Tuesday, November 30, 2010

தப்பு : சிறுகதை

"ஏங்க‌ இப்படி ஒரு காரியத்த‌ செஞ்சீங்க??..."

"அவளுக்காகத்தான்...."

"இது என்ன பைத்தியக்காரத்தனமா இருக்கு... இதெப்படி உங்க மனைவிக்காகன்னு அர்த்தம் ஆகும்....! உண்மைய சொல்லுங்க இப்படி ஒரு காரியத்தை செய்ய எப்படி தோணிச்சு உங்களுக்கு??? என்னதான் காரணம்??"

"அவள பத்தி எனக்குத்தான் தெரியும்... அவ மனசு தாங்கியிருக்கமாட்டா..."

"ச‌ரி.... இப்போ இப்ப‌டி ந‌ட‌ந்திருச்சே இத‌ எதிர்பார்த்தீங்க‌ளா!"

"ச‌த்திய‌மா நின‌ச்சுப் பாக்க‌ல‌... நான் அவள நம்பினேன்..."

"சரி இந்த விஷ‌ய‌ம் உங்க‌ளைத் த‌விர‌ வேற‌ யாருக்காவ‌து தெரியுமா?"

"தெரியும்... எங்க‌ வீட்டுக்குத் தெரியும்..."

"வேற யாருக்குமே தெரியாதா??"

 "அவ வீட்டுக்கும் தெரியும்... சில நெருக்கமானவங்களுக்கும் தெரியும்..."

"ஏன் அவ‌ங்க வீட்டுல‌ சொன்னீங்க?"

"அவ‌ங்க‌ளுக்குத் தெரிஞ்சிருக்க‌ணும்..."

" அப்படின்னா...இப்போ ந‌ட‌ந்த‌த‌யும் அவ‌ங்க‌கிட்ட‌ சொல்லுவீங்க‌ளா....???"

".........."

"சொல்லுங்க‌... இதுவும் அவ‌ங்க‌ளுக்குத் தெரிஞ்சிருக்க‌ணும்தானே...."

"மாட்டேன் மேடம்..." கொஞ்ச‌ம் க‌ம்மிய‌ குரலில்.. அதுவ‌ரைக் க‌ல்லாகியிருந்த‌ உறுதி த‌ள‌ரத்துவ‌ங்கியது கண்ணீருடன் டாக்டரின் டேபிளில் முகம்புதைக்கிறான்...

                                                                    ***************************************

இண்டென்ஸிவ் கேரில் மெல்ல‌ ஆக்ஸிஜ‌ன் மாஸ்க்கை அவிழ்க்கிறார் சீனியர் டாக்டர்..... சுற்றிலும் பதற்றமாய் ஜுனியர் டாக்டரம்மாக்கள்... 

ஆக்ஸிஜன் அகன்றதும், துடிக்கும் தொண்டைக்குழியின் ஆழம்கூடி க‌ழுத்திலிருந்து சிவ‌ந்து புடைக்கும் ந‌ர‌ம்புவேர்க‌ள் நெற்றிவ‌ரை நீள்கிற‌து... சுவாச‌த்துக்குக் காற்றுகேட்டு ஈனமாய் க‌ணைக்கிறாள் க‌ண்க‌ள் விரிய‌....

"She couldn't breathe doctor..."

"ஷ்ஷ்ஷ்ஷ்....வெயிட் ப‌ண்ணுங்க‌...."

"............"

"............"

"பேஷ‌ண்ட் ஏஜ் என்ன‌ டாக்ட‌ர்..."

"32"

க‌ணைப்பின் ஸ்ருதி மாறுகிற‌து... மீண்டும் ஆக்ஸிஜ‌ன் மாஸ்க் பொருத்த‌ப்ப‌ட‌ இத‌ய‌த்துடிப்பு மீண்டும் ஓர‌ள‌வுக்கு இய‌ல்புநிலை மீளுகிற‌து....


                                                                     ***************************************

டாக்ட‌ரின் டேபிளில் முக‌ம்புதைத்து அழுது ஓய்ந்திருந்தான் வெங்க‌ட்...

"உங்க‌ளுக்கு என்ன‌ வ‌ய‌சு?"

"36"

"க‌ல்யாண‌ம் ப‌ண்ற‌ப்ப‌ உங்க‌ளுக்கும் உங்க ஒய்ஃப்க்கும் என்ன‌ வ‌ய‌சு?"

"... என‌க்கு 30 அவ‌ளுக்கு 26..."

" நீங்க‌ சொன்ன‌ அந்த‌ ஆக்ஸிடெண்ட் எப்போ நடந்திச்சு..?"

" நாலு வ‌ருஷம் முன்னாடி..."

"அந்த ஆக்ஸிடெண்டுக்கு முன்னாடி ரெண்டு வ‌ருஷ‌த்துல‌ குழந்தை எதுவும்..??"

" அப்போதைக்கு வேண்டாம்னு இருந்துட்டோம்"

"ஏன்...???!!......ச‌ரி விடுங்க‌... ஆர் யூ ஓகே ந‌வ்?? ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கீங்க... ட்ரை டு ரிலாக்ஸ் யுவர்செல்ஃப்"

"யெஸ் யெஸ்.. ஐம் ஃபைன்..." நிமிர்ந்து உட்கார்ந்து முக‌த்தைத் துடைத்துக்கொள்கிறான்....
"அந்த ஆக்ஸிடெண்ட்ல நீங்களும் இருந்திருக்கீங்க??"
"ஆமா.... ஆனா எனக்கு வெறும் ஃப்ராக்சர்ஸ்தான்... அவளுக்குத்தான்... ..."

கொஞ்சம் இடைவெளி....

"டாக்ட‌ர்..... அவ‌ பொழ‌ச்சுக்குவாளா??"

"அவ‌ங்க‌ பொழ‌ச்சுக்க‌ணும்னுதான் நெஜமாவே நென‌க்கிறீங்க‌ளா??"

"போதும் டாக்ட‌ர்... போதும்..... இவ்ளோ நேர‌ம் என்ன‌வோ நான் ஒரு குற்ற‌வாளி மாதிரி கேள்வியா கேட்டுத் துளைச்சுட்டு இருக்கீங்க‌.... நான் செஞ்ச‌ தியாக‌ம் உங்க‌ளுக்குப் புரிய‌வேயில்லயா?? ஒரு டாக்ட‌ரா யோசிக்காம‌ ஒரு சாதாரண‌ பொம்ப‌ள‌யா இருந்து  யோசிச்சுப் பாருங்க‌..... என்னோட தியாகமும் அதனால நான் தாங்கிக்கிட்ட வலியும் உங்களுக்குப் புரியும்..."

"ஒரு சாதார‌ண‌ பொண்ணாத்தான் கேக்குறேன்... இதுல "தியாகம்" எங்கயிருந்துங்க வந்திச்சு?? நீங்க‌ செஞ்ச‌து தியாக‌ம்னா இந்த‌ நால‌ரை வ‌ருஷமும் ஒரு குழ‌ந்தையும் இல்லாம "குறை"யுள்ள‌ உங்க‌ளையும் ஏத்துக்கிட்டு ம‌ற்ற‌ எல்லாவித‌த்துல‌யும் உங்க‌ளுக்கு ம‌னைவியா இருந்திருக்காளே... அவ‌ செஞ்ச‌தும் அப்போ தியாக‌ம்தானே...."

"ஏன்தான் ஆண்ட‌வ‌ன் உங்க‌கிட்ட‌போய் என்னை இப்ப‌டி ப‌தில்சொல்ல‌ வெச்சு வேடிக்கை பாக்குறானோ...?? என‌க்கு என்ன‌ டாக்ட‌ர்???? என‌க்கு எதுக்கு க‌வுன்சிலிங்??? என்ன‌ விட்டுடுங்க‌... அவ‌ள‌ த‌ய‌வுசெஞ்சு காப்பாத்திக் குடுங்க‌..... அவ‌ செஞ்ச‌ துரோக‌த்தையும் கூட‌ என்னால‌ தாங்கிக்க‌ முடியும்...."

"துரோகம்... ஹ்ம்ம்ம்...துரோகத்தைத் தாங்கிக்கிட்டு.... மறுபடி அவ‌ங்க‌ அப்பா அம்மாவையெல்லாம் கூட்டிவெச்சு ஊருக்கே அறிவிச்சு ஏற்கெனவே மனைவியுடைய குறையை தாங்கிக்கிட்ட புனிதரா இருக்குற‌ நீங்க... மனைவி செஞ்ச துரோகத்தையும் ஏத்துக்கிட்டு உங்க சுற்றுவட்டாரத்துக்கு தெய்வ‌மாக‌ப் போறீங்க‌ தானே???"

"..................."

" நீங்க‌ செஞ்ச‌து தியாக‌ம்னா.... உங்க‌ "குறை"யை ஒருத்த‌ர்கிட்ட‌யும் சொல்லாம‌ இத்த‌ன‌ நாள் குடும்ப‌ம் ந‌ட‌த்தியிருக்குற‌ அவ‌ செஞ்சது தியாகமில்லயா??..... அவ‌ செஞ்ச‌து துரோக‌ம்னா உங்களோட ஸோ‍‍-கால்டு தியாக‌ங்க‌ளையெல்லாம் ஊர்முழுக்க‌ச் சொல்லிவெச்சிருக்கீங்க‌ளே... அது துரோக‌மில்ல‌யா???.... ச‌ரி இதையும் ஒரு சாதார‌ண‌ பொம்பள‌யாத்தான் கேக்குறேன்.... "இந்த‌ நாலு வ‌ருஷ‌த்துல நீங்க‌ உங்க‌ ம‌னைவிக்கு உங்க‌ பாஷையில‌ "துரோக‌ம்" செஞ்ச‌தே இல்ல‌யா???" இந்த‌க் கேள்விக்கு என்கிட்ட‌ நீங்க‌ ப‌தில் சொல்ல‌ வேண்டாம்..... உங்க‌ள‌ நீங்க‌ளே கேட்டுக்கோங்க‌....


க‌த‌வைத் திறந்து விரு விரு வென‌ வெளியேறினான் வெங்க‌ட்.....


                                                                               ****************************************


ஆக்ஸிஜ‌ன் துணையோடு இத‌ய‌த்துடிப்பு மெல்ல‌ மெல்ல‌ சீராவ‌தாக‌ ஓர் உண‌ர்வு....

"இப்போ மாஸ்கை ரிமூவ் ப‌ண்ணிப் பார்க்க‌லாமா டாக்ட‌ர்?"

"ஹ்ம்ம்ம்... நோ.. லெட்ஸ் வெயிட்.. இப்போதான் கொஞ்ச‌ம் இம்ப்ரூவ்மெண்ட் தெரியுது...

வெல்... இவ‌ங்க‌ ஹ‌ஸ்பெண்ட் வெளிய‌தான் இருக்காரா?? ஃபார்மாலிடீஸ்ல‌ யெல்லாம் கையெழுத்து வாங்கிடுங்க‌...?? எனிடைம் ச‌ரிஜ‌ரிக்கு சான்ச‌ஸ் இருக்கு...."

"யெஸ் டாக்ட‌ர்... மேட‌ம்கிட்ட‌ க‌வுன்சிலிங் செஷ‌ன்ல‌ இருக்காரு... ஹி சீம்ஸ் டீப்லி டிப்ரெஸ்ட்"

"த‌ன்னால‌ தாம்பத்யத்தில் ஈடுப‌ட‌ முடியாது... தன்னோட உயிருக்கே ஆபத்துன்னு தெரிஞ்சிருந்தும் இந்த‌ப் பொண்ணு...ச்சே... இட்ஸ் பாதெடிக் டாக்டர்.."

"இல்ல‌ம்மா த‌ட்ஸ் ரிய‌லி வெரி எம்பராஸ்ஸிங்.... அந்த‌ப் பொண்ணுக்குத் த‌ன‌க்கு அப்ப‌டியொரு குறையிருக்குன்னு தெரியாது.... என்ன காரணமோ தெரியல அவ பாதிக்கப்பட்ட அதே ஆக்ஸிடெண்டுக்கு அப்புற‌ம் த‌ன‌க்குத்தான் அப்படியொரு 'குறை' வந்துட்டதா மாத்தி சொல்லியிருக்கான் அவ‌ ஹ‌ஸ்பெண்ட்..... தெரியாம‌ இந்த‌ப் பொண்ணு த‌ப்புப் ப‌ண்ணிட்டா....."


                                                                                             *********************************************
பிரபு எம்

Friday, November 26, 2010

வ‌ர‌லாறு மிக‌வும் முக்கிய‌ம் அமைச்ச‌ரே!!!

அரசியல்வாதிகளும், நடிகர்களும், பிரபலங்களும் செய்தித்தாள்கள் படிப்பதேயில்லையா??!!!
கட்சிக்கு ஒரு சேனல் வைத்திருப்பதால் அடுத்தக்கட்சி சேனல்களையெல்லாம் நோட்டம் விடுவதேயில்லையா??!!
வெளியுல‌க‌மே தெரியாதா??!!  இல்ல க‌லாய்ச்சு பேசுற‌து எல்லாம்
 காது கேட்காதா??!! என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்.....!

"ம‌க்க‌ள் நாய‌கர்" , "பசுநேசர்" ராம‌ராஜ‌ரை நினைவிருக்கிற‌தா?! ச‌ர்தாரைவிட‌ அதிக‌மாய்க் க‌லாய்க்க‌ப்ப‌ட்ட‌க் க‌ல‌ர்ம‌ன்ன‌ர்!! எங்கே  பசங்க‌ இவ‌ருபேரைப் ப‌ட்ட‌ப்பெய‌ரா வெச்சுருவாய்ங்க‌ளோன்னு பயந்துபோய்ப் போடுற‌ ச‌ட்டைக் க‌ல‌ரை மாற்றிக்கொண்ட‌ வாத்தியார்க‌ளையெல்லாம் பார்த்திருக்கிறேன்.... ஆனா அவ‌ரு மாற‌லியே.... க‌டைசியா டி.வியில் ஒரு வெளிவரவேவராத‌ ப‌டம் ஒன்றின் துவ‌க்க‌விழாவில் ம‌ஞ்ச‌ம‌ஞ்சேரென்று நின்றுகொண்டிருந்தார்.. கையில் வேப்பிலை இல்லாத‌துதான் குறை....

(க‌ர) டி.ஆரைக் கலாய்ச்சுக் க‌லாய்ச்சு க‌ளைச்சுப்போன‌துதான் மிச்ச‌ம்... அவரு இன்னும் யூ-டியூப்ல‌ சூப்ப‌ர்ஹிட் ஸ்டேட்மெண்ட்டுகள சூடுபறக்கக் கொடுத்துட்டுதான் இருக்காரு!! (இன்னும் டண்டனக்காவக் கூட விடல!) அவரு புள்ள...ஸ்ஸ்ஸப்ப்பா... இப்பவே கண்ணக் கட்டுது....‌ இன்னும் கூட லிஸ்டைப் பாருங்க‌.... டாக்ட‌ர் சுறா, ஸ்டீவ‌ன் பேர‌ர‌சு, அடுத்த‌ தேர்த‌லுக்கும் கூட்ட‌ணி மாற‌ப்போற‌ ம‌ருத்துவ‌ர் கொய்யா, அதே தேர்த‌ல்டைம்ல‌ காமெடிட்ராக் பண்ண கரெக்ட் டைம்‍‍-க்கு வரப்போகிற ஆல்டைம் காமெடிபீஸ் சுப்ர‌ம‌ண்ய‌ஸ்வாமிஜி.... ஊஹும்... எவ‌னும் மாற‌ப்போற‌தில்ல‌ த‌மிழ்நாட்டுல‌!!


ஹ்ம்ம்ம்ம்... ஆனா


கொஞ்ச‌ம் யோசித்துப் பார்த்தால் இத‌ற்கெல்லாம் ஒரே ப‌தில் ந‌ம்ம‌ இம்சை அர‌ச‌ன் சொன்ன‌துதான்...



"வ‌ர‌லாறு மிக‌வும் முக்கிய‌ம் அமைச்ச‌ரே!!!"

ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்..ஸாரி ஸாரி...."வ‌ர‌லாறு"!!!

2001 தேர்த‌ல் வ‌ந்திச்சு... ஓட்டுப்போடுற‌ வ‌ய‌சுவ‌ராத‌ ஒண்ணாங்கிளாஸ் பிள்ளைவ‌ரைக்கும் ச‌ன் டிவில‌ பாத்துடுச்சு அதிமுக ஜெயிச்சாலுமே அம்மா தேர்த‌ல்ல‌ நிற்க‌ முடியாதுன்னு... கார‌ண‌ம் என்ன‌? அதுவும் ப‌ச்ச‌ப்புள்ள‌க்குக் கூட‌ தெரியும் "டான்ஸி, கிரிமின‌ல் வ‌ழ‌க்கு, ____,   ____, ____" என்று. ஆனா ஜெயா டிவி மட்டும் பாக்குற எம்ஜிஆர் ஃபேன்ஸ் ம‌ட்டும் ந‌ம்பினாங்க‌ அம்மாதான் முத‌ல்வ‌ர் வேட்பாளர் என்று!  அம்மாவும் வேட்பும‌னு தாக்க‌ல் செஞ்சாங்க‌ளே....அதுவும் ஒண்ணு இல்ல‌ ரெண்டில்ல‌ நாலு தொகுதில!!... ஏங்க‌.. ஒரு வேட்பாள‌ர் அதிக‌ப‌ட்ச‌ம் ரெண்டு தொகுதில‌தான் போட்டியிட‌ முடியும்னு அந்த நேரத்துல முதல்வரான ஓ.பி.எஸ்ஸுக்குக் கூட (!) தெரியுமேன்னு கேக்குறீங்க‌ளா??!!  க‌ரெக்டு.... எப்ப‌டியும் நிராக‌ரிக்க‌ப்ப‌ட‌ப் போகிற‌ அவ‌ங்க‌ ம‌னு நிராக‌ரிக்க‌த்தான் ப‌ட்ட‌து... ஆனா கார‌ண‌ம்?? மாத்திட்டோம்ல!!..... "இர‌ண்டுக்கும் மேற்ப‌ட்ட‌ தொகுதிக‌ளில் வேட்பும‌னு தாக்க‌ல் செய்த‌தால் மேற்ப‌டி வேட்பாள‌ரின் வேட்பும‌னு நிராக‌ரிக்க‌ப் ப‌டுகிற‌து"ன்னு அந்த‌ ஏரியா தாசில்தார் ஒரு லேடி அறிவிச்ச‌தை இதே ரெண்டு க‌ண்ணால நாம பார்த்ததுதானே வரலாறு!! இன்னைக்கு பீகார்ல‌ ரெண்டு இட‌த்துல‌ போட்டிபோட்ட‌ ராப்ரி இர‌ண்டிலுமே தோத்து போய்ட்ட‌த‌ப் ப‌த்தி ஆஃபிசுல‌ பேசிச் சிரிச்சுட்டு இருக்கும்போது ஒரு ம‌ராட்டிக்கார‌ன் என்னப் பாத்து சொல்லுறான் "ராப்ரியாவ‌து ப‌ர‌வாயில்ல‌.... உங்க‌ ஊரு அம்மா சின்ன‌புள்ள‌த்த‌ன‌மா நாலு தொகுதில‌ நின்னு ரிஜெக்ட் ஆன‌தைவிடவா இது பெரிய‌ காமெடி??! ஹே ஹே.." என்று சிரிக்கிறான்...அத‌ற்குப்பின்னால் இருக்கும் பெரிய‌புள்ள‌த்த‌ன‌ம் புரியாம‌ல்.... ஹி ஹி ஹி..

இப்போ புரியுதா???

"வ‌ர‌லாறு மிக‌வும் முக்கிய‌ம் அமைச்ச‌ரே!!"

"பாராட்டு விழா" "பாராட்டு விழா"ன்னு சொல்லுறாங்க‌ளே... உல‌க‌த்திலேயே அதிக‌ப் "பாராட்டு விழாக்கள்" க‌ண்ட‌வ‌ர் யாருன்னு ஒரு ச‌ர்வே எடுத்தா யாரு போட்டியின்றி தேர்வு ஆவாங்க‌ன்னு ந‌ம்ம‌ எல்லாருக்குமே தெரியும்.. ஆனாலும் ஏன் அந்த‌ ச‌ர்வே ரிச‌ல்ட்டை வெளிய‌ விட‌மாட்டேங்குறாங்க‌ன்னா... அந்த‌ சாத‌னைக்கும் (?) ஒரு பெரிய‌ "பாராட்டு விழா" வெச்சு சும்மா இருக்குற சூப்ப‌ர்ஸ்டார்,சூப்ப‌ர் ஆக்ட‌ரையெல்லாம் கூப்பிட்டு இன்னும்கூட பாடிப்பரிசில்பெறத தயாரா இருக்குற‌ பாலப‌த்திர‌ ஓணாண்டிப் புல‌வ‌ர்க‌ளையெல்லாம் கூட்டிவெச்சு கும்மிய‌டிச்சு அத‌க‌ள‌ம் ப‌ண்ணிடுவாங்களேன்னு ப‌ய‌ந்துதான்!! ..... போன‌வ‌ருஷ‌ம் சிற‌ந்த‌ வ‌ச‌ன‌க‌ர்த்தா ஸ்டேட் அவார்டு யாருக்குக் கிடைச்ச‌து?? த‌மிழுக்கு ந‌டந்த‌ உல‌க‌ மாநாடு கூட‌ மெய்யாலுமே யாருக்கு ந‌ட‌ந்த‌து??

இதெல்லாம் என்ன‌ புதுசா... இதுவும் இதுக்குப் பின்னால இருக்குற உள்குத்துகளும் ந‌ம்ம‌ எல்லாருக்குமே தெரிஞ்ச‌துதானேன்னு சிரிக்கிறீங்கதானே??!! ஆனா இன்னும் அம்ப‌து வ‌ருஷ‌ம் க‌ழிச்சு இந்த‌ வ‌ர‌லாறுக‌ளைப் பாட‌ப்புத்த‌க‌த்தில் (ஸாரி பாட‌ டிவிடியில்) ப‌டிக்க‌ப்போற‌ 3 -ஜி (தேர்ட் ஜென‌ரேஷ‌ன்னுதான் சொல்றேன்!) கிட்ட நீங்க பாத்த 'வ‌ர‌லாறு'க‌ளையெல்லாம் சொல்லிப்பாருங்க‌... அவ‌ங்க‌ ந‌ம்ம‌ள‌ பாத்து சிரிப்பானுங்க‌!!! ஆக‌மொத்த‌ம் இப்போ ந‌ட‌க்குற‌ விஷ‌ய‌ங்க‌ளுக்கெல்லாம் ஆடிய‌ன்ஸ் நிகழ்கால  ந‌ம்ம‌ இல்ல‌ங்குற‌த‌ப் புரிஞ்சிக்கிட்டு... ர‌ஜினி ஜோக், விஜ‌ய் ஜோக், இன்றைய‌ அர‌சிய‌ல் கார்ட்டூன்னு எல்லாம் காலங்காத்தால கிள‌ம்பாம‌ போய் வேல‌யப் பாருங்க‌ பாஸூ!!

வ‌ர‌லாறு மிக‌வும் முக்கிய‌ம் அமைச்ச‌ரே!!! :-)))




ஹி ஹி ஹி.. சும்மா கார்ட்டூன் போட்டு ரொம்ப‌ நாளாச்சேன்னுதான்!! வேற‌ ஒண்ணுமில்ல‌...

அன்புட‌ன்,
பிர‌பு எம்

Sunday, November 21, 2010

"குருவி"யைத் தியேட்டரில் பார்த்த கதை.... :-))))



"எந்திர‌ன்" ப‌ட‌ம் பார்க்க‌மாட்டேன் என்று சொன்ன‌வ‌ர்க‌ளெல்லாம் பின்பு எப்ப‌டியோ தியேட்ட‌ருக்குப் போக‌ நேர்ந்த‌ (!) க‌தைக‌ளைக்கூட‌ப் ப‌திவுல‌கில் சொல்லி முடித்துவிட்டார்கள்... எப்பவோ வந்துட்டுப் போன இந்தக் கொடுமையைப் பார்த்த கதை பத்தி இப்போ எதுக்கு என்று கேட்டால்.... இந்த அனுபவக் க‌தையைப் பேச்சுவாக்கில் சொன்ன‌போது கேட்ட‌ ந‌ண்ப‌ர்க‌ள் எல்லாம் எழுத‌ச் சொல்லிக்கொண்டே இருந்தார்க‌ள்.... சில‌ விஷ‌யங்களைச் சொல்லும்போது இருக்கும் சுவார‌ஸ்ய‌ம் எழுத்தில் வ‌ராது.... படிச்சுப்பாருங்க... பாதில‌ போரடிச்சா சேனல மாத்திடுங்க!!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வெள்ளிக்கிழமை இரவு.... அந்த இரவு எங்களுக்கு மறக்கமுடியாத ஒரு பயங்கர அனுபவத்தைத் தரப்போகிறது என்று எங்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை....

சீன் ஓபனாகுது....

பெங்களூரு மாரத்தஹள்ளியில் ராத்திரி நேரம்....

இரவு சாப்பாட்டுக்கு அறை நண்பர்கள் எல்லாரும் புரோட்டா க‌டையில் கூடியிருந்தோம்... எதையோ ப‌ற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்... சீரியஸாகப் பேசிக்கொண்டிருந்த‌ ந‌ண்ப‌ன் ஒருவ‌ன் திடீரென்று....

"டேய் இன்னைக்கு வெள்ளிக்கிழ‌மை"... என்றான் பதறிப்போய்....


எல்லாரும் அமைதியாக‌ அவ‌னையே பார்க்க‌...


"நாளைக்கு ந‌ம்ம யாரும் ஆஃபீஸ் போக‌வேண்டாம்டா...!!!!"  என்று சத்தமாகக் குதூக‌லித்தான்...


"ஆமால்ல!!" என்று நாங்க‌ளும் சிலிர்த்தெழ‌...


செல்ஃபோன்ல‌ அலார‌ம் வைக்காம‌... Cab டிரைவ‌ர் கால் வ‌ராம... முழுசா நாற்ப‌த்தெட்டும‌ணி நேர‌ம் ந‌ம‌க்கேஏஏஏஏ..... ந‌ம‌க்காஆஆஆ!!! என்று க‌ன‌வுபாட்டுக்கு லொகேஷ‌ன் தேடுவ‌த‌ற்குள்....


"அண்ணா....பாருங்கண்ணா... துள‌சி தியேட்ட‌ரில் த‌மிழ்ப்ப‌ட‌ம்... அண்ணா...."குருவி"ண்ணா...!!!!!"  என்று எக்ஸைட் ஆகிக் கூவ‌ ஆர‌ம்பித்தான் எங்க‌ள் கூட்ட‌த்தில் ஒரு குட்டி ப்ளாக் ஷீப்.... "ம்ம்மேமே".... ஒரேயொரு விஜ‌ய் ஃபேன்... லீவுக்கு ஊர்சுற்றிப் பார்க்க எங்களை நம்பி பெங்க‌ளூரு வந்திருக்கும் ந‌ண்ப‌னின் சின்ன‌த் த‌ம்பி...  
(யாருக்கும் ரசிகனாகாமல் பார‌ப‌ட்ச‌மின்றி எல்லாரையும் கலாய்க்கும் கூட்டம் நாங்க‌ள்!!)

"டேய்.. அவ‌னா நீ!!!!.... சொல்லவே இல்ல!" என்று நாங்கள் அல‌றுவ‌த‌ற்குள்...

"ண்ணா ண்ணா.. ப்ளீஸ்ணா ப்ளீஸ்ணா...." என்று கெஞ்ச‌ ஆர‌ம்பித்துவிட்டான் அந்தக் குட்டிப்பிசாசு..

எங்களில் ஒருவன் திடீரென எமோஷனலாக....
"டேய் நீ.. நீ என்னை என்ன‌ சொல்லிக் கூப்பிட்ட‌??" என்று கேட்க‌...

"அண்ணா..."  என்று எக்கோ எஃபெக்டில் அந்தத் தம்பி சொன்னான்....

"லாலாலா ல‌லா லாலாலா...." என்று எஸ் ஏ ராஜ்குமார் மியூசிக் கேட்டது...
 
"எங்க திரும்ப சொல்லு..."... அதே எமோஷன்...

"அண்ணா....." .... அதே எக்கோ...

மீண்டும் "லாலாலா ல‌லா லாலாலா" கேட்ட‌து

அடுத்த சீன்....

டிக்கெட் க‌வுண்ட‌ரில் அழுதுகொண்டே நின்றுகொண்டிருக்கிறேன் நான்... (என‌க்கேஏஏஏஏ..என‌க்காஆஆ என்று சற்று நேரத்துமுன் ஒலித்த‌ அதே ஹைர‌ப்பா பாட்டு இப்போது டி எம் எஸ் குர‌லில் சோக‌மாக‌ ஒலிக்கிற‌து பின்ன‌ணியில்)

ஏன்யா...எவ்ளோ விஜ‌ய் ஃபேன்ஸ் இருக்கீங்க‌... ப‌ட‌ம் வ‌ந்த‌ ரெண்டாவ‌து நாள் செக‌ண்ட் ஷோ.. ஹ‌வுஸ்ஃபுல் ஆகியிருக்க‌ வேண்டாமாய்யா!! ஆக‌லியே... எட்டு டிக்கெட்டுகள் பால்க‌னியில்.... முத‌ல்போணியே நாங்க‌தான்....

ந‌ல்ல‌ சென்ட‌ர் சீட்டை எங்கள் செல்லத் த‌ம்பிக்குக் கொடுத்துவிட்டு எட்டாவ‌து ஆளாக‌க் கார்ன‌ர் சீட்டில் நான் ப‌துங்கிக்கொண்டேன்.... "கில்லி" டீம் திரும்ப‌வும் இணைஞ்சிருக்காங்க, நிச்சியமா படம் பாக்குற‌ அள‌வுக்குக் இருக்கும்"னு ஓர் எதிர்பார்ப்பு என் ம‌னசுக்குள்ளேயும் இருந்துச்சு பாருங்க‌...... அதைத்தான் பாஸ் இன்னைக்கு வரைக்கும் என்னால தாங்கிக்கவே முடிய‌ல...!!!

கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ ஆட்க‌ள் வ‌ரப் பாதி தியேட்ட‌ர் நிறைந்த‌மாதிரி இருந்த‌து....

அப்போதான் வ‌ந்தான் அந்த ஜீன்ஸ் போட்ட‌ க‌டோத்க‌ஜ‌ன்...

பழைய ர‌ஜினி ப‌ட‌த்துல எல்லாம் ஒவ்வொரு ப‌ட‌த்துக்கும் ஒவ்வொரு குண்ட‌னைப் பிடிச்சுக் கூட்டிட்டு வ‌ருவாங்க‌ இல்ல‌யா க்ளைமேக்ஸ் ஃபைட்டுக்கு... அந்த‌ மாதிரி ஒரு உருவ‌ம்..... ஆற‌டிக்கு இர‌ண்டு இஞ்ச் குறைஞ்ச‌ நானே அவ‌ன் நெஞ்சுவ‌ரைக்கும்தான் இருக்கேன்......அண்ணனோட‌ பை-‍செப்ஸே என் உட‌ம்ப‌க‌லத்துக்கு இருக்குது!  கிருதா மீசையெல்லாம் வெச்சு... வய‌ல‌ட் க‌ல‌ரில் டைட்ட்ட்...டான‌ ஒரு டி-ஷ‌ர்ட் போட்டு எங்க‌ளுக்கு முன்வ‌ரிசையில் அவ‌ரு திடுமுன்னு உக்காந்த‌ப்போ பொறிக‌ல‌ங்கி பூமி அதிருன‌து எங்க‌ க‌ண்ணுல‌ தெரிஞ்ச‌து....!!

த‌டிய‌ன் உக்காந்த‌து க‌ரெக்டா எங்களின் செல்லத் தம்பி பொடியனின் சீட்டுக்கு முன்னால்.....

ப‌ட‌ம் ஆர‌ம்பிச்சு.... த‌ள‌ப‌தி அந்துபோன கார் ஆக்ஸ‌ல‌ரேட்ட‌ரைப் ப‌ல்லால‌ க‌டிச்சு இழுத்து கார்ரேஸில் ஸ்பீடாகப் பிச்சு ஏறிக்கொண்டிருக்கும்போது.... இந்த‌ப் பொடிய‌ன் ஸீட்டுமேல ஏறி முட்டிபோட்டுத் திரையைப் பார்க்க‌ ம‌ல்லுக்க‌ட்டியிருக்கிறான்...... ஸீட்டில் உட்கார்ந்து பார்த்தால் முன்ஸீட்டிலிருக்கும் அந்த இரும்புக்கோட்டை முர‌ட்டுசிங்க‌த்தின் முதுகும‌ட்டும்தான் தெரிந்திருக்கிற‌து இந்தக் கத்திரிக்காய் பிஞ்சுக்கு!!


த‌ள‌ப‌தி அங்கு ரேஸில் ஜெயித்து மாள‌விகாவுட‌ன் "ட‌ண்ட‌ர்னா ட‌ர்னா.. டணகுணக்கா டணகுணக்கா" பாட்டுக்கு முட்டிபோட்டு போட்டு எழுந்திரிச்சு ஆட‌ ஆர‌ம்பிக்க..... அத‌ற்குமேல் அட‌க்க‌முடியாம‌ல் "தடிய‌ன் ம‌றைக்கிறான்ணா" என்று ப‌க்க‌த்தில் இருந்த‌ ந‌ண்ப‌னின் காதைக் க‌டித்திருக்கிறான் பொடிய‌ன்....

அப்ப‌டியே குசுகுசுவென‌க் கிசுகிசுத்து விஷ‌ய‌ம் ஒவ்வொரு காதாக‌ இட‌ம்மாறிக் க‌டைசியில் இருந்த‌ என் காதில் வந்து விழுந்தது...!

"ம‌ச்சான்... அந்த‌த் த‌டிய‌ன் ந‌ம்ம‌ த‌ம்பிக்கு ஸ்க்ரீனை ம‌றைக்கிறானாம்... அவ‌னைக் கொஞ்ச‌ம் ட‌வுன் ப‌ண்ணி உக்கார‌ச்சொல்லு..."  என்று ச‌க‌ஜ‌மாக‌ச் சொன்னான் ந‌ண்ப‌ன்...

ந‌ல்லா கேட்டுக்கோங்க‌ நியாய‌த்த‌... எட்டு சீட்டு த‌ள்ளி உக்காந்திருக்குற‌ நான்... எட்டிக்கிட்டு போய் "சார் கொஞ்ச‌ம் ட‌வுன் ப‌ண்ணி உக்காருங்கன்னு அந்த சார்கிட்ட‌ சொல்ல‌னுமாம்!!"

ஹ்ம்ம்ம்.... "ந‌ண்பேன்டா!!"  என்று ம‌ன‌துக்குள் நினைத்துக்கொண்டு... நானும் மெதுவாக‌ குண்ட‌னின் காதுப‌க்க‌தில் சென்று கிசுகிசுத்தேன்...

"சார்... சார்... "

"என்ன‌?"  என்ப‌துபோல் அவரது கதகளிப் புருவங்களை உய‌ர்த்தினார் அந்த‌ப் பொன்ன‌ம்ப‌ல‌ம்...


"வ‌ஞ்ச‌க‌மில்லாம‌ வ‌ள‌ந்திருக்கீங்க‌ நீங்க‌... ஆனா பாவ‌ம் உங்க‌ளுக்குப் பின்னால‌ ஒரு ப‌ச்ச‌ப்புள்ள‌... இன்னும் முளைக்க‌வே இல்ல‌... அவ‌னுக்கு உங்க‌ விரிஞ்ச‌ முதுகுல‌ பாவ‌ம் விஜ‌ய் தெரிய‌ல‌.... ஸோ நீங்க‌ கொஞ்ச‌ம் ட‌வுன் ப‌ண்ணி உக்காந்துக்கிட்டீங்க‌ன்னா..... உங்க‌ காதுக்கும் க‌ழுத்துக்கும் ந‌டுவுல‌ இருக்குற‌ கேப்புல‌ புகுந்து அவ‌ன் ப‌ட‌ம் பாத்துக்குவான்...."
என்று ப‌டு ப‌ணிவாக‌ முறையிட்டேன்.. ..கீழே ஜீன்சுக்குள் என் தொடை ந‌டுங்க‌....

அத‌ற்கு அந்த மாயாப‌ஜார் ர‌ங்காராவ்.... "நான் பட‌ம்பாக்க‌ ஆர‌ம்பிச்ச‌ கால‌த்துல‌ இருந்தே இதே தொந்த‌ர‌வுதான்டா"  என்று அலுத்துக்கொள்ள‌....

"அதுக்கு நீங்க‌ அள‌வா வ‌ள‌ந்திருக்க‌ணும்!"  என்று நான் சொன்ன‌து ந‌ல்லவேளை அவ‌ர் காதில் விழ‌வில்லை...

அண்ணன் கொஞ்சம் ட‌வுன் செய்து உட்கார்ந்துகொள்ள‌த் த‌ம்பிக்கு ம‌ன‌செல்லாம் ம‌த்தாப்பூ.... ப‌ய‌புள்ள‌ அந்த‌ப் ப‌ட‌த்தை அவ்ளோ ரசிச்சு பாக்குது... ஹ்ம்ம்ம்....யாரு பெத்த‌ புள்ளையோ... என்னத்த சொல்லுறது....!!

ஃப‌ர்ஸ்ட் ஹாஃபில் ஏதோ அங்கிங்கு விவேக் புண்ணிய‌த்தில் ப‌ட‌ம் ந‌கர்ந்தது... அவ்வ‌ப்போது த‌ள‌ப‌தி வண்டி வண்டியாக எடுத்துவிடும் ப‌ஞ்சு ட‌ய‌லாக்குக‌ளுக்கு என்த்து வாகி த‌டிய‌ன் நிமிர‌....... "அண்ணா..."..  என்று என்னைப்பார்த்துப் பொடிய‌ன் அல‌ற‌.... நானும்... "அண்ணா..."  என்று த‌டிய‌னின் தோளை அழுத்த‌..... இப்படியே ஒருவழியாக‌ இண்ட‌ர்வெல் வந்துவிட்டது.....

இண்டெர்வெலில் யாரும் யார் முக‌த்தையும் பார்த்து பேசிக்கொள்ளவேயில்லை..... த‌ம்பி செண்டிமெண்டில் லாலாலா பாடிய எமோஷனல் நண்பன் அவனாகவே முன்வந்து அமைதியாக‌ அத்த‌னைபேரின் பாப்கார்ன் கோன் ஐஸ்க‌ளுக்கு பில்லைக் க‌ட்டினான்...

"வாங்க‌டா... உள்ளே போக‌லாம் படம் போட்டுடப்போறான்.."  என்று சொன்னான் பாசமான முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு....

கண்கலங்க அவனை ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே போணோம்....

இதுக்கு மேல‌ த‌டிய‌னோட‌ க‌ப‌டியாட‌ முடியாது என்றுப் பொடிய‌னின் ஸீட்டில் நான் அம‌ர்ந்துகொண்டேன்...

கேண்டீனையே காலிப‌ண்ணிவிட்டு ப‌டம் போட்ட‌பின் வந்து சேர்ந்தார் அந்த‌ ஆள‌வ‌ந்தார்...

"சார் இனிமே நோ ப்ராப்ள‌ம்... நீங்க‌ ஃப்ரீயா உக்கார‌லாம்... நான் ஸீட்டை மாத்திக்கிட்டேன்!!"

என்று குண்டனிடம் ப‌ய‌ப‌க்தியுடன் நான் அப்ரூவரானேன்....

"ஹ்ம்ம்ம்" என்று லேசாக‌ சிரித்துவிட்டு மீண்டும் பூமிய‌திர தங்கென்று ஸீட்டில் அம‌ர்ந்தார் அந்தத் தாராசிங்கு...

ய‌ப்பா.......செக‌ண்ட் ஆஃபுக்குமேல படம்..... அய்ய‌ய்ய‌ய்யோ.... ச‌த்திய‌மா என்னால‌ தாங்க‌வேமுடிய‌ல‌... தில், தூள், கில்லி எடுத்த‌ த‌ர‌ணி ப‌ட‌மா இது..... என்ன‌ய்யா ஆச்சு உன‌க்கு???!!  என்று செத்துப்பொழ‌ச்சு குத்துயிரும் கொலையுயிருமா வாட்சைப் பார்த்தால்...... அடுத்து ஒரு பாட்டு ஸீன்....! அவனவன் செத்துபோய் இருக்கும்போது.....
"மொழ‌ மொழ‌ன்னு ய‌ம்மா ய‌ம்மா" ன்னு விஜ‌ய்யும் த்ரிஷாவும் ம‌ஞ்ச மஞ்சேர்னு டிரெஸ்ஸ‌ போட்டு குழைஞ்சுக்கிட்டு இருக்குறாய்ங்க‌...... "அடிங்கொய்யால‌..."  என்று பொறுக்க‌முடியாம‌ல்  கொதித்தெழுந்து விட்டேன்..... முன்ஸீட்டுத் த‌டியனின் காதைச் சுர‌ண்டினேன்...

"ஏன்டா.. உன‌க்குமாடா ம‌றைக்குது... பாட்ட‌ப் பாக்க‌ விடுங்க‌டா!! என்று புல‌ம்பிய‌வ‌னிட‌ம்...


"அண்ணே..... ப‌ட‌ம் தாங்க‌முடிய‌ல‌ண்ணே...... நீங்க‌ கொஞ்சூண்டு நிமிந்து அப்புல வ‌ந்தீங்க‌ன்னா என‌க்கு ஃபுல் ஸ்க்ரீனும் ம‌றைஞ்சிடும் நான் காத‌பொத்திக்கிட்டுத் தூங்கிடுவேன்..... ப்ளீஸ்ணா.......!!"  என்று நான் கெஞ்ச‌....

குண்ட‌ன் டென்ஷனாகிவிட்டான்.... "புரியுதுண்ணா... புரியுது... உங்க க‌ஷ்ட‌ம்‌ புரியுது.....எங்களுக்கு நீங்க‌ ம‌றைச்சுடுவீங்க‌... உங்க‌ளுக்கு யாரு மறைப்பா??!!!!"  என்று பக்கத்து ஸீட்டு நண்பன் அவன் பங்குக்கு ஒரு பிட்டைப் போட்டு மீண்டும் கலாய்க்க.....

முன்வ‌ரிசை.. பின்வ‌ரிசையிலெல்லாம் சிரிப்பு ச‌த்த‌ம்......

"ஆப‌ரேட்ட‌ருக்கு யாரு ம‌றைப்பாருய்யாஆஆ??" என்று முன்னாலிருந்து ச‌த்த‌மாக‌ ஒரு குர‌ல்வேறு....!!

சிரித்துக் க‌லாய்த்து எப்படியோ எங்க‌ளை நாங்க‌ள் காப்பாற்றிக்கொள்ள‌ ஒருவ‌ழியாக‌ ப‌ட‌த்தின் வில்ல‌ன்க‌ளை ம‌ட்டும் விஜ‌ய் கொன்றிருந்தார் க்ளைமேக்ஸில்.. எங்க‌ளை மன்னித்து விட்டுவிட்டார் :)

கொஞ்ச‌நேர‌ம் க‌வ‌லைய ம‌ற‌ந்து ச‌ந்தோஷ‌மாயிருக்க‌லாம்னு தானய்யா தியேட்ட‌ருக்குப் போறோம்.... ஹ்ம்ம்.. என்ன‌த்த‌சொல்ல‌.....
 நான் "வில்லு" , "அணா கிணா தணா மகன்"(அதான் அழகிய தமிழ் மகன்!) படத்துக்கு எல்லாம் போகல.. நீங்க போயிருந்தா உங்க கதையையும் சொல்லுங்க!!!

ப‌ட‌ம் முடிஞ்சதும் எல்லாரும் எழுந்த‌ரிக்குற‌துக்கு முன்னாடியே எழுந்து குண்ட‌ன் கையில‌ சிக்காம‌ நான் எஸ்கேப் ஆன‌து த‌னிக்க‌தை!!!!


ஏய்ய்.. குருவி குருவி குருவி அடிச்ச்சாசாஆஆஆ!!! :-)))))


அன்புட‌ன்,
பிர‌பு எம்

Friday, November 19, 2010

"தமிழனாக" , "இந்தியனாக" சில "மனித" உணர்வுகள் (பாகம் 2)

"தமிழனாக" , "இந்தியனாக" சில "மனித" உணர்வுகள் (பாகம் 1)

"தமிழனாக" , "இந்தியனாக" சில "மனித" உணர்வுகள் (பாகம் 2):-

ஏற்கெனவே இந்தப் பதிவில் குறிப்பிட்டிருப்பதைப் போல என்னுடைய சித்தி எனக்கு இரண்டு வயது இருக்கும்போதே திருமணமாகி நியூஸிலாந்தில் குடியேறிவிட்டார்... சென்ற வருடம் என் தம்பி, தங்கைகளுடன் அவர்கள் இந்தியா வந்திருந்தபோது, ஒருநாள் இரவு எல்லாரும் தூங்குவதற்கு ஆயத்தமாகும் சமயத்தில் திடீரென என் தம்பி ஒரு தலையணையைத் தூக்கிக்கொண்டு என்னிடம் வந்து "எக்ஸ்க்யூஸ் மி அண்ணா.. மே ஐ யூஸ் யுவர் பில்லோ ப்ளீஸ் ?!!" என்று கேட்டு நின்றான்..... அதே தலையணையை நான் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும்போது அவன் உருவி எடுத்துச்சென்று குறும்பு செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துப்பார்த்தேன்....!! மனித‌ இரத்தத்தில் ஜீன்களின் வழி உறவும், உரிமையும் ட்ரான்ஸ்ஃபர் ஆவதைவிட அதிவேகமாய் மொழியும், உணர்வும், கலாச்சாரமும் இயல்பாகக் கலந்துவிடுகிறது... ஹ்ம்ம்ம்ம்....

மேலே என் த‌ம்பியிட‌ம் நானுண‌ர்ந்ததைப் போன்றதொரு தூரப்பாச‌த்தைத்தான் உண‌ர்ந்தேன் தாய்மொழியில் அன்பைப் ப‌கிர்ந்துகொள்ள முடிந்த என் அண்டை நாட்டுத் த‌மிழ‌ர்க‌ளிட‌ம்... ஃப்ரான்ஸில் இருக்கும் புனித‌ லூர்த‌ன்னை திருத்த‌ல‌த்திற்கு நான் செல்ல‌வேண்டும்... லூர்தின் ர‌யில்வே ஸ்டேஷன் வரை எப்படியோ வந்து சேர்ந்துவிட்டேன்... அந்த ஸ்டேஷனில் குளிரில் த‌னியாக நிற்கிறேன் ஃப்ரெஞ்சு பூமியில் ஆங்கில‌ம் ம‌ட்டும் தெரிந்த‌ நான்! நான் அக்கா என்று அழைக்கக்கூடிய‌ வ‌ய‌தில் அங்கே நின்றிருந்த‌ பெண் ஒருவரின் நெற்றியில் இருந்த‌ பொட்டு என்னிட‌ம் த‌மிழ் பேச, நேரே சென்று ஒரு வ‌ண‌க்க‌ம் வைத்து, அவர்களிடம் நேர‌டியாக‌த் த‌மிழிலேயே உதவி கேட்டேன் இங்கிருந்து கோயிலுக்குப்போக‌ உதவுங்கள் என்று! நான் பிறந்து வளர்ந்த மதுரைப் பழக்கத்தில், எடுத்த‌ எடுப்பிலேயே "அக்கா" என்று உரிமையோடு அழைக்க‌ ஆர‌ம்பித்துவிட்டேன்.. அத‌ன்பின் இல‌ங்கைத் த‌மிழில் இனிக்க‌ இனிக்க‌ப் பேசி அவ‌ர்க‌ளின் குடும்ப‌ம் என்னை அவ‌ர்க‌ளில் ஒருவ‌னாக‌ இணைத்துக்கொண்டு செய்த‌ உத‌விக‌ளை, பகிர்ந்துகொண்ட‌ பாச‌த்தை விவ‌ரிக்க‌த் த‌னி ப‌திவு வேண்டும்...

இன்று ஐரோப்பிய‌ நாடுக‌ளில், நாடிழ‌ந்துவிட்ட‌ கார‌ண‌த்தால் த‌ஞ்ச‌ம் புகுந்திருக்கும் எண்ணற்ற தமிழர்கள், இந்தியர்கள் அல்லர்! இந்தியாவில், தமிழ்நாட்டில் "தமிழ் எங்கள் உயிருக்கும்மேல்" என்று கொக்கரிக்கும் தானைத் தலைவர்களின் நிழல்களில் பிறந்து வளர்ந்து விட்டதாலோ என்னவோ "தமிழர்கள்" என்று சொன்னால் இந்தியாவின் தெற்கில் இருக்கும் தமிழகத்தில் வாழ்பவர்கள் என்றுதான் நினைத்திருந்தேன்... ஆனால் "தமிழ‌ன்" என்ப‌வ‌ன் திரைக‌ட‌ல் ஓடித் திர‌விய‌ம் தேடிய‌வன்.....த‌மிழ்த்தாயின் பாத‌ம் நனைக்கும் இந்திய‌ப் பெருங்க‌ட‌லின் அடியில் ஒரு தேச‌த்தைத் தொலைத்த‌வ‌ன் என்றெல்லாம்.... முத‌ன்முறை ம‌லேசிய‌ ம‌ண்ணில் நான்கு த‌லைமுறைத் த‌மிழ‌ர்க‌ளைக் க‌ண்ட‌பின்தான் தேடிப் படித்துத் தெரிந்துகொண்டேன்..."தமிழன் இல்லாத தேசமில்லை... எனினும் தமிழனுக்கென்றொரு தேசமில்லை" என்னும் வரிகளின் உண்மையை சென்றவிடமெல்லாம் புரிந்துகொண்டேன்...

ஃபிரான்சில் எந்த‌வொரு பொதுஇட‌த்திற்கு சென்றாலும் ப‌த்துபேரைப் பார்த்தால் அதில் ஒருவ‌ர் ந‌ம்ம‌ சொந்த‌க்கார‌ர் போல‌த் தெரிகிறார்... அவ‌ரிட‌ம் தைரிய‌மாகச் சென்று தமிழில் பேசலாம்! "ஹிந்தி தெரியாம‌ல் அதெப்ப‌டி நீ இந்தியாவில் வாழ்ந்துவிட‌ முடியும்" என்று ஆழ‌மாக‌ நம்பிய‌ என்னுடன் வந்த என் மும்பை அலுவ‌ல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள்.... ஃபிரான்சில் நான் தமிழில் பேசி எளிதில் ப‌ய‌ணித்துவிடுவ‌தை ஆச்ச‌ர்ய‌ப்ப‌ட்டுப் பார்த்தார்க‌ள்! "ஹிந்தியை நீங்கள் நேஷனல் லாங்வேஜாக சொல்லுவதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை... இங்கு ஃபிரான்சிலும், இத்தாலியிலும் நீங்கள் பார்ப்பதை வைத்து தமிழை நான் இண்டர்நேஷனல் லாங்வேஜ் என்று அழைக்கலாமா!!" என்று கேட்டு வெறுப்பேற்றினேன்!
 
"இட்லி, தோசை, இடியாப்ப‌ம் கிடைக்கும்" என்று ஃப்ரெஞ்சு ம‌ண்ணில் அங்குமிங்கும் மின்னும் த‌மிழைக் க‌ண்க‌ளில் ஒற்றிக்கொள்ளும் உண‌ர்வு ஒருபுறம் வ‌ந்தாலும்... மறுபுறம் இந்த‌த் த‌மிழ் எழுத்துக்க‌ள் இந்த‌ ஃபாரின் சுவ‌ர்களில் பொறிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌த‌ன் மூலகார‌ண‌ம் ஒரு க‌ண்ணீர் வ‌ர‌லாறு என்ப‌தையும் ம‌றுப்ப‌த‌ற்கில்லை.... இல‌ங்கையைச் சேர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ள் ஐரோப்பாவின் ர‌யில்வே ஸ்டேஷ‌ன்க‌ளில் அவ‌ர்க‌ளின் ப‌ள்ளித் தோழ‌ர்க‌ளை, க‌ல்லூரித் தோழ‌ர்க‌ளை ச‌க‌ஜ‌மாக‌ ச‌ந்தித்துக்கொள்கின்ற‌ன‌ர்! ஆனால் அவ்வாறு ச‌ந்தித்துக்கொள்ளும்போதும் இய‌ல்பாக‌வே பேசிக்கொள்கின்ற‌ன‌ர்.... வாழ்வில் ஆழ‌மான‌ சோக‌ம் ப‌ட‌ர்ந்த‌பின் சின்ன‌ச் சின்ன‌ ஆச்ச‌ர்ய‌ங்க‌ள் எந்த‌ ஆர்ப்பரிப்பையும் அவ‌ர்க‌ளுக்குத் த‌ருவ‌தில்லை என்று நினைக்கிறேன்.... ப‌ள்ளித்தோழ‌ர்க‌ள் க‌ட‌ல்க‌ட‌ந்து சந்தித்து உற‌வாடினாலும் அங்கே அந்தப் ப‌ள்ளி ஓர் இன‌வெறிப் போராட்ட‌த்தில் இடிந்த‌ல்ல‌வா கிட‌க்கிற‌து....

எண்ணற்ற தமிழர்கள்....பேசினோம்... ப‌ழ‌கினோம்.... எவ்வ‌ள‌வோ விஷ‌ய‌ங்க‌ளைப் ப‌கிர்ந்துகொண்டோம்... ஃப்ரெஞ்சுக் காற்றில் தாய்மொழி வாசனையில் திளைத்தோம்.... ஆயிர‌ம்தான் இருப்பினும் அதை நானும் சரி அவர்களும் சரி....ஓர் "ஊமைப் பாச‌மாக‌"த் தானுண‌ர்ந்தோம் கார‌ண‌ம் எங்களின் நாடுகள் வெவ்வேறாயிற்றே!! பேச்சினூடே நானும் ஒருசில‌ விஷ‌ய‌ங்களைத் தொடவேண்டாம் என்று க‌வ‌ன‌மாக‌ இருந்தேன் அவ‌ர்க‌ளிட‌மும் அதே க‌வ‌ன‌த்தை உண‌ர்ந்தேன்...

இன்று ஃப்ரான்சிலும், இத்தாலி, ஜெர்ம‌னிலும் ந‌ன்றாக‌ வாழ்க்கை அமைத்துக்கொண்டாலும் ஒவ்வொருவ‌ரும் ஒவ்வொரு இடத்துக்கும் வ‌ந்து சேர்ந்த‌ க‌தைகளைக் கேட்க‌வே கொடுமையாய் உண‌ர்ந்தேன்... என‌க்கு உத‌விசெய்த‌தாய் மேலே குறிப்பிட்ட அக்கா, உடன் வ‌ந்திருந்த‌ அவர்களின் த‌ந்தையைத் தன் வாழ்வில் ப‌தினைந்து வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்துக் கடந்த மாதம்தான் ச‌ந்தித்திருக்கிறார்....!! அத‌ற்கு ந‌ன்றி சொல்ல‌த்தான் லூர்த‌ன்னைத் திருத்த‌ல‌த்திற்கு வ‌ந்திருக்கிறார்.... ப‌த்து நாள் என் அம்மா அப்பாவைப் பார்க்காவிட்டால் "ஹோம்சிக்" ஆகிவிடும் நான் அதைக்கேட்டு இய‌ல்பாய்க் க‌ண்க‌லங்கினேன்... ப‌த்துப் ப‌தினைந்து வ‌ருட‌ம் க‌ழித்து ச‌ந்திப்ப‌து எல்லாம் ச‌ர்வ‌ சாதாரணமாம்.... ப‌தினைந்து இருப‌து ஆண்டுக‌ள் க‌ழித்து உற‌வின‌ர்க‌ள் உயிருட‌ன் இருப்ப‌தாய் அறிந்த‌ குடும்ப‌ங்க‌ளெல்லாம் இருக்கின்ற‌ன‌வாம்.... இதையெல்லாம் கேட்டுக் க‌ல‌ங்க‌ "த‌மிழ‌ன்" என்கிற‌ உண‌ர்வு வேண்டுமா.. வெறும் "ம‌னித‌" உண‌ர்வு போதாதா..?? இதும‌ட்டும்தான் என்ம‌ன‌தில் எழுந்த‌ கேள்வி....

"அக‌தி" என்னும் இந்த‌ வார்த்தை ப‌கிர‌ங்க‌ப்ப‌டுத்தும் சமூகக் கொடூர‌த்துக்கு, நில‌த்தையும் நில‌மேற்கொண்ட‌ ஆட்சியையும் கைப்ப‌ற்றப் ப‌ல‌ போர்க‌ளையும், அர‌சிய‌ல் ச‌துர‌ங்க‌ங்க‌ளையும் வென்ற‌ ச‌ரித்திர‌ மாவீர‌ர்க‌ள் அத்த‌னை பேருமே த‌லை குனிய‌ வேண்டும் வெறும் வெறிபிடித்த கோழைகளாக....

"அணாதை" என்னும் வார்த்தையை விட‌க் கொடூர‌மான‌து "அக‌தி" என்று உண‌ரும் நிலை... இந்த‌ இனிமையான‌ கௌர‌வ‌மான‌ ம‌னித‌ர்க‌ள் யாவ‌ரும் வாழ்வில் சில‌மணி நேர‌ங்க‌ளாவ‌து "அக‌தி" என்று உண‌ர்ந்திருக்கிறார்க‌ள்... அறிய‌ப்ப‌ட்டிருக்கிறார்கள் என்று உணர்கையில் நாடு, க‌ண்ட‌ம், ஊர், உல‌க‌ம் என்றெல்லாம் பிரிக்க‌ப்ப‌ட்டிருக்கும் உல‌க‌ வ‌ரைப‌ட‌ங்க‌ளைக் கிழித்து எறிய‌வேண்டுமென்று தோன்றிய‌து....

இன்னும் இன்னும் இன்னும் எவ்வ‌ள‌வோ அனுப‌வ‌ங்க‌ள்!

"த‌மிழ‌ர்"க‌ளுட‌ன் ப‌ழ‌கும்போது ஒவ்வொருவ‌ரும் ச‌ராச‌ரியாக‌ ஒரு ப‌த்தாவாது நிமிடத்தில் " நீங்க‌ள் என்ன‌ ஜாதி?" என்று வாய்க்கூசாம‌ல் கேட்பார்க‌ள்... ந‌ல்ல‌வேளை நான் வ‌ள‌ர்ந்த‌வித‌த்தில் ஜாதி உண‌ர்வைப் போன்ற‌ அருவ‌ருப்புக‌ள் எல்லாம் என‌க்கு விதைக்க‌ப்ப‌ட்டுவிட‌வில்லை என்று நினைத்துக்கொண்டேன்... இருக்கின்ற பிரிவினைகள் போதாதென்று இதுவேறயா என்று நினைத்து சிரித்துக்கொள்வதைத் தவிர வேறென்ன செய்ய!

ஈழ‌ம் தொடர்பான விஷ‌ய‌ங்க‌ளைப் பேசிய‌போது இருவேறு நாட்டைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளாக‌த்தான் பேச முடிந்தது... முடிந்த‌வ‌ரை ராஜ‌ப‌க்ஷே, ராஜீவ்காந்தி போன்ற சிக்கலான‌ வார்த்தைக‌ளைத் த‌விர்த்துப்பேசிய‌து ந‌ல‌மாக‌ இருந்தது... எப்ப‌டிச் சின்ன‌ வ‌ய‌தில் பாகிஸ்தான் என்று சொன்ன‌வுட‌ன் ஓர் "இந்திய‌" உண‌ர்வு கொப்பளிக்குமாறு நாம் வ‌ள‌ர்ந்திருக்கிறோமோ அதேபோல்தானே அவ‌ர்க‌ளுக்கும் "இல‌ங்கை" உண‌ர்வு இருக்கும்! இல‌ங்கைக்கு இங்கிருந்து நீளும் ராம‌ர்பால‌ங்க‌ள் போல‌ப் பேசும் அசிங்க‌மான‌ நம் கைப்புள்ள‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் இன்னும் அசிங்க‌மான‌வ‌ர்க‌ள் என்று புரிந்துகொள்ள‌முடிந்த‌து நேர‌டியாக‌ப் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளிட‌ம் பேசிய‌போது... சர்வதேச அர‌சியல், இந்திய அரசியல், இலங்கை அரசியல் என்று பெரும் அரசியல் விளையாட்டுக்க‌ள் ஏற்கென‌வே பிரிந்துகிட‌க்கும் இந்த‌வொரு இன‌த்துக்குக் கூடுத‌ல் சாப‌மாக‌ப் பூசிமூடிவிட்ட‌து என்று க‌வ‌லையுட‌ன் உண‌ர‌முடிந்த‌து... இன‌த்தின்பேரால் உரிமை ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌ நிலையில் போராட்ட‌ம் இய‌ல்பான‌து ஆனால் அது எப்ப‌டி சுயாட்சிப் போராட்ட‌மாக‌ வெடித்த‌து என்ப‌தைப் ப‌ற்றி நானும் கேட்டுக்கொள்ள‌வில்லை அவ‌ர்க‌ளும் சொல்ல‌வில்லை.... இந்திய‌த் த‌மிழ‌ர்களைப் பொறுத்தவரைக் தமிழகத்தின் கையில் இருக்கும் 40 இந்திய நாடாளும‌ன்ற‌ சீட்டுக‌ள் நிச்சிய‌ம் அவ‌ர்க‌ளைக் காக்கும் இந்தியாவில் நாடாளும‌ன்ற‌த்தில் கூட்ட‌ணி ஆட்சிக‌ள் இருக்கும்வ‌ரை! மெஜாரிட்டி என்று ஒரு த‌னிக்க‌ட்சிக்குக் கிடைத்துவிட்டால்... ஹிந்தி க‌த்துக்க‌மாட்டேன் என்றெல்லாம் அட‌ம்பிடிக்க‌முடியாம‌ல் ஜோதியில் ஐக்கிய‌மாகிவிடும் நிலையில் இந்திய‌த் த‌மிழ‌ன் இல‌ங்கைத் த‌மிழ‌னின் நேற்றைய‌ உண‌ர்வுக‌ளை இன்னும் நெருக்கமாக புரிந்துகொள்ள‌ நேரிட‌லாம்....

ஃப்ரான்சிலிருந்து திரும்பி மும்பை வ‌ந்த‌ இர‌ண்டு நாட்க‌ளில்... மீண்டும் ஹிந்தி Vs த‌மிழ் ஜாலிஃபைட்டுக‌ள் துவ‌ங்க‌... இன்றும் தொட‌ர்கிற‌து... ஏக் காவ் மே ஏக் கிஸான் ர‌குதாத்தா!! ;)

இத்தனை காஸ்ட்லி அனுபவங்களுக்கு முன்னும் பின்னும்.....என் த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கையைப் பொறுத்த‌வரை , முழுக்க முழுக்க உண‌ர்வுப் பூர்வ‌மாய் வாழ்ந்து "முட்டாளா"கி விடுவதையும்... அதே நேர‌ம் எல்லாவற்றையும் அறிவுப்பூர்வ‌மாக‌வே அணுகி "மிருக‌மாகி"ப் போய்விடுவதையும் இர‌ண்டையுமே நான் வெறுக்கிறேன்... முடிந்த‌வ‌ரை உண‌ர்வுக‌ளை மதித்து அறிவுப்பூர்வ‌மாக‌ வாழ‌ முயற்சித்துத் தொடரும் வாழ்க்கைப் ப‌ய‌ண‌த்தில், "த‌மிழன்", "இந்தியன்", "______", "_______" என்று எந்த‌ லேபிளையும் ஒட்டி நான் ப்ராண்ட் ப‌ண்ண‌ப்ப‌டுவ‌தை விரும்பாத‌துதான் என் 'உண‌ர்வு' என்றாலும் உல‌க‌ம் என்னை என் லேபிள்களைப் பார்த்துதான் அழைக்கும்,அணுகும் என்னும் மெய்ப்பொருள் காண்ப‌துதான் 'அறிவு'! இன‌ம், மொழி, ம‌த‌ம், ஜாதி இத்த‌னையையும் தாண்டி நம் பெயர் மட்டுமே நம் அடையாளமாக இருக்குமளவு சக்திகொண்டு எழ‌வேண்டுமெனில் அத‌ற்கு ஒரே வ‌ழி "சுய‌த்தை" மேலும் மேலும் ப‌ல‌ப்ப‌டுத்திக்கொள்வ‌துதான்.... இன்றைய‌ உல‌கில் சுய‌ந‌ல‌மே ச‌ரியான‌ அணுகுமுறை அது பொதுந‌ல‌த்தைப் பாதிக்காத‌ வரை....

"த‌மிழ‌னாக‌" "இந்தினாக‌" சில‌ "ம‌னித‌" உண‌ர்வுக‌ளை என் அறிவுக்கெட்டிய‌வ‌ரை... என் பார்வையில் அது அமைந்த‌ கோண‌த்தில் ப‌கிர்ந்திருக்கிறேன்.... க‌ர்நாட‌காவில், ம‌காராஷ்ட்ராவில், ம‌லேஷியாவில், சிங்க‌ப்பூரில், ஃப்ரான்சில் என்று இன்னும் இன்னும் ப‌ல‌ அனுப‌வ‌ங்க‌ள் இருந்தாலும் இப்போதைக்கு முடித்துக்கொள்கிறேன்.... எப்ப‌டியும் மீத‌மிருக்கும் வாழ்வையும் "த‌மிழ‌னாக‌"வும் "இந்திய‌னா"க‌வும்தானே வாழ்ந்தாக‌ வேண்டும்.... ஸோ அனுப‌வ‌ங்க‌ள் தொட‌ர‌த்தான் செய்யும்!

அன்புட‌ன்,
பிர‌பு எம்

Monday, November 15, 2010

Very Very Special ல‌க்ஷ்ம‌ண்!!

V VS ல‌க்ஷ்ம‌ண்...

இந்திய‌ டெஸ்ட் அணியின் ஆல்டைம் ஆப‌த்பாந்த‌வான்!

இந்த செகண்ட் இன்னிங்ஸ் சூப்பர்ஸ்டாரை Very Very Special ல‌க்ஷ்ம‌ண் என்று தோணி** செல்லப்பெயரால் அழைக்க,அன்றைக்கு அதற்கு சற்றுமுன்னர் டெய்லெண்ட‌ர்க‌ளுட‌ன் இணைந்து கடைசி த‌ருண‌த்தில் ஆஸ்திரேலியாவுடன் இவர் ஆடிக்காட்டிய ஆடுபுலியாட்ட‌த்தைக் க‌ண்டுக‌ளித்த‌ ஆடுக‌ள‌மே அதிர்ந்த‌து!!

ஹ‌ர்ப‌ஜ‌ன்... இஷாந்த் ஷ‌ர்மா... என்று யாருட‌ன் வேண்டுமானாலும் பார்ட்ன‌ர்ஷிப் போட்டு அசத்தும் இந்த ஹைத‌ராபாத் ஹீரோவின் துர‌திர்ஷ்ட‌ம் என்ன‌வென்றால் இவ‌ர் ஓய்வை அறிவித்த‌ கொஞ்ச‌நாளிலேயே கிரிக்கெட் உல‌க‌ம் இவ‌ரை ம‌ற‌ந்துவிடும் என்ப‌துதான்!!

காரணம் கிரிக்கெட் இப்போதெல்லாம் வெறும் நம்பர் கேம் ஆகிவிட்டது.....
அந்த வகையில் பார்க்கும்போது இந்த ஒரிஜினல் மேட்ச் ஸேவரிடம் நல்ல நம்பர்கள் இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்!

ல‌க்ஷ்ம‌ணின் கிரிக்கெட் வாழ்க்கைப் பல ஏற்ற இறக்கங்கள் கொண்ட‌து...

தொண்ணூறுக‌ளின் ம‌த்தியில் ஐசிசி கிரிக்கெட்டை ஓர் ஒட்டுமொத்த கமர்ஷியல் பேக்கேஜாக உருவாக்க மட்டைவீச்சின் மந்தமுகத்தை மாற்ற சில விருவிருப்பான ஐயிட்டங்களை உள்ளிறக்கத் துவங்கியது.... ஃபீல்டிங்கில் கட்டுப்பாடுகள்.... ஆடுகளத்தில் பேட்டிங்கிற்கு ஏதுவான சில திருத்தங்கள் என்று மாறிய போக்கில்.. இந்தியா போன்ற பிரிட்டிஷாரின் பழக்கத்தில் கற்றுக்கொண்ட க்ளாஸிக்கல் விஷயங்களை லேசில் மாற்றிக்கொள்ளாத‌ நாடுகள் கிரிக்கெட்டில் தங்கள் நிலையைக் காத்துக்கொள்ளத் தடுமாறின... காரணம்... பிரிட்டிஷார்கள் சொல்லிக்கொடுத்த டிரெடிஷனல் கிரிக்கெட்...'வலுக்கவனமாய்ப் பந்துகளைத் தரம்பிரித்து பவுலர் வீசும் ஒரு தவறான பந்தைத் துல்லியமான டைமிங்கும், சரியான ஷார்ட் செலக்ஷனுமாய்க் கணித்து, ஃபீல்டர்களுக்கு இடையே பந்தைப் புகுத்தி பவுண்டரிக்கு விரட்டினால் பர்கரையும் ஷாம்பெய்னையும் ருசித்துக்கொண்டிருக்கும் ஆடியன்ஸ் பதினைந்துபேர் "குட் கிரிக்கெட்டிங் ஷாட்!!" என்று கைதட்டுவார்கள்' என்பதாகும்!!

இங்கிலீஷ்கார‌ன் கொடுத்துட்டுப்போன‌க் க‌ல்விமுறையையே இன்றும் மாற்றிக்கொள்ளாத நம் இந்தியா... அவன் சொல்லிக்கொடுத்த‌ கிரிக்கெட் ஸ்ட்ராஜியையா மாற்றியிருந்திருக்கப் போகிற‌து!! அன்றைய‌ தேதியில் ஒட்டுமொத்த‌ இந்திய‌க் கிரிக்கெட் வ‌ர‌லாற்றிலேயே அதிர‌டியான‌ பேட்ஸ்மேன்கள் என்று கணக்கிட்டால் க‌பில்தேவ், ஸ்ரீகாந்த் ம‌ற்றும் ச‌ச்சின் டெண்டுல்க‌ர் ம‌ட்டும்தான்!!

அதே தொண்ணூறுக‌ளின் ம‌த்தியில் ர‌ஞ்சி டிராஃபி, துலீப் டிராஃபிக‌ளில் போதுமான‌ அள‌வு சாதித்துவிட்டு இண்ட‌ர்நேஷ‌ன‌ல் ஜெர்சி அணிய‌ ரெடியாக‌க் காத்திருந்த‌ ஷ்யூர்ஷாட் கில்லிக‌ளில் ல‌க்ஷ்ம‌ணும் க்ளாஸிக்கல் ஸ்டைலில் ஒரு கைதேர்ந்த‌ டெக்னிக்க‌ல் பேட்டிங் எக்ஸ்ப‌ர்ட்....

ல‌க்ஷ்ம‌ணின் ஸ்டைலிஷ் பேட்டிங் ஆர‌ம்ப‌ம் முத‌லே "A pleasure to watch!!" என்று புக‌ழ‌ப்ப‌ட்ட‌போதிலும் அப்போது உடனடி மாற்றம் வேண்டிய இந்திய‌ அணியில் இம்மீடியெட் வேக்கன்ஸிகள் இருந்த‌து அதிர‌டியான‌ பேட்ஸ்மேன்க‌ளுக்குத்தான்.... ஏற்கென‌வே டிராவிட் நிலைத்துஆடும் ஒரு வ‌லிமையான‌ விக்கெட்டாக அணியின் த‌விர்க்கமுடியாத‌ பேட்ஸ்மேனாகியிருக்க‌... அணியின் டெஸ்ட் டீமில் காலியாயிருந்த‌ ஒரே ஸ்லாட்டான‌ ஓப‌னிங் பேட்ஸ்மேனாக‌ சித்துவுட‌னும், ச‌ட‌கோப‌ன் ர‌மேஷுட‌னும் மாற்றி மாற்றிக் க‌ள‌மிற‌க்க‌ப்ப‌ட்டார் ல‌க்ஷ்ம‌ண்....
சிற‌ந்த‌ மிடிலார்ட‌ர் பேட்ஸ்மேனான‌ ல‌க்ஷ்ம‌ண் ஓப‌னிங் பேட்ஸ்மேனாக‌க் க‌ள‌மிற‌ங்க‌ அசௌக‌ரிய‌ப்ப‌ட்டு மீண்டும் ர‌ஞ்சிக்கே போய்விட்டிருந்தார்!

திடீரென‌ மீண்டும் வாய்ப்புக் கிடைத்து ஒரு தென்னாப்பிரிக்க‌த் தொட‌ரில் மிடில் ஆர்ட‌ரில்... அதில் சுமாராக செயல்பட்டு அடுத்த‌ ஆஸ்திரேலிய‌த் தொட‌ரில் த‌ன‌து பெர்த்தைக் க‌ன்ஃபார்ம் செய்துகொண்டார்...! ஆஸ்திரேலியத் தொட‌ரில் ஈட‌ன் கார்ட‌னில் ஃபாலோஆன் வாங்கித்தொட‌ர்ந்த‌ இர‌ண்டாவ‌து இன்னிங்ஸில் டிராவிடுடன் இணைந்து லக்ஷ்மண் நிக‌ழ்த்திக்காட்டியதோ வ‌ர‌லாறு!! 281 ர‌ன்க‌ள் எடுத்து அவுட் ஆன‌ ல‌க்ஷ்ம‌ண் இன்றுவ‌ரை நாட் அவுட்டாக‌வே தொட‌ர்கிறார் இர‌ண்டாவ‌து இன்னிங்ஸின் இதிகாச‌ நாய‌க‌னாக‌!

நூறு டெஸ்ட் போட்டிக‌ளுக்கும் மேல் இதுவ‌ரை விளையாடியுள்ள‌ ல‌க்ஷ்ம‌ண் ஏழாயிர‌த்து சொச்ச‌ம் ர‌ன்க‌ள் எடுத்துள்ளார்... முப்ப‌த்துஆறு வ‌ய‌தாகிவிட்ட‌ இந்த‌ சின்சிய‌ரான‌ சீனிய‌ர் இனிமேல் ப‌த்தாயிர‌ம் ர‌ன்க‌ளைக் க‌ட‌ப்ப‌து க‌டின‌ம்... உல‌கில் யாரையும்விட‌ அதிக‌மாக‌ ப‌தினான்காயிர‌த்தையும் தாண்டிப் ப‌ற‌ந்து கொண்டிருக்கும் ச‌ச்சினுட‌ன் ல‌க்ஷ்ம‌ணை ஒப்பிட்டுப் பேசுவ‌தை ச‌ச்சின் ர‌சிகர்க‌ள் ம‌ட்டுமின்றி (என்னையும் சேர்த்து!) கிரிக்கெட் ர‌சிக‌ர்க‌ளும் ஏற்றுக்கொள்ள‌ மாட்டார்க‌ள்... ப‌தினோராயிர‌ம் தொட்டுவிட்ட‌ ராகுல்டிராவிட் ஏற்கென‌வே "கிரேட் வால் ஆஃப் இந்தியா" என்று பேர் வாங்கிவிட்டார்.... ல‌க்ஷ்ம‌ணின் 281 ர‌ன் ரெக்கார்டை இர‌ண்டுமுறை அனாய‌ச‌மாக‌ முந்நூறு ர‌ன்க‌ளுக்கும் மேலாக‌ ர‌ன்க‌ள் குவித்து சேவாக்கும் த‌ன் ப‌ங்குக்கு எக்லிப்ஸ் செய்து விட்டார்! ஆக... இப்போது ஆஹா ஓஹோ என்று புக‌ழ‌ப்ப‌ட்டாலும் "ல‌க்ஷ்மண்-னு ஒருத்த‌ன் இருந்தாம்பா!!" என்றெல்லாம் டீக்க‌டைக‌ளில் ம‌ட்டுமே நினைவுகொள்ள‌ப்ப‌டுவார் இந்த‌ மேட்ச் வின்ன‌ர்! "மேட்ச் வின்னிங் கெப்பாஸிட்டி"யை ம‌ட்டும் க‌ருத்தில் கொண்டு ஒப்பீடு செய்து பார்த்தால் மேற்க‌ண்ட‌ ஜாம்ப‌வான்க‌ளையெல்லாம்விட‌ இந்த‌ டெக்கான் சார்ஜ‌ர், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரொம்பவே கன்ஸிஸ்டென்ட் என்ப‌து என் க‌ருத்து...

கிரிக்கெட், சினிமா, அர‌சிய‌ல் என்று எங்கெங்கு காணினும் இப்போது வெறும் ந‌ம்ப‌ர்களின் ராஜ்ஜியம்தான்...
நிக‌ழ்கால‌த்தைக் க‌ட‌ந்த‌கால‌ நிக‌ழ்வுக‌ளுட‌ன் ஒப்பிட‌ ந‌ம்ப‌ர்க‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்துவதும்...
க‌ட‌ந்த‌கால‌ ந‌ம்ப‌ர்க‌ளை வைத்து எதிர்கால‌ நிக‌ழ்வுக‌ளைக் க‌ணிப்ப‌தும்... மீடியாக்க‌ளின் மாறாத‌ அணுகுமுறையாகத் (இரண்டுமே கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அபத்தங்கள்தான்!) தொட‌ர்ந்து வ‌ருகிற‌து.... செய்திப் ப‌ர‌ப‌ர‌ப்புக‌ள் பழகிப்போன பொழுதுபோக்குகளாகிவிட்ட நிலையில்...
எண்ண‌ற்ற‌ ரேட்டிங்குக‌ளும், க‌ருத்துக் க‌ணிப்புக‌ளுமாய் இந்த‌ ந‌ம்ப‌ர் கேம்க‌ள் போட்டுக் குழ‌ப்பினாலும் இவை அத்தனை மீடியாவிலும் ரொம்ப‌வே ஹாட் பிசின‌ஸ்!!!

த‌னிம‌னித‌ப் ப‌ங்க‌ளிப்பில் 'எத்த‌னை ஆட்ட‌ங்க‌ளைக் காத்திருக்கிறார்?' 'எத்த‌னை ஆட்ட‌ங்க‌ளை வென்றுகொடுத்திருக்கிறார்?' போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ள் ப்ரைம் அட்டென்ஷ‌னில் வ‌ராதவ‌ரைக்கும் ர‌ன் இல‌க்க‌ங்க‌ளும் அத‌ன் பின்ன‌ணியில் பரிசு மற்றும் பெட்டிங் தொகையின் இல‌க்க‌ங்க‌ளும் அடித்து ஏறிக்கொண்டேதான் போகும்...

ல‌க்ஷ்ம‌ண்.... இங்கும் ராம‌ர், ப‌ர‌த‌ர்க‌ளுக்குப் பிறகுதான் எண்ண‌ப் ப‌டுவார் :)

அன்புட‌ன்,
பிர‌பு எம்

** அன்றைய‌ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான‌ போட்டியில் தோணி அவ்வாறு அழைத்திருந்தாலும், VVS ல‌க்ஷ்ம‌ணை முத‌ன்முத‌லில் Very Very Special ல‌க்ஷ்ம‌ண் என்று பெய‌ர் கொடுத்த‌வ‌ர் இய‌ன் சேப்ப‌ல்!

Saturday, November 13, 2010

The Social Network (2010)

உணவு..
உடை...
காற்று..
நீர்...
இருப்பிடம்...
இணையம்..
ஃபேஸ்புக்!!!

நிகழ்கால மனித இனத்தின் அத்தியாவசியத் தேவைகள் இவை! :-)

ஃபேஸ்புக்கின் க‌தைதான் "தி மூவி ஆஃப் தி இய‌ர்" என்று விம‌ர்ச‌க‌ர்க‌ள் ப‌ர‌வ‌லாக‌ப் ப‌றைசாற்றும் The Social Network (2010)

மேசையில் இருக்கும் கணிணியும்...கண்முன் இருக்கும் லேப்டாப்பும்... கையில் இருக்கும் பேனாவும்.. பேனாவை வைக்க‌ ச‌ட்டையில் பாக்கெட்டும்... ச‌ட்டையில் சொருக‌ பேனாமூடியில் ஒரு கொக்கியும்.... எல்லாமே ஐடியாக்க‌ள்தான்...!!

க‌ல்லூரி வாழ்க்கையில் க‌ற்ற‌ க‌ல்வியைவிட‌, க்ளாஸ்ரூமைவிட‌, லேப்பை விட‌, மெயின்ஹாலை விட‌ ஆடிட்டோரிய‌த்தைவிட‌ எல்லாத்தையும் விட‌ முக்கிய‌மான‌து அவ‌ர‌வ‌ர் டிபார்ட்மெண்டின் லாபிதான்!!
வ‌குப்பு துவ‌ங்குமுன்னும் பின்னும்... வாத்தியார் வ‌ராத‌ ஃப்ரீயான‌ பாட‌வேளைக‌ளிலும் உட்கார்ந்து அடித்தோமே அர‌ட்டைக‌ள்!!! உல‌க‌வ‌ரலாறிலிருந்து செம‌ஸ்ட‌ர் க்வெஸ்டின் பேப்ப‌ரிலிருந்து ப‌க்க‌த்து காலேஜ் மாண‌விக‌ளின் அப்டேட்க‌ளிலிருந்து கானா பாட‌ல்க‌ளும் ஹைக்கூ க‌விதைக‌ளும் சுவர்களின் கிசுகிசுக்களும் குட்டிச் சித்திரங்களும்... எல்லாமும் அர‌ங்கேறும் இல‌வ‌ச‌ கான‌ ச‌பாக்க‌ள் அவை!! க‌ல்லூரி வாழ்க்கை முடிந்த‌பின் எல்லா மனதும் தேடாம‌ல் தேடும் அந்த ஓர் அமைப்பை... அந்த‌ ஒரு ப்ளாட்ஃபார்மை இணைய‌ வெளியில் வாழ்நாள் முடியும்வ‌ரை நீட்டித்துக் கொடுக்கும் ஓர் ஐடியா நமது இந்தத் த‌லைமுறையே பித்துப்பிடித்துக் கிட‌க்கும் இந்த‌ "சோஷிய‌ல் நெட்வொர்க் வெப்சைட்டுக‌ள்".... அவைக‌ளில் ஒரு முடிசூடா ம‌ன்ன‌ன் "ஃபேஸ்புக்"!!

கிங்ஃபிஷ‌ர் ஏர்லைன்ஸ் விஜ‌ய் ம‌ல்லையாவுக்கு ஃப்ளைட் ஓட்ட‌த் தெரியுமா!!
ஏவி எம் சரவணனுக்குத் திரைக்க‌தை எழுத‌த்தெரியுமா!!
ந‌ம்ம‌ இஞ்சினிய‌ரிங் காலேஜ் க‌ல்வித்த‌ந்தைக‌ளுக்குக் க்ளாஸ் எடுக்க‌த்தான் தெரியுமா! (உல‌கம் அழிஞ்சிடும்!)

இப்ப‌டி யோசிப்ப‌தைவிட‌... ஃப்ளைட் ஓட்டும் பைல‌ட்டுக்கும், ப‌டமிய‌க்கும் இய‌க்குன‌ருக்கும், திய‌ரிக‌ள் எல்லாம் விர‌ல்நுனியில் வைத்திருக்கும் எத்த‌னையோ வாத்தியார்க‌ளுக்கும் த‌ங்க‌ள் திற‌மையை மார்க்கெட் செய்யத் தெரிய‌வில்லை என்பதுதான் ச‌ரியான‌ பார்வை!!

அதேபோல்தான் இங்கு "சோஷிய‌ல் நெட்வொர்கிங்" என்னும் கான்செப்டை சிந்திப்பது, அந்த‌ ஐடியாவை வெப்சைட் ஆக்க‌ க‌ம்ப்யூட்ட‌ரில் கோடிங் எழுத‌த்தெரியாத‌ சில‌ பிஸினஸ் மூளைக‌ள்தான்! ஆனாலும் வியாபாரிக்கு மூளையைவிட‌ வாய்தான் மூல‌த‌ன‌ம் என்ப‌தை ம‌ற‌ந்த‌வ‌ர்க‌ளாக‌ க‌ம்ப்யூட்ட‌ர் கில்லாடி மார்க்கிட‌ம் த‌ங்க‌ள் ஐடியாவைச் சொல்லி பிஸின‌ஸ் ப‌ண்ண அப்பாவித்தனமாக அழைக்கிறார்க‌ள்... அந்த அலட்சியமான‌ ஐன்ஸ்டீன் ம‌ண்டைய‌ன் அவர்களிடம் மொன‌மொன‌ வென்று எதையோ முணங்கிச்சென்றுவிட்டு அடுத்த‌நாளே த‌ன் ந‌ண்ப‌ன் எட்வார்டோவோடு இணைந்து "ஃபேஸ்புக்" வெப்சைட்டை அவ‌ர்க‌ளின் ஹார்வோர்டு ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌த்தில் துவ‌ங்குகிறான்!!

அவ்வ‌ள‌வுதான் க‌தை.... அத‌ன்பின்னர்... பில்லிய‌ன்க‌ளைக் கொட்ட‌ப் போகும் ஐடியாவைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, க‌ம்ப்யூட்ட‌ர் "கோடிங்" எழுதுவ‌தில் த‌ன் விர‌ல்நுனி வித்தைக‌ளை எல்லாம் த‌ட்டித் தீர்த்து ஒரு பொட்ட‌ன்ஷிய‌ல் வெப்சைட்டாக‌ மார்க் ஃபேஸ்புக்கை உருவாக்க‌... ஒரு ல‌ட்ச‌ம் ஹிட்ஸ் எல்லாம் ஒரு ம‌ணி நேர‌த்துக்குள் அக்கௌண்டுக்குள் போட்டுக்கொள்ளும் வெப்ஸைட்டாக‌ நெஞ்சை நிமிர்த்துகிற‌து ஃபேஸ்புக் யுனிவ‌ர்சிட்டிக‌ளுக்குள்!! எட்வார்டோ தன் பங்குக்கு விளம்பரம் செய்யும் ஸ்பான்ஸர்களைத் தேடி அலைந்துகொண்டிருப்பான் அடுத்த பெரிய படிக்கட்டுகளைத் தாண்டி சிகரத்தில் ஏற!!

இந்த நிலையில் ஏற்கென‌வே மார்க்குக்கு ஒரு முன்னோடி போல‌ "நாப்ஸ்ட‌ர்.காம்" என்று காப்பிரைட் செல‌வில்லாம‌ல் மியூசிக் ஆல்ப‌ங்க‌ளை எம்பி3 யில் வ‌ழ‌ங்கிப் பெரும் லாப‌ம் பார்த்து வீழ்ந்திருக்கும்.. போதை, க்ள‌ப்பிங், பெண்க‌ள் என்றிருக்கும் ஒரு ‍Nasty young பிஸின‌ஸ்மேன் ஷான் "ஃபேஸ்புக்" டீமில் த‌ன்னை நுழைத்துக்கொள்ள‌.... ஷானை வெறுக்கும் எட்வார்டோவுக்கும்... அதே ஷானை அட்மைர் செய்யும் மார்க்குக்கும் மூக்கு உர‌சிக்கொள்ள‌ ஆர‌ம்பிக்கிற‌து...

கொழுத்த‌ பிஸினஸாக ஃபேஸ்புக் அடித்து வ‌ள‌ர்ந்த‌ பின்னர் அந்த இளம் முதலாளிகளுக்கிடையிலான "ந‌ட்பு" என்னும் பூவேலியையும் தாண்டி ஷானின் பிஸின‌ஸ் ப‌வுன்ச‌ர்க‌ள் எட்வார்டோவின் ஜ‌ன்ன‌ல்க‌ளைத் த‌க‌ர்க்க‌..... 600 மில்லிய‌ன் டால‌ர் ஈடு கேட்டு எட்வார்டோ கோர்ட்டுக்குப் போக‌.... முக்கிய‌ ஷேர்ஹோல்ட‌ரான‌ எட்வார்டோவை ச‌குனித்த‌ன‌மாக‌ வெறும் 0.03%க்கு சுருக்கும் ஷான் த‌ன்னுடைய‌ போதை ம‌ற்றும் மேற்ப‌டி ச‌மாசார‌ங்க‌ளால் தேவையில்லாம‌ல் மாட்டிக்கொள்ள‌.... இள‌ம் பில்லிய‌ன‌ர்க‌ளின் வ‌ட்ட‌ மேசை வ‌ழ‌க்கு மோத‌லில்தான் ப‌ட‌ம் ஆர‌ம்பிக்கிற‌து இடையிடையே விசார‌ணையின் சாட்சிக‌ளாக‌க் காட்சிக‌ள் விரிந்து க‌தை சொல்ல‌!!

திரைக்க‌தை கிட்ட‌த்த‌ட்ட‌ "காட்ஃபாத‌ர்" ரேஞ்சுக்குப் ப‌வ‌ர்ஃபுல்!!
மேக்கிங்கில் எந்த‌ அசாதார‌ண‌மும் தேவைப்ப‌ட்வில்லை இய‌க்குன‌ருக்கு...
சுழ‌ற்றிய‌டிக்கும் கேம‌ராவும், மிர‌ள‌வைக்கும் ஆர்கிடெக்ச‌ரும், சீன்களில் ட்விஸ்டும் ட‌ர்னுமாக‌ சீட் நுனிக்கு எல்லாம் வரவிடாம‌ல் முழு சீட்டிலும் ஆர‌ அம‌ர்ந்து பெப்ஸியை உறிஞ்சிக்கொண்டே பாப்கார்ன் ச‌வைத்துக் கொண்டே நிதான‌மாக விஷுவலாக ஒரு புத்தகம் வாசித்த‌ அனுப‌வ‌ம் த‌ரும் ஒரு Flawless screenplay...

ரொம்பக் க‌ஷ்ட‌ம் இப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌தைக்குத் திரைக்க‌தை அமைப்ப‌து.... சீன்க‌ளின் சுவார‌ஸ்ய‌மும்... க‌ண‌க‌ச்சித‌க் கோர்வையும், நெக்ஸ்ட் ஜென்ரேஷ‌ன் ஷார்ப் வ‌ச‌ன‌ங்க‌ளும், அதுவும் அல‌ட்சியத்தின் உச்ச‌மாக‌ மார்க் ந‌ம்ம‌ ப‌ழைய‌ பாலிடிக்ஸ் மூப்ப‌னார் மாதிரி (!) வாய்க்குள்ளேயே முண‌குவ‌துபோன்று அடிக்கும் அல‌ட்சிய‌ ஜோக்குக‌ள் எல்லாம் அபார‌ம்!! 

"அக்கவுண்டில் முத‌லில் போட்ட‌ ஆயிர‌ம் டால‌ர்க‌ளும், பின்ன‌ர் போட்ட‌ ப‌தினெட்டாயிர‌ம் டால‌ர்க‌ளும் சேர்த்து மொத்த‌ம் ப‌த்தொன்ப‌தாயிர‌ம் டால‌ர்க‌ள் இனிஷிய‌ல் இன்வெஸ்ட்மெண்ட் செய்திருக்கிறேன்" என்று ப‌டு சீரிய‌ஸாக‌ எட்வார்டோ த‌ர‌ப்பு வாத‌ம் செய்துபோய்க்கொண்டிருக்க‌....

ஒரு பேப்ப‌ரில் ஏதோ கிறுக்கிக்கொண்டு, " திரும்ப‌ சொல்லுங்க‌ள்" என்று சொல்லி "ப‌தினெட்டாயிர‌ம் + ஆயிர‌ம் என‌ எழுதிக் கூட்டிப் பார்த்தேன் ஹி இஸ் க‌ரெக்ட் அவ‌ன் சொல்லும் அதே எண்க‌ள்தான் என‌க்கும் பேப்ப‌ரில் வ‌ருகிற‌து நீங்க‌ள் மேலே தொட‌ர‌லாம்... " என்று சிரிக்காம‌ல் சொல்லுவான் மார்க்... இவ‌ன் எப்ப‌டிப்ப‌ட்ட‌ ஆள் என்று புரிகிற‌தா!! இப்ப‌டியேதான் இருப்பான் ப‌ட‌ம் முழுக்க‌வும்!!! :)

இதுவும் ஓர் அடாப்டெட் ஸ்க்ரீன்ப்ளே தான்... ஆனால் திரைக்க‌தை த‌ழுவியிருப்ப‌து ஒரு நாவ‌லை அல்ல‌...
"தி ஆக்ஸிடென்ட‌ல் பில்லிய‌ன‌ர்ஸ்" என்னும் நான் ஃபிக்ஷ‌னை!!

 ஒரு புத்த‌க‌த்தை வாசிப்ப‌தைவிட‌ சில‌ சுவார‌ஸ்ய‌மான‌ ம‌னித‌ர்க‌ளிட‌ம் கொடுத்து வாசிக்க‌ச் சொல்லி விஷுவலைஸ் செய்வ‌து சுவார‌ஸ்ய‌மான‌து... அந்த‌ ஒரு திருப்தியைத்தான் கொடுத்திருக்கிறார் டேவிட் ஃபின்ச‌ர்....

நான் ர‌சித்துப் பார்த்தேன்.... வீகெண்ட் மூவியென்று வீட்டோடெல்லாம் கிள‌ம்பிவிட‌ வேண்டாம்... அப்புற‌ம் என்னைத் திட்ட‌க்கூடாது.... டிவிடியில் ச‌ப் டைட்டிலோடு ரிலாக்ஸ்டாக‌ப் பார்ப்ப‌த‌ற்கு ஏற்ற‌ ப‌ட‌ம்... திரைக்க‌தைப் பிரிய‌ர்க‌ள் த‌வ‌ற‌விட்டுவிடாதீர்க‌ள் தியேட்ட‌ரில் உங்க‌ளுக்கான‌ சீட்க‌ள் ம‌ட்டுமே நிறைகின்றன!

"Social Network" -  The Facebook Movie... இது க‌தைய‌ல்ல‌ நிஜ‌ம்!!  :-)


டெயில்பீஸ்:

நைட் ஷோ என்ப‌தால் உட‌ன் வ‌ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் சில‌ர் தூங்கிவிட்டார்க‌ள்... மேலும் ப‌ட‌ம் பார்த்த‌ வ‌லையுல‌க‌ம் சாராத‌ என் ந‌ட்புவ‌ட்ட‌ம் மொத்த‌க்க‌தையையும் எழுத‌ச் சொல்லி வ‌ற்புறுத்திய‌த‌ற்கிண‌ங்கி மூச்சுத் திண‌ர‌த் திண‌ர‌ முழுக்க‌தையையும் இங்கு எழுதியிருக்கிறேன்.... த‌ப்புதான்... ம‌ன்னிச்சிக்கோங்க‌!!

அன்புட‌ன்,
பிர‌பு எம்

தி சோஷியல் நெட்வொர்க்: படத்தின் முழுக் கதை



வலையுலகத்தைத் தாண்டிய என் நட்புவட்டத்தின் வற்புறுத்தலுக்காக "The Social Networking" திரைப்படத்தின் மொத்தக் கதையையும் இங்கு கிட்டத்தட்ட ஸீன் பை ஸீன் பதிவிடுகிறேன்.... இது என்னுடைய படைப்போ, அனுபவமோ ஏதுமின்றி... படத்தைப் பார்க்கப் போகிறவர்களின் சுவார‌ஸ்ய‌த்தைக் கெடுக்கக் கூடிய பதிவு என்பதால் இங்கேயே சொல்லிவிடுகிறேன்.... என் நண்பர்கள் போலப் படத்தின் முழுக்கதையையும் படிக்க நினைப்பவர்கள் மட்டும் தொடரவும்.... மற்றவர்கள் படத்தைப் பற்றிய என்னுடைய பார்வையை அடுத்த இடுகையில் பகிர்ந்திருக்கிறேன் அதை மட்டும் பார்த்தல் நலம்....

படத்தின் விமர்சனம் இங்கே!

படத்தின் கதை:

உல‌கமும் நம் வாழ்க்கையும் சில ஐடியாக்க‌ளால் உருவானது... அது நாளும் புதுப்புது ஐடியாக்களால்தான்  மாறியும், மேம்பட்டும் வருகிறது... 
உலகெங்கும் கொட்டிக்கிட‌ப்ப‌தும் ஐடியாக்களை இணைப்பதும் "இணையம்"தான்... அந்த‌ "இணைய‌ம்" என்ப‌தே சில‌ க‌ணிணி ஜாம்ப‌வான்க‌ளின் ஒருங்கிணைந்த ஓர் "ஐடியா" தான்!!

"எந்திரன்" கதை என்னுடையது.... ரோபோ கற்பனை என்னுடையது... என்று சிலர் நீதிமன்றத் துணை நாடியிருக்கும் நிகழ்கால சம்பவம்போல் "ஃபேஸ்புக்" என்னுடைய ஐடியா" என்று ஒரு குழுவும்... பில்லியன் டாலர் மதிப்பில் புரளும் "ஃபேஸ்புக்"கின் உண்மையான நிறுவனர் நான்தான் எனக்குரிய பாகம் என்னைச் சேரவில்லை என்று சேர்ந்து பிஸினஸ் துவங்கிய நெருங்கிய நண்பர்களின் கடுமையான வழக்குவாதத்துடன் படம் ஆரம்பிக்கிறது... முன்னும் பின்னும் ஊஞ்சல்போல பயணித்து இந்த வழக்குமன்றத்தில் தொடர்ந்து சங்கமிப்பதாய் நேர்த்தியான திரைக்கதை......

"சோஷிய‌ல் நெட்வொர்க்கிங்" எனும் ஓர் ஐடியாவை யோசிக்கிறது ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு பிஸினஸ் மூளை....

யுனிவ‌ர்சிட்டியில் ப‌டிக்கும் பெண்க‌ள் த‌ங்கும் டார்மெட்ரிக‌ளின் டேட்டாபேஸிலிருக்கும் பெண் மாண‌வ‌ர்க‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ளை சில பல கோடிங் வரிகளைத் தட்டி ஹேக் செய்கிற‌து அதே ஹாவோர்டு பல்கலைக் கழக மாணவன் மார்க் என்ப‌வ‌னின் த‌லைக்குள் இருக்கும் ஒரு டெக்னிக்க‌ல் மூளை....!

எட்வார்டோ எனும் மார்க்கின் ந‌ண்பன் தான் கம்போஸ் செய்திருக்கும் ஒரு "கம்பேரிங் அல்காரிதத்"தை அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக மார்க்குக்கு சொல்லிக்கொடுக்க... மீண்டும் சில கோடிங் வரிகளை அந்த வித்தைக்கார‌ விரல்கள் கீபோர்டில் தட்ட Facemash.com என்னும் ஒரு வில்ல‌ங்க‌மான‌ வெப்சைட் நள்ளிரவில் திடீர் உத‌ய‌மாகிற‌து வெட்ட‌வெளியான "நெட்"டின் வெளியில்! மார்க் திருடிய‌ மாண‌விக‌ளின் ப‌ட‌ங்கள் இரண்டிர‌ண்டாக‌ Randomஆக‌த் திரையில் விரிய "Who looks more hotter in these two?" என்று இரண்டு ப‌ட‌ங்களையும் க‌ம்பேர் செய்துத் தேர்ந்தெடுக்கும் வசதி வழங்கும் அட்ராசிட்டிதான் வெப்சைட்டின் கான்செப்ட்...!

ஹார்வோர்டு ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் மார்க்குக்கு க‌ல்லூரியிலிருந்து ஆறுமாதகாலம் "Academic Probation" என்ற‌ழைக்க‌ப்ப‌டும் ந‌ட‌த்தைக்கான‌ வார்னிங்கைப் பிற‌ப்பித்தாலும்... ஒரு ம‌ணி நேர‌த்தில் இர‌ப‌த்துஇர‌ண்டாயிர‌ம் "ஹிட்க‌வுண்ட்"டை இண்டெர்நெட்டில் அள்ளியிருக்கிற‌து இந்த‌ டீனேஜ் வில்ல‌னின் ஒரு சின்ன‌ சாம்பிள் பீஸ் என்று ஹார்வோர்ட் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தின் செய்தித்தாளான‌ "ஹார்வோர்டு க்ரிம்ஸ‌ன்" தலைப்புசெய்தி வெளியிட‌... நெகெடிவ் இமேஜோடு ப‌ல்க‌லைக் க‌ழக‌த்தில் ஒரு குட்டி ர‌ஜினிகாந்தாக உருவெடுக்கத் துவ‌ங்குகிறான் மார்க்... :)

ஏற்கெனவே "சோஷிய‌ல் நெட்வொர்க்கிங் சைட்" என்னும் ஒரு கான்செப்டை வியாபார‌ரீதியில் யோசித்துவைத்திருக்கும் கேம‌ரூன் ம‌ற்றும் டைல‌ர் என்னும் இர‌ட்டைச் சகோத‌ர‌ர்க‌ளின் பிஸின‌ஸ்மூளைகளை மார்க்கின் விர‌ல்நுனி வித்த‌க‌ம் க‌வ‌ர‌... அவ‌னை அழைத்து அச‌ட்டுத்த‌ன‌மாக‌த் த‌ங்க‌ள் ஐடியாவைச் சொல்லித் த‌ங்க‌ளுட‌ன் டெக்னிக்க‌ல் பார்ட்ன‌ராகும்ப‌டி கேட்கிறார்க‌ள் இந்த‌ பில்லிய‌ன் டால‌ர் ப்ராஜெக்டுக்கு....

"ஃபேஸ்புக்" என்னும் ஒரு சோஷிய‌ல் நெட்வொர்க்கிங் வெப்சைட்டை நாமிருவ‌ரும் ஆர‌ம்பிக்கிறோம்... லாப‌த்தில் எழுப‌து ச‌த‌வீத‌ம் என‌க்கு முப்ப‌து உன‌க்கு என்று த‌ன் ஒரே ந‌ண்ப‌ன் எட்வார்டோவிட‌ம் அடுத்த‌காட்சியில் கூறுகிறான் மார்க்!!

ஜாயிண்ட் அக்கௌண்டில் எட்வார்டோ டெபாஸிட் செய்யும் அயிர‌ம் டால‌ர்க‌ளுட‌ன் துவ‌ங்குகிற‌து "தி ஃபேஸ்புக்.காம்" ஐடியாவைப் ப‌றிகொடுத்த‌ அப்பாவிகளான‌ இர‌ட்டை சகோத‌ர‌ர்க‌ள் கொதித்தாலும் கோர்ட்டுக்குப் போவ‌த‌ற்கு யுனிவ‌ர்சிட்டியின் விதிக‌ள் பூவேலியிட கொலைவெறியுடன் ஒரு ஜெண்டில்மென் ஃபைட்டுக்குத் த‌யாராகிறார்க‌ள்...

எட்வார்டோவின் செல்வாக்கில் பல்கலைக்கழகத்தின் ஒரு "ஃபைன‌ல் க்ள‌ப்" என்று அழைக்க‌ப்ப‌டும் இறுதியாண்டு மாண‌ர்க‌ளின் சோஷிய‌ல் க்ள‌ப்பில் பிர‌ப‌ல‌மாகிற‌து "தி ஃபேஸ்புக்.காம்"!
ஹார்வோர்டில் பில்கேட்ஸ் ஒரு செமினார் வ‌ழ‌ங்குகிறார்... அதில் க‌ல‌ந்துகொள்ளும் மார்க்கை செமினார் முடிந்து செல்லும் சீனிய‌ர்க‌ள் எல்லாம் புக‌ழ்ந்து "தி ஃபேஸ்புக்" சைட்டை உருவாக்கிய‌த‌ற்கு ந‌ன்றிசொல்ல‌ யுனிவ‌ர்சிட்டியின் வில்ல‌ன் ர‌ஜினிகாந்துக்கு மெல்ல  ஹீரோ ரோல் கிடைக்கிற‌து!! :)

ஒருபுற‌ம் கேம‌ரூன் & டைல‌ர் ச‌கோத‌ர‌ர்க‌ள் தாங்கள் திருட்டுக்கொடுத்த ஐடியாவுக்கு ஹார்வோர்டுக்குள்ளேயே நியாய‌ம் கிடைக்க‌ உச்ச‌ நிர்வாக‌ம்வ‌ரை ப‌டியேறிப் ப‌ரிதாப‌ப்ப‌ட‌... அடுத்த‌டுத்த‌ க்ள‌ப்புக‌ளையும் தாண்டி வேறு ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்திலும் பிர‌ப‌ல‌ம‌டைகிற‌து "தி ஃபேஸ்புக்"
வித்தியாச‌மான‌ தேர்வுக‌ளையெல்லாம் வைத்து கைதேர்ந்த‌ புரோகிராம‌ர்க‌ளை யுனிவ‌ர்சிட்டியெங்கும் வேட்டையாடித் த‌ங்க‌ளின் இணைய‌க்குடும்ப‌த்தில் கைகோர்க்கிறான் மார்க்.... இந்த‌ மெகா ம‌கா பிஸின‌ஸ் ப்ளானைக் கையில்தூக்கிக் கொண்டு விள‌ம்ப‌ர‌ம் தேடி அலைய‌த் துவ‌ங்குகிறான் மிகுதியான‌ த‌ன்ன‌ம்பிக்கை ம‌ற்றும் ஆற்றாமையில் துவ‌ண்டுவிடும் காம்பினேஷனில் வெளிப்பூச்சில்லாத‌ வெளிப்ப‌டை ம‌னித‌னான‌ எட்வார்டோ... "தி ஃபேஸ்புக்"கின் உப‌ நிறுவ‌ன‌ர்!!

ஷான் பார்க்க‌ர்... "நாப்ஸ்ட‌ர்.காம்" மூல‌ம் இண்ட‌ஸ்ட்ரியில் ஹிட்ட‌டிக்கும் மியூசிக் ஆல்ப‌ங்க‌ளின் எம்பி3 வெர்ஷ‌ன்க‌ளை காபிரைட் தொல்லையின்றி இண்டெர்நெட்டில் இல‌வ‌சமாக‌ வ‌ழ‌ங்கி மில்லிய‌ன்க‌ளை அள்ளிய‌ ஓர் இள‌ம் வியாபார‌ காந்த‌ம்! பெண்க‌ள் ம‌ற்றும் போதைப் பின்ன‌ணி ஷான்பார்க்க‌ரின் வெளிப்படையான‌ க‌ரும்புள்ளிக‌ள்.... "தி ஃபேஸ்புக்"கினால் க‌வ‌ர‌ப்ப‌டும் ஷான்பார்க்க‌ர்... மார்க்கிட‌மும் எட்வார்டோவிட‌மும் க‌வ‌ர்ச்சி பிஸின‌ஸ் பேசுகிறான்... மார்க் ஷான் பார்க்க‌ரின் வ‌சீக‌ர‌த்தில் மீளாமுடியாத‌ அள‌வுக்கு சிக்கிக்கொள்ள‌ ம‌றுபுற‌ம் எட்வார்டோ ஷானை வெறுக்கிறான்...."தி ஃபேஸ்புக்" வெறும் "ஃபேஸ்புக்" ஆவது ஷானின் பரிந்துரையில்தான்!!

ம‌ன‌க்க‌ச‌ப்புக‌ள் எழுந்தாலும் ஒரு ந‌ல்ல‌ டீம்ப்ளேய‌ராக‌ மேலும் ப‌தினெட்டாயிர‌ம் டால‌ர்க‌ளை அக்கௌண்டில் போட்டுவிட்டு  த‌ன‌க்குக்கிடைத்திருக்கும் இண்டெர்ன்ஷிப்புக்காக‌ நியூயார்க் ப‌ய‌ண‌மாக‌... க‌லிஃபோர்ணியாவில் மைய‌ம் கொள்கிற‌து மார்க் த‌லைமையில் "ஃபேஸ்புக்" டீம்.... ஆக்ஸிடென்ட‌லி இன்ஸிடென்ட‌லாக‌ டீமில் ஷானும் இணைகிறான்.... மார்க்கின் முழுத்த‌லையாட்ட‌லுட‌னான‌ ச‌ம்ம‌த‌த்தில்!

நியூயார்க்கிலிருந்து ஆர்வ‌மாய்த் திரும்பிவ‌ரும் "ஃபேஸ்புக்" முத‌லாளி எட்வார்டோவை ஏர்போர்ட்டில் பிக் அப் செய்யக் கூட‌ ம‌ற‌ந்துவிட்ட‌ டீமை ஷான் பின்புல‌த்தில் ஆட்டுவிக்க‌... க‌டும்ம‌ழையில் தானே டாக்ஸி பிடித்து வ‌ரும் எட்வார்டோவுக்கு நீண்ட‌ நேர‌ க‌த‌வுத‌ட்ட‌லுக்குப்பின் க‌த‌வைத் திற‌ப்ப‌து ஷான்.... க‌டுப்பேறிய‌ எட்வார்டோவை மார்க்கினால் தன் மிக‌ அல‌ட்சிய‌மாக‌ப் பேசிப் ப‌ழ‌கிய‌ வாய்வார்த்தைக‌ளால் ச‌மாதான‌ப் ப‌டுத்த‌ இய‌லாம‌ல் போக‌.... ஷார்ட் டெம்ப‌ர்ட் எட்வார்டோ த‌ன் வ‌ங்கிக் க‌ண‌க்கை மூடிவிட்டு ஊர் திரும்புகிறான்....

த‌ன்னுடைய‌ ஃபேஸ்புக் ப்ர‌ஃபைலில் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்ட‌ஸ் "சிங்கிள்" என்று வைத்திருப்ப‌தை சுட்டிக்காட்டி எட்வார்டோவைத் த‌ன் ப‌ங்குக்கு அவ‌னுடைய‌ கேர்ள்ஃப்ரெண்ட் வெறுப்பேற்றிக் கொண்டிருக்க‌.... வ‌ங்கிக் க‌ண‌க்கை மூடிய‌த‌ற்காக எட்வார்டோவை க‌டுமையாக‌ க‌டிந்துகொள்கிறான் மார்க் தொலைபேசியில்.... இருப்பினும் உரையாட‌லின் முடிவில் "ஃபேஸ்புக்"கின் வியாபார‌ விரிவாக்க‌த்துக்கு ஒரு பெரும் இன்வெஸ்ட‌ர் கிடைத்திருப்ப‌தாக‌க் கூறி "எப்போ திரும்பி வ‌ர்றீங்க‌ முத‌லாளி" என்று கேட்கிறான் ந‌ல்ல‌ பைய‌னாக‌.... ந‌ண்பேண்டா!!

ஒரு மெகா முத‌லீட்டுட‌ன் மிக‌ப்பெரிய‌ பிஸின‌ஸ்ஸாக‌ப் புதுமுக‌ம் காண‌விருக்கும் "ஃபேஸ்புக்"கில் 34 ச‌த‌வீத‌ம் எட்வார்டோவுக்கும், 30% மார்க்குக்கும், 23% புத்துயிர் கொடுக்க‌ முன்வ‌ந்திருக்கும் இன்வெஸ்ட‌ருக்கும் 7 ச‌தவீத‌ம் எட்வார்டோ இன்னும் வெறுக்கும் ஷானுக்கும் மீத‌ம் 6% இன்னொரு இன்வெஸ்ட‌ருக்குமாக‌ப் பிரிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தாக‌ சொல்ல‌ப்ப‌ட‌..... "மார்க்குக்கு ப‌ண‌த்தின்மீது க‌வ‌ன‌ம் கிடையாது We have to protect him" என்று முக்கிய முதலீட்டாளர்களிடம் எட்வார்டோ அக்க‌றையாய் சொல்வ‌தும் ந‌ண்பேண்டா!!

இத‌ற்கிடையில் ப‌ட‌கோட்டும் வீர‌ர்க‌ளான‌ முந்தைய‌ கேம‌ரூன்&டைல‌ர் இர‌ட்டைச் சகோத‌ர‌ர்க‌ள் ஒரு மிக‌மிக‌ க்ளோசான‌ ஒரு முக்கிய‌மான‌ ப‌ட‌குப்போட்டியில் தோல்விய‌டைகிறார்க‌ள்.... தோல்விக் க‌ளைப்பில் இருக்கும்போதே "ஃபேஸ்புக்"கின் அமானுஷ்ய‌த்தை விவ‌ரிக்கும் செய்தியைக் கேள்விப்ப‌ட‌ வில்ல‌னாயிருந்து ஹீரோவான‌ ஹார்வோர்டு ர‌ஜினிகாந்த் மார்க் இப்போது சூப்ப‌ர்ஸ்டார் ஆகிவிட்ட‌தில் வெறியேறி ச‌ட்ட‌ரீதியிலான‌ ந‌டவ‌டிக்கை எடுத்து அவ‌னை முடித்துவிட சூளுரைத்துக் கிள‌ம்புகிறார்க‌ள்.....

திடீர் ட்விஸ்டாக‌ எட்வார்டோ, தான் கையொப்பமிட்டிருக்கும் டீலின் படி எட்வார்டோவின் ப‌ங்கை 34 ச‌த‌த்திலிருந்து 0.03 ச‌த‌வீத‌மாக‌க் குறைப்ப‌த‌ற்குத் த‌ங்க‌ளுக்கு உரிமையிருப்ப‌தாக‌ ஷானின் இன்ஃப்ளுயென்ஸில் வ‌ந்த‌ இன்வெஸ்ட‌ர் கோல்ட் ப்ள்ட்ட‌டாக‌ச் சொல்ல‌ எரிச்ச‌லின் உச்சிக்கு செல்லும் எட்வார்டோ, மார்க்குட‌ன் க‌டும் வாக்குவாத‌ம் செய்கிறான்.... அப்போது எட்வார்டோவை அலுவ‌ல‌க‌த்திலிருந்து வெளியேற்ற‌ ஷான் செக்யூரிட்டியை அழைக்க‌க் கோப‌மாய் வெளியேறுகிறான் எட்வார்டோ.... மார்க் ஷானின் மூர்க்க‌த்த‌ன‌மான‌ ந‌ட‌த்தையைக் க‌ண்டிக்கிறான் எட்வார்டோ போன‌பிற‌கு....
இப்ப‌டிக் கோப‌த்தில் வெளியேறிய‌ எட்வார்டோவும், சூளுரைத்த‌ ஏமாளி பிர‌த‌ர்ஸின் க‌டைசிக‌ட்ட‌ முய‌ற்சியும்தான் முதல் ஸீனில் ஆர‌ம்பிக்கும் மார்க் Vs எட்வார்டோ Vs கேம‌ரூன்&டைல‌ர் ப்ர‌த‌ர்ஸ் இடையிலான‌ வ‌ழ‌க்குவாத‌ம்....

போதை ம‌ற்றும் இள‌ம்பெண்க‌ள் உட‌ன் த‌வ‌றான‌ பின்ன‌ணி கொண்ட‌ பிஸின‌ஸ்மேன் ஷான் "ஃபேஸ்புக்"கின் ஒரு மில்லிய‌னாவ‌து ஹிட்க‌வுண்டைக் கொண்டாடும் பார்ட்டியில் இள‌ம்பெண்க‌ளுட‌ன் காக்கைன் வ‌கை போதை வ‌ஸ்துக்க‌ளுட‌ன் மிக‌வும் எம்ப‌ராஸ்ஸிங்காக‌ப் போலீஸிட‌ம் மாட்டிக்கொள்கிறான்... ஷானுட‌ன் அங்கே ஃபேஸ்புக்கின் மொத்த‌ டீமுமே போலிஸிட‌ம் மாட்டி மீடியாவுக்குத் த‌லைப்புச் செய்தி கொடுத்திருக்க‌.....

முந்தைய‌நாள் விர‌க்தியில் குடித்துவிட்ட‌ ஷான் த‌ன்னுடைய‌ வ‌ழ‌க்க‌மான‌ ஃப்ர‌ஸ்ட்ரேஷ‌னில் செய்யும் த‌வ‌றான‌ செய்கையாக‌, த‌ன்னுடைய‌ ப்ளாக்கில் ஷானின் பார்ட்டியைப் ப‌ற்றிக் குறிப்பிட்ட‌துதான் போலீஸை ச‌ரியான‌ நேர‌த்தில் ச‌ரியான‌ இட‌த்துக்கு சென்று ஷான் அன்ட் கோ வைப் பிடிக்க‌ ஏதுவாயிருந்திருக்கிற‌து என்று தெரிகிற‌து....
தொட‌ர்ந்து சிம்பிளாக‌ முடியும் ப‌ட‌த்தில்... எட்வார்டோவுக்கு ச‌ரியான‌ செட்டில்மெண்ட் கிடைத்துவிடுகிற‌து.... ப‌ட‌கோட்டி பிர‌த‌ர்ஸ் ஒலிம்பிக் வ‌ரை சென்று ஆறாவ‌து இட‌ம் பிடிக்கிறார்கள்.... உல‌கின் மிக‌ இள‌ம் பில்லிய‌ன‌ராக‌ மார்க் க‌ண்ட‌றிய‌ப் ப‌டுகிறான் என்னும் செய்திக‌ள் திரையில் ப‌ளிச்சிட‌....

முத‌ல் ஸீனில் மிக‌த் த‌வ‌றாக‌ப் பேசிப் புண்ப‌டுத்தி வில‌கிய‌ த‌ன்னுடைய‌ ப‌ழைய‌ கேர்ள் ஃப்ரெண்டை ஃபேஸ்புக்கில் க‌ண்டுபிடித்து, ஃப்ரெண்ட்ஸ் ரெக்வெஸ்ட் அனுப்பி ரிசல்டுக்காக‌ ஒவ்வொரு செக‌ண்டும் ரெப்ஃர‌ஷ் செய்து பார்த்த‌வ‌னாய் மார்க் இருக்க‌ அல‌ட்ட‌லில்லாம‌ல் முடிகிற‌து இந்த‌ நேரேட்டிவ் ஸ்க்ரீன்ப்ளே..... :)

அன்புட‌ன்,
பிர‌பு எம்

Tuesday, November 09, 2010

என்னைத் தாலாட்டும் ச‌ங்கீதம் : என்னுடைய‌ ப்ளேலிஸ்ட்!!

சத்தம் தூக்கத்துக்கு எதிரி... அந்த சத்தத்தாலான இசையைக் கொண்டே மனங்களைத் தூங்கவைப்பது தாலாட்டென்றால் ஆராரோ ஆரீரரோக்கள் எத்தனை பெரிய அதிசியங்கள்!

கடலில் அலை இரைச்சல்தான்... ஆனாலும் தியாண அறையில் கிடைக்காததோர் அமைதி கடற்கரையில் கிடைக்கத்தானே செய்கிறது!!

சத்தத்துக்குள்ளும் ஓர் அமைதியிருக்கிறது.... சிந்தையின் மேற்பரப்பை இசையால் போர்த்திக்கொள்ளத் துள்ளத் துள்ளத் தட்டிக்கொடுத்துத் தூங்கவைத்திடும் தாலாட்டு மெட்டுக்கள் அதிசியங்கள்!

சின்னவயதில் ஒருமுறை குழந்தையான‌ என் தங்கையை, அம்மாவிடம் அடம்பிடித்து சான்ஸ் வாங்கி, நானே ஒரு பாட்டுப்பாடி தொட்டிலாட்டித் தூங்கவைத்திருக்கிறேன்! இடையில் அவள் தூங்குகிறாளா... தூங்குகிறாளா... என்று பார்த்துப் பார்த்து... இறுதியில் அவள் தூங்கிவிட்டவுடன்  எதையோ வென்றுவிட்டதுதொரு உவகை வந்து தூங்கவெச்சுட்டேன் என்று நான் கத்திய கத்தில் அவள் விழித்து அழுக‌ நான் அடி வாங்கிய ஞாபகம் இருக்கிறது!!
(எனக்கு அப்போ ஆறு வயசு!)

குழந்தைகளைத் தூங்க வைக்கத்தான் பெரும்பாலும் தாலாட்டு வகைப் பாடல்கள் பயன்பாடு பெறுகின்றன... ஆனால் யோசித்துப் பார்த்தால் கள்ளமற்ற மனங்களை உறங்கவைக்க தாலாட்டுதான் எத‌ற்கு!

த‌வ‌மிருந்து பெறும் வ‌ர‌ம்போல் ஆகிவிடுகிற‌து தூக்க‌ம் வாழ்வில் ஓர‌ள‌விற்குப்பின்!

"என்னைக் கொஞ்ச‌ம் உற‌ங்க‌வைத்தால் வ‌ண‌ங்குவேன் தாயே...
         இன்று ம‌ட்டும் அமைதி த‌ந்தால் உற‌ங்குவேன் தாயே.. !!"


என்று "புதிய‌ ப‌ற‌வை" சிவாஜி ரேஞ்சுக்கு உருகுகிற நார்மல் மனிதர்களே ந‌ம்மிடையே இருக்கும்போது.... ப‌டுத்த‌வுட‌ன் தூங்கிவிடுபவர்கள் பாக்கிய‌சாலிக‌ளே!

"தூக்க‌மும் க‌ண்க‌ளைத் த‌ழுவ‌ட்டுமே.. அமைதி உன் நெஞ்சில் நில‌வ‌ட்டுமே.." என்று ஒரு ஐடிய‌ல் சாங் இருக்கிறது... இருப்பினும் என‌க்கென்ன‌வோ  பெண்குர‌ல் தூங்க‌வைப்ப‌தில்லை!  ஸோ... என்னுடைய தாலாட்டும் ப்ளேலிஸ்டில் முழுக்க முழுக்க‌ மேல்வாய்ஸ்தான்!!

இதோ என்னுடைய‌ ப்ளேலிஸ்ட்:

1) பாடல்:    "வெள்ளி நிலா முற்ற‌த்திலே.."
    ப‌ட‌ம்:        வேட்டைக்கார‌ன் ( எம்.ஜி.ஆரின் வேட்டைக்காரன்!!)

   இசை:       கே.வி ம‌காதேவ‌ன்
   வ‌ரிக‌ள்:    க‌ண்ண‌தாசன்  
   குர‌ல்:        டி.எம்.எஸ்

   Link   :          http://www.raaga.com/player4/?id=232781&mode=100&rand=0.3481711788045632

சின்ன‌க் குழ‌ந்தையா இருக்கும்போதே இந்த‌ப் பாட்டைப் பாடினால் நான் தூங்கிவிடுவேன் என்று எங்கள் வீட்டில் சொல்லுவார்கள்.... இந்த‌ப் பாட்டில் என்னைத் தூங்கவைப்ப‌து... த‌மிழா?? குர‌லா?? இசையா?? என்று யோசிக்க‌ ஆர‌ம்பித்தாலே தூக்க‌ம் வ‌ந்துவிடும்!!

 "முக்கனியில் சாரெடுத்து...முத்தமிழில் தேனெடுத்து... முப்பாலிலே கலந்து.."

என்று ஒரு வரிவரும்...அது டி.எம்.எஸ் குரலில் இசையில் வழுக்கிக் காதில் விழுந்து கரைந்திடும் தமிழாக இனிக்கும்!!


2) பாட‌ல்:   "பிள்ளைக்குத் த‌ந்தை ஒருவ‌ன்...."
    ப‌ட‌ம்:        பார்த்தால் ப‌சி தீரும்
   இசை:       எம் எஸ் வி
   வ‌ரிக‌ள்:   க‌ண்ண‌தாச‌ன்
   குர‌ல்:       டி. எம். எஸ்

   Link:           http://www.raaga.com/player4/?id=124212&mode=100&rand=0.42749867011987935


இந்த‌ப் பாட‌லை என‌க்கு அறிமுக‌ப்ப‌டுத்திய‌து என் அப்பா!
சாதார‌ண‌த்திலையும் சாதார‌ண‌மான‌ பாட்டு இது...! :-)
இந்த‌ வ‌ரிக‌ளை சிந்திக்க‌த் த‌லையைக்குடைய‌த் தேவையில்லை...
பாட‌லைப் பாட‌க் குர‌ல்வ‌ளை நெறிக்க‌த் தேவையில்லை...
பின்ன‌ணியில் இசையே தேவையில்லை!!
க‌ட‌வுள் பாட்டுப்பாடி சிவாஜி, குட்டிக் க‌ம‌லைத் தூங்க‌வைக்கும் அழ‌கே தாலாட்டும்...

"இல்லாத‌ இட‌ம்தேடி வ‌ருவான் ந‌ம் எல்லோருக்கும் த‌ந்தை இறைவ‌ன் இறைவ‌ன்"

என்று சிக்க‌ன‌மான‌ க‌ச்சிதமான‌ அர‌வ‌ணைக்கும் வ‌ரிக‌ள் த‌ரும் இன்ப அனுப‌வ‌ம் என‌க்கு நிறைய‌ த‌ட‌வைக் கிடைத்திருக்கிற‌து!


3) பாட‌ல்:    "கண்ணே க‌லைமானே..."
   ப‌ட‌ம்:         மூன்றாம் பிறை
   இசை:        இளைய‌ராஜா
   வ‌ரிக‌ள்:    க‌ண்ண‌தாச‌ன் (கவிய‌ர‌ச‌ரின் க‌டைசி பாட‌ல்!)
   குர‌ல்:        கே.ஜே யேசுதாஸ்

   Link:             http://www.youtube.com/watch?v=C5RCNJ2LJDs

சீணு, ஸ்ரீதேவியைத் தூங்க‌வைக்கும் காட்சிக் க‌விதையிது!!
அவ‌ளிட‌ம் காத‌லைச் சொன்னால் புரிய‌வா போகிற‌து? இருந்தாலும் க‌ம‌ல், "காதல் கொண்டேன் க‌ன‌வினை வ‌ள‌ர்த்தேன்.."  என்று காதல் சொல்லும் இர‌ண்டாவ‌து ஸ்டான்ஸா ஆர‌ம்பிக்கும்போது சிந்தையில் குழ‌ந்தையான‌ ஸ்ரீதேவி, க‌ம‌லின் மடியில் விர‌லை சூப்பிக்கொண்டு முற்றிலுமாக‌த் தூங்கிப்போயிருப்பாள்!! அத்தனைக் க‌ண்ணிய‌மான‌ க‌விதையிது!
காதலின் தாய்மையைச் சொல்லும் த‌மிழை இளைய‌ராஜா இசையாலும் பாலும‌கேந்திரா (வெறும‌னே ஊட்டியின் ம‌லைக‌ளைப் ப‌ட‌ம்பிடித்து) ஒளியாலும், க‌ம‌ல் உண‌ர்வாலும் மொழிபெய‌ர்த்திருப்பார்க‌ள்.... இந்த‌ப் பாட்டைப் பிடிக்காதவ‌ர்க‌ள் யாரும் உண்டோ!

"உன‌க்கே உயிரானேன்... எந்நாளும் எனை நீ ம‌ற‌வாதே!!"  - த‌மிழ‌க‌மே க‌ண்க‌ல‌ங்கிய‌ வ‌ரிக‌ள‌ல்ல‌வா இவை..


4) பாட‌ல்:   "தேனே தென்பாண்டிமீனே..."
   ப‌ட‌ம்:         உத‌ய‌கீத‌ம்
   இசை:       இளைய‌ராஜா
   வ‌ரிக‌ள்:   வாலி
   குர‌ல்:       எஸ் பி பால‌சுப்ர‌ம‌ணிய‌ம்

   Link:           http://www.youtube.com/watch?v=wom6q1n-EnE


எஸ் பி பியின் குர‌லே ஒரு தாலாட்டுதானே!... இந்த‌ப் பாட‌லைப் பொருளுண‌ர்ந்து ப‌டித்தால் வாய் இனிக்கும்.. அத்த‌னை இனிமையான‌ வார்த்தைகளால் நெய்திருப்பார் ஒரு தாயின் தாலாட்டைக் க‌விஞ‌ர் வாலி...

"பால் கொடுத்த‌ நெஞ்சிலே ஈர‌ம் இன்னும் காய‌லே...
பால் ம‌ண‌த்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்த‌ன் வாயிலே..."


இது வ‌ள‌ர்ந்த‌ பிள்ளைத் தாயை நினைத்துப் பாடுவ‌தாய் அமைந்த‌துதான் க‌விதை!! எஸ்.பி யின் குர‌லில் ந‌னைந்துக் கோடையிலும் குளிரெடுத்துத் தூங்கியிருக்கிறேன் இந்த‌ப் பாட‌லுக்கு!


5) பாட‌ல்:    "கொல்லையில‌ தென்னை வைத்து"
   ப‌ட‌ம்:          காத‌ல‌ன்
   இசை:         ஏ ஆர் ர‌குமான்
   வ‌ரிக‌ள்:     வைர‌முத்து
   குர‌ல்:         ஜெய‌ச்ச‌ந்திர‌ன்

   Link:              http://www.youtube.com/watch?v=m26AEN7lNEU

வைர‌முத்துவின் நாலுவரியில் ஒரு தாலாட்டு...!
ரொம்ப‌வே ரொமாண்டிக்கான‌ காத‌ல் தாலாட்டு இது... !!
அழ‌குத் தமிழில் எவ்வித எதிர்பார்ப்புமின்றி, வெறும் காத‌ல் ம‌ட்டும் என்னிட‌த்தில் இருக்கு உனக்கே உனக்காக‌ என்று சொல்லிக் காத‌லியை "அர‌ண்ம‌னைய‌ விட்டுவ‌ந்த‌ அல்லிராணி க‌ண்ணுற‌ங்கு" என்று செல்ல‌மாய்த் தாலாட்டும் ர‌குமானின் இசையில் wrap செய்த இனிப்புத் துண்டு இந்த‌க் குட்டிக் க‌விதை.... காத‌ல் சொல்லி உற‌ங்க‌வைக்கும் விடியும்வ‌ரை நிம்ம‌தியாய்!!

இந்த‌ ப்ளேலிஸ்டை இதுவ‌ரை ஒருநாள் கூட‌ முழுதாய் நான் கேட்ட‌தில்லை என்ப‌துதான் நிஜ‌ம்... அத‌ற்குள் தூங்கிவிடுவேன்!! :)

உழைப்பவன் ம‌ன‌துக்குக் கட்டாய ஓய்வுதரும் தூக்கம் ஓர் அழ‌கிய‌சாபம்..!!
அன்ற‌ன்றைக்கு உண்ட‌தை அன்றே எரித்துவிட்டு...
அன்றன்று ந‌ட‌ந்த‌தை அப்போதே ம‌ற‌ந்துவிட்டு...
தின‌ம் தின‌ம் புதிதாய்ப் பிற‌ந்திட‌ ஓர் இசையோ, வ‌ரியோ, குர‌லோ இர‌வில் உத‌வ‌ட்டுமே!

உங்க‌ளைத் தூங்க‌வைக்கும் கான‌ங்க‌ளையும் ப‌கிர்ந்துகொள்ளுங்களேன்....
நிம்ம‌தியாய்த் தூங்கிவிழிப்போம்...

ப‌திவுல‌குக்குக் குட் நைட்!! :-)


அன்புட‌ன்,
பிர‌பு எம்

Sunday, November 07, 2010

டீஜெண்டு : தொடர்கதை (பாகம் 1)

மத்தியில் நின்று சூரியன் சுட்டெரிக்கும் மத்தியாண வெயிலில் பழுப்பேறித் தகித்துக்கிடக்கிறது அந்த கரும்புக்காடு....

உச்சிவெய்யிலில் சோளக்காட்டு பொம்மைகள் மட்டுமே ஆடு மாடுகளுக்குக் காவல் காக்கும் ஆளரவமற்ற ஊரின் வெளிப்புறப்பாதை....

நேற்றுதான் ப‌த்தாம் வ‌குப்புப் ப‌ரிட்சையோடு சேர்ந்து படிப்பும் முடிந்திபோயிருந்த‌து முருக‌னுக்கு.....  

 "உயிர் ந‌ண்பா".... "என்று சந்திப்போம் இன்று பிரியும் நாம்"... என்றெல்லாம் ஆட்டோகிராஃப் எழுதி ந‌ண்ப‌ர்க‌ள் பிரிந்த‌ ப‌ள்ளிவாழ்க்கை... அம்மாவும் வாத்தியாரும் அடிஅடியென்று அடித்தும், சோறு கிடையாதென்று மிர‌ட்டியும் ப‌ள்ளிக்கூட‌ம் போக‌வைத்த‌ ப‌ள்ளிவாழ்க்கை முடிந்துவிட்டது...

ஏதேதோ புரிகிறது குத்தவைத்துப் பதுங்கியிருக்கும் இந்த நேரத்தில்... விய‌ர்வை விர‌விய‌ கருத்த‌ தேகத்தில் க‌ரும்பு உரசித் தோல் எரிகிறது .... கையில் ஒரு சைக்கிள் ம‌ணி... கூப்பிடு தூர‌த்தில் த‌ன்னைப்போல‌வே ப‌துங்கிக் காத்திருக்கும் சிநேகிதம்.... கொஞ்ச‌ம் பின்னால் அசிங்க‌மாக‌ உட‌லிடுக்கி அம‌ர்ந்திருக்கிறான் முருக‌னையும் செந்தில்,ம‌ணியையும் இங்கு கூட்டிவ‌ந்த கருவாயன்...கையில் அதே சைக்கிள் ம‌ணியுட‌ன்...


கிட்டத்தட்ட சரியான நேரத்தில் தூரத்தில் தடதடக்கத் துவங்கிவிட்டது புல்லட் சத்தம்.....

புல்லட் சத்தம் கேட்டவுடன் கரும்புவயலில் அசைவுகள் தொற்றுவது காற்றினாலல்ல....

ராய‌ல் என்ஃபீல்டின் பெட்ரோல் இஞ்சின் எழுப்பும் த‌ட‌ த‌ட‌ ச‌த்த‌த்துக்கு இன்றுக் க‌ரும்புக்காட்டிலிருந்து ஒரு ப‌ற‌வைகூட‌ ப‌றந்தோட‌வில்லை....
"கிணிங்... கிணிங்..." சைக்கிளின் முத‌ல் ம‌ணி அடித்துவிட்ட‌து.... புல்ல‌ட் வேக‌ம் குறைய‌வில்லை....

முருக‌னுக்குப் புல்ல‌ட் ச‌த்த‌ம் கொஞ்ச‌ம் க‌ண‌மாக‌க் கேட்கிற‌து..... செந்தில் த‌ன்னுடைய‌ சைக்கிள் ம‌ணியில் இர‌ண்டாவ‌து ம‌ணியை அடித்துவிட்டான்.... முருக‌னின் கையில் லேசான‌ ந‌டுக்க‌ம்.... புல்ல‌ட்டின் த‌ட‌ த‌ட‌ த‌ட‌ அதிர்வு இன்னும் நெருக்கமாய்க் காதில் விழ "கிணிங் கிணிங் கிணிங் கிணிங்" என்று ப‌த‌ற்ற‌ம் தொற்றிய‌வ‌னாய் ரெண்டு முறை கூட‌ அடித்துவிட்டான்...... புல்ல‌ட் ச‌த்த‌ம் க‌ட‌ந்து சென்றும் நான்காவ‌து ம‌ணி அடிக்க‌வில்லை....

"வாடா முருகா.... அப்ப‌டியே த‌வ‌ண்டு இங்க‌ இருந்து ஓடிட‌லாம்.... சீக்கிர‌ம் வாடா முருகா... ந‌ம்ப‌ வேல‌ முடிஞ்ச‌துடா.... வாடா சீக்கிர‌ம்..... "

நான்காவ‌து ம‌ணி இன்னும் அடிக்க‌வில்லை......

திரும்பிப் பார்த்த‌ முருக‌னுக்கு தூர‌த்தில் க‌ருவாய‌ன் சைக்கிள் ம‌ணியைத் தூர‌ எறிந்துவிட்டு க‌ண்மாய் இருக்கும் திசைநோக்கி  மூச்சிரைக்க‌ ஓடுவ‌து தெரிகிற‌து.....

செந்திலுக்கும், ம‌ணிக்கும் ஒன்றும் புரியாம‌ல் திகைத்து நிற்க‌.... க‌ண்மாயில் தொப் பென்று விழுகிறது க‌ண‌த்த‌ ச‌த்த‌ம்...

புல்ல‌ட்கார‌ன் வேக‌ம் குறைக்காமலேயே க‌ண்மாய் ப‌க்க‌ம் திரும்பிப் பார்க்க‌.... முக‌ம் ம‌றைக்க‌ ம‌ற‌ந்த‌ முருக‌ன் த‌லைதெரிய‌ க‌ரும்புக் காட்டிலிருந்து வெளிவ‌ந்து... கையிலிருக்கும் சைக்கிள் ம‌ணியைத் தொட‌ர்ந்து அடித்த‌வ‌னாய் மோட்டார் ரூமை நெருங்குவ‌த‌ற்கும்... அங்கு நில‌வும் சூழ‌லின் அசாதார‌ண‌த்தை புல்ல‌ட்கார‌ன் உண‌ர்ந்து சுதாரிக்குமுன்பே, மோட்டார் ரூமிலிருந்து பெருங்குர‌லெடுத்துக் கையில் அரிவாளுடன் வ‌ந்து வ‌ளைப்ப‌த‌ற்கும் ச‌ரியாக‌ இருந்த‌து....

க‌ழுத்த‌றுந்து வெளிப்படும் ஈன‌மான‌ குர‌ல் அந்தக் க‌ரும்புக்காட்டின் அமைதியைக் கிழித்த‌து...

"டேய் முருகா... ஓடிட‌லாம்டா..... நிக்காம ஓடிடுடா... ஓடிடுடா..."

ஏதேதோ ப‌த‌ற்ற‌க் குர‌ல்க‌ளின் முடிவில் க‌ண்மாயில் தொப் தொப் பென்று க‌ண‌மான‌ ச‌த்த‌ம் தொட‌ர்ந்து கேட்கிற‌து...


                                                                                                                                          தொட‌ரும்....

இயக்குனர் சசிகுமாரை சந்தித்தேன்!!

(இது நடந்தது ஆகஸ்ட் மாதத்தில்... இப்போதுதான் பதிவிட நேரம் கிடைத்தது)

ம‌னித‌முக‌ங்க‌ள் பிர‌ம்ம‌ர‌ச‌னையின் முடிவிலா த‌னித்துவ‌மோ!!
ப‌ஸ்ஸ்டாண்டிலும் ஏர்போர்ட்டிலும் கொஞ்சம் நின்று கவ‌னித்தால் எத்த‌னையெத்த‌னை புதிய‌ முக‌ங்க‌ள்!!!

ஐம்புல‌ணில் நான்கினை வ‌கைபார்த்து இட‌ம்பொருத்தி ர‌சித்துத்தான் ப‌டைத்திருக்கிறான் மனித முகத்தை, ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வித‌மாக‌...!! அன்றைக்கும் ம‌துரை ஏர்போர்ட்டில் ந‌ல்ல‌ கூட்ட‌ம்... புதுப்புது முக‌ங்க‌ள்... விழிக‌ளின் ஸ்கேனிங்கில் சிந்தையில் அப்லோட் ஆகிக்கொண்டிருந்த‌ இருநூற்றி சொச்ச‌ப் புதிய‌ முக‌ங்க‌ளில்.... ஒரே ஒரு முகம்.... இருப‌த்துசொச்ச‌ வ‌ருடங்கள் அதே ம‌துரையில் வாழ்ந்திருந்த‌ என‌க்குப் ப‌ரிச்சிய‌மானதாய் இருந்தது!!

ட‌க் கென்று அந்த‌ முக‌த்தில் குத்தி நின்றன‌ விழிக‌ள்...என் டேட்டாபேஸில் ஆழமாகப் பதிந்திருக்கும் அதே க‌ண்க‌ள்...அதே முகம்... அதே க‌ழுத்து... அதே தாடி... என்று மேட்சிங் செய்துபார்த்து க‌ன்ஃபார்ம் செய்ய‌ ஆன‌ நேர‌ம் ஒன்ற‌ரை நொடியென்று கொள்ள‌லாம்!! ஆம் இவரும் ஒரு ம‌துரைப் ப‌ழ‌க்க‌ம்தான்.... மதுரையின் "சுப்ர‌ம‌ணிய‌புரத்"துப் ப‌ரிச்சிய‌ம்!!!

இய‌க்குன‌ர்/ நடிக‌ர் / த‌யாரிப்பாள‌ர் திரு. ச‌சிக்குமாரை ச‌ந்தித்தேன்.... !!

ம‌துரை டூ சென்னை ஜெட் ஏர்வேஸில் எக‌னாமி க்ளாஸில் துணைக்கு யாருமின்றி முற்றிலும் த‌னியாக‌ வ‌ந்திருந்தார்! யோசித்துப் பார்த்தால் த‌மிழில் "பசங்க" மாதிரி ந‌ல்ல‌ ப‌ட‌ங்க‌ளைத் தயாரிப்ப‌தைவிட மதுரைக்கு ஃப்ளைட்டில் தனியாக வருவது ரிஸ்க் இல்லைதான் எனினும் (!) தில்லு வேணும்!! "த‌ன்"னை ந‌ன்கு தெரிந்த‌, எனினும் த‌ன‌க்கு யாரென்று தெரியாத‌ கூட்ட‌த்தில் அமைதியாக‌ ஒதுங்கி அம‌ர்ந்திருந்தார்.... இங்கு யாரும் த‌ன்னை அடையாள‌ம் க‌ண்டுகொண்டிட‌ வேண்டாமே! என்கிற‌ ரீதியில் அவ‌ரின் உட‌ல்மொழி இருந்த‌து!! நிழ‌லை அலங்க‌ரித்து, ப‌ட‌ம்பிடித்து, ந‌ம்மோடு உற‌வாட‌ப், பிர‌தியெடுத்து விநியோகித்துவிட்டு இப்ப‌டிக் கொஞ்ச‌மும் ப‌ரிச்சிய‌ம‌ற்ற‌ "நிஜ‌த்"தை ம‌றைக்க‌ மென‌க்கிடலைத் தூர‌ நின்று க‌வ‌னித்த நான்... ஹ்ம்ம் "பிர‌ப‌ல‌ங்க‌ள்" என்று நினைத்துக்கொண்டேன்!!

மிக‌வும் இய‌ல்பான‌ ம‌னித‌ர்... சாதார‌ண‌மாக‌ப் பேசினார்... மூன்றுமுறை தான் அம‌ர்ந்திருந்த‌ இருக்கையை மாற்றியவ‌ர் மூன்றாம் முறை என் இருக்கைக்கு ச‌ற்று அருகில் வ‌ந்து மாட்டிக்கொள்ள‌ எழுந்து சென்று கை கொடுத்துப் ப‌க்க‌த்தில் அம‌ர்ந்துகொண்டேன்!! அவ‌ர‌து ப்ரைவ‌சியைப் ப‌ற்றிய‌தோர் அக்க‌றை ம‌ட்டும்தான் அவ‌ரிட‌த்தில் காண‌முடிந்த‌தே த‌விர‌ public avoidance என்றெல்லாம் பெய‌ர் கொடுத்துவிடும் வித‌மாக‌ நிச்சிய‌ம் இல்லை....

வ‌ழ‌க்க‌ம்போல் என்னுடைய‌ சினிமா ஆசையை விவ‌ரித்தேன்! இதுவ‌ரையிலான‌ (ஐ.டியில் இருந்துகொண்டே) கோட‌ம்பாக்க‌த்துக்கு நூல் விட்ட‌ என் சின்ன‌ச்சின்ன‌ முய‌ற்சிக‌ளையெல்லாம் சொன்னேன்....வலைப்பதிவைப் பற்றியும் சொன்னேன்..... எங்கே வேலை பார்க்கிறேன்.. எவ்வ‌ள‌வு ச‌ம்ப‌ள‌ம் போன்று நுணுக்க‌மாக‌க் கேள்விக‌ள் கேட்டுக்கொண்டு... "ந‌ல்ல‌ வேலையில‌ இருக்கீங்க‌, ந‌ல்ல நிலையில‌தான் இருக்கீங்க‌.... ஒரு மல்ட்டிஃப்ளக்ஸுக்குப் போய் இருநூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி ரிலாக்ஸ்டா ப‌ட‌ம் பாத்துட்டு உங்க‌ ப்ளாக்குல விம‌ர்ச‌ன‌ம் எழுதுற நிம்மதி ப்ரொடியூச‌ரைத் தேடி, லொகேஷ‌ன் பார்த்து, வெயில் ம‌ழை பார்க்காம‌ ஃபீல்டு வொர்க் பண்ணிப் ப‌ட‌ம் எடுக்கிற‌துல‌ இருக்க்காது.... என‌க்கு இதுதான் ஃபீல்டுன்னு கிள‌ம்பி வ‌ந்துட்டேன்.. ஃபிக்ஸ் ஆகிடிச்சு.... க‌ண்டினியூ ப‌ண்ணுறேன்... உங்க‌ ஃபீல்டை விட்டுட்டு ஏன் இங்க‌ வ‌ர‌ணும்னு நினைக்கிறீங்க‌!!" என்று கேட்டார்!! (இதையேதான் நான் இத‌ற்குமுன்பு க‌ல‌ந்துரையாட வாய்ப்புக் கிடைத்த‌ சிம்புதேவ‌ன் அண்ணனும், எஸ் ஜே சூர்யா சாரும் சொன்னார்க‌ள்!!) :‍-(

நானும் வ‌ழ‌க்க‌ம்போல‌ "ஒருநாள் வருவேன்ன்னு நம்புறேன் சார்" என்று சிரித்து ம‌ழுப்பிவிட்டு அடுத்த‌ டாபிக்குக்கு சென்றேன்...

"சுப்ர‌ம‌ணிய‌புர‌ம்" ப‌ற்றிக் கேட்டேன்.... நானும் ம‌துரையில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்தானே... ப‌ர‌மன், அழ‌க‌ர் போன்ற‌ ம‌னித‌ர்க‌ளைக் க‌ரிமேடு போன்ற ப‌குதிக‌ளில் சாதார‌ண‌மாக‌ப் பார்த்திருக்கிறேன்... ஆற்றிலும் க‌ண்மாயிலும் கொலைசெய்ய‌ப்ப‌ட்டு அங்கேயே சேற்றில் சொருகிவைக்க‌ப்ப‌ட்ட பிண‌ங்க‌ளை பால‌த்தில் செல்லும்போது பைக்கிற்கு சைட்ஸ்டாண்ட் போட்டு வேடிக்கைப் பார்த்திருக்கிறேன்.... (அதுக்காக‌ ம‌துரை ஒண்ணும் டெர‌ர் ஊரெல்லாம் இல்லைங்க‌!!)  "ஸோ.. "சுப்ர‌ம‌ணிய‌புர‌ம்" எப்ப‌டி சார்... ஏதாவது உண்மையை அடிப்ப‌டையாக‌க் கொண்ட‌ க‌தையா?" என்று கேட்டேன்... "இல்ல‌வே இல்லை"ன்னு சொன்னார்...
"உங்க‌ளை மாதிரியே, நானும் இதே மதுரையில் வேடிக்கை பார்த்த‌ விஷ‌ய‌ங்க‌ளையும், பேப்ப‌ரில் ப‌டித்த‌ விஷ‌ய‌ங்க‌ளையும் அடிப்ப‌டையாக‌க் கொண்டுக் க‌ற்ப‌னையில் வ‌டித்துப் பார்த்த‌போது ந‌ல்லா வ‌ந்திருக்கே! என்று ந‌ம்பிக்கை வ‌ந்து எடுத்த‌ப் ப‌ட‌ம்தான்!!" என்று கேஷுவ‌லாக‌ சொன்னார்...

("சுப்ர‌ம‌ணிய‌புர‌ம்" ப‌ட‌ம் பார்த்துவிட்டு எழுதிய என்னுடைய‌ ப‌திவிற்கு இங்கு சொடுக்க‌வும்)

"நீங்க‌தான் ப‌ர‌ம‌ன்னு முத‌ல்ல‌யே முடிவு ப‌ண்ணிட்டீங்க‌ளா?"

"நான் ந‌டிக்க‌ணும்னோ அல்ல‌து நடிப்பேன்னோ நெனெச்சுக் கூட‌ப் பார்த்த‌தில்லை... ஆக்சுவ‌லி அந்த‌க் கேர‌க்ட‌ரில் ந‌டித்திருக்க‌ வேண்டிய‌வ‌ர் ___________ (ஒரு வாரிசு ந‌டிக‌ர்... அவ‌ரின் முதல்ப‌ட‌மாக‌ அமைந்திருக்கும் அவ‌ர் ஓகே சொல்லியிருந்தால்.... ச‌சிகுமார் அவ‌ர்க‌ள் அந்த நடிகரின் பெய‌ரை ம‌றைக்க‌வில்லை எனினும் நான் இங்கு சொல்வ‌து முறையாகாது!)அவர், ந‌டிக்கிறேன் ந‌டிக்க‌லைன்னு ரொம்ப‌ த‌ய‌க்க‌ம் காட்டிய‌தில் பொறுமையிழ‌ந்து ப‌ட‌த்தை ஆர‌ம்பிக்க‌ணும் என்றுதான் நான் ந‌டிக‌னானேன்..." என்றார்...

"ஆனா... "நாடோடிக‌ளி"ல்  ஃபுல்டைம் ஹீரோவா ஆகிட்டீங்க‌ளே....?"

"அது என‌க்கு ரிலாக்ஸிங்கா இருந்திச்சு... ஒரு ப‌ட‌த்தை உட‌ல்நோக‌ உழ‌ச்சு இய‌க்கிட்டு... ஃப்ரீயா க‌ம்மிட்மெண்ட் இல்லாம‌ நாலு இட‌த்துக்குப் போய் ந‌ல்ல‌ ஒரு க‌தையில் ந‌டிப்ப‌து ரொம்ப‌வே ரிலாக்ஸிங்...என‌க்கும் ரிலாக்ஸ் ப‌ண்ண‌னும் இல்லையா..." என்றார்...

இய‌க்குன‌ர் ச‌முத்திர‌க்க‌னி ப‌ற்றிக் கேட்ட‌போது... "ஆம் அவ‌ர் என் ந‌ண்ப‌ர்.. என் ப‌ட‌த்துல‌ அவ‌ர் ந‌டிக்கிறார்.. அடுத்து அவ‌ர் இய‌க்கப் போகிற‌ ப‌ட‌த்தில் நான் நடிக்கிறேன்" என்றார்...

விக்ர‌ம் த‌யாரிக்க‌ ச‌சிகுமார் சார் இய‌க்கிக் கொண்டிருக்கும் ப‌ட‌ம் ப‌ற்றிக் கேட்ட‌போது.. "ஆமாம் விக்ர‌ம் சார் ப‌ட‌ம்தான்.. நாங்க‌ ரெண்டுபேருமே அதில் ந‌டிக்க‌ல‌... ப‌ட‌த்துக்கு இன்னும் பேர் வைக்க‌ல‌" என்று முடித்துக்கொண்டார்....

அப்ப‌டியே.. மெல்ல‌ மெல்ல‌ வ‌ள‌ர்ந்துவ‌ந்த‌ பேச்சுவாக்கில்... அபிந‌யா ப‌ற்றிக் கேட்டேன்.... அந்த‌ உளியின் ஓசையை உண‌ர‌விய‌லாத‌ சிற்ப‌த்தை ந‌டிக்க‌ வைக்க‌த் தோன்றிய‌து ம‌ற்றும் அந்த‌ ஓசையில்லா ஓவிய‌த்தை இய‌க்கிய‌ அனுப‌வ‌ம் ப‌ற்றியும் கேட்டபோது...

"ரொம்ப‌ சிம்பிள்... பாஷை தெரியாத‌ எத்த‌னையோ பேர் ந‌டிக்கும்போது இதுல‌ ஒண்ணும் பெரிய‌ விஷ‌ய‌மே இல்லை" என்றார் க‌ம்பீர‌மாக‌... மேலும் "ரொம்ப‌ ஈசி அபிந‌யா கூட‌ வொர்க் ப‌ண்ணுற‌து... எந்த‌வித‌மான‌ டிஸ்ட்ராக்ஷ‌னும்(Distraction) இல்லாத ந‌டிகை கிடைக்கிற‌துதான் க‌ஷ்ட‌ம்... !ஷூட்டிங் ஸ்பாட்ல‌ ந‌டிப்பைத் த‌விர‌ வேறெதிலுமே அவ‌ங்களுக்குக் க‌வ‌ன‌ம் சித‌றாது.... ஐ-பாட்ல பாட்டு கேட்டுக்கொண்டே அடுத்த‌ ஸீன்ல‌ எப்ப‌டிப் ப‌ண்ண‌லாம்னு டிஸ்க‌ஸ் ப‌ண்ணுற‌வங்களைவிட‌ ந‌ம்ம‌ என்ன‌ சொல்லுறோமோ அதைக் கூர்ந்து உள்வாங்கிக் கொண்டு அதைப் ப‌ற்றி மாத்திர‌மே சிந்தித்து ஷுட்டிங்கில் அச‌த்துகிற‌வ‌ர் அபிந‌யா.. அவ‌ருட‌ன் வொர்க் ப‌ண்ணுவ‌து ரொம‌ப ரொம்ப‌ comfortable"  என்று அவர் உண்மையாக‌ சொன்ன‌போது என் ம‌ன‌தில் ஒரு நிறைவு இருந்த‌து....

அப்புற‌மும் நிறைய‌ நிறைய‌ பேசினேன் அவ‌ரிட‌ம்.... ப‌ல‌பேர் இடையில் வ‌ந்து புகைப்ப‌ட‌ம் எடுத்துக்கொண்டார்க‌ள்... பொறுமையாக‌ நின்று அத்த‌னை பேருக்கும் போஸ் கொடுத்தார்.... நானும் ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொண்டேன்!! ம‌ற்ற‌வ‌ர்க‌ள் என்னை அவ‌ர் உட‌ன் வ‌ந்த‌வ‌ன் என்று நினைத்துக் கொண்ட‌தால் நாங்க‌ள் பேசிக்கொண்டிருக்கும் போது யாரும் வ‌ந்து இடைம‌றிக்க‌வில்லை!!

ந‌ல்ல‌ அனுப‌வ‌ம்... அவ‌ரின் ஈ மெயில் ஐடி வாங்கிகொண்டேன்... "ஃபேஸ்புக்கில் இருக்கீங்க‌ளா?" என்று கேட்டேன்... "Log in  ப‌ண்ணிப் பார்ப்பேன் அவ்ளோதான்" என்றார் மேலும் ந‌ம்முடைய‌ வ‌லைப்ப‌திவை ஒரு பெரிய‌ மீடிய‌மாக‌ க‌ருதும் இய‌க்குன‌ர்க‌ளில் ஒருவ‌ராக‌த்தான் இருக்கிறார்...ந‌ம்ம‌ ப‌திவுல‌க‌ப் பிர‌ப‌ல‌ங்க‌ளைத் தெரிந்துவைத்திருப்பார் என்று நினைக்கிறேன்!! வ‌லையுல‌கின் விம‌ர்ச‌ன‌ங்க‌ளைப் ப‌ற்றி அறிந்திருக்கிறார்...

ஒரு மிக‌ மிக‌ ந‌ல்ல‌ அனுப‌வ‌மாக‌ உள்வாங்கிக்கொண்டு மும்பை நோக்கி அடுத்த‌ ஃப்ளைட் பிடித்தேன் அடுத்த‌ நாள் ஆஃபிஸ் போவ‌த‌ற்கு!!

பி.கு:

இந்த‌ ச‌ந்திப்பை என் வ‌லைப்பூவில் எழுதுவேன் என்று ச‌சிகுமார் அவ‌ர்க‌ளிட‌ம் அனும‌தி வாங்க‌வில்லை...
அவ‌ர் ஏற்கென‌வே சில‌ பேட்டிக‌ளிலும் ச‌ந்திப்புக‌ளிலும் இந்த‌ விஷ‌ய‌ங்க‌ளையெல்லாம் ப‌கிர்ந்திருக்கிறார்...
அந்த‌ரீதியில் எந்த‌வித‌மான‌ ச‌ங்க‌ட‌மும் இருக்காது என்ப‌தை உறுதிப்ப‌டுத்திக்கொண்டுதான் இதை இங்குப் ப‌திவிடுகிறேன்.... எத‌ற்கு இவ்ளோ மென‌க்கிட‌லான் பின்குறிப்பு என்றால்.... யெஸ், ப்ளாக் ஒரு பெரிய‌ மீடியம்... ;-)


அன்புட‌ன்,
பிர‌பு எம்

Saturday, November 06, 2010

"தமிழனாக", "இந்தியனாக" சில "மனித" அனுபவங்கள்.. (பாகம் 1)

உலகம் (அ) வாழ்க்கை ஒரு யானை போன்றது.... அதில் மனிதன் ஓர் எறும்பைப் போன்றவன்...
எப்படி ஓர் எறும்பால் தன்னுடைய நானோ விழிகளால் யானையை ஓர் ஒருங்கிணைந்த‌ பிம்பமாய் அதன் முழு உருவத்தையும் எந்நாளும் கண்டு கணித்திட முடியாதோ அதே போல்தான் மனிதனின் பார்வையால் உலகத்தையும் (அ) வாழ்க்கையையும் அளந்திட முடியாது என்று படித்திருக்கிறேன்...

நான் பிறந்த இடம் மதுரை... அது இந்திய நாட்டின் வரைபடத்துக்குள்தான் இருக்கிறது.. ஸோ நான் இந்தியன்.. என் அப்பா அம்மா இரண்டுபேருக்குமே தாய்மொழி தமிழ்தான் ஓகே நான் தமிழன்...
நான் ஆப்பிரிக்கக் கருப்போ, ஐரோப்பிய வெளுப்போ இல்லாததால் ஏசியன் எத்தினிசிட்டி... ஆகமொத்தம் பிறந்தபோதே "ப்ராண்ட்" செய்யப்பட்டுவிட்ட ஒரு (உயிருள்ள) பொருள் நான்... :)

பள்ளிக்கூடத்தில் திங்கட்கிழமை ஏற்றப்படும் தேசியக்கொடிக்கு எப்படி மரியாதை செய்ய வேண்டும் என்றும், எனக்குக் கொஞ்சமும் புரியாவிட்டாலும் தேசியகீதத்துக்கு நெஞ்சை நிமிர்த்தி விரைத்து எழுந்து நின்றுவிடும் கடமையையும் சொல்லிக்கொடுத்தார்கள் (இன்றுவரை ஆட்சேபமின்றித் தொடர்கிறேன்).... ஆரம்பப் பள்ளியில் இருந்த போது வகுப்பில் முக்கால்வாசி பசங்க "நான் மிலிட்டிரியாகப் போறேன்" என்றுதான் சொல்வாங்க (எதிர்காலத்தில் ராணுவவீரன் ஆவேன் என்பதே இதன் சரியான‌ மொழிபெயர்ப்பு!!) மிலிட்டிரி ஆனவுடனேயே அவர்கள் செய்யப் போவதாக நினைப்பது பாகிஸ்தானுடன் சண்டை போடுவது!! யெஸ்... இன்றைக்கு வரைக்கும் "பாகிஸ்தான்" என்கிற பெயரைக் கேட்கும்போதும் கிரிக்கெட் பார்க்கும்போதும்தான் உள்ளே ஒரு ஸோ கால்ட் ஒருங்கிணைந்த‌ "இந்திய" உணர்வு ஊறுகிறது.....

"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.." 

என்னும் வாக்கியத்தை அடிக்கடி கேள்விப் பட்டிருக்கிறேன்... ஆனால் நானாக‌ "தமிழன்" என்றோ அல்லது "இந்தியன்" என்றோ யாரிடமும் வாழ்க்கையில் சொன்னதாக நினைவில்லை... ஆனால் இங்கு மும்பையில் வந்து சேர்ந்தவுடனேயே என் மேனேஜர் என்னை "மதராஸி" என்று அழைத்தார்.... "தெற்கிலிருந்து யார் வந்தாலும்... அவர்கள் தெலுங்கு, கன்னடரானாலும் கூட‌ எங்களுக்கு அவர்கள் 'மதராஸி' தான்" என்று விளக்கம் சொன்னார் ஒரு விசித்திரமான சிரிப்புடன்... 

 "யூ சவுத் இண்டியன்ஸ் வியர் ஒன்லி லுங்கி ரைட்??!!" என்று ஒருவித நமட்டுச் சிரிப்புடன் கேட்ட ஒரு நண்பரின் பூர்வீகம் பீகார்....!! அதற்குப் பஞ்சாப் நண்பர் ஒருவர் "நானும் சென்னைக்கு சென்றிருக்கிறேன்... தே வியர் கோடு போட்ட அண்ட்ராயர்ஸ்" என்று சொன்னார்.... "ஆமாமா.. உண்மைதான் ஒரு காலத்துல வீ யூஸ்ட் டு வியர் இட்...அதையே தான் சர்தார்ஸ் நீங்க இப்பவும் மடிச்சுத் தலைல கட்டியிருக்கீங்க‌.." என்று நான் சொன்னதும் வக்கிரமான வகையைச் சேர்ந்த ஒரு தரம்குறைந்த‌ ஜோக் தான்...

"யூ நோ வாட்?? ஹி இஸ் எ ட‌மிளிய‌ன்... அண்ட் ஹி ட‌ஸ‌ண்ட் நோ ஹிந்தி!!" என்று என்னை அறிமுக‌ப் ப‌டுத்தும்போது... மேற்குறிப்பிட்ட வாக்கியத்தை ("தமிழன் என்று...") என்னையறியாமல் என் ம‌ன‌து பின்பற்றி "யெஸ் ஐ ஆம் எ ட‌மிளிய‌ன்" என்று சொல்லித் த‌லை நிமிர்ந்துதான் நிற்பேன்... ஆனால் அவ‌ர்க‌ள் உட‌னே ஹிந்தியில் பேச‌த்துவ‌ங்கி விடுவார்க‌ள்... இடையிடையே... சென்னை, க‌ருணாநிதி, ர‌ஜினிகாந்த் போன்ற‌ பெய‌ர்க‌ள் தொட‌ர்ந்த‌ சிரிப்பொலிக்கு நடுந‌டுவே கேட்கும்.... க‌ண்டுகொள்ளாம‌ல் ந‌க‌ர்ந்து விடுவ‌து வ‌ழ‌க்க‌ம்....!! ;-)

"நிற‌வெறி"... என்கிற‌ வார்த்தையை சின்ன‌ வ‌ய‌தில் மார்ட்டின் லூத‌ர்கிங் ப‌ற்றிய ஓர் ஆங்கில‌ப் பாட‌த்தில்தான் முத‌ன்முத‌லில் படித்தறிந்தேன்... பிற‌கு ம‌ண்டேலா என்னும் வெளிநாட்டு ம‌னித‌ர்  நானாக‌ விரும்பிப் ப‌டித்த‌ சில‌ புத்த‌க‌ங்களில் அறிமுகமானார்... "பியானோவில் க‌ருப்பு வெள்ளைக் க‌ட்டைக‌ள் இணைந்தால்தான் ந‌ல்ல‌ இசை கிடைக்கும்"... என்கிற புக‌ழ்பெற்ற‌தொரு க‌விதை வரியும் ஒரு ஃபாரின் கவிஞன் எழுதியதுதான் ஸோ...  என்னுடைய‌ ம‌ன‌ப்பான்மையானது, " வெள்ளை, கருப்புத் தோல் நிற மனிதர்களுக்கிடையே "நிற‌வெறி" என்று ஒன்று இருக்கிற‌து.... அது அமெரிக்காவிலும் தென்னாப்பிரிக்காவிலும் மேலைநாடுகளிலும் இருக்கிறது", என்ப‌தாக‌ இருந்தது!! ஆனால்.......

"தென்னிந்தியர்கள் கருப்பர்கள்" என்று ஓர் எண்ணம் ஜஸ்ட் நம்ம ஏரியாவிலிருந்து ஓர் எண்ணூறு கிலோமீட்டர் தூர‌த்திலேயே துவ‌ங்கி, அத‌ற்குப்பின் மொத்த‌ வ‌ட‌க்கிலும் ஆழ‌மாக‌ ந‌ம்ப‌ப்ப‌டுகிற‌து என்கிற‌ ஒரு விஷ‌ய‌த்தைத் தெற்கைத் தாண்டிய‌ சில‌நாட்க‌ளிலேயே நான் புரிந்துகொள்ள‌ நேர்ந்த‌போது கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தது உண்மைதான்...ஆனால் நம்ம ஊரிலுமே கொஞ்சம் கருப்பாக இருக்கும் குழந்தைகளிடம் பரவலாகவே காணப்படும் "இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்"ஸுக்கு அவர்களின் நிறத்தைச் சீண்டிக் கேலிபேசும் நாம்தானே பொறுப்பு..?? இதுவும் "நிறவெறி"தானோ என்று நினைத்து என்னை நானே நொந்துகொண்டேன்....

ஃபிரான்ஸிலிருந்து இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் செய்ய‌ப்ப‌டும் ஒரு ப்ராஜெக்டின் விஷ‌ய‌ங்க‌ளை அள்ளிக்கொண்டுவ‌ர‌ இங்கிருந்து ஒரு நான்குபேர் ஃபிரான்ஸுக்குப் ப‌ய‌ண‌மானோம்.... முதுகுக்குப் பின்னால் ஐஃபிள் ட‌வ‌ர் தெரியுமாறு நின்று புகைப்ப‌ட‌ம் எடுத்து ஃபேஸ்புக்கையும் ஆர்க்குட்டையும் நிர‌ப்பிவிட‌ வேண்டும் என்றெல்லாம் பேசிக்கொண்டுப் புற‌ப்ப‌ட்டோம்.... "ஃபாரின்" போறோம் என்கிற‌ ச‌ந்தோஷ‌ம் ம‌னசெல்லாம்!!

நாங்க‌ள் எங்க‌ள் ப்ராஜெக்டுக்குத் தேவையான‌ அறிவை மூளையில் பார்ச‌ல் செய்துகொண்டு திரும்பிய‌போது எங்க‌ளை நிழ‌லாயிருந்து க‌ண்காணிக்க‌ அங்கிருந்து மூவ‌ர் கிள‌ம்புவ‌தாயிருந்த‌து.... அவ‌ர்க‌ளுக்கும் இது "ஃபாரின்" ட்ரிப் அல்ல‌வா.... ஒரு ந‌ண்ப‌ர், த‌ன்னுடைய‌ ஐ‍ ஃபோனில் எதையோ கூகிளில் தேடியவராக, "இந்தியாவில் இது இருக்குமாமே..." என்று என்னிட‌த்தில் கேட்டார்.... நான் தாஜ்ம‌ஹாலாக‌ இருக்கும் என்று நினைத்துத்தான் அருகில் சென்றேன்.... ஆனால் அவ‌ரின் ஃபோனின் ப்ர‌வுஸ‌ரில் "ப்ளேக்" நோயைக் குறிப்பிட்டிருந்தார்.... இந்தியாவுக்குப் போகிறோம் என்ற‌வுட‌ன் முத‌லில் வேக்ஸின்க‌ள் எடுத்துக்கொள்வ‌தில்தான் க‌வ‌ன‌ம் செலுத்துகிறார்க‌ள் என்று கேள்விப்ப‌ட்ட‌போது மிக‌வும் சிறுமைப் ப‌ட்டோம் ம‌ன‌துக்குள் ஓர் "இந்திய‌னாக‌"!!

ஆனால் அதே அந்த மிக‌வும் இனிமையான‌ ஃப்ரெஞ்சு ந‌ண்ப‌ர்க‌ள் "மீண்டும் நாங்கள் இந்தியாவுக்கு வ‌ருவோம் நீங்க‌ளும் ஏதேனும் ஒரு விடுமுறையைத் திட்ட‌மிட்டு மீண்டும் எங்க‌ள் நாட்டுக்கு வ‌ர‌வேண்டும்" என்று அன்போடு சொல்லிச் செல்லும‌ள‌வு எங்க‌ளால் இன‌ மொழி நிற‌ பேத‌மின்றிப் ப‌ழ‌க‌முடிந்த‌தையும் உட‌ன‌டியாக இங்கு குறிப்பிட‌வேண்டும்...

இவை அனைத்துமே அனுப‌வ‌ங்க‌ள்....!! :-)

"யாதும் ஊரே யாவ‌ரும் கேளிர்!!" என்னும் க‌ணிய‌ன்பூங்குன்ற‌னாரின் ஒற்றைவ‌ரியைப் பின்ப‌ற்றி உல‌கெங்கும் சுற்றிவ‌ர‌லாம் இன்பமாக!! யாவ‌ரும் கேளிரே... இருப்பினும் அதே பாட‌லின் அடுத்த‌ வ‌ரியையும் சேர்த்து அர்த்தம் கொள்ளாவிட்டால் பலனில்லை!!

"தீதும் ந‌ன்றும் பிற‌ர்த‌ர‌ வாரா!!"


                                                                                                           அனுப‌வ‌ங்க‌ள் தொட‌ரும்!!

பி.கு:

* தொழில் நிமித்த‌மாக‌ வெவ்வேறு இட‌ங்களையும், ப‌ல்வேறு க‌லாச்சார‌ங்க‌ளையும் அருகிலிருந்து உண‌ர‌க் கிடைத்த‌ வாய்ப்பினை ஆதார‌மாக‌க் கொண்டு என்னுடைய‌ அனுப‌வ‌ங்க‌ளை இங்கு தொடுக்கிறேன்.. மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்... "தீதும் ந‌ன்றும் பிற‌ர்த‌ர‌வாரா!!"

* உல‌கெங்கும் வாழும் த‌மிழ‌ர்க‌ளுட‌ன் ஓர் இந்திய‌த் த‌மிழ‌னாய்த் தாய்மொழி பேசிப் ப‌ழ‌கிய‌ அனுப‌வ‌ம் ம‌க‌த்தான‌து... குறிப்பாக‌ இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளுடைய‌ ந‌ட்பும் அதன் முன்னும் பின்னும் என்னுள் விளைந்த‌ மாற்ற‌ங்க‌ளையும் இங்கு ப‌கிர்வ‌தும் இந்த‌த் தொகுப்பின் முக்கிய‌ நோக்க‌ம்!!