கடைசி விவசாயி [U] (2022)
"அண்ணே.. அந்தாளு ரொம்ப பழைய ஆளா இருக்காப்ல....
இதுல 40 வருஷமா காது வேற கேக்கல....
அறிவு வளராததுனால அவரை எதச் சொல்லியும் ஏமாத்த முடியலண்ணே!"
சில லட்சங்களில் பணத்தை மேலதிகமாகத் தருவதாக இனிக்கப் பேசி, இன்னும் கிணற்றில் கொஞ்சம் தண்ணீர் மிச்சமிருக்கும், அந்த ஊரில் இன்னமும் சோராமல் நடவு வேலை செய்யும் "கடைசி விவசாயி"யான மாயாண்டியின் நிலத்தையும் எழுதி வாங்கிவிடலாம் என்னும் முயற்சி பலிக்காத சோகத்தில் கதையின் நாயகரான மாயாண்டியைப் (தெய்வத்திரு. நல்லாண்டி அவர்கள்) பற்றிக் கிட்டத்தட்ட ஊரின் மற்றைய நிலங்களையெல்லாம் பணத்துக்கு வாங்கிவிட்ட பார்ட்டிக்கு எடுத்துச் சொல்லப்படும் வசனவரிகள் இவை! அந்தக் கடைசிவரியை மீண்டுமொருமுறை நிறுத்தி வாசிக்கவும்...
"அறிவு வளராததுனால அவரை எதச் சொல்லியும் ஏமாத்த முடியலண்ணே!" 😆
அந்த ஏமாறத் தேவையான "அறிவு வளாராத"ஆனால் விவசாயத்தில் பேரறிவாளரான மாயாண்டியின் பாத்திரப்படைப்பு காகிதத்தில் எழுதப்பட்டுத் திரைக்குக் கடத்தப்பட்டதா? அல்லது நிஜ மாயாண்டிகளின் ஒளிப்பிரதிகளாகத் திரைமொழியில் நேரடியாகவே பதியப்பட்டதா? மாயாண்டி எனும் பாத்திரத்தை நல்லாண்டியின் அகத்தில் விதைத்துத் திரையில் செய்யப்பட்ட நேர்த்தியான அறுவடையா? அல்லது நல்லாண்டிக்குள்ளிருந்த மாயாண்டியை மட்டும் அறுவை செய்தெடுத்ததில் நேர்ந்த பாத்திரப் பிரசவிப்பா? இதுபோன்ற எந்தக் கேள்விக்கும் பதில் தேடத் தடயங்களையே விட்டுவைக்காத, மிகைகளை மீதேற்றிக்கொள்ளாத படைப்புகளைத் தமிழ் சினிமா குறிக்கும் "எதார்த்தம்" எனும் சொல்லையே ஒளி வருடத் தூரத்தில் எதேச்சையாகத் தாண்டிப் பதிந்திருக்கும் நிஜமான வாழ்வியல் அதிசியம், ம. மணிகண்டனின் இந்த அரும்படைப்பு!
"கடைசி விவசாயி"யே தமிழ் சினிமாவின் கடைசி விவசாயப் படமாக இருந்துவிடட்டும் என்று தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சரான (!) அறுபடைவீடுகொண்டு திருமுருகனிடம் கோரிக்கை வைப்போமாக! ஒரு டப்பாவில் கைப்பிடி மண்ணை அள்ளிப்போட்டுத் தண்ணீர் விட்டுக் குழைத்து சூரியன் பார்க்க அதை வைத்துவிடச்சொல்லி அடுத்த நாள் அதில் துளிர் விட்டிருக்கும் ஒரு வேப்பந் தளிரைப் பார்த்து "விதை யார் போட்டது?" என்று அதிசயிக்கும் ஒருவனிடம், " நம்மளுக்கு ஆண்டவன் ஆயிரக்கணக்கான விதைங்களைப் போட்டுருக்கியான்...மழை பேய்ஞ்சு தண்ணி பட்டதும் அது மொளச்சிக்குடுது!.... உனக்கு ஒரு வேப்பங்கண்டைக் குடுத்துருக்கியான் பாரு!" என்று மாயாண்டி ஒரு டப்பாவுக்குள் விவசாயத்துக்குக் காட்டும் லைவ் டெமோவைப் பார்த்தபோதும் "எனக்கு விவசாயம் தெரியாதுன்னு சொல்லுறவனுக்கும் விவசாயம் செய்யத் தெரியும்.. அவன் பழகிக்குவான்" என்று அந்தக் காட்சிக்கு சற்றுமுன்பாக அனாயசமாக உதிர்க்கப்படும் அந்த வாக்கியத்தைக் கேட்டபோதும் விதவிதமான கார்ப்பரேட் வில்லன்களுடன் ஹெலிகாப்டரில் வந்து சண்டை போட்டு விவசாயத்தைக் காப்பாற்றும் நம் ஸ்டார் ஹீரோக்களுக்கு சமகாலத்தில் மிகவும் பிடித்தமான விவசாய ஜானர் தமிழ்சினிமாக்கள் நினைவுக்கு வந்துபோனதுதான் முருகனிடம் வைத்த மேற்குறிப்பிட்ட கோரிக்கை எழக் காரணம்!
திரைப்படம் பற்றிய இந்தப் பதிவில் இன்னும் படத்தின் கதையைப் பற்றி எதுவும் சொல்லாததில் படம் பார்த்தவர்களுக்கு ஆச்சர்யம் இருக்கப்போவதில்லை! காரணம்... இதுதான் "கடைசி விவசாயி" படத்தின் கதை என்று அடைத்துக் காட்டிவிடமுடியாது.... சமகால சந்தர்ப்பங்களைத் தொட்டுத் திரையில் விரியும் சம்பவங்கள் கோர்வையாக நிகழ்ந்துகொண்டிருக்க, அந்த ஊரின் வறண்ட நிலப் பிளவுகளும் திருவிழாவுக்குக் காத்திருக்கும் குலதெய்வக் கோவில் கற்சிற்பங்களுமாகக் கதைச்சூழலின் நிலப்பரப்புடைய வரலாறு புவியியல்களை, மாயாண்டிக் கிழவர் கைது செய்யப்படும் காட்சிப் பின்னணிகள் பார்வையாள மனங்களை உழுதுகொண்டிருக்கையிலேயே, விதைகளாகத் தூவி அழுந்த விதைத்துவிடுகிறது திரைக்கதை!
நிஜத்துக்கு நெருக்கமாய் நெய்யப்பட்ட சம்பவங்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னணியில் அரசியல், தற்செயல், வியாபாரம், மனச்சிக்கல், பழம்பகை என்று பலகோணங்களில் காரணங்கள் இருக்கும் அவை ஒவ்வொன்றையும் தொட்டுப் பாடம் எடுக்காமல் பார்வையாளனின் பார்வையில் வைத்துவிட்ட அத்தனைப் புள்ளிகளுக்கும் இடையே லாவகமாக வளைந்து கொடுத்து குறுக்குகளோ வெட்டுகளோ இல்லாத சீரான மாக்கோலமாய் மையப்புள்ளியை சுற்றிச்சுற்றி அழகாகத் தன்னையே பார்வையாளனின் மனதில் வரைந்துகொள்ளும் படத்தின் கதையோட்டம்! உதாரணத்துக்கு மாயாண்டி மயில்களைப் புதைத்த வழக்கில் கைதாவதற்குப் பின்னணியில் அவருடைய நிலத்தை வளைக்க நினைக்கும் வியாபாரமோ அல்லது அதன் பின்னணியில் இயங்கும் அரசியலோ காரணமாக இருக்கலாம் அதே நேரத்தில்... காவல்துறைக்கு ஊர் இளைஞர்கள் மீதான பழைய பகை கூடவும் ஒரு காரணமாக இருக்கலாம்.... திருவிழா நடத்துவதற்கு ஜாதிப் பிரச்னைதான் தடையென்றால் திருவிழாவோடு ஊரின் வறட்சிக்கும் தெய்வம் வகுத்துவைத்திருக்கும் விதியென்று மறுபக்கம் இன்னொரு மடிப்பும் இருக்கும்! இவற்றுக்கு இடையே மிகச்சில காட்சிகளில் தோன்றும் நம் கண்களுக்குத் தென்படாத தன் காதலியுடன் நடந்தே நெடுந்தூரம் பயணிக்கும் விஜய்சேதுபதி கதாபாத்திரம்! பக்தியில் கண்கள் சொருகக் கரைந்துருகுவதிலும், ஒரு மர்மமான மாயவனாக சில நிமித்தங்களைப் பேசும்போது கண்கள் காட்டும் தெளிவிலும், சுயமும் இறையும் தன்னைச் சுழற்றியடிக்கும் வேளைகளில் அதே கண்கள் காட்டும் தெளிவற்ற தேடல் தவிப்பும் என வித்தியாச "ராமையா"வாக அசுர நடிப்பை அஸால்ட்டாக வழங்கியிருக்கிறார் சிலகாலம் காணமல் போயிருந்த மக்கள் செல்வன்! திரையில் காற்றில் கரைவதற்கு முன்பாகவே காண்போரின் சிந்தையில் தனியாகக் கலந்துவிடுகிறது அவரது பாத்திரம்!
மனதுக்கு நெருக்கமான அந்த "பெண் நீதிபதி மங்கையர்க்கரசி" பாத்திரத்தை ரேய்ச்சல் ரெபெக்கா தாங்கிச் சுமந்த விதத்தில் பார்ப்போர் அனைவருக்கும் பெருநிறைவைக் கொடுத்திருக்கிறார்... இயல்பான வசனங்களை நேர்த்தியாகப் பேசியதில் மட்டுமன்றிக் காவல்துறைக்குக் கடுமைகாட்டும் விழி அசையாத ஆளுமைப் பார்வையையும் மாயாண்டிக்குக் கருணையையும் ஒருசேரக் கண்களில் கலக்கவிட்டு பார்வைகளால் தெளித்த விதத்தில் மிகவும் ஈர்த்துவிடுகிறார்..... கிராமத்து நிஜ மனிதர்களாக முனீஸ்வரன், காளிமுத்து, சாப்ளின் சுந்தர், மற்றும் அந்த ஊர்ப் போலீஸ்காரர்களும் கிழவர் கிழவிகளும் என்று கதாபாத்திரங்கள் யாருமே தேர்ந்த திரை நடிகர்கள் அல்ல ஆனால் திரையில் காணும் காட்சிகளைப் புனைவு என்றே நம்பமுடியாத அளவில் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பை ம. மணிகண்டன் தன் இயக்கத்தில் நிகழ்த்திக்காட்டியிருக்கும் ஒரு பேரதிசயமாகத்தான் பார்க்கமுடிகிறது!
ம. மணிகண்டனின் எழுத்தில் தெறிக்கும் குறும்பான நையாண்டிகள் கூரானவையும் கூட! பேசும் வசனங்கள் பேசாமல் பேசும் பின்புலப் பொருள்களை ரசனையான புன்முருவலுடன் படம் நெடுக இனிமையாய்க் கடந்துகொண்டேயிருக்கிறோம்! ஒளிப்பதிவில் நிலங்களையும் ஒளியையும் காட்சியின் உணர்வுக்கேற்றவாறு துல்லியமாகக் கைப்பற்றியிருக்கிறார். நிலப்பரப்பின் வறட்சியை நெருக்கத்திலும் சூழலின் மிரட்சியை ஒருசில விரிவான வைட் ஆங்கிள் ஷாட்களிலும் கச்சிதமாகக் கடத்தியிருக்கிறார்.... கதாபாத்திர உணர்வுகளையெல்லாம் நெற்றிக்கோடுகளும் தோல்சுருக்கங்களும் தெள்ளத்தெளிவாய்த் தெரியும் நெருக்கத்தில் கேமராவை வைத்து அசாத்தியமான நிஜக்கலைஞர்களின் முகங்களின் மூலமே ஆழப்பதிந்திருக்கிறார்! மணிகண்டனின் கேமரா மெய்ப்பொருளாய்க் காட்சிப்படுத்திய வயல்களிலும் வரப்புகளிலும் குளம் குட்டை கண்மாய்களிலும், மண்தரை ஓட்டுக்கூரை வீடுகளிலும் கலை இயக்குனர் தோட்டாதரணியின் பொய்ப்பொருட்கள் கண்களுக்குத் தெரியாமல் விரவியிருந்திருக்கக்கூடும்! மலையாளப் படங்களின் அனுபவசாலி எடிட்டரான பி.அஜித்குமாரின் படத்தொகுப்பில் படம் கடத்தும் மெல்லிய உணர்வுகளுக்கு எந்த சேதாரமும் ஏற்படாததே மாபெரும் காரியம் மற்றபடி அஜித்குமாரின் எடிட்டிங்கா மணிகண்டனின் எழுத்தா என்று பிரித்துப் பார்க்கமுடியாத அளவு காட்சிகள் கருச்சுருக்கமாய் "கட்" கொடுக்கின்றன! சந்தோஷ் நாராயணின் இசையைப் பொறுத்தவரை அவர் பிண்ணனியில் இசைத்த காட்சிகளில் சற்று அந்நியமாகவும் இசைதவிர்த்து மௌனத்தைப் பிரயோகித்த அடர்த்தியான காட்சிகளில் மிகவும் நெருக்கமாகவும் உணர்வதாக இருந்தது அந்த வகையில் சந்தோஷ் நாராயணனின் தீம்கள் எதுவுமே கதைக்கும் களத்துக்கும் பொருந்துவதாக உணரமுடியவில்லை!
எதற்கும் அலட்டிக்கொள்ளாத தெளிவும் தீர்க்கமுமான மாயாண்டி பாத்திரம் தன்னைச் சுற்றி நிகழும் ஆழம் நீளம் அறியா சட்டப் பிரச்னைகளுக்கு எவ்வித வினையும் ஆற்றாமல் பசித்துக்கிடக்கும் பல்லாயிரம் உயிர்களாகத் தான் குலதெய்வத்துக்குப் படைப்பதற்காக விதைத்துவைத்திருக்கும் நெற்பயிர்களை, அவர் வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மட்டுமின்றி விவசாயத்துக்குப் பலமைல் தூரத்தில் வாழ்வியல் கொண்டிருக்கும் சமகாலப் பார்வையாளர்களையும் உணரவைத்ததில்தான் "கடைசி விவசாயி" அபார வெற்றிகாண்கிறார்..... பயிர்களை ஆயிரம் உயிர்களாக உணர ஆரம்பத்தலிலிருந்து அந்த ஊர் மக்களான கதை மாந்தர்களின் (போலீஸ் உட்பட) மனதின் இயல்பான நேர்மறை மாற்றங்கள்தான் "கடைசி விவசாயி" விதைத்து அறுக்கும் வசந்தம்!
வான் பொய்த்து வறண்டுபோன பூமியில் மனித மனங்களின் ஈரம் தெளித்து வளமான கதிர்களை விளைவித்து விவசாயம் செய்த விதத்தில் சோகப்பாடலுக்கு இன்ப மெட்டமைத்து மனங்குளிரச் செய்திருக்கிறார் மணிகண்டன்!
இத்தனை நிறைவான தமிழ்த்திரைப்படத்தைப் பார்த்ததேயில்லையோ என்று மனம் நேர்மையாக யோசித்தது படம் முடிந்து இடியுடன் கூடிய மழைச்சத்ததில் end credits ஓடிய போது!
கடைசி விவசாயி - முதல் போகம்!
அன்புடன்,
பிரபு எம்