைகள் அதாவது ஆளுமைகள் இருந்தே ஆகவேண்டும்! தலைமையை விட்டுக்கொடுக்க மனமில்லாத  முதுமைகளும், தலைமையைப் பொறுப்பாக எண்ணாமல் பதவியாக அனுபவிக்கும் அவசரத்தில் தனி ஆவர்த்தனம் செய்யப் புறப்பட்டுவிட்ட சில இளமைகளும் சேர்ந்துதான் இன்று தமிழினத்தை அனாதையாக்கியிருக்கின்றனர்..... ஆட்சி கிடைத்துவிட்ட அடிமைகளோ, தம் இனத்தை அடகு வைத்திடவே துணிந்துவிட்டனர்!

இந்த மாபெரும் பொறுப்புக்கு ஒவ்வொரு முகாமும் காட்டும் மாற்று முகங்கள் ஒன்றுகூட முழு நம்பிக்கைக்கு உகந்ததாய் இல்லாமல் போனது துரதிர்ஷ்டத்தின் உச்சம்!

புதுமுகத் தேடல் ஒரு புறம்..... 96-ல் கிட்டத்தட்ட தலைமையாய்ப் பளிச்சிட்ட ஒரு முகம் மீண்டும் வந்து கிச்சுக்கிச்சு மூட்டிய வேளையில் மீண்டும் சினிமாவிலிருந்தா? மறுபடியும் முதலில் இருந்தா? என்று எழுந்த அனுபவ ஆதங்கங்கள் இன்னொரு புறம்! இவ்வேளையில் தான் ட்விட்டரில் இருந்து மிகவும் பரிச்சியப்பட்ட ஒரு குரல் ஒலித்தது!
புரிந்துகொள்ளக் கஷ்டப்பட்டாலும் இம்முறை குழப்பமில்லை குரலில்!

கமல்ஹாசன்.......

சமகாலப் பகட்டுத் தனங்களைத் தன் கேள்விகளால் கூறு போடும் புதுமுக அரசியல் தமிழன்!

முத்தமிழ் அறிந்த திரைத் தமிழ் வித்தகன், அரசியல் தமிழில் நிகழ்காலக் கேள்விகளின் நாயகன் ஆனது மொக்கைப் படமாய்ப் போய்க்கொண்டிருந்த தமிழக அரசியலில் இண்டெர்நெட் வழியே வந்த விறுவிறு இண்டர்வெல் ப்ளாக்! (Interval block)

எதிர்பாராத திசையிலிருந்து வந்திருக்கும் இந்த நாயகனின் மேல் இயல்பாக நம்பிக்கை பிறந்ததற்கு எவ்விதக் கவச்சியும் காரணமல்ல என்பதை ஊர்ஜிதம் செய்தபின் தான் இதனை எழுதத் துவங்கினேன் எனவே தொடர்வதற்கு ஐயமில்லை. அரசியல்வாதி கமல் என்று இனிமேல்தான் புதிதாக அழைக்கத் தயாராகிறோம் என்றால் நாம் காலத்தால் மிகவும் தாமதப்பட்டுப் போவதற்கே சாத்தியம் அதிகம்,  ஏனென்றால் இப்போதைக்குத் தமிழகத் தீவிர அரசியலில் ஆளும் வர்க்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் எதிர்க்கட்சியாக செயல்படுவதில் கமல்ஹாசனுக்குத் தான் முதலிடம் என்று தோன்றுகிறது!

எனவே இனியும் காலதாமதமின்றி, “கமல் முதல்வரானால்...” என்று சாதக பாதகங்களை விவாதித்துப் பார்க்கும் ஒரு முயற்சிதான் இது.... எதிர்பார்ப்புகளையும் சந்தேகங்களையும் அடுக்கிப் பார்க்கலாம்..... ”முதலமைச்சர் கமல்ஹாசன்” என்னும் வினோத வாக்கியத்தில்  அமைத்து எழுதக்கூடிய சொற்களையெல்லாம் தொகுத்துப் பார்க்கலாம்.....

கமல் கேட்கும் கேள்விகளைவிட அரசியல் ரீதியாக கமலை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகளும் இப்போது ரொம்பவே சூடாக வந்து விழுகின்றன.... அவற்றிலிருந்தே விவாதங்களைத் தொடங்கலாம் அடுத்த பாகத்திலிருந்து......
சில ரிப்பீட்டட் க்வெஸ்டின்ஸ் இங்கே......

1) மீண்டும் ஒருமுறை சினிமாவில் இருந்துதான் தமிழகத்துக்குத் தலைமை வரவேண்டுமா?

2) கமலுக்குப் பின்னே ஏதேனும் கட்சிக்காரர்கள் ஒளிந்திருக்கிறார்களா?

3) ட்விட்டரில் குரல் கொடுத்தால் மட்டும் போதுமா?

4) ரஜினியுடன் இணைந்து செயலாற்றுவாரா அல்லது தனித்து வரவேண்டுமா?

5) தனிக்கட்சி துவங்கவேண்டுமா அல்லது ஏதேனும் கட்சியில் இணைய வேண்டுமா?

6) கமலின் கொள்கைகள் என்ன? காவிரி, விவசாயம், நீட் போன்ற பிரச்னைகளில் நிலைப்பாடு என்ன?


இது போன்ற பொதுவான கேள்விகளுடன் அடுத்த அத்தியாயத்தில் பகிர்வைத் தொடங்குவோம்.....

மறுமொழிகள், பின்னூட்டங்கள் மூலமாக இதை உரையாடலாகத் தொடரலாம் எனவே உங்கள் கருத்துக்களை கேள்விகளை தயவுசெய்து பின்னூட்டங்களில் குறிப்பிடுங்கள்.....


இரண்டாம் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்!


அன்புடன்,

பிரபு. எம்



Thursday, September 14, 2017

துப்பறிவாளன் [U/A] (2017) - விமர்சனம்

வில்லன் எகிறுவதற்கு முன்பாகவே ஷோல்டரைத் தூக்கி சண்டைக்குத் தயாராகிவிடும் விஷாலை ஷெர்லாக் ஹோல்ம்ஸாக்கித் துப்பறிய வைத்திருக்கிறார் மிஷ்கின்!



தனியார் துப்பறிவாளர் கணியன்பூங்குன்றனாக விஷால், அவரது உதவியாளர்/ நண்பர் மனோவாக பிரசன்னா.... ஷேர்லக்ஹோம்ஸ் - வாட்ஸன் மாடலிலேயே ஒரு க்ளாஸிக்கல் ஸ்டைலில் ஆஃபீஸ், பல அடுக்குப் புத்தகங்கள், ட்ரேட்மார்க் இருக்கை என ஹோம்ஸ் படங்களைப் பார்த்தவர்களும் கதைகள் படித்தவர்களும் மிக எளிதில் கனெக்ட் ஆகிவிடுமாறு நேரடியாகக் கதைசொல்லத் துவங்கியிருக்கிறார் மிஷ்கின்!

அதற்கு முன்னமே படம் ஓபன் ஆன வேகத்திலேயே திரையில் இரண்டு மரணங்கள்! இடிமின்னல் (இதே ஆர்டரில்தான் முதல்ல இடி அப்புறம் மின்னல்!) தாக்கி ஒரு பொறியாளர் உயிரிழக்கிறார் பிறகு ஒரு கான்ஃபிரன்ஸில் வைத்து ஒரு காவல்துறை அதிகாரி வியர்த்துக்கொட்டி இரத்தம் உறையாமல் ஊற்றி உயிரழக்கிறார்!

தனது அதீதமான துப்புறியும் மூளைக்குச் சரியான தீணி போடும் கேஸ் கிடைக்காமல் விஷால் எரிச்சலின் உச்சத்தில் இருக்கிறார்.... ஒரு மாபெரும் செல்வந்தர் காணாமல் போன மகளைக் கண்டுபிடிக்க லட்சங்களில் விலை பேசி ஒரு கட்டத்தில் ப்ளான்க் செக்கையே நீட்டுகிறார் ஆனால் விஷால் அந்தக் கேஸை டச்சிங்கான காரணம் சொல்லித் தட்டிக்கழிக்கிறார்......

அடுத்த ஸீனிலேயே ஸ்கூல் யுனிஃபார்ம் குட்டிப்பையன் இறந்துபோன தன்னுடைய நாயின் உடலில் இருந்து எடுத்த ஒரு புல்லட் தடயத்துடன் விஷாலை அணுக, விஷால் அந்த கேஸில் சீரியஸாகக் கமிட் ஆகிறார்......
பொம்மரேனியன் நாய் உடலில் புல்லட் என்கிற ஒற்றை லீடை வைத்துக்கொண்டு துப்பறிவாளர் துப்புத்துலக்க பல விபத்து போன்ற காரணங்களால் மூடப்பட்டப் பல மர்டர் கேஸ்களில் தூசு பறக்கிறது....

கொடூரமான வில்லன் குரூப்.... கொடூரத்தில் புதுமை காட்டுவது மிஷ்கின் ஸ்பெஷல்! நல்ல உயரமான ஓங்குதாங்கு ஆசாமிகள்.. டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க தனது வலுவான புஜங்கள் புடைக்கும் கரங்களால் பக்குவமாக உணவைத் தயாரித்து ஒவ்வொரு தட்டிலும் மெயின் வில்லன் வினய் பரிமாறப் பொறுமையாக சாப்பிடுகிறது கில்லர் டீம்.... படு அமைதியான அந்த சீனில் ஆண்ட்ரியா ஃப்ரிட்ஜைத் திறந்து ஜூஸ் பாட்டிலை எடுத்து மூடும்போது நமக்கு அந்த ஃப்ரிட்ஜுக்குள் ஒருவன் உட்கார்ந்த நிலையில் இருப்பது தெரியும் பகீரென்று!

விவரிப்பதில் இருக்கும் கொடூரம் திரையில் அப்படி Raw-வாகத் தெரியாது மாறாக அந்த உணர்வுகளை மட்டுமே கடத்துவதாகத்தான் சீன் வைத்திருக்கிறார் மிஷ்கின்..... கண்கள் மையம் கொள்ளாத இடங்களில்தான் சடலங்களையும் கொலைகளுக்கான contact point-டும் இருக்குமாறு பொறுப்புடன் காட்சியமைத்திருக்கிறார் மிஷ்கின், அப்படியிருந்தும் அக்மார்க் த்ரில்லுக்கு 100% கியாரண்டி கொடுப்பது அர்ரோல் கொலேரியின் பின்னணி இசைதான்! ஸ்ட்ரிங் இன்ஸ்ட்ருமெண்டுகளால் இந்தப் படத்துக்காக அர்ரோல் வடிவமைத்திருக்கும் தீம்களை வைத்து ஏதாவது ஒரு மேலை நாட்டிற்குச் சென்று சிம்பொனியே நடத்திக்காட்டலாம் அவ்வளவு கிரியேட்டிவ் மியூசிக் படத்துக்கு! தரமான Taste-ல் சரியான Mood-ஐத் துல்லியமாகக் கடத்துகிற பின்னணி இசை அத்தனை எளிதில் அமைந்து வந்துவிடுவதில்லை! குறிப்பாகப் படத்தின் விறுவிறு சண்டைக் காட்சிகளுக்குப் பின்னணியில் அமைத்திருக்கும் அர்த்தமுள்ள Theme இசைக்கோர்வைகள் நம்மைச் சுற்றியிருக்கும் சூழலையே, சீன் கடத்தும் எண்ண ஓட்டத்திற்கு ஏற்றாற்போல் மாற்றிவிடுகிறது! அற்புதமான இசையை வழங்கியிருக்கிறார் அர்ரோல் கொலேரி!

கார்த்திக்கின் கேமரா கோணங்கள் பெரும்பாலும் கதாபாத்திரங்களின் Point-of-view-வில்தான் காட்சிகளை சேகரித்திருக்கிறது. விஷாலின் பாத்திரம் தன் மனதுக்குள்  தோன்றும் ரேண்டம் புள்ளிகளை இணைத்து இணைத்துப் பார்த்துதான் விஷயங்களை கிரஹிப்பதாய் அமைத்திருக்கிறார் மிஷ்கின் அந்த துப்பறிவாளனின் தவிப்பை விஷுவலாக இவ்வளவு candid-ஆகக் கொடுத்ததற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக்கும் இயக்குனர் மிஷ்கினும் பாராட்டுக்குரியவர்கள் ஆகிறார்கள். படுவேகமான துப்பறிவாளனின் மனம் ஒரு விஷயத்தை முழுமையாகக் கணித்துவிட்ட அந்த நொடியிலேயே, யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கிடைத்த க்ளூவை நோக்கி தடதடவென ஓடிவிடுவார் விஷால் கேமரா அவர் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து எல்லா திசைகளிலும் ரெடியாகக் கோணம் பார்த்து நிற்கும்! கார்த்திக்கின் கேமரா பாத்திரங்களின் கண்களாகவும் ரசிகர்களின் பார்வையாகவும் வேலை செய்திருப்பது படத்துக்கு பலம் சேர்க்கிறது.

அதிகமான ஐ.க்யூ (IQ) கொண்ட கதாநாயகன், குற்றத்தையும் செய்துவிட்டு துப்பறிவாளன் துப்பறிவதையும் விடாமல்  பின்தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் வில்லன்கள் என ரொம்பவே இண்ட்ராக்டிவ்வான திரைக்கதை அமைத்திருக்கும் மிஷ்கின் முதல்பாதியை டெய்லர் மேடாகக் (Tailor -made) கொடுத்திருக்கிறார். அத்தனை திருத்தமான திரைக்கதை மற்றும் நேர்த்தியான ஆக்கமும் கூட. ஆனால் இரண்டாம் பாதியில் கதையோட்டத்துக்குத் தொய்வை உண்டாக்கும் ஒன்றிரண்டு விஷயங்களில் தன் இயல்பான வேகத்தைக் கணிசமாகக் குறைத்துக்கொண்டு ஏறி இறங்கித்தான் க்ளைமேக்ஸை நெருங்கி வந்து சேர்கிறது திரைக்கதை! எடிட்டிங்கிலும் இரண்டாம் பாதியில் ஓர் அவசரம் தெரிவது மெல்லியதொரு மைனஸ் படத்துக்கு.

மிஷ்கினின் signature காட்சிகளும், clarity குறைந்த அனு இம்மானுவேல்-விஷால் காம்பினேஷன் காட்சிகளும் தனியாக நன்றாக இருந்தாலும் பட ஓட்டத்துக்குத் வேகத்தடை போடுகின்றன.

இம்பாஸிபிளாகச் சிந்திக்கும் ஹீரோவின் அறிவாற்றலை ஆரம்பம் முதலே சரியாகக் கணிக்கிறது வில்லன் கும்பல். அவர்களும் அசாதாரணமான உள்ளுணர்வுடன்தான் விஷாலின் அடுத்தடுத்த நகர்வுகளைத் தடயங்களின்றி சிதைக்க முனைகிறார்கள். ஆனால் கமலேஷ் பாத்திரம் (ஜான் விஜய்) அவசரப்பட்டு விஷாலைக் கொல்ல professionals அனுப்பும் அந்த சைனா ரெஸ்டாரெண்ட் சண்டைக் காட்சிக்குப் பிறகு வில்லன்களின் கை சரியத் தொடங்கிவிடுகிறது அதன்பிறகு ஒரு வலுவான கம்-பேக் வில்லன்கள் சைடில் இல்லவே இல்லை! மேலும் அவ்வளவு careful-ஆக நகரும் வில்லன்கள் கண்டிப்பாக மாட்டிக்கொள்ளும் ரிஸ்க்கில்தான் பைக் சேஸிங்கில் தப்பிக்கப் பார்க்கிறார்கள்! அதிலும் ஆண்ட்ரியா தப்பித்துவிடுவதில் நம்பகத்தன்மை இல்லை.... பாக்கியராஜ் (சத்தியமாகக் கண்டே பிடிக்கமுடியாத கெட்-அப்) வீட்டில் நடக்கும் காட்சியிலும் திடீரென்று தோன்றும் படுத்த படுக்கையான பெண் கதாபாத்திரமும் அந்தத் தலையணைக் கொலையும் எதற்கென்று புரியவில்லை.
குறைகளையெல்லாம் மறக்கடிக்கச் செய்கிற சூப்பர் க்ளைமேக்ஸ் அமைத்திருக்கிறார்கள்.... ஆனால் அதிலும், எப்போதும் விஷாலுடனேயே நிழல்போல் தொடரும் பிரசன்னா வெளியே இருப்பதை உணராமல் வினய் எச்சரிக்கையில்லாமல் இருப்பது சற்று உறுத்துகிறது. அதைவிட க்ளைமேக்ஸில் விஷாலையும், அந்த போலீஸ் அதிகாரியையும் கொன்றுவிட்டுத் தப்பித்து செல்லும் அவசரத்தில் வினய் காட்டும் casualஆன உடல்மொழியும் கட்டிப்போட்டுவிட்டு உள்ளே சென்று packing செய்வதும் த்ரில்லைக் குறைப்பதாய் இருக்கிறது. இருந்தாலும் விஷால் வினய்யுடன் நடத்தும் சுவாரஸ்யமான பேச்சுவார்த்தைகளும் இடையிடையே இடம்பெறும் சாதுர்யமான hintகளும் சூப்பர்!

ஒட்டுமொத்தத்தில் இரண்டாம் பாதியில் திரைக்கதையிலேயே ஓர் அவசரம் தென்படுகிறது.. இலங்கைத் தூதரகத்தில் ஒரு அவுட்டோர் ஷாட் மற்றும் வில்லன் தப்பிக்கப் போகும் ப்ளானை வங்காள வரைகுடாவிலேயே மேப் போட்டுக் காட்டிவிட்டுப் பிறகு அதையெல்லாம் கோர்த்து க்ளைமேக்ஸில் விஷால் விளக்கிச் சொல்வதும் சற்றே பழமையான உக்தியாகத் தெரிகிறது.

விஷால் நடிப்பில் ஜீவனுள்ள ஒரு துப்பறிவாளன் படம் முழுக்க துடிப்புடன் துள்ளித் தீர்த்திருக்கிறான்! ஷெர்லாக் ஹோம்ஸைக் காப்பியடிக்காமல் தன் பாணியிலேயே டயலாக் டெலிவரி மற்றும் உடல்மொழியை வெளிப்படுத்தியுள்ளது சிறப்பு! பிரசன்னாவுக்கு Dr.Watson பாத்திரம் அளவுக்கு screen space கிடையாது! பழைய படங்களைப் போன்ற side-kick பாத்திரமாகத்தான் இருக்கிறது (க்ளைமேக்ஸ் தவிர்த்து) ஆனால் அதிலும் நிறைவாகச் செய்திருக்கிறார் பிரசன்னா. வினய்யின் ஆஜானபாகு தோற்றமும் கடுமையான குரலும் டெவில் பாத்திரத்தை ஒரிஜினல் டெவிலிஷாக நிலை நிறுத்திவிடுகிறது... ஆண்ட்ரியா, பாக்யராஜ், தீரஜ் ரத்னம் அனைவருமே பக்குவமான வில்லத்தனம் காட்டுகின்றனர். அனு இம்மானுவேலுக்கு வித்தியாசமான பாத்திரம் அளவாக நடித்திருக்கிறார்.

ஒட்டுமொத்தத்தில்  தரமான ஒரு துப்பறிவாளத் திரைப்படம் கொடுத்திருக்கிறார் மிஷ்கின்.... ஆங்காங்கே வெள்ளைப் பின்புலத்தில் தெரியும் சின்னச் சின்ன நெருடல்களையும் சரிசெய்து இன்னும் துப்புரவாகக் கொடுத்திருந்தால் மறக்கமுடியாத பதிவாக இருந்திருக்கும் என்கிற ஆதங்கம் தவிர எல்லாம் நலமே!

அன்புடன்,
பிரபு. எம்









Tuesday, September 12, 2017

தமிழகத்தில் ஹிந்தி வளர்ந்து வருகிறதாம் - “தமிழ் இந்து” சொல்லிடிச்சு!

கடும் எதிர்ப்பு, போராட்டங்களை மீறி
தமிழகத்தில் வளர்ந்து வருகிறது இந்தி

இப்படியொரு தலைப்புடன் ஒரு செய்தியை இன்று (செப்டம்பர் 12,2017) தேதியிட்ட “தமிழ் இந்து” செய்தித்தாளில் 11-ம் பக்கத்தில் பார்த்தேன்... அது செய்தியா இல்லை விளம்பரமா அல்லது ஏதேனும் கட்டுரையா என்று பார்த்தவுடன் புரியும்படி இல்லை! சரி.. ஓர் ஒப்பீட்டுப் புரிதலுக்காகப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு செய்தியைப் பார்த்தேன்


காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்து சூழ்நிலை முன்னேறி உள்ளது

  • உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

என்று இருந்தது! இந்த செய்தி உறுத்தவில்லை..... “காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்து சூழ்நிலை முன்னேறி ப்ளா ப்ளா ப்ளா.... என்று தலைப்பு பார்த்தவுடனேயே செய்தித்தாள்களைப் படித்து பழக்கப்பட்ட கண்கள் சொன்னது யார் என்று தேட ஆரம்பித்தது அதற்குள் மூளையும், யாருப்பா அது பழைய ஹோம் மினிஸ்டர் ராஜ்நாத் சிங்கா அல்லது புது ராணுவ அமைச்சர்  நிர்மலாவா? என்று "probables" யோசிக்க ஆரம்பித்தது.... அங்கும் இருக்கவே இருந்தது உப தலைப்பு “உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்” என்று... ஒருவேளை இந்த ஒரு ஸ்டேட்மெண்ட்டை எதிர் முகாமிலிருந்து  ப.சிதம்பரம் போன்ற ஒருவர் சொல்லியிருந்தார் என்றால் படிப்பதற்கு ஒரு சுவாரஸ்யமாய்க் கண்கள் விரிந்திருக்கும் என்பது வேறு விஷயம்! சரி விஷயத்திற்கு வருவோம்!

இப்படித்தான் செய்தித்தாள்களுடன் உறவாடி வந்திருக்கிறோம் தலைமுறைகளாக...! தலைப்பு என்பது விஷயத்தைப் பொட்டில் அறைந்தாற்போல் சொல்லிவிடும் மேலும் யார் சொன்னது.... எந்த சூழ்நிலையில் சொன்னது போன்ற விவரங்களை உபதலைப்புகள், புல்லட் பாயிண்டுகள் போன்றவை விளக்கிவிடும்! மெயின் தலைப்புக்கு மேலே சற்று சிறிய எழுத்துருவில் அந்த செய்திக்கான பின்னணியையும் வழங்கிவிடுவார்கள். ஆக... செய்தித்தாள்களுடன் கையில் காஃபி மக்குடன் நாம் அளவளாவி மகிழும் ஓர் அரைமணி நேர ஸ்பரிசத்துக்கு என்று பலவிதப் புரிதல்களும், சமிக்ஞைகளும் உண்டு என்பதை யாரும் மறுப்பதற்கில்லை!

இப்போது மெயின் விஷயத்திற்கு வருவோம் அதாவது “தமிழகத்தில் ஹிந்தி வளர்ந்து வருகிறது” என்னும் செய்தி!

இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன், சொன்னது யார்? என்று கண்கள் தேடின... பதில் இல்லை..... சரி இது ஏதும் ஆய்வு முடிவா? தெளிவில்லை!
ஸ்போக்கன் ஹிந்தி விளம்பரமா?? பார்த்தால் அப்படித் தெரியவுமில்லை! 

தலைப்புக்கு மேலே “கடும் எதிர்ப்பு, போராட்டங்களை மீறி”

என்று ஒரு பின்னணி வேறு அச்சிடப்பட்டிருந்தது! எனக்குத் தெரிந்து தமிழகத்தில் இப்போது கடும் எதிர்ப்பு, போராட்டங்களை மீறி  நடைமுறையில் இருப்பது நீட் தேர்வு மட்டுமே! இந்தி வளர்வதற்குக் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்ற போது நான் பிறக்கவில்லை என் தந்தைகூட ஏழாம் வகுப்போ எட்டாம் வகுப்போதான் படித்துக்கொண்டிருந்திருப்பார்! 

சரி... ஏதாவது ”back to the future" சமாச்சாரம் போலிருக்கிறது என்று படித்துப் பார்த்தேன்.....

அதாகப்பட்டது......

“தமிழகத்தில் நிலவும் கடும் எதிர்ப்பை மீறி அங்கு இந்திமொழி வளர்ந்து வருவது தெரியவந்துள்ளது” என்றது முதல் பத்தி.

மேலும் அதில் உள்ள செய்தி என்னவென்றால்....

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் இந்தி இயக்குனரகத்தின் கீழ் தொலைதூரக் கல்வி மையத்தில் தொலைதூரக் கல்வி முறை மூலம் ஹிந்தி மொழி கற்றுக்கொள்ள விண்ணப்பத்தவர்களின் எண்ணிக்கைத் தமிழகத்தில் கணிசமாக (அதிகபட்சம் சுமார் 7000 பேர்!) அதிகரித்திருக்கிறதாம்!

இதுதான் செய்தி..... ஆனால் இப்போது இந்தப் பதிவின் துவக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பைப் பாருங்கள்......

”தமிழகத்தில் வளர்ந்து வருகிறது இந்தி” (அதுவும் கடும் எதிர்ப்பு, போராட்டங்களை மீறியாம்!) 

இதில் ஓர் ஈனத்தனமான அரசியலோ அல்லது கீழ்த்தரமான ஒரு எண்ணமோ இருப்பது உங்களுக்குப் புலப்படுகிறதா??

”தொலைதூரக் கல்வி வழியே ஹிந்தி கற்றுக்கொள்ள தமிழகத்தில் ஆர்வம் கணிசமாக உயர்வு” : இந்தி இயக்குனரக தொலைதூரக் கல்வி மையம் தகவல்

என்று வந்திருக்க வேண்டிய செய்தித் தலைப்பு எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்... மற்றவை யாவும் தங்களின் சிந்தனைக்கே.....!

சரி... இப்பொழுது ஓர் ஆசுவாசத்துக்காக ஒரு சின்ன கேள்வி... இந்த வாரம் செய்திகளைப் பின் தொடர்ந்தவர்கள் இந்தப் புகைப்படக் கேள்விக்குப் பதில் தெரிந்த துரதிர்ஷ்டசாலிகளாக இருக்கலாம்!



இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் யார்??

இந்தப் பெண்ணின் புகைப்படம் கடந்த இரு நாட்களாக பெரும்பாலான ஆங்கிலப் பத்திரிக்கைகளில், தமிழ் நாளேடுகளில் வெளிவந்துள்ளது....

அனைத்து ஊடகங்களிலும் இவரது படம் அதுவும் ANI (Asian News International) மைக்கில் ஏதோ பேசிக்கொண்டிருக்கும் படம் என்றால் இவர் ஒரு புதிய சமூகப் போராளியாக இருப்பாரோ?! அல்லது ஏதேனும் புரட்சிகரமான வழக்குத் தொடுத்து சட்டப் போராட்டம் நடத்தியிருப்பாரோ? ஏதாவது துணிச்சலான கருத்து சொன்னவராகக் கூட இருக்கலாம் என்று யோசிக்கிறீர்களா.... மிகவும் சரிதான்..... செய்தித்தாள்களில் ஒருவரின் புகைப்படம் வெளிவருவது அவ்வளவு எளிதா என்ன? ஏதாவது ஒரு சாதனை செய்திருந்தால் தானே ஊடக வெளிச்சம் பொதுஜனம் மீது விழும்! இந்தப் பெண்மணி செய்த சாதனைதான் என்ன??

இந்த கிரேட் இண்டியன் லேடியின் பெயர் கஞ்சன் படேல்..... இவருக்குக் கடந்தவாரம் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்திருக்கின்றன அவைகளுக்கு அவர் “காரவி, சாஞ்சி, தாரவி” என்று பெயர் சூட்டியிருக்கிறார்!
ஓ..அப்படியா... மகிழ்ச்சி! சரி... இதில் என்ன சாதனை என்று கேட்கிறீர்களா? குழந்தைகளின் பெயர்களை நாம் கவனிக்கவேண்டுமாம்.....

Garvy, Saanji, Taravi - அதாவது GST!

இந்தக் கேடுகெட்ட அரசாங்கம் கொண்டுவந்த GST வரி இந்த அம்மையாரைக் கவர்ந்துவிட்டதாம் அதனால் தன் குலக் கொழுந்துகளுக்கு அதே முதலெழுத்துகளில் பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கிறாராம்.....

இந்தக் கருமத்துக்குத்தான் இத்தனைப் பெரிய அங்கீகாரம், சேனல்கள் முதல் செய்தித்தாள்கள் வரை அம்மையாருக்குப் புகைப்படத்துடன் கூடிய பதிவேற்றங்கள்! ஜிஎஸ்டி பற்றி இந்தப் பெண்ணுக்கு என்ன தெரியும்? எந்த விஷயத்தில் இவர் ஜிஎஸ்டி மீது இத்தனை ஈர்க்கப்பட்டார்? இவரின் கல்வித் தகுதி மற்றும் வணிகச் செய்திகளின் புரிந்துணர்வு எத்தகையது? போன்ற விஷயங்களை யாரோ ஒரு சாதாரண நிருபர் அலட்சியமாகக் கேள்வி கேட்டால் கூடத் தோலுறிக்கப் பட்டிருக்கும். ஆனால் அப்படியில்லாமல் போனது, இதுபோன்ற விளம்பர மோகம் மற்றும் அருவருப்பான மீடியா வியாபாரங்கள் எல்லாம் எப்படி நகர்கின்றன அல்லது மக்களை எப்படி நகர்த்துகின்றன என்பதற்கான அவல ஆதாரமாய்ப் பதிவு செய்யப்பட்டு இந்த அபார சாதனை சர்வதேச செய்தியாக உலக ஊடகங்களின் பார்வைக்குப் போயிருக்கிறது!

ஏன் பிரதர், நம்ம ஊரு உருப்படும்னு நினைக்கிறீங்க??!

 நன்றி!

பிரபு எம்.