Sunday, May 08, 2016

24 [U] (2016) - (குறிப்பு: கதையின் எந்தவோர் அம்சமும் இங்கு வெளிப்படுத்தப்படவில்லை!!)




டிக்....
டிக்....
டிக்....

இதயத்தின் “லப்..டப்” கடிகாரத்தின் “டிக்..டிக்”குடன் ஒத்திசைத்திடும் காலகட்டமே நமது வாழ்க்கை! லப்...டப்  நின்றாலும் டிக்...டிக் நிற்கப்போவதில்லை.... மனித வாழ்வின் ஆதாரஸ்ருதியான, கடிகாரத்தின் நொடிமுள் தட்டிடும் இந்த ஓயாத தாளத்தை அதாவது காலத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ”டைம்-மிஷின்”- உலகளவில் புனைவுகளில் ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் ஃபேமஸ் ஃபேண்டஸி கேட்ஜெட் தான்...! அதே டைம்-மெஷின் கேட்ஜெட்டைத்தான் தாராளமான பட்ஜெட்டுடன் திரைக்கதையென்னும் அதிவேக ஜெட்பிடித்துப் பறக்கவிட்டிருக்கிறார்கள்..... அடித்துத் தூள் கிளப்பியிருக்கிறது விக்ரம் கே குமார் கூட்டணி! விமர்சனத்தையெல்லாம் அப்புறம் வந்து படித்துக்கொள்ளலாம் இன்னும் படத்தைப் பார்க்கவில்லையென்றால் இங்கேயே அப்படியே "Time-Freeze" செய்துவிட்டுப் படத்தைப் பார்த்துவிட்டுவந்து மீதியைப் படியுங்கள்! நான் அசையாமல் காத்திருக்கிறேன்! :-))

சயிண்டிஸ்ட் சேதுராமன், “வாட்ச்-மெக்கானிக்” மணிகண்டன், மற்றும் அதகள வில்லன் ஆத்ரேயா என மொத்தம் மூன்று சூர்யாக்கள்.... அதாவது சூர்யா... சூர்யா... சூர்யா.....! மூன்று பங்காகப் பிரித்துக்கொண்ட ஒப்பற்ற ஓர் “ஒன் மேன் ஷோ”தான் “24”...! ஒரு நடிகராக சூர்யாவுக்கு இது ட்ரிபிள் தமாக்கா.... கச்சிதமாக ஸ்கோர் செய்திருக்கிறார்.... அதுவும் அந்த ஆத்ரேயாஆஆஆஆ..!!! அம்மாடியோவ்... திரையில் ஒரு வில்லன் தோன்றும்போது இவன் எந்தமாதிரியான சீர்குலைவை ஏற்படுத்தப்போகிறானோ??!! என்று பார்வையாளனுக்கு அடிவயிற்றில் புளியைக் கரைக்கவேண்டும் என்று சொல்வார்கள் இங்கு இந்த சூர்யா திரையில் தோன்றும்போதெல்லாம் புளிக் கரைசலையும் தாண்டி சூடான கொதிநிலையில் ஒரு காரமான மிளகுரசமே தயாராகிறது வயிற்றுக்குள்! இடுப்புக்குக் கீழே செயலிழந்த நிலையில் 26 வருட கோமாவிலிருந்து கண்விழித்த கணமே “மித்ரா..... மித்ரா...”வென மிருகக் குரலில் உருமுவதில் தொடங்கி.... டைம் ட்ராவல் வாட்ச்சைத் தனதாக்கிக்கொள்ளத் துடித்து ஒவ்வொரு சூழ்நிலையையும் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் சாடிஸ (Sadism) சாதுர்யம்.... இறுதிக்காட்சிகளில் மீண்டுவரும் மிருகவெறி என ஆத்ரேயா...... மார்க் ஆண்டனி, சித்தார்த் அபிமன்யு ரேஞ்சில் செட்டில் ஆகும் சூப்பர் வில்லன்!

”பேஸிக்கலி ஐம் எ வாட்ச்-மெக்கானிக்” என்னும் வாக்கியத்தைத் தொடர்ந்து மூன்றுமுறைக்குமேல் (படத்தில் முப்பது முறையையும் தாண்டும்...!) பயன்படுத்தித் தொடர்ந்து ஆட்டத்தில் பங்குபெறும் வாய்ப்பை “மணி” சூர்யா இழந்திருக்கவே கூடும் அந்த ஆரம்பக்காட்சிகள் இன்னும் சற்றே சளைத்திருந்தால். அத்தனைமுறை ரிப்பீட் அடிக்கும் டயலாக் அது! பொதுவாகவே டைம்-மிஷின் கதைகளில் அதனைக் கண்டுபிடிக்கும் சயிண்டிஸ்ட் அதைப் பயன்படுத்த மாட்டார் முறையானதொரு User manual-ஐக் கூடப் படிக்காமல் கதாநாயகர்கள் காலப்பயணத்தைக் கையிலெடுப்பதாகத்தான் ஹாலிவுட்-ன் "Back to the future" முதல் கோலிவுட்டில் நேற்று வெளியான ”24” வரை என அத்தனை டைம்-மெஷின் திரைக்கதைகளின் மாறாத டெம்ப்ளேட் இது! அப்படித் திடீரென்று கையில் கிடைக்கும் டைம் மெஷினை வைத்து ஆரம்பத்தில் விளையாட்டாக அலம்பல் செய்வதாகச் சில காட்சிகளை வைத்தாக வேண்டுமல்லவா?! அந்த எபிஸோடுகளில்தான் “பேஸிக்கலி ஐம் எ வாட்ச்-மெக்கானிக்” என்று சூர்யா கிட்டத்தட்ட ”புரியாத புதிர்” ரகுவரனின் “ஐ நோ” ("I know") சாதனையையே முறியடிப்பார் "திரும்பத் திரும்பப் பேசுற நீ..!" என்று ஆடியன்ஸ் அலறும் வரை!

படத்தில் சூர்யாவைத் தவிர..... தமிழ்சினிமாவின் சூப்பர் அம்மா சரண்யா, சமந்தா, சத்யன் மூவருக்கும் இந்த சென்சேஷனல் தீபாவளியில் அவ்வப்போது சின்னச் சின்ன மத்தாப்பூ கொளுத்தத்தான் வாய்ப்பு.....இதில் சரண்யா சூர்யாவிடம் ஃப்ளாஷ்பேக் சொல்லும் ஒற்றை டயலாக் சீன் ஓர் எமோஷனல் கிஃப்ட் பேக்!   நித்யா மேனனுக்கு அழகும் பாந்தமும் காட்டும் ஜஸ்ட் ஒரு சுருக்கமான கேமியோ அதிலும் ஈர்க்கிறார்....சூர்யா-சமந்தா வின் “இமாஜினோ-ரொமான்ஸோஃபிலியா”காதல் நோயையும் டைம்-மெஷின் கொண்டே செதுக்கியிருப்பது அழகு என்றால் அந்தக் காட்சிகளை அழகியலோடு அணுகுவதுதான் ஆடியன்ஸுக்கு அழகு என்று நினைக்கிறேன் .... பக்கத்தில் இருந்த இரண்டு பேர் அந்தக் காட்சிகளின்போது உஸ்ஸ்... உஸ்ஸ்ஸ்... என்று  நெழிந்தது அவர்களின் ரசனைக் கோளாறாகத்தான் தெரிந்தது எனக்கு! சமந்தாவின் பங்களிப்பு ரொம்பவே க்ளீன்.... மெனக்கிடமலேயே மெருகேரும் அழகில் மெழுகுச்சிலையாகக் கவர்கிறார் ப்ரொஜக்டரிலிருந்து புறப்பட்டு திரையில் விழும் ஒளியானது சமந்தாமீது படும்போதெல்லாம் பளிச்சென்று பிரதிபலிக்கிறது  நம் விழித்திரையில்! செல்ஃபி வித் எம்.எஸ் தோனி போன்ற செல்லச் சேட்டைகள்.... சத்யனின் subtle காமெடி எனக் கலவையான முதல்பாதி என்றால் ஒரு சூர்யாவை இன்னொரு சூர்யா பொசுக்கெனக் கொன்றுவிடும் எதிர்பாராத அதிர்ச்சி ட்விஸ்டுடன் இண்டர்வெல் ப்ளாக்! செகண்ட் ஹாஃபில் திடீரென்று கிராமத்தில் கூட்டுக்குடும்பம் என்று வேறுதளத்தில் கால்பதித்து கதை டர்ன் அடித்தாலும் அதிலும் ஆத்ரேயாவின் அசாத்திய வில்லத்தனம் படத்தின் டெம்போவை ஆடியன்ஸுக்குக் கடத்திக்கொண்டேதான் இருக்கும்.....! எல்லாத்திற்கும் சிகரம் வைக்கும் அந்தக் கடைசி இருபது நிமிடங்கள்...... மூச்!! அதைப் பற்றி நான் எதுவும் சொல்லல..... தியேட்டரில் கொண்டாடுங்கள்!

தொழில்நுட்பரீதியாக ஒளிப்பதிவாளர் திருவின் கேமராவும் மற்றும் மேக்கிங்கில் 70%க்கும் மேலான VFX-ன் பங்களிப்பும் படத்தை முழுக்க முழுக்கத் தமிழில் எடுக்கப்பட்டிருக்கும் ஒரு ஹாலிவுட் திரைப்படமாகத் தந்திருக்கிறது! ஒளிப்பதிவாளர் திரு..... நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழுக்குத் திரும்பியிருக்கிறார்  (கடைசிப் படம் “கிரீடம்” என்று நினைவு!) ஒரே படத்தில் அத்தனைக் கண்களையும் தன்பக்கம் திருப்பியுமிருக்கிறார்! திரையில் மூன்று சூர்யாவென்றால் திரைக்குப் பின்னால் ஒரே திரு தான் ஹீரோ! ஆக்‌ஷன் அதகளங்கள், தேர்ந்த வண்ணங்கள், க்ளோஸான கோணங்கள் இவற்றை எல்லாம் திரு போன்ற ஜாம்பவான்களிடம் சிலாகிப்பது க்ளிஷேயாகிவிட்ட ஒன்று! 24-ன் ஒளிப்பதிவில் நான் மிகவும் ரசித்தது “பாய்ண்ட்-ஆஃப் வ்யூ” ஷாட்களை! (Point-of-view shots) அதாவது ஒரு கதாபாத்திரத்தின் கண்களாகக் கேமரா பரிமாணித்து அந்தப் பாத்திரத்தின் கண் பார்வையாகவே காட்சிகளைக் காணக் கொடுப்பது! இந்தப் படத்தில் அதில் கூட ஒவ்வொரு பாய்ண்ட் ஆஃப் வ்யூவுக்கும்  நுணுக்கமாக லென்ஸ் மற்றும் கோணம் பிடித்திருக்கிறார்..... குறிப்பாக.... 26 வருடங்கள் கழித்துக் கோமாவிலிருந்து கண்விழிக்கும் ஆத்ரேயாவின் பார்வையில் மித்ரா கேரக்டரைத் (அஜய்) திரையில் காண்பிக்கும்போது ஆத்ரேயாவின்  நிலைகொள்ளாத கருவிழி அசைவுகளையும், கண்பார்வை மங்கலையும் அத்தனைத் துல்லியமாக  நாம் உணர்வோம்.....! கதையில் வரும் டைம்-மிஷின் வாட்ச்-சிலேயே ஓர் ஐந்து வருடம் முன்னோக்கிப்போய் எடுத்துவந்த டெக்னாலஜியில் செய்த படம் இது என்று சொன்னால் கிட்டத்தட்ட நம்பிவிடலாம் அத்தனை மேஜிக்கல் மேக்கிங்...... அந்தரத்தில் freeze ஆகும் மழைத்துளிகளையெல்லாம் திரையில் கண்டுகளியுங்கள்! விக்ரம் கே குமாரின் முந்தைய தெலுங்குப் படத்தின் (”மனம்”) எடிட்டரான பிரவின் புடிதான் இந்தப் படத்துக்கும் கத்திரி பிடித்திருக்கிறார்...... பாடல்களுடன் சேர்த்து மொத்தம் 164 நிமிடங்கள் படம் ஓடுகிறது (மூன்று மணிக்கு கால்மணியே குறைவு!) ஸோ எடிட்டர் கத்திரி பிடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட  நீண்ட சிகையை சீப்பு வைத்து அழகாக சீவித் தந்திருக்கிறார் என்று சொன்னால் பொருந்தும் என்று நினைக்கிறேன்....! எனக்கு நீளம் உருத்தவில்லை பிடித்தேயிருந்தது.... சொல்லப்போனால் நான் பிரமித்துதான் இருந்தேன் முக்கால்வாசி காட்சிகளில்!

”அவதார்”, “இண்டெர்ஸ்டெல்லர்”, “டார்க் நைட்”  போன்ற படங்களில் திரைக்கதைக்கு இடையே நான்கு பாடல்களை வைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? அப்படித்தான் இருந்தது இந்தப் படத்திலும் பாடல்கள்! இயக்குனர் இதை அறியாமலில்லை அதனால்தான் ஏ ஆர் ரஹ்மான் தேவைப்பட்டிருக்கிறார் படத்துக்கு....! ரஹ்மானின் ராயல் ட்யூன்களுக்கு அதிசிரத்தையாக பிரம்மாண்ட மேக்கிங் செய்தும் பாடல்களைக் காப்பாற்றமுடியவில்லை! இந்தப் படத்துக்குப் பாடல்கள் மார்க்கெட்டிங் ஸ்ட்ராடெஜி மட்டுமே...... ரஹ்மானும் வெறும் பாஸிங் நம்பர்கள்தான் வழங்கியிருக்கிறார்... ஆனால் பின்னணி இசையில் ஆஸ்கார் நாயகன் எல்லாப் புகழையும் அள்ளிச்செல்கிறார்...! அபாரமான பின்னணி இசை குறிப்பாக ஆத்ரேயாவின் மனவோட்டத்தை வெளிப்படுத்தும் தீம்கள்!

விக்ரம் கே குமார்....எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் இவரும் ஒருவர்! “யாவரும் நலம்” மூலம் ஏற்கெனவே தமிழில் ஒரு ஹாலிவுட் படத்தை இவர் கொடுத்திருப்பதை நாம் அறிவோம்! அந்தப் படத்தில் ஒரு ஹாரர் ஜானருக்கு ஏற்ற கருப்பு-வெள்ளை ஷேடைப் பயன்படுத்தியிருந்ததாக பி.சி ஸ்ரீராம் சொல்லியிருந்தார் இதோ இந்தப் படத்துக்கு Sci-Fi & period ஜானருக்கு ஏற்ற வண்ணங்களுடன் திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்... விக்ரம் கே குமாரின் வண்ண ஞானத்தையும்... வண்ணமயமான கற்பனைவளத்தையும் ஒவ்வொரு கணமும் கண்குளிர சிலாகித்தேன்! இம்மியளவில் பிசகாகிவிடும் திரைக்கதை.... இஞ்ச் விட்டாலும் சொதப்பிவிடக்கூடிய மேக்கிங் ரிஸ்க்...... விஸ்தீரண பட்ஜெட்.... சூர்யாவின் தொடர் தோல்விப்படங்கள்..... “மனம்” தந்த மாபெரும் வெற்றியைத் தொடரும் கட்டாயம்... என அத்தனை சுமைகளையும் அனாயசமாக தூக்கியெறிந்து ஷாட்-புட் ஆடியிருக்கிறார் விகேகே..! சாம்பியன் பட்டம் உங்களுக்குத்தான் சார்!

குறைகள்..... ஹ்ம்ம்ம்.... மேஜிக் ஷோவுக்குப் போய்விட்டு லாஜிக் இடிக்குதே என்று சொல்லுமளவு அதிமேதாவிகள் நம்மிடையே இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்..... இருப்பினும் முக்கியமான குறையென்றால் ஆத்ரேயாவுக்கும் அவரது ட்வின் ப்ரதரான சயிண்டிஸ்ட் சேதுராமனுக்கும் இடையேயான உறவு-பகை பற்றிய எந்தவொரு டீடெயிலிங்கும் இல்லாதது! சொல்லாத ஒரு ஃப்ளாஷ்பேக்கை வைத்து அதற்கு சமந்தாவின் குடும்பம் தரும் ரியாக்‌ஷனை வைத்து பின்னணி ஃப்ளாஷ் பேக்குகளையெல்லாம் நம் யூகத்துக்கே விட்டிருப்பதை ஒரு புதிய உக்தியாக எடுத்துக்கொள்ளலாம்தான் ஆனாலும் நம்மவர்கள் கதையோடு ஒன்றிப் பார்க்கும் பழக்கமுடையவர்கள் அல்லவா.... அதனால் நன்றாகவே இடிக்கின்றது... மற்றபடி எல்லாம் ஓகே... ஸாரி... ட்ரிபிள் ஓகே!!

மொத்ததில் படம் முடிந்தவுடன் என் வாட்ச்சை வைத்து ஒரு மூன்றுமணி நேரத்தைப்  பின்னால் தள்ளப்பார்த்தேன் மீண்டும் அதே 200 ரூபாயில் படத்தைத் திரும்பவும் ஒரு மூன்றுமுறை பார்க்கலாமே என்று...... முடியவில்லை!! ஆனால் நிச்சியம் படத்தை மீண்டும் பார்ப்பேன்....!

24 - I will go for my watch again!... ஆயுஷ்மான் பவ...!!!

அன்புடன்,

பிரபு எம்








2 comments:

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)