Monday, September 29, 2025

ஒரு " ஜன ரஞ்சகன்" விஜய் ; "ஜன நாயகன்" அல்ல! 🤦

தனக்குச் சரியாக வராது என்று தெரிந்த எதையுமே சினிமாவில் விஜய் தொட்டதேயில்லை..... 

ஒரு கமர்ஷியல் கதாநாயகனாக, தரை லோக்கலாக மக்களுடன் கனெக்டாகத் தேவையான எல்லா விஷயங்களில் தன்னைத் தயார் செய்துகொண்டுதான் நடிகர் ஆனார். அதைத்தாண்டி நுணுக்கமான நடிப்பிலோ அல்லது வித்தியாசமான கெட்-அப்பிலோ அல்லது சவாலான கதாபாத்திரங்களிலோ விஜய் நடிக்க முனைந்ததே கிடையாது. ஆக்‌ஷன், லவ், காமெடி போன்ற ஏரியாக்களில் மட்டுமே பவனி வந்து அதற்கேற்ற ஒரு கூட்டத்தைத் திரட்டி அவர்களுக்கென்று ஒரு தனி உலகத்தில் வித்தியாசமான சில தியரிகளுடனும் ட்ரெண்டிங் ட்வீட்களுடனும் இத்தனை ஆண்டு காலம் சினிமாவில் சிறப்பாகவே ஜல்லியடித்தாகிவிட்டது.... 

அதைத் தாண்டிக் கிட்டத்தட்ட முப்பதாண்டு காலமாகத் தன் சினிமா வாழ்வில் விஜய்....

1.  எந்தவொரு சூழ்நிலையிலும்  ஓர் ஆளுமையாக வெளிப்படதேயில்லை....

2. சமூகம் சார்ந்து பொது வாழ்க்கையில் அக்கறையான செயல்பாடுகள் எதிலும் விஜய்யின் தனித்துவமான பங்களிப்பு என்று ஒன்று இருந்ததே கிடையாது.... (ரசிகர் மன்றம் சார்பாக மோர்ப்பந்தல் அமைப்பதும், நோட்புக் வழங்குவதும் என்று சமூக செயல்பாடு என்று நம்புகிறவர்கள் தயவுசெய்து என்னை நீங்களே அன்ஃப்ரெண்டு செய்துவிடவும்)

3. நடிகர் சங்கம் உள்ளிட்ட எந்தவொரு சினிமா சார்ந்த சங்கங்களில் செயல்பட்டதோ அல்லது படைப்பாளிகளின் போராட்டம் உட்பட இவர் காலத்தில் சினிமா சந்தித்த எந்த சிக்கலுக்கும் தீர்வுகாணவோ அல்லது பங்ககளிக்கவோ கூட எந்தவிதத்திலும் முயன்றதாகப் பதிவுகள் இல்லை....

4. பின்னணிப் பாடல்கள் பாடியதைத் தவிர மற்றபடி திரைக்குப் பின்னால் கதை, திரைக்கதை போன்ற விஷயங்களில் எல்லாம் ஈடுபட எந்தவித ஆர்வமும் காட்டியதில்லை....

5. "தலைவா" பட ரிலீஸ் பிரச்னை உட்பட தன் நடிப்பு வாழ்வில் வந்த எந்தவொரு சிக்கலிலும் எந்தவோர் அரசியல் ஆளுமையோ அல்லது அதிகாரமையங்களுடனோ விஜய் எதிர்த்து நின்று மோதியதற்கான எந்தத் தடயமும் கிடையது. கையைக் கட்டி சரணடைந்துவிடும் அளவுக்கு அதிகபட்ச அகிம்சையைக் கடைபிடித்திருக்கிறார். (சி. ஜோசஃப் விஜய் என்று லெட்டர் பேடில் ஒரு கடிதம் எழுதினார் என்று யாருக்காவது மனதில் சட்டென்று தோன்றினால் மனதளவில் நீங்கள் ராமருக்கு உதவிய ஒரு குட்டி அனிமல் என்று நீங்களே புரிந்துகொள்ளலாம்!) 

6. தன்னை மையமாகக் கொண்ட (அதாவது ஆடியோ ரிலீஸ் போன்றவை) நிகழ்வுகளைத் தவிர்த்து எந்தவொரு பொதுமேடையிலும் தன்னுடைய பேச்சாற்றலால் அரங்கத்தை அதிரவைக்கவோ அல்லது ஹைலைட்டாக மிளிரியதோ போன்ற எந்தவொரு சம்பவத்துக்கும் வாய்ப்புகளை அவர் எதிர்நோக்கியதுகூட இல்லை. முடிந்தவரை  பொதுமேடைகளில் பேசுவதைத் தவிர்க்கத்தான் பார்ப்பார் பணிவன்புடன்!

7. ஆணவக்கொலைகள், அரசியல் கலவரங்கள், இன்னபிற சமூக அவலங்கள் எதற்கும் முன்னின்று குரல் கொடுத்து நான் பார்த்ததில்லை... பெருமழை, பேரிடர், பெருந்தொற்று காலங்களில் களத்திலிறங்கி... ஸாரி எந்தக் களத்திலும் விஜய் தென்பட்டதுமில்லை, எந்தவித மக்கள் இயக்கத்தையும் முன்னெடுத்ததுமில்லை. ( "ஒருமுறை, ஒரு குடும்பத்துக்கு, தடை தாண்டித் தனியாக பைக்கில் சென்று ஆறுதல் கூறி வந்தாரே!" என்று சொல்பவர்கள் அந்த ஒரு சம்பவத்தில் அவர்களும் ஆறுதல் அடைந்து கொள்ளலாம்)

8. சினிமாவில் இருந்தவரை மட்டுமின்றி ஒரு தனிக்கட்சி ஆரம்பித்தபின்னும் கூட எந்தவொரு போராட்டத்தையும் நடத்தியதோ பங்கேற்றதோ இல்லை....

9. ஒட்டுமொத்தமாக நடிகர்கள் அனைவரையும் திரண்டு (அல்லது வம்படியாகத் திரட்டி) திரையுலகம் சார்பாக நடந்த போராட்டங்கள், கண்டனக் கூட்டங்களிலும் ஃபோர்ஸாக ஒரு ஸ்பீச், தொடர்பாக ஒரு முன்னெடுப்பு.... ஊஹும் அப்படியெல்லாம் ஒரு வரலாறும் நினைவுக்கு வரவில்லை...

10. தன் தனிப்பட்ட வாழ்க்கையில் அவரைச் சுற்றிச் சுழலும் சர்ச்சைகளுக்குப் பொதுவாழ்க்கைக்கு வந்தபின்னும் பொதுவெளியில் விளக்கம் கொடுக்க அவருக்கு எப்போதுமே பெரிய சங்கடங்கள் இருந்துவருகிறது. தன்னுடைய ப்ரைவசியில் அரசியலுக்கும் வரும் முன்னும் வந்தபின்னும் எந்தவித மாற்றமும் இல்லாத ஒரே மனிதர் எனக்குத் தெரிந்து விஜய்தான்!

சினிமாவில் தனக்குச் சரியாக வராதவற்றை, தன் பலவீனங்களை மிகச் சரியாகத் தெரிந்துகொண்டு அவற்றைத் தொடாமலேயே விஜய் பயணித்தது ஒரு குறையே கிடையாது.... மாறாக அவருடைய வெற்றி ரகசியங்களில் மிக முக்கியமான அம்சம் அது....! அதுதவிர்த்து, ஒரு கதாநாயகனாகத் தனக்கான பாதையைத் (அதுவும் ஏற்கெனவே ஒரு நடிகர் போட்டுவைத்த பெருவெற்றிப் பாதை) தெளிவாகத் தேர்ந்துகொண்டு, அதற்கேற்ற தயாரிப்புகளுடனும், மிகச்சிறப்பான திட்டமிடலுடனும் தன்னுடைய தொழில் வாழ்க்கையில் வெகு சிரத்தையாகச் செயல்பட்டுத்தான வெற்றிகரமாகத் திகழ்ந்திருக்கிறார்...

ஆனால் ஏனோ அரசியலுக்கு அடியெடுத்த வைத்த நாளிலிருந்து தனக்கு சுத்தமாக வராத விஷயங்களை மட்டுமே செய்ய எத்தணித்துவருகிறார்... அதனால் அவருக்கு நிகழ வாய்ப்புள்ள சேதாரங்களிலிருந்து தன்னை முழுமையாகப் பாதுகாத்துக்கொள்ள மட்டுமே தெரிந்துவைத்திருக்கிறார் என்பதும் மற்றபடி வேறுயாரையும் காக்க அவரிடம் எந்தவித சிரத்தையும் இல்லை என்பதுதான் இங்கு ஆபத்தான விஷயமாகிறது!
  
ஆளுமை, ஆள்வினையுடைமை, தைரியம், தலைமை, சமூக ஒழுக்கம், ஒழுங்குபடுத்தல் போன்ற எந்தப் பண்புமே இல்லாதவர் விஜய் என்று பொதுவில் ஆரம்பம்தொட்டே பலமுறை நிரூபணம் ஆகியிருக்கும் நிலையில், விஜய் பின்னால் போகும் தறிகெட்ட பெருங்கூட்டமும் இருந்தாலும் இறந்தாலும் நாட்டிற்கு எந்த நன்மை தீமை இல்லைதான்!

ஆனால் அவரவர் வீட்டுக்கு????!!

இது கடந்துபோகக்கூடிய கேள்வி கிடையாது!

ஆக்‌ஷனுக்கும் கட்டுக்கும் இடையே சிறப்பாக இயங்கி (இயக்குனர் வேறொருவர்) ஜொலிக்கத் தெரிந்த விஜய் ஒரு சிறப்பான "ஜனரஞ்சகன்". ஆனால் அனைத்து சூழல்களிலும் அனைத்து திசைகளிலும் சுற்றிச் சுழன்று ஓய்வின்றி இயங்கும் "ஜன நாயகன்" சத்தியமாகக் கிடையாது..... 

நமக்குத்தான் வரலைல்ல.... அப்புறம் ஏன்???

Sunday, September 28, 2025

⚠️☠️அபாயம்: அரசியல்படுத்தப்படாத அறிவிலிக் கூட்டம்!☠️⚠️


"அரசியல்படுத்தப்படாத கூட்டம்" என்பது மண்டை ஓட்டுக் குறியுடன் பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டியதோர் அபாய வாசகம்!
ஆனால் அது ஏதோ சாதாரணமான அரசியல் விமர்சனமாக முன்வைக்கப்பட்டுத் தற்குறித்தனமான வாதப் பிரதிவாதங்களைத்தான் கடந்தசில வாரங்களாக ஊடகங்களில் கிளப்பி வந்தது. கரூரில் இன்று நடந்துவிட்ட இந்தக் கொடூரம் இந்திய அரசியலே கண்டிராதது! இதற்கு ஒரே காரணம் அரசியலின் அரிச்சுவடி தெரியாத பணத்திமிர் பிடித்த ஒரு கிறுக்கன் அபாயகரமானதோர் "அரசியல் படுத்தப்படாத கூட்டத்தை"த் தெருவில் திரட்டியதுதான்!


இதே கரூரில் சில தினங்களுக்குமுன் அதிமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஊர்வலம் நடைபெற்றது.... காவல்துறை விதித்த கட்டுப்பாட்டுச் சட்டகங்களை அதில் கலந்துகொண்ட அதிமுக எனும் கட்சியின் கூட்டத்தினர் எவரும் தாண்ட முயற்சிக்கவில்லை.... தடுப்புகளின்மீது ஏறவில்லை... அவர்கள் தலைவரைக் காண எவரும் வீட்டிலிருக்கும் பெண்களையும் குழந்தைகளையும் கூட்டிச்செல்லவில்லை! ஏனெனில் அது ஓர் அரசியல் கூட்டம்!


தான் கூட்டும் இந்த மதிகெட்டக் கூட்டத்தின் அபாயத்தைத் தெள்ளத் தெளிவாக முன்கூட்டியே முன்னறிந்து வைத்திருந்தது விஜய்தான்! அதனால்தானே இந்தக் கூட்டத்தினரிடமிருந்துத் தன்னையும் தன்னுயிரையும் காத்துக்கொள்ள பவுன்சர்கள் புடைசூழ எங்கும் செல்கிறார்! அவரைப் பார்க்க முண்டியடித்துக்கொண்டு அவருடைய உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய அளவில்தானே அவர் கூட்டிய கூட்டமும் அவருடைய வாகனத்தின் மீதும், மின்சாரக் கம்பிகளில் தலையுரசும் மரங்களின் மீதும் கூரைகளின் மீதும் ஏறியது! விஜய்யின் நடைமேடையில் ஆபத்தான முறையில் தொங்கியெழுந்து ஏறிய ஒரு மூடனை பவுன்சர்கள் குண்டுகட்டாகத் தூக்கிக் கூட்டத்தில் வீசியெறிந்தார்களே இத்தகைய காட்சியை இதற்குமுன்பாக இந்திய அரசியல் கண்டதுண்டா? 

"நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு."
 (சிற்றினம் சேராமை குறள் எண்: 452)

"சிற்றினம் சேராமை" என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர், மேற்கண்ட இந்த குறளில்...  நீரானது நிலத்தைச் சேரும்போது தன்னுடைய இயல்பை விடுத்து அந்த நிலத்தின் இயல்பையே தன்னியல்பாக்கிக் கொண்டுவிடும் என்று சொல்லி அதேபோல்தான் மனிதரின் அறிவும் அவரவர் சாரும் கூட்டத்தின் (இனத்தின்) இயல்பாகவே மாறிவிடும் என்கிறார்! 

இந்தத் திருக்குறள் முழுக்க முழுக்க மனிதர்களின் "கூட்ட மனநிலை" (Crowd mentality)க்குப் பொருந்தக் கூடியது! தனிப்பட்ட முறையில் ஒரு படித்தவனோ, பண்பாளனோ, நல்லவனோ, கெட்டவனோ அவன் ஏதோவொரு நோக்கத்துடன் கூடிய கூட்டத்தில் கலந்துவிட்டான் என்றால் அவனுடைய தனிப்பட்ட இயல்பானது அந்தக் கூட்டம் வெளிப்படுத்தும் இயல்பில் கரைந்து அந்த மொத்த இயல்பாகத்தான் பொதுவில் வெளிப்படும்! அப்படியிருக்கும்போது , ஓர் உள்நாட்டுக் கிரிக்கெட் போட்டியின் வெற்றியைக் கொண்டாடுகிறேன் என்று "கூடிய" கூட்டத்தில் நிகழ்ந்த அசம்பாவிதத்தை அண்டை மாநிலத்தில் அண்மையில் பார்த்துப் பதைபதைத்தோம். அந்தப் பதற்றம் தணிவதற்கு முன்பே தன்னைத்தான் தலைவனாக முன்னறிவித்துக்கொண்டு வலம் வரும் இந்த நடிகன் "கூட்டிய" இந்தக் கூட்டத்தில் இப்படி வரலாறு காணாத கோடூரம் அரங்கேறிவிட்டதே இதை எப்படிக் கடந்து செல்வது???


ஒரு பழுத்த தேசிய ஊடகவியலாளர் (சாம் டேனியல்) அரசியல் கூட்டத்தில் மட்டுமல்ல எத்தனையோ அவலமான கூட்டங்களில் நின்றுகூட செய்திகளை நேரலையில் அறிவித்திருக்கிறார். ஆனால் விஜய்யின் கடந்த கூட்டத்தில் அவர் எதிர்கொண்ட அருவருப்பான வினைகளை உலகமே பார்த்து உழிந்ததே, அப்போது கூட ஊடகங்கள் இதில் உள்ள ஆபத்தை உணரவில்லையா? இந்த நெறிகெட்டக் கூட்டத்தின் ஆபத்தை எந்த ஊடகமாவது முன்னறிவித்ததா? எச்சரிக்கை விடுத்ததா? இந்தக் கூட்டத்தைத் தடுக்கவேண்டி எந்த ஊடகமாவது அரசை நோக்கி உரைத்ததா? இப்படிப்பட்டத் தறிகெட்ட மூடர்கூட்டத்தின் நிகழ்வுகளை நேரம்காலம் பார்க்காது நேரலை செய்வதும்,  இந்தத் தரம்கெட்டத் தற்குறிகளிடையே தொடர்ந்து மைக்கை நீட்டுவதும் என்று நீண்ட ஊடக செயல்பாடுகள் மதிகெட்ட இந்தக் கீழ்மனிதர்களின் கூட்டத்தை எந்தவிதமாக மோடிவேட் செய்யும் என்று ஊடகக் கூடங்களுக்குத் தெரியாதா?


த.வெ.க கட்சியின் சார்பாக எழுத்துவடிவில் முறையாக விண்ணப்பிக்கப்பட்ட இடங்களுக்கே காவல்துறை நிபந்தனைகளுடன் பேரணி நடத்த அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இதற்குமுன் இந்தக் கட்சி நடத்திய ஒவ்வொரு ஊர்வலத்திலும் விதிகளெல்லாம் கண்கூடாக மீறப்பட்டுள்ளது. திமிர்பிடித்த திருடனான விஜய்யும் ஒவ்வொரு கூட்டத்திலும் தான் கூட்டும் அபாயகரமான இந்தக் கூட்டத்தை நோக்கி, வழக்கமாகக் காவல்துறை வழங்கும் கட்டுப்பாடுகளைக்கூடத் தன்மீதான மாநில அரசின் பயமாகக் கட்டமைத்து, அவன் கட்சியினர் கோரிக்கை வைத்து வாங்கிய மின் தடை உட்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைக்கூட அரசின் வினையாக மடைமாற்றி விஷமத்தனமான அரசியல் செய்தான். மேற்கொண்டு அவனது ஊர்வலங்களை அரசு தடுத்தால் நிச்சயம் அதை வைத்தும் மலிவான அரசியலை அவனது மந்தப்புத்திக் கூட்டத்தை வைத்து மிகமோசமாகக் கட்டவிழ்த்துவிடுவான் என்பதும் தெருந்ததுதான். இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசாங்கம் இன்று ஒரு கொலைகாரனாக உருவெடுத்துவிட்ட இந்த சமூக விரோதியின் முன்மதியற்ற திமிரை முன்னறிந்து அடக்கியிருக்க வேண்டாமா??? 


எங்கும் எதையும் அரசியலாக மக்களைப் பார்க்கப் பழக்கிவிட்ட ஊடகங்கள் மீதும் இன்று மரணித்த அப்பாவிக் குழந்தைகளின் இரத்தக்கறை படிந்திருக்கிறதுதான்! அரசியல் என்பது வெறும் கட்சிகளின் சூளுரையா?? பொய்களை மெய்களாக மக்களிடையே பேசுவதை அரசியல் மேடைகள் அனுமதிக்கலாம் ஆனால் அவை யார்யார்வாய்க் கேட்பினும் அதன்  மெய்ப்பொருள் கண்டு மக்களுக்கு அறிவிப்பதுதானே ஊடகத்தின் பணி. யார் என்ன சொன்னாலும் அது சொல்பவரின் கருத்து என்று தற்காப்பு வாக்கியத்தையும் தொழில் சார்ந்த மற்றும் அறம்சார்ந்த தங்கள் பொறுப்புகளுக்கு எல்லாம் துறப்புகளையும் முன்னறிவித்துத் தானே ஊடகங்கள் "உள்ளது உள்ளபடி" என்று சொல்லி உள்ளும் புறமும் ஆராயாமல் அப்படியே இருளையும் கூட ஒளிபரப்புகிறார்கள்! ஊடகங்களின் மறைமுகமான அச்சுருத்தலும் இந்த வெறிபிடித்த மடையனின் கூட்டத்தை அனுமதிப்பதில் அரசியல் முன்னெச்செரிக்கையுடன் செயல்பட அரசையும் காவல்துறையையும் மறைமுகமாக  நிர்பந்தித்திருக்கிறது! மாறாக, இந்த ஊடங்கங்கள் விஜய்யின் ஆபத்தான முன்னெடுப்பை வன்மையாகக் கண்டித்திருந்தால், இந்தக் கூட்டத்தினால் ஏற்பட வாய்ப்பிருந்த அவலங்களைக் குறித்து மக்களை எச்சரித்திருந்தால் நிச்சயமாக இந்தக் கொடூர சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும். ஊடகங்களும் இன்றைய கொலையின் பங்குதாரர்களே!

இதையெல்லாம் தாண்டிய என் மனவேதனையாக நான் உணர்வது கல்வியால் மேம்பட்ட நம் தமிழ்ச்சமூகம் வெறும் பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்துகளில் மட்டும் மேம்பட்டுவிட்டு அறிவுசார்ந்த அறம்சார்ந்த பண்புசார்ந்த மேம்பாடுகளிலெல்லாம் வருடம்தோறும் தேய்ந்துகொண்டே செல்வதைப் பார்த்துதான்! கல்வியறிவில் பின் தங்கியிருந்த  நம் முன்னோர்கள்தான் எம்ஜிஆர் என்ற நடிகனைத் திரையில் பார்க்க "சினிமாவுக்குப் போன சித்தாளு"கள். ஆனால் அவர்களுக்கு அப்போது இருந்த சமூக ஒழுக்கமும், தன்னறிவும், மனிதாபிமானமும் இப்போது கல்வியில் பலமடங்கு தேறிவிட்ட நிகழ்காலத் தலைமுறைக்குக் கிஞ்சிற்றும் இல்லையே! அல்லு அர்ஜுனுக்காகவும் விஜய்க்காகவும் முறையற்ற கூட்டமாய்க்கூடி உயிரையே மாய்த்துக்கொண்டவர்கள் படித்தவர்களும் பட்டங்கள் தரித்தவர்களுமாயிற்றே!

"கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். "  
("கல்வி" குறள் எண்- 393)

கற்றோரே கண்ணுடையவர்கள் கல்லாதோரோ முகத்தில் இரண்டு புண்ணுடையவர்கள் என்ற வள்ளுவர் வாக்கையே நம் நிகழ்காலக் கல்வி கற்ற தமிழ்ச்சமூகம் பொய்யாக்கிவிட்டோமே! இன்று கூட்டத்தில் சிக்கிக் கொடூரமாக உயிர்விட்ட உடல்களில் உள்ள ஆறாத புண்களாக அல்லவா ஆகிவிட்டது நம் கல்வி!

இன்னும் இன்னும் என்ன சொல்லி என்ன பயன் என்று மனம் நொந்து இதுபோன்ற இன்னொரு நிகழ்வு என்னாளும் நடந்துவிடக்கூடாது என்ற பிரார்த்தனையுடன், கடுங்கோபத்துடனும் பெரும் வேதனையுடனும் எழுதியிருக்கும் இந்தப் பதிவை முடிக்கிறேன்.

பெருவலியுடன்,

பிரபு எம்

Monday, September 22, 2025

"பொய்"யெனப் பெய்யும் மழை! - பகுதி -1

சிலந்திகளின் உமிழ்நீரைப் போன்றவை மனிதனின் பொய்கள்!

சில பொய்கள் சிலருக்கு நிஜ உலகின் தோல்விகளிலிருந்துத் தப்பித்து ஒளிந்துகொள்ளத் தனக்குத்தானே சுயசொர்க்கங்களாக செயலாற்றும்..... அடுத்தவருக்கு நேரடியாக தீங்குவிளைவிக்காத பொய்கள் இவை!

சில பொய்கள் ஆசைவலையை சிலந்தி வலையாய் விரித்து அதில் சிக்கும் சிறுபூச்சிகளை விழுங்கி உண்டு உடல்வளர்க்கும்! கவர்ச்சிகரமான இந்தப் பொய்கள்தான் இருப்பதிலேயே கேவலமானவை!

பொய்களில் இப்படிப் பலவகைகள் இருக்கலாம் ஆனால் அவற்றில் அற்பமாக வீழாமலிருக்க சற்றே விழிப்புடன் அறிவைச் சரியாகப் பயன்படுத்தினாலே போதும் அன்றாடம்  தனிப்பட்ட வாழ்வில் நாம் சந்திக்கும் பொய்களை எளிதில் கண்டறிந்தோ அல்லது வெறுமனே கடந்தோ சென்றுவிடலாம். ஆனால்..... ஒரு குழுவாய், இனமாய், குடிமக்களாய் நாம் பங்குபெறும் பொதுவாழ்வில் பரவும் அதாவது அனுதினமும் திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்களை இப்படி எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதுதான் கசப்பான நிஜம் ஏனெனில் அவை மிகவும் ஆபத்தானவை! பெருகிவரும் பேராபத்தாகப் பொதுவெளியில் பகிரங்கமாய்ப் பகிரப்படும் சமகால சமூகப் பொய்கள் மற்றும் அரசியல் பொய்களின் அபாயங்களைப் பற்றி ஆழமாக எச்சரிக்கவே இந்தப் பதிவு தொடங்கப்படுகிறது!




ஆட்சியை அபகரிக்க எவ்வளவு அசிங்கமான பொய்களையும் அனாயாசமாக அள்ளிவீசும் தலைவர்கள் அன்றும் கூட அரசியலில் இருக்கத்தான் செய்தார்கள், ஆனால் அவர்களின் பொய்கள் எல்லாம் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு மெய்யியலின் (reality) அடிப்படையிலாவது இருக்கும். அதாவது சந்தேகங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஆளுமைகளாகத் தங்களை அறிவித்துக்கொண்ட அந்தக்காலத் தலைவர்கள் தங்கள் மீதான வசீகரம் மற்றும் கண்மூடித்தனமான நம்பிக்கையைக் கடுகளவும் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளத் தெரிந்து வைத்திருந்தார்கள், அதன் காரணமாக மக்கள் அவர்களின் பொய்களை மெய்யென்று "நம்பித்தான்" மோசம் போய்க்கொண்டிருந்தார்கள்! ஆனால் இப்போதோ, ஒருவன் தன் அபிமானத் தலைவர் கூறுவது எல்லாம் அப்பட்டமான பொய்கள் என்று அவன் அறிவாலேயே தெளிவாக உணர்ந்தாலும், அதைப் பொய்யாகவே உள்வாங்கி அந்தப் பொய்யைக் காப்பாற்றத் தானும் அதில் பங்குகொண்டு மேலும் அதில் பல பொய்களைச் சேர்த்து, வெறும் தன் அபிமானத்தைக் கவர்ந்த கூட்டத்திடம் அதிகாரம் இருப்பதற்காகத் தன் வருங்கால அபிவிருத்திகளை எல்லாம் கூட அசராமல் அடகுவைக்கத் தயாராக இருக்கும் இந்த மனநிலைதான் இன்று நாம் பொதுவெளியில் சர்வசாதாரணமாகப் பார்க்கமுடிகிற பெரும் அவலம்! மேலுக்கு விசித்திரமாய்த் தோன்றும் இந்த ஆபத்தான போக்குதான் பல்வேறு நாடுகளிலும் பரவி, உலகையே தற்போது பேரழிவை நோக்கி அழைத்துச் செல்கிறது என்பது ஆழமான உண்மை! காரணம் மேலே குறிப்பிட்ட, சமகாலத்தின் அந்தவொரு வெறித்தனமான அபிமானமானது மக்கள் கூட்டத்தைப் பிரிவினைகளால் பிளவுபடுத்தி அதை ஒன்றுக்கு எதிராக மற்றொன்றைக் கட்டமைக்க விஷம் எனத்தெரிந்தும் தூவப்பட்ட பொய்விதைகளால் விளைவிக்கப் பெற்றது என்பதுதான் நஞ்சேறிய நிஜம்!

சிலந்திகளின் உமிழ்நீரைப் போன்றவைதான் மனிதனின் பொய்கள் என்று மேலே சொன்ன வாசகம் கூட அறிவியல்ரீதியாக ஒரு பொய்தான்! பெரும்பாலோனோர் நினைப்பது போல சிலந்தி தன் உமிழ்நீரால் கூடு கட்டுவதில்லை... அதன் அடிவயிற்றுப்பகுதியிலிருக்கும் ஒரு பிரத்யேக சுரப்பி (spinnerets) யில் சுரக்கும் "சிலந்திப் பட்டு" என்றழைக்கப்படும் ஒரு விதமான நூலால்தான் தன் கூட்டைக் கட்டுகின்றது! 
இப்படிச் சாதாரணமாக நாம் உண்மையென்று நம்பும் விஷயங்களே கூட ஆய்ந்து பார்த்தால் பொய்யெனத் தெரியும் சமகாலத்தில், நம் வாழ்க்கையையே நிர்மூலமாக்கும் வல்லமைபெற்ற பெரும் பொய்களைத் தயக்கமின்றி நுகரவும் அவற்றை மேலும் அலங்கரித்துப் பகிரவும் ஒரு பெருங்கூட்டம் தயாராக இருக்க, ஐடி செல்களும் மற்றும் வாட்ஸப் பல்கலைக்கழகங்களும் "பெய்" என்றால் பெய்யும் பெருமழையாகப் பொய்மழை விடாது பொழிந்து சமூகத்தின் குண்டு குழிகளிலெல்லாம் தேங்கி ஊரை, நாட்டை ,ஏன் உலகையே நாசப்படுத்தி வருகிறது! இந்தப் பொய்களின் அடிப்படையில் தொடங்கி ஆபத்து வரை தோண்டிப்பார்த்து அதைப் பதியவேண்டும் என்பதே எண்ணம்... இதில் எந்தவொரு அரசியல் கட்சியையோ, தலைவரையோ அல்லது நாடுகளையோ பெயரைக் குறிப்பிடாமல் எழுதுவதே நேர்மையாக இருக்கும்....

"பொய்"யெனப் பெய்யும் மழை... தொடரும்....!

உண்மையுடன்,
பிரபு எம்  


Friday, September 19, 2025

ரோபோ சங்கர் - கனவுகளைக் கைப்பற்றிக் காற்றில் கரைந்த கலைஞன்!

 இன்னிக்குக் காலைல ஆறு மணி இருக்கும்....

கோழியும் கொக்கரக்கோ என்றுதான் கூவியது....

ஆனால் கேள்விப்பட்ட செய்தியோ அதிர்ச்சி நிறைந்ததாய் இருந்தது!

ரோபோ சங்கர் அவர்களின் இறப்பு செய்தியுடன் தான் விடிந்தது இந்தக் காலை!

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!


"கலக்கப்போவது யாரு" நிகழ்ச்சியின் முதன்முதல் சீசனில் மிகவும் கவர்ந்தவர்களுள் முக்கியமானவர் ரோபோ சங்கர்!

தமிழகத்தின் அனைத்து ஊர்களிலிருந்தும் பலவிதமான கலைஞர்கள் வந்து நகைச்சுவையில் கலக்கினாலும், சிரிக்க வைப்பதில் consistency மற்றும் vareity யைத் தொடர்ந்து ஒவ்வொரு சுற்றிலும் விடாமல் காட்டுவது சாதாரண விஷயம் கிடையாது. அந்த சவாலை அனாயசமாகக் கையாண்ட நான்கு பேர் அதன் இறுதிச்சுற்றுக்குத் தேர்வானார்கள் அவர்கள்: கோவை குணா, மதுரை முத்து, வடிவேலு டேவிட் மற்றும் ரோபோ சங்கர்! இவர்கள் நால்வருமே ஒவ்வோர் ஏரியாவில் ரொம்பவே ஸ்பெஷலானவர்கள்!

இறுதிச் சுற்றில் போட்டியிடப் போவது இவர்கள்தான் என்று தெரிந்ததுமே அந்த வார ஆனந்த விகடனில் இந்த நால்வருடைய பேட்டியுடன் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் ரோபோ சங்கரின் பேட்டி இன்றும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மதுரையில் ஒரு காமெடி மற்றும் நடனக் குழுவில் இடம்பெற்றிருப்பதாகச் சொன்னவர் அந்தக் குழுவில் அவருடைய தனித்துவமான திறமை என்பது உடல் முழுதும் சில்வர் பெயிண்ட் அடித்துக்கொண்டு உடலின் ஒவ்வொரு தசையையும் தனித்தனியாக டெக்னோ இசைக்கு ஏற்றவாறு அவர் அசைத்துக்காட்டி நடனமாடும் "ரோபோ டான்ஸ்"தான் என்றும் அதனை அவர் KPYயின் இறுதிச்சுற்றுக்கான  அஸ்திரமாக வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இறுதிப்போட்டியில் முதலில் ஒரு வார்ம்-அப் ரவுண்ட் வைத்திருந்தார்கள்... வெற்றிக்குத் தேவையான மதிப்பெண்கள் கணக்கில் சேராத அந்த ஆயத்தச் சுற்றில் மற்ற மூன்று போட்டியாளர்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை ஆனால் ரோபோ சங்கர், அதிலும் அலப்பறையாக மிமிக்ரி செய்தார்... முக்கியமாக 80களின் கமல்ஹாசன் பேசுவதைப் போல அவர் பேசியது அதில் அந்தக் காலத்துக் கமலுக்கே உரித்தான வினோதமான ஓர் ஆங்கில உச்சரிப்பு இருக்குமே, அதை அவ்வளவு நுணுக்கமாக அதே மாடுலேஷனில் ஆனால் கிண்டலாக அவர் பேச விழுந்து விழுந்து சிரித்தது இன்றும் நினைவுகளில் பசுமையாக இருக்கின்றது! அடுத்தச் சுற்றிலும் சங்கர் கலக்கத்தான் செய்தார்.... 80களின் சினிமா நடனங்களை அப்படியே ஆடிக்காட்டித் தன் முழுத் திறமையையும் காட்டுத்தனமானதொரு எனர்ஜியில் கட்டவிழ்த்துவிட்டிருந்தார்.... மீண்டும் 80களின் கமல்ஹாசனின் டிஸ்கோ நடன அசைவுகளை தத்ரூபமாக அதே நேரத்தில் காமெடியாகவும் ஆடிக்காட்டியதை யூடியூபிலோ ஹாட்ஸ்டாரிலோ காண வாய்ப்பிருந்தால் நிச்சியமாக இப்போதுகூட பார்த்து வியக்கலாம்.... கமல் தவிர நடனமாட அவர் தேர்ந்தெடுத்த நடிகர்களும் அதற்கேற்ற அவரது அசைவுகளிலும் மனிதர் தன்னுடைய முழு ஆற்றலையும் கொட்டியிருந்தார்.. முத்தாய்ப்பாகக் கடைசியில் அவர் தேர்ந்தெடுத்திருந்தது சில்க் ஸ்மிதாவை! ஆஜானுபாகுவான அந்த உடலில் சில்க் ஸ்மிதாவின் நடன அசைவுகளையும் காமப்பார்வையையும் செட்யூஸிங் உடல்மொழியையும் நகைச்சுவையாக அவர் அரங்கேற்ற அரங்கமே அதிர்ந்தது சிரிப்பில்! ஆனால் அடுத்த சுற்றில்தான் பாவம் அவருடைய தனி அடையாளமான ரோபோ டான்ஸை உடல் முழுவதும் சில்வர் பெயிண்ட் அடித்துக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு ஆடினார் ஆனால் நகைச்சுவைக்கான மேடையில் அவரது அந்த நடனும் முற்றிலும் பொருத்தமில்லாததாகப் போக எதை அவர் பிரதான அஸ்திரமாக அரங்கேற்றினாரோ அந்த நடனமே அவரைப் போட்டியிலிருந்து வெளியேற்றிவிட்டது! ஃபைனலில் அசாதாரணமாகக் கலக்கிய கோவை குணா வெற்றி பெற்றார்... நகைச்சுவைப் பேச்சாற்றலில் தன் முழுவீச்சைக் காட்டி அசரடித்த மதுரை முத்து இரண்டாமிடம் பிடித்தார்!

கோவை குணா 2023லேயே மரணமடைந்துவிட்டார்! மதுரை முத்துவும் ரோபோ சங்கரும் அதன்பிறகு அவரவர் திறமைக்கேற்ப அடுத்தடுத்து உச்சங்களைத் தொட்டுப் பேரறிந்த திறமையாளர்களாகக் கொண்டாடப்பட்டார்கள் என்பது கண்கூடு. நேற்றிரவோடு ரோபோ சங்கர் தன் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்டுவிட்டார்.

அவரது மரணச்செய்தி வந்தபின் எழுதப்படும் இந்தக் கட்டுரையில் அவரது புகழ்ப் பயணத்தின் தொடக்கப்புள்ளி சம்பவத்தை விவரித்து எழுதியதன் காரணம் புகழேணியில் அவர் அடுத்தடுத்து வைத்த அடிகள் அனைத்துமே ஆதித்யா சேனல் உள்ளிட்ட தமிழின் அனைத்து நகைச்சுவைத் தளங்களிலும்  அழுத்தமாக ஆவணம் செய்யப்பட்டிருக்கின்றது! மேலும் மதுரையில் பிறந்தவன் எனும் அடிப்படையில், ரோபோ சங்கர் அவர்களின் இளமைக்காலம் எப்படி இருந்திருக்கும், மேலும் தன்னுடைய துறையாகக் கலையைத் தேர்வு செய்த ஓர் இளைஞனின் முன்னிருக்கும் வாய்ப்புகளும் கனவுகளும் மற்றும் இவை இரண்டுக்கும் இடையேயான இடைவெளியும் எப்படியிருந்திருக்கும் என்று என்னால் தெளிவாக உணரமுடியும். எண்ணற்ற திறமைகளின் கனவுகளை ஈடேற்ற வாய்ப்புக் கதவுகள் திறக்காமலேயே போன ஏராளமான வரலாறுகள் மதுரையின் ஒவ்வொரு தெருவிலும் உண்டு! அப்படியிருக்க அன்றைய "கலக்கப் போவது யாரு?" ஒரு பறக்கும் ஜன்னலை போன்றதுதான்! அந்தச் சுழலும் சாளரம் தன் பக்கம் வரும் வேளையில் அதன் வேகத்துக்கு ஈடுகொடுத்து அதற்குள் குதித்து அதன் அடுத்தடுத்த அடுக்குகளுக்குள் நுழைய வேண்டும். தன்னுடைய திறமையையும் உழைப்பையும் சரியாகப் பிரயோகித்துத் தன்னை நிரூபித்து, திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று அதிலும் தமிழ் மக்கள் அனைவரின் மனதிலும் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துவிட்டு இப்போது பூவுலகில் தனக்குரிய இடத்தை விட்டகன்றிருக்கிறார் ரோபோ சங்கர்!

"கலக்கப் போவது யாரு?" இறுதிச் சுற்றில் அவர் எய்து அவரையே தாக்கி வெளியேற்றிய அவருடைய அஸ்திரமான அதே "ரோபோ டான்ஸ்", அதற்காக எண்ணற்ற முறை அவர் தன் தோலில் பூசிக்கொண்ட சில்வர் பெயிண்ட், அதனால் ஏற்பட்ட உடல் பாதிப்புகள்தான் இந்த நாற்பத்து ஆறாம் அகவையில் இந்த உலகை விட்டு அவர் வெளியேறுவதற்கும் ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்திருக்கிறது என்பது வேதனை! அதுபோக அவரே தன் வாழ்க்கை அனுபவமாக உடல் நலத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தைச் சமீபத்தில் ஒரு காணொளியில் பதிந்திருக்கிறார். அப்படிப் பேசுவதற்கு ஓர் ஆரோக்கியமான சமூகம் நன்றிகளைத்தான் சொல்ல வேண்டும் ஆனால் பிளாஸ்டிக் குப்பைகளுக்கும் அதுபோலவே மடிந்தாலும் மக்காத போலித்தனங்களுக்குள்ளும் சிக்குண்டு மூச்சுத்திணரும் நிகழ்கால நம் சமூகமோ அவர் மரணத்துக்குக் காரணம் என்று ஆளுக்கொரு பட்டியல் போட்டு சுய விளம்பரம் மற்றும் வியாபாரம் செய்துகொண்டிருக்கிறது! ஒரு மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையின் இடறல்களைத் தேடுவதை விடுத்து ஒரு கலைஞனாகத் தொடங்கிச் சில கல்வெட்டுகளில் தன் பெயரைத்தானே பொறித்துக்கொண்டு சீக்கிரமே போய்விட்ட ரோபோ சங்கரின் திறமைகளுக்கு என் இறுதி வணக்கங்கள்!

அன்னிக்குக் காலைல ஆறுமணியிருக்கும்... என்ற அவரின் புகழ்பெற்ற காமெடியைப் போலவே மரணம் எனும் இந்த இடர்ப்பாட்டைத் தொடர்ந்து மீண்டும் முதலிலிருந்து தொடங்க வாய்ப்பிருந்தால் திரும்பி வாருங்கள் மிஸ்டர். சங்கர்! எங்களை சிரிக்கவைத்த உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.

வருத்தத்துடன்,
பிரபு எம்.