Tuesday, November 29, 2022

காந்தாரா [U/A] (2022)

 Kantara is written and directed by Rishab Shetty.


"காந்தாரா" ஒரு சிறந்த "கன்னடத்" திரைப்படம்!

ஆனால்....கன்னடம் தாண்டிப் பிற மாநிலங்களிலும் படம் சக்கை போடு போட்டிருப்பது ஒரு "மேஜிக்" மட்டுமே!
படத்தின் மேக்கிங்கை மிகவும் ரசித்தேன்... படம் கவனம் ஈர்க்கத் துவங்கிய ஆரம்ப நாட்களில், ரிஷப் தெளிவாக சொல்லியிருந்தார் "காந்தாரா"வை pan-India படமாக எடுக்கவும் இல்லை அப்படி ரிலீஸ் செய்யும் திட்டமும் இல்லை என்று! படத்தைப் பார்த்தபோது அந்த வார்த்தைகளின் உண்மை மிகவும் எளிதாகப் புரிந்தது.
தன் மண்ணையும் மண் சார்ந்த படைப்புகளையும் மக்கள் நாடிப் போகும் மனநிலையின் உள்ளர்த்தமானது, விவரமின்றி இந்தப் படத்தை வலிய வந்துத் தூக்கிப் பிடிக்கும் வலதுசாரிகளுக்குத்தான் ஆபத்தானது! இந்த உண்மையை அவர்கள் அறிந்துகொள்ளுமளவு அறிவிருந்தால் வலதுசாரிகளாகவே ஆகியிருக்கமாட்டார்கள் என்பதனால் அதில் பெரிய வியப்பில்லை எனக்கு!
நாட்டார் தெய்வங்களைப் பெரும்பான்மை மக்கள் மறந்துபோனதின் அடிப்படைக் காரணம் என்ன? என்ற கேள்விக்கு வெளிப்படையான ஒற்றை பதில் விவாதப் பொருளாகியிருந்தால், அதே நேரத்தில் வெளிவந்த "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தின் மேல் வெற்றிமாறன் சுமத்திய குற்றச்சாட்டுடன் கூடிய சர்ச்சையுடன் கைகோர்த்திருக்கும்!
சர்ச்சைகளைத் தாண்டி....
எளிமையான கதை சொல்லலைச் சரியாகக் கையாண்டால் திரைக்கதை கடத்தும் உணர்வுகள் எவ்வித சிக்கலுமின்றி பார்வையாளனுடன் இயல்பான இணைப்பை ஏற்படுத்திவிடும் என்று மீண்டுமொருமுறை திரையில் நிரூபணமாகியிருக்கிறது....
திரைக்கதையை மிகச் சரியாகக் கையாண்டிருக்கிறார் ரிஷப்... தன்னுடைய நடிப்பின் முழுவீச்சையும் வெளிக்காட்ட வாய்ப்பு வழங்கும் உச்சக்காட்சியைத் தன் நடிப்பாலேயே தாங்கியும் பிடித்திருக்கிறார்! கதை நிகழும் முல்லை நில அழகை அதன் இயல்புடனேயே ஒளிப்பதிவு செய்திருப்பதும், காட்சிக்குக் காட்சிப் புதுமையோ பெரும் திருப்பங்களோ இல்லாத திரைக்கதையைப், பார்வையாளனின் மனதுக்கு அருகாமையிலேயே கடைசிவரை அழகாக நகர்த்தும் படத்தொகுப்பும் தான் முழுக்க முழுக்க கன்னடத் திரையுலகிற்கான படமாகவே எடுக்கப் பட்டிருந்தும் பிறமொழி பேசும் நிலங்களிலும் படம் நிலைத்து நின்று திரைமொழி பேசியதன் பிரதான காரணம்!
இத்தனை விரிவான திரையிடலை இந்தப் படம் சென்றடையும் என்கிற முன்புரிதல் படக்குழுவுக்கு இருந்திருந்தால் இத்தனை அப்பட்டமாக இசை நகல் எடுத்திருக்க மாட்டார்கள்..!
இயற்கை மற்றும் வனம் சார்ந்து திரைப்படம் முன்வைக்கும் இறுதிக் கருத்து மிகவும் மேலோட்டமானது! ஒரு "திரைப்படமாக" வணிகரீதியில் எதிர்பாராத பெரும்வெற்றி அடைந்திருப்பது ஆரோக்கியமான விஷயம்தான் என்றாலும் தவறான புரிதலுடன் "காந்தாரா"வையொட்டி நிறுவப்பட்ட அரசியல் முன்னெடுப்புகள் சமகாலத்தில் மக்கள் எந்தளவு ஆழமற்ற சிந்தனைகளால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான சான்றாகத் தான் தெரிகிறது......
"காந்தாரா" --> நினத்தது ஒன்று... நடப்பதோ வேறொன்று!

அன்புடன்,
பிரபு எம்