Friday, December 18, 2015

இளையராஜாவின் கோபமும் தீபிகா படுகோனின் பப்பிஷேம் பேட்டியும்!



”ஆனாலும் இளையராஜா இப்படிக் கோபப் பட்டிருக்கக் கூடாது…. அந்தக் கேள்வியைப் பக்குவமாகக் கையாண்டிருக்கணும்” என்று இளையராஜாவுக்கு ஆளுக்கு ஆள் ஃப்ரீ அட்வைஸ் கொடுத்துக்கொண்டிருக்க……. தீபிகா படுகோனின் சமீபத்திய பத்திரிக்கைப் பேட்டி ஒன்று என் கண்ணில் பட்டுத்தொலைத்தது!



”டைம்ஸ் ஆஃப் இந்தியா” என்று ஒரு பத்திரிக்கை இருக்கிறதல்லவா… (அதை ஏன்  நீ படிக்குற??ன்னு கேட்கக்கூடாது பெங்களூரு டீக்கடையில் கண்ணில் பட்ட விஷயம் இது!) பல “பெருமை”களுக்குச் சொந்தமான அந்தப் பத்திரிக்கையில் அழகும் ஒய்யாரமுமாய் அரைமுதுகு காட்டிச் சிரிக்கும் தீபிகாவின் ஒரு ஆளுயுரப் புகைப்படம் அருகே மிகப்பெரிய எழுத்துகளில் சில வார்த்தைகள்…… 

“I can be Naked in front of Ranveer He wont hurt me!”

இதற்கு என்ன அர்த்தம்?? என்று இப்போதே ஒருமுறை அனைவரும் அவரவர் புரிதலுக்கு ஏற்ப மனதில் இந்த வார்த்தைகளை translate செய்துகொள்ளுங்கள! செய்வீர்களா?? செய்வீர்களா?? ச்ச்சீ….. ஸாரி பாஸ் க்ராஸ் டாக்….!! ஸோ மனதுக்குள் translate செய்து வைத்துக்கொள்ளுங்கள் சரியா! எனக்குத் தனிப்பட்ட முறையில் தீபிகாவின் அழகைவிட அவரின் சமுதாய எதிர்கொள்ளலும் அனாயச ஆங்கிலமும் பிடிக்குமாதலால் அந்த டீக்கடையில் மலையாள சேட்டன் அவரது டிரேட்மார்க்கான ஓர் அடிப்பொளி சாயாவைப் தயார் செய்து கொண்டிருக்கும் இடைவெளியில், அதே இதழில் தீபிகாவின் அந்த முழுப்பேட்டியையும் படித்தேன்.... படித்தால் உள்ளே பேட்டியில் ஒரு நான்கைந்து கேள்விகளுக்குப் பிறகான ஒரு கேள்விக்கு தலைப்பையொட்டிய பதில் இருந்தது..... இங்கே எப்படி இருக்கிறது என்று பாருங்கள்...... (ஸ்க்ரீன் ஷாட்டில் க்ளிக் செய்து பார்க்கவும்)

“I’m very sensitive It’s easy to hurt me………..bla bla bla………..… I CAN BE SO NAKED IN FRONT OF RANVEER HE WON’T HURT ME!”



ஹ்ம்ம்ம்…. இப்போது மெதுவாக ஒரு குட்டி ரீவைண்ட் செய்து இதற்கு முன்னால் செய்தித் தலைப்பில் கொடுத்திருந்த வாக்கியத்தையும் அதனை நீங்கள் மனதுக்குள் translate செய்ததையும் இங்கு உள்செய்தியில் இருக்கும் இந்த வாக்கியத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! “SO” என்கிற இரண்டெழுத்து இடைச்சொல்லை மட்டும்  நீக்கிவிட்டு பத்துமடங்கு அதிகமான சைஸ் எழுத்தில் தலைப்பு கொடுத்து எப்படி கல்லா கட்ட அடிபோடுகிறார்கள் என்று புரிகிறதா?! 

ஹிஹி….இவ்ளோதான் பாஸ் விஷயம் இந்த மட்டமான, beep song-க்கு இணையான வக்கிரத்துடன் கூடிய வியாபாரத்தைத்தான் ரொம்பவே ஸ்டைலாக “Contemporary Journalism” என்று பீட்டர் விட்டுக்கொண்டிருக்கிறோம்….. இதைச் சொன்னால் 'இரண்டெழுத்தில் அர்த்தம் எப்படி மாறுகிறது பாருங்கள்!' என்று ஒருவருக்கொருவர் ஆங்கில வகுப்பு எடுக்கத் துவங்கிவிட்டார்கள் உடனிருந்த நண்பர்கள்…. டேய் டேய் உங்களையெல்லாம் ஆயிரம் பெரியார் ஓ ஸாரி இவனுங்க பீட்டர்ஸ்.... பெரியார் வேண்டாம் ஆயிரம் ஆபிரகாம் லிங்கன் வந்தாலும் திருத்த முடியாதுடா…..! என்று நினைத்துக்கொண்டே சேட்டனின் சாயாவை உறிஞ்சத் துவங்கினேன்…….!

இத்தோடு முடியவில்லை கச்சேரி….. நமது விகடனார் இருக்கிறாரல்லவா?? ஆனந்த விகடனார்…… அவரும் அந்த பப்பி ஷேம் பேட்டித் தலைப்பைப் படித்திருக்கிறார் போலும்…. என்ன கிறக்கமோ அவரும் முழுப்பேட்டியைப் படிக்கவில்லையா அல்லது படித்தும் புரியவில்லையா என்று எனக்குத் தெரியவில்லை இந்த வார விகடனில் என்ன வெளிவந்திருக்கிறது என்று அப்படியே காப்பி பேஸ்ட் செய்கிறேன் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்…..



அவர்முன்னால் நான் ஆடை இல்லாமல் இருந்தால்கூட என் மேல் உரிமை எடுத்துக்கொள்ளமாட்டாராம்!! டேய்…டேய்…. ஃபேஸ்புக் ட்விட்டர் மற்றும் சில ஆன்லைன் செய்திகளில் இருந்து செய்தி சேகரிக்கும் copy+paste journalism-னு ஒன்றைக் கண்டுபிடிச்சீங்க ரைட்டு இப்போ அதையும் உங்க வசதிக்கு ட்விஸ்ட் பண்ணி கமர்ஷியலா “அதுக்கும் மேல” போறீங்களேம்மா….. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா……!!

"NAKED" என்கிற ஒரு வார்த்தை கிடைத்தவுடனேயே.... அது என்ன ஏதென்று ஆராயாமல் வெறுமனே பச்சையாக நிர்வாணம் என்கிற ரீதியில் அர்த்தம் கொண்டு.....ஒரு பெண் அதுவும் நடிகை என்று ஓர் ஊடகனே இப்படித்  துடித்துக் களமிறங்கிவிட்டால்..... இயல்பிலேயே கீழ்த்தர ரசனையுடையவர்கள் ஏன் பீப் சாங்-களைப் பதிவேற்ற மாட்டார்களாம்??!

இப்படியெல்லாம் ஆயிரமாயிரம் தில்லாலங்கடி பேட்டிகளையும் ப்ரஸ்மீட்களையும் சாதாரணமாக செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்களே மேற்கோள் காட்ட முடியும்…. நமது மீடியாவின் தரம் எந்தளவு தரைமட்டமானது என்பதை சிரமேற்கொண்டு விளக்கத் தேவையில்லை அது கண்ணாடி தேவைப்படாத கைப்புண் தான்…. ஆனால் புண்கள் புரையோடிப் புற்றுவைத்துவிட்டால் எதிர்ப்படும் ஆபத்துகளையும் நாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதும் மறுப்பதற்கல்ல…..!



இப்போது இளையராஜா விஷயத்துக்கு வருவோம்……. ”அவன் நிருபர் அப்படித்தான் கேட்பான் இவரு ஏன் இப்படி டென்ஷன் ஆகுறாரு…. ஒரு பக்குவம் வேண்டாமா??” என்கிற ரீதியிலான அட்வைஸ் மழைகள் ஒருபுறம் இளையராஜாவை நோக்கிப் பொழிந்துகொண்டிருக்க…… இன்னொருப்புறம் அவரது ரசிகர்களும் தங்கள் தலைவனுக்காகத் தரம் தாழ்ந்தும் இறங்கியடிக்கத் தயாராக இருக்கும் இசைவிசிறிகள் அடிக்கும் கூத்துக்கள் அதைவிட மோசம்! இதுகுறித்து திரு. ஞானி அவர்களின் கீழ்க்கண்ட ஃபேஸ்புக் போஸ்ட் ஏற்புடையதாக இருந்தது!




எல்லாம் சரிதான்…… ஆனால் சென்னை மழை நிவாரணம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில்தான் இளையராஜாவை நிருபர்கள் சந்தித்திருக்கிறார்கள் அதில் இப்படி ஒரு சர்ச்சையான ஃபுட்டேஜ் கிடைத்தவுடனேயே அவர்கள் கவரேஜ் செய்யப்போன விஷயத்தை அப்படியே சென்னை வெள்ளத்தில் விட்டுவிட்டு செம்பரம்பாக்கம் ஏரியில் பீப் சாங் சர்ச்சையைக் கலந்து விட்டார்களே இந்த மீடியா தர்மத்தை யாருமே கண்டுகொள்ளவில்லையே!!!

 நம்மல்லாம் நல்லா வருவோம் பாஸ்……

அன்புடன்,
பிரபு எம்.




Friday, April 10, 2015

ஓர் இலக்கியவாதியின் பயணம்



இலக்கியம் என்றால் என்ன? என்று ஆறாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில் ஒரு கேள்வி இருந்தது! இலக்கியம் என்பது ஒரு மொழியின் கலாச்சாரத்தின் காலக்கண்ணாடியாகும் என்கிற ரீதியில் மனப்பாடம் செய்திருந்த பதிலை எழுதினால் இரண்டு மதிப்பெண்கள் வழங்குவார்கள்! கேள்விக்கு பதில் எழுதியபின்பு மனதில் இரண்டு கேள்விகள் முளைத்திருந்தன! ஒன்று ஏற்கெனவே அர்த்தம் புரியாத இலக்கியம் என்றால் என்ன? என்ற கேள்வி மேலும் புதிதாக “காலக்கண்ணாடி” என்றால் என்னவென்றும் புரிந்திருக்கவில்லை அப்போது!

இந்த இரண்டு வார்த்தைகள் எனக்கு அறிமுகம் ஆகுமுன்பே “ஜெயகாந்தன்” என்ற வார்த்தை எனக்கு அர்த்தம் புரியாமலேயே அறிமுகமாகியிருந்த ஒரு பெயராகும்...! எழுத்துக்களைப் பயின்ற மாத்திரத்தில் ஒரு குழந்தையின் கண்கள் காண்கின்ற எழுத்துக்களையெல்லாம் ஒவ்வொன்றாக வாசித்து வாக்கியங்களை உச்சரிக்கத் துடித்திடும் அல்லவா? அந்தவகையில் எங்கள் வீட்டு புத்தக அலமாரியில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் கிட்டத்தட்ட எல்லா புத்தகங்களிலுமே செங்குத்தாக எழுதப்பட்டிருந்த “ஜெயகாந்தன்” என்ற பெயரை எழுத்துக்கூட்டி வாசித்து வாசித்து யாரென்றே தெரியாவிட்டாலும் மழலை மாறுமுன்பே மனப்பாடமாகிப்போன பெயர் அது!
இந்த பாக்கியத்திற்கு என் அப்பாவுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்! ஜெயகாந்தனின் தீவிர வாசகர் என் அப்பா.....!

இலக்கியம் என்றால் என்ன? மீண்டும் இந்தக் கேள்வி மனதில் முளைத்தபோது “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்”-ஐயும் “யாருக்காக அழுதான்”-ஐயும் வாசித்திருந்தேன்..... அந்த ஹென்றியையும் ஜோசஃபையும் போன்ற மனிதர்களை நான் பைபிளில்கூட இன்றளவும் தரிசித்ததில்லை! அன்று முதல் இன்றுவரை இலக்கியம், காலக்கண்ணாடி, கம்பீரம், வீரம், ஆண்மை, ஆளுமை போன்ற வார்த்தைகளுக்கு எல்லாம் எனக்குத் தெரிந்த ஒரே அர்த்தம் “ஜெயகாந்தன்”தான்!

 நேற்றிரவு ”ஜெயகாந்தன் காலமானார்” என்ற ஃப்ளாஷ் நியூஸை சேனல் மாற்றும்போது பார்த்துபோது அதிர்ச்சியாகயிருந்தது.... எண்பது வயதெல்லாம் ஒரு வயதா என்று மனம் ஒரு கணம் பதைபதைத்தது. மறுகணமே அவரின் உடலுக்குத்தான் வயது எண்பதாக இருக்கமுடியும் ஆனால் அவருள் இயங்கிய அந்த மனதும் அதில் பொதிந்திருந்த அனுபவங்களும் வெறும் எண்பது வருட ஒற்றை ஜென்மத்தின் பயனாக இருந்துவிட சாத்தியமில்லை என்றே மனதில் தோன்றியது இந்த முன்ஜென்ம ஃபாண்டஸிகளிலெல்லாம் சிறிதும் நம்பிக்கையில்லாவிட்டாலும்!

”ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்” , “ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” , ஆன்மீக அனுபவங்கள் , பத்திரிக்கை அனுபவங்கள் என்று ஒவ்வொரு துறையிலும் தனது அனுபவங்களை ஓர் ”இலக்கியவாதி” என்னும் அழுத்தமான அடையாளத்துடனேதான் பதிந்திருக்கிறார்....! சினிமா, அரசியல், பத்திரிக்கை, ஆன்மீகம் போன்ற கவர்ச்சிக் கடல்களில் வாழும் நாளெல்லாம் அடையாளம் தேடுபவர்களை மட்டுமே பார்த்திருக்கும் கண்களுக்கெல்லாம் இந்தத் துறைகளிலும் இவர் தனது இலக்கியவாதி என்னும் அடையாளத்துடன் அழுத்தமாகத் தன்னை மட்டுமே பதித்துவிட்டு ஒட்டுறவின்றி வெளிவந்ததை ஆச்சர்யமாகக் காணக்கூடும்....

உடல்கள் உயிருடன் இருக்கும்போதே எழுத்தாளர்கள் சிலரின் “மரணத்”தை மிகச்சமீபத்தில் கண்ணால் கண்ட சாட்சிகளாகியிருக்கிறோம் நாம்....முதுகுகளைக் குறிவைக்கும் முகம் தெரியாத எதிரிகளின் கூடாரம் தானே தமிழ்ச்சமுதாயம் அன்றும் இன்றும்.....! இப்படிப்பட்ட இதே தமிழ்ச்சமூகத்தில் ஒரு சம்பவம் நடந்தேறியிருக்கின்றது சென்ற தலைமுறையில்..... ஜெயகாந்தனின் எழுத்தில் உருவான ஒரு திரைப்படம் (உன்னைப்போல் ஒருவன் என்று நினைக்கிறேன்) திரையிடப்பட்ட திரையரங்கத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக நம் தமிழ்நாட்டுக்கே உரித்தான முகம்தெரியா வீரர்கள் அறிவித்திருக்க, படம் வெளியாகியிருக்கிறது அவரது வாசகர்களும் அந்தப் படத்துக்கு சென்று பார்த்திருக்கிறார்கள்.... அப்போது தனது படைப்பைக் காண வரும் தனது வாசகர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதைத் தனது கடமையாக நினைத்து தியேட்டரில் படம் ஓடும் நேரத்தில் திரையரங்க வாசலில் கையில் ஒரு கட்டையுடன் காவல் நின்றிருக்கிறார் ஜெயகாந்தன்!  நம்மை நாம் some one different என்று காட்டிக்கொள்ள சேகுவாரா டி-ஷர்ட்டைத் தேடிச்சென்று அணிகிறோமே நம்முடனேயே வாழ்ந்த இந்த வீரத்தைப் பற்றி அறியாமலேயே வாழ்ந்திருக்கிறோமே என்று என்னை நானே நொந்துகொண்டேன் அவரது திரையுலக அனுபவத்திலிருந்து இந்தச் சம்பவத்தை அறிந்தபோது!

”சினிமாவுக்குப் போன சித்தாளு” என்னும் கதை பதிவுசெய்த விஷயம் தமிழ்நாட்டில்  நடந்ததை நாமனைவரும் அறிவோம்! கசக்கும் சில உண்மைகளை மூக்கைப் பிடித்துக்கொண்டுப் பருகுவதற்குப் பழகிப்போனவர்களான நம்மிடையே உள்ளதை உள்ளபடியே பதிவுசெய்தவிதத்தில்தான் அர்த்தத்துடன் உணர்ந்தேன் இலக்கியம் என்பது “காலக்கண்ணாடி” என்று ஆறாம் வகுப்புத் தமிழ்ப்பாடத்தில் மனப்பாடம் செய்திருந்ததை!

பள்ளித் தேர்வுகளில் கட்டுரைகளுக்கு முன்னுரை என்று ஒன்று எழுதவேண்டும்.... பிறகு நூல்களிலெல்லாம் முன்னுரை யென்று ஒன்றை அந்த நூலை எழுதியவருக்கு வேண்டியவரான யாரோவொருவர் எழுதியிருப்பார்....! ”ஜெயகாந்தனின் முன்னுரைகள்” என்றே ஒரு புத்தகத்தை வாசிக்க நேர்ந்தபோது தன்னுடைய ஒவ்வொரு கதைக்கும் தானே தீட்டிய முன்னுரைகளில் தன் வாசகர்களுடன் ஒரு தோழனைப்போல உரையாடித் தான் சமைத்த படைப்பை வாஞ்சையுடனும் தோழமையுடனும் தான் புரிந்தத் தன்னை உணர்ந்த வாசகர்களுக்குத் தேர்ந்த தயாரிப்புடன் அவர் பரிமாறும் விதம் ஆச்சர்யமான அற்புதமாக இருந்தது!

நேற்றிலிருந்து அவரது மரணம்தொட்டுப் பத்திரிக்கைகளில் வெளியான அனைத்துக் கட்டுரைகளையும் படித்துக்கொண்டிருக்கிறேன்.... ஒவ்வொரு கட்டுரையும் அவரது ஒவ்வொரு தனித்துவத்தைத் தாங்கியதாய் இருந்தது.... ஒரு வேற்றுக்கிரஹவாசியோ இவர் என்றுதான் ஒவ்வொருமுறையும் உணர்ந்திருக்கிறேன் அவரை.... பாரதியாரை வியந்ததுபோலவே! தமிழ் இலக்கியவாதிகள் என்று ஒரு பட்டியல் இருக்குமானால் அதிலிருக்கும் பெயர்களுடன் ஒருபோதும் ஜெயகாந்தன் என்னும் ஆளுமையை எழுதிப்பார்க்க மனம் ஒவ்வாது இலக்கியம், மொழி, நாடு போன்ற வரையறைகளுக்கெல்லாம் அப்பார்ப்பட்ட ஓர் இடத்தில் தானே தன்னைப் பொறித்துக்கொண்ட பெயர் அது!

தற்போது படித்த கட்டுரைகளில் பெரும்பாலும் இடம்பிடித்திருந்த ஒரு விஷயம்- அதாவது எழுதுவதைத் தானே அறிவித்து நிறுத்திக்கொண்டார்... அப்படி நிறுத்தியும் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகாலம் வாழ்ந்திருக்கிறார்... ஒருகட்டத்தில் அவர் அதிகம் பேசக்கூடவில்லை என்று கேள்வியுற்றிருக்கிறேன்.... எழுதுவதை நிறுத்திக்கொண்டபின்னும் அவருக்கான இடத்தில் அவர்மட்டுமே இருந்திருக்கிறார் இறக்கும்போதும்.... இறந்தபின்னும் அவர்மட்டுமே இருப்பார் அந்த அரியணையில்.....

”அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்ற சொற்றொடர் இவருக்குப் பொருந்தாது உடலுக்குள் உயிர் இருந்தபோதே சாந்தியடைந்துவிட்ட ஆன்மா இது!

ஜெயகாந்தனைப் படிப்பவர்கள் ஜெயகாந்தனை மட்டுமே படிப்பவர்கள் ஆகிறார்கள் என்று உணர்ந்திருக்கிறேன்..... ஜெயகாந்தனை மட்டுமே படிப்பவன் நான்... இன்னும் நான் வாழுமட்டும் படிக்க எவ்வளவோ எழுதியிருக்கிறார் திரும்பத் திரும்ப அதைப் படிக்கும் என் அப்பாவும் அத்தனையையும் வாங்கி எனக்கு சொத்தாக சேர்த்துவைத்திருக்கிறார்... குளிரும் ஐரோப்பிய  வானங்களில் சூரியனை மிகவும் பலவீனமாகப் பார்த்து வியந்ததைப் போலவே எப்போதும் பயந்து நடுங்கும் மரண தேவனை நேற்று மிகமிகப் பலவீனத் தோற்றத்தில் பார்த்தேன், ஆழ்ந்து அவிந்து அடங்கிய ஓர் உயிரைக் காத்திருந்து மரியாதையுடன் தன்னுடன் அழைத்துச்சென்ற பவ்வியத்தைப் பார்த்தபோது! அவதாரங்களுக்கு மரணம் ஒரு க்ளிஷே முடிவுதான்! முற்றற்ற பயணமிது...!

இந்தக் கட்டுரையை எழுதும் தகுதி எனக்கு சத்தியமாகக் கிடையாது இருந்தாலும் ஓர் உணர்வில் பதிகிறேன் அவ்வளவே......

பிரபு .எம்







Monday, February 23, 2015

உலகக்கோப்பை 2015 - இந்தியா vs தென்னாப்பிரிக்கா : எழுச்சியின் அறைகூவல்!

"என்னது இந்தியா இன்னைக்கும் ஜெயிச்சிருச்சா???!!"

ஒருவேளை இன்றைக்கு மேட்ச் பார்க்க மோக்கா இல்லாத இந்திய ரசிகர்கள் ரிசல்ட் கேட்டுப் பெரும்பாலும் இப்படித்தான் ரியாக்ட் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்!! ("மோக்கா" என்றால் ஹிந்தியில் வாய்ப்பு - Chance or Opportunity என்று பொருள்!)

மோக்கா மோக்கான்னு பாடினியே....கடைசில‌ இப்படி மொக்கை வாங்கிட்டுப் போயிட்டியே!


பாகிஸ்தானால் இந்த வருடமும் வெடிக்க முடியாத பட்டாசு பொட்டலத்தை சௌத் ஆஃப்ரிக்க ஜெர்சியில் நம் இந்திய ரசிகருக்குக் காலிங்பெல் அடித்து அன்பளிக்கும், ஒரு சீரியல் போல தொடரும், அந்த‌ "மோக்கா மோக்கா" விளம்பரம் உணர்த்துவதும் இதே விஷயத்தைத்தான், அதாவது தென்னாப்பிரிக்கா அணி கெப்ளர் வெஸ்ஸல்ஸ் காலத்திலிருந்து ஹான்ஸி குரோனியே, க்ரீம் ஸ்மித், இப்போது ஏபி டி வில்லியர்ஸ் வரையிலும் இந்தியாவுக்கு வெற்றிபெற‌ ஒரு சிம்ம சொப்பணமாகத்தான் திகழ்ந்து வந்திருக்கின்றது! பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியிருந்தாலும் தற்சமயம் அது ஒரு பலவீனமான அணி என்று பாகிஸ்தானியர்களே பழிபோடுமளவு பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது! இந்த நிலையில் "சௌத் ஆஃப்ரிக்காவை அடிங்கடா பார்க்கலாம்!" என்கிற உதார் மனப்பான்மையோடுதான் உலகம் உற்றுநோக்கியது இந்திய அணியை இன்று! ஆனால் நம்ம கேப்டன் கூல் டாஸோடு சேர்த்து மேட்சையும் அள்ளிக்கொண்டு வந்ததை கிள்ளிப் பார்த்துக்கொண்டுதான் உண்மையென்று உணர்கிறேன்! பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என்று ஒட்டுமொத்த அணியின் செயல்பாடும் இன்று கம்பீரமாய்க் கட்டவிழ்த்திருப்பது இந்தியாவின் எழுச்சியின் அறைகூவலை!

இத்தனை வலுவான அணியை ஆஸ்திரேலிய மண்ணில் அதுவும் மெல்போர்னில் இப்படி ஒரு க்ளீன் டாமினென்ஸுடன் (Clean dominance) வீழ்த்தியது நம்மவர்களின் அசாத்தியமான நம்பிக்கையைத்தான் பறைசாற்றுகிறது! சூப்பர்ப்பா!!!

The Match!


டாஸ் லயே நம்ம டீம் பாஸ்! :

உலகின் மிக பிரம்மண்டமான மொல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த பத்துப் போட்டிகளில் முதல் பேட்டிங் செய்த அணிகளின் சராசரி ஸ்கோர் 280+ என்ற தகவலைப் பார்த்தபோது சற்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது! இந்த ட்வெண்டி-20 யுகத்தில் ஆடுகளங்கள் எல்லாமே பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாகத்தான் வடிவமைக்கப்படுகின்றனவோ என்னவோ! ஏற்கெனவே சவாலான சூழலில் இந்தப் போட்டியில் டாஸ் ஒரு மிக முக்கியமான அம்சம்.... தோனி எப்போதும் சொல்வதுபோல் "We can't take control over the toss" என்பது நூறு சதவீதம் உண்மைதானென்றாலும் நேற்றைய சூழலில் நம்ம தல தோனிக்கு அடித்த டாஸிலேயே இன்றைக்கு பாஸ் பண்ணிடுவோம்னு தோணியது நிஜம்!

பார்ட்னர்"ஷிப்" பின் மீகாமன்!


"மீகாமன்" ஷிகார் தவான்! :

தன்னிகரற்ற பவுலிங்..... உலகத்தர பேட்டிங் இரண்டும் வாய்த்ததோடு மட்டுமில்லாமல் அதி அபாயகரமான ஃபீல்டிங்கும் வாய்க்கப்பெற்ற அணி தென்னாப்பிரிக்கா! கவர் மற்றும் பாய்ண்ட் உள்ளிட்ட‌ திசைகளில் படுசாகசமாக பந்தினைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் திடுக்கிட வைக்கும் அவர்களது ஸ்டெம்பை நேராகத் தாக்கும் "த்ரோ"க்களும் உலகப் பிரசித்தம்! தென்னாப்பிரிக்காவின் இந்த குறிப்பிடும்படியான ஃபீல்டிங்கையும் "அதிசிய ஸ்விங்கர்" டேல் ஸ்டெய்னை எதிர்கொள்வது பற்றியும் மிகத் துல்லியமான ஓர் எச்சரிக்கையை இந்திய அணிக்கு வழங்கியிருந்தார் சச்சின் டெண்டுல்கர் இந்தப் போட்டிக்கு இந்தியா தயாராகும் சூழலில்! சச்சினின் அந்த எச்சரிக்கையையும் மீறி ரோஹித் ஷர்மா தனது விக்கெட்டை ஒரு க்விக் சிங்கிளுக்காக ஓடி டைரக்ட் ஹிட்டாகி வெளியேறியபோது வேதனையாகத்தான் இருந்தது! ஸ்டெய்னின் பந்துவீச்சில் முதல் ஓவரை ரோஹித் ஷர்மா மெய்டனாக விடுவது இன்றும் ஒரு வாடிக்கையாகவே தொடர்ந்தது! ரோஹித் வெளியேறிய போது இந்திய மனதின் அத்தியாவசிய தேவையாக இருந்தது ஒரு பார்ட்னர்ஷிப்! அதனை அப்பழுக்கின்றிக் கொடுத்தது ஷிகார்-கோலி இணை!

முதல் விக்கெட்டைப் பறிகொடுத்து தத்தளித்த கப்பலுக்கு மீகாமனாக செயலாற்றினார் ஷிகார் தவான்..... சென்ற போட்டியிலேயே குறிப்பிட்டதைப்போல மிகக் கச்சிதமான "டச்"சில் இருக்கிறார் ஷிகார். ஆஃப் சைடில் ஃபிலாண்டரின் இரண்டாவது ஓவரில் பந்தை பவுண்டரிக்கு கனெக்ட் செய்த அந்த ஸ்கொயர்- கட் ஷாட்டிலேயே தெளிவாகத் தெரிந்தது தவானின் ஃபார்ம்..... நேற்று தவான் வெளிப்படுத்திய ஆட்டத்தில் ஷாட் செலக்ஷனில் தொடங்கி ஸ்ட்ரைக் ரொடேஷன் வரை பேட்டிங் டிபார்ட்மென்டில் எந்தக் குறையையும் காணமுடியாத அளவு நேர்த்தி! வழக்கத்துக்கு மாறாக நேற்று தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சைவிட ஸ்பின் தான் அதிகளவு சுழன்றது.... நம்மவர்கள் ஸ்பின்னில் ஆடுவதில் ஜாம்பவான்கள்தான் என்றாலும் துணைக்கண்ட ஆடுகளங்களில் சுழல்வீச்சை எதிர்கொள்வதை விட சற்றே வித்தியாசமான சவால் விடுப்பது ஆஸ்திரேலிய ஆடுகளங்கள்! உதாரணமாக நம்ம பிட்சுகளில் பேட்ஸ்மேன்கள் விரும்பி ஸ்லைஸ் செய்யும் "ஆங்குலர்" ஷாட்டுகள் ஆஸ்திரேலியாவில் ஸ்லிப் திசையில் விக்கெட்டைப் பறித்துவிடும்! மட்டையை நேர்கோணத்தில் தள்ளியும் இழுத்தும் ஆடுவதுதான் இவ்வகை ஆடுகளங்களில் நிலைத்து ஆட வழிமுறை அந்த வகையில் "ஃபுட் வொர்க்" மிகத் துல்லியமாக இருப்பதன் அவசியத்தை மிக அழகாக செய்து காட்டினார் ஷிகார் தவான்! அற்புதமான பேட்டிங்கில் 137 ரன்கள் எடுத்தார் நேற்றைய ஆட்ட நாயகன்!

மூழ்காத ஷிப்பே பார்ட்னர்ஷிப்தான்!


இந்தியாவின் பார்டர்னர்ஷிப்புகள்:

டெஸ்ட், ஒருநாள், ட்வெண்டி-20 என எந்தவகைக் கிரிக்கெட் போட்டியென்றாலும் பேட்டிங்கில் அத்தியாவசியமானது "பார்ட்னர்ஷிப்" அமைப்பதுதான்..... டெஸ்ட் போட்டியென்றால் மூன்று முதல் ஐந்து பார்ட்னர்ஷிப்கள் சிறப்பாக அமைவதும், ஒரு நாள் போட்டிகளில் இரண்டு அல்லது மூன்று , டி-20யில் குறைந்தபட்சம் ஒன்று என்று எண்கள் மாறுமே தவிர ஜோடிபோட்டு ஸ்கோர்செய்வதன் அவசியம் மாறப்போவதில்லை! நேற்றைய போட்டியில் இந்திய அணி அமைத்த இரண்டு சத‌ பார்ட்னர்ஷிப்களை ஒரு பாடமாகவே ஆவணப்படுத்திவைக்கலாம் அத்தனை அற்புதமான கூட்டு முயற்சி அது!

கோலி - தவான் இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 127 ரன்களை சேர்த்தது 24.2 ஓவர்கள் களத்தில் நின்று! ஓவருக்கு வெறும் 3 ரன்கள் என்று முதல் பவர்ப்ளே முடிவில் தடுமாறிய அணியின் ரன்விகிதத்தை அசராமல் 5.18க்குக் கொண்டுசென்ற நேரம் பார்த்து கோலி எதிர்பாராதவிதமாகத் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.... இம்ரான் தாஹிரின் பந்தைத் தொடர்ந்து ஆன்-ட்ரைவ் செய்ய ஆர்வமாய் இருந்த கோலியை சிம்பிளாக ஷார்ட்-மிட்வெக்கெட்டில் ஒரு ஃபீல்டரை நிறுத்தித் தூக்கியது தென்னாப்பிரிக்காவின் சாதுர்யம்! அற்புதமான பார்ட்னர்ஷிப்  அந்தத் தருணத்தில்(27வது ஓவர்) உடைந்துபோனபோது அடுத்து 35 ஓவர்கள் வரை அணியை வழிநடத்த இன்னொரு பார்ட்னர்ஷிப் அமைந்தாகவேண்டிய நெருக்கடி ஆட்கொண்டது (35 ஓவர்களுக்குமேல் அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்த ரெய்னா-தோனியிடம் ஒப்படைத்துவிடலாம் என்னும் எளிமையான ஸ்ட்ராடெஜியின் அடிப்படையில்!)
 இதனை அருமையாக சுமந்தது அஜின்க்யா ரஹானே!

தவான் - ரஹானே இணை மூன்றாவது விக்கெட்டுக்கு 125 ரன்களை வெறும் 16 ஓவர்களில் சேர்த்தது அசாத்தியமான 7.6 ரன்விகதத்தில்!

ரகளையாகக் கலக்கிய ரஹானே!


ரஹானேயின் பேட்டிங் பவர்ப்ளே:

விக்கெட்டில் நிலைத்து ரன்வேகத்தை மெல்ல மெல்ல உயர்த்த ஆரம்பித்த நிலையிலேயே கோலியின் விக்கெட்டை இந்தியா இழந்தபோதே தெரிந்துவிட்டது பேட்டிங் பவர்ப்ளே விதிகளுக்குக் கட்டுப்பட்டு 35 - 40 ஓவர்களில்தான் எடுக்கப்படும் என்று! வந்த வேகத்திலிருந்தே மிக அழகாக ரன்களை சேர்க்கத் துவங்கிய ரஹானே, பவர்ப்ளே நெருங்கும் முன்பாகவே சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசத் துவங்கிவிட்டார்.... நேர் திசையில் லாங்-ஆன், லாங்-ஆஃப் இரண்டிலுமே அனாயசமாகப் பந்துகளை எல்லைக்கோட்டுக்கு எளிமையாய் ரஹானேவால்   வழியனுப்பிவைக்க முடிந்தது! மிகக் குறிப்பாக பேட்டிங் பவர்ப்ளேவில் தவான்-ரஹானே இணை விக்கெட் இழக்காமல் சேர்த்த 44 ரன்கள் மிக முக்கியமானவை....! எதிர்பார்ப்பையும் கடந்து 43-வது ஓவர் வரை நீடித்தது இந்த இணை....! இன்னும் ஏழு ஓவர்களே மீதமிருக்கும் சூழலில் ஆரோக்யமான ரன் விகிதத்தில் இன்னும் ஏழு விக்கெட்டுகள் கைவசம் இருப்பதுதான் ஒருநாள் போட்டிகளில் மிக வலுவான நிலை.... அதன்பிறகு இழக்க ஒன்றுமில்லை முடிந்தவரை ரன்களை அதிகப்படுத்துவதே ஒரே நோக்கமாக மைதானத்தின் ஒவ்வொரு முடுக்கிலும் அடித்து ஆட முயற்சி செய்ய...... தவான், ரெய்னா,ரஹானே, ஜடேஜா என வரிசையாக நடையைக் கட்டத் துவங்கினாலும் 315 ரன்கள் வரை சேர்க்க வாய்ப்பு மிகத் தெளிவாக இருந்தது இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக தோனியின் விக்கெட்டை ஒரு ஸ்லோ பவுன்சர் காவு வாங்கிவிட அஷ்வினின் முயற்சியால் வலுவான 307 / 7 என்கிற வலுவான ஸ்கோருடன் பேட்டிங்கை முடித்தது இந்தியா!

நாங்களும் ரன்-அவுட் செய்வோம்ல!


அழுத்தத்துக்கு அடுத்தடுத்து வீழ்ந்த தென்னாப்பிரிக்கா:

மின்னொளியில் பந்து ஸ்விங் ஆனது மட்டுமின்றி நல்ல மூவ்மெண்டும் கொடுக்கும் ஆஸ்திரேலிய சூழல்களில் என்பது பொதுவான கணிப்பு..... அது நேற்றும் பொய்யாகவில்லை....! இருந்தாலும் பலவீனமான இந்திய பவுலிங் அதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே! ஹஷிம் ஆம்லா ஒரு பெருஞ்சுவர் என்றால் இளம் வீரரான க்விண்டென் டி காக் ஓர் அதிரடி சரவெடி... அதுவும் நேற்றைய போட்டிக்கு முந்தைய ரெகார்டின் படி இந்தியாவுக்கு எதிராக  க்விண்டன் டி காக்கின் சராசரி மட்டுமே 103.3 என்று இருந்தது! ஆடுகளத்தின் நிலைக்கு ஏற்ப முகம்மது ஷமி வீசிய ஸ்விங் பவுலிங் மற்றும் வேக மாற்றங்கள் 22 வயதான டி காக்கின் அனுபவமின்மையைத் தெளிவாகவே சோதித்தது! அவசரகதியில் அடித்தாடத்தான் விழைந்தாரே தவிர நீடிக்கும் துவகத்தைத் தர அவர் எத்தணிக்கவில்லை...... சொற்பமாக மிட்-ஆஃபில் கேட்ச் கொடுத்து விக்கெட்டைத் துறந்தார்.....! அடுத்துவந்த டுப்ளெஸி பக்குவமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அருமைதான்.... ஆனாலும் ஏனோ தெரியவில்லை ஆம்லாவும் அவரும் அதிகம் பேசிக்கொள்ளக்கூட இல்லை! சரியான திட்டமிடல் இல்லாததுபோன்ற தோற்றத்தைத்தான் கொடுத்தது மிக முக்கியமானதாக இருந்திருக்க வேண்டிய அந்த அனுபவ இணை...... சுதாரிப்பின்றி ஆம்லா ஆடிய தவறான ஷாட் மிக மிகக் காஸ்ட்லியான அவரது விக்கெட்டை இந்தியாவுக்குத் தாரை வார்த்தது! கேப்டன் டி வில்லியர்ஸ் என்னைப் பொறுத்தவரை தற்போதைய சூழலில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பேன்! ஆனாலும் அழுத்தமான சேஸிங்கில் அவர் அத்தனை சோபிப்பதில்லை என்னும் வழக்கமான புகாரை இன்றும் தொடர்ந்து வாசித்தார்.... ஒரு முனையில் டுப்ளேஸி தன்னால் முடிந்தவரை நிலைத்து ஆடினாலும்..... டுமினி, மில்லர் என அணியின் கடைசி நம்பிக்கைகளும் சலனமேயின்றிக் கதையை முடித்துக்கொள்ள ஒரு ஹேண்ஸம் ஹேண்ட்ஷேக்குடன் ஆட்டத்தை முடித்தது இந்திய அணி மீதமுள்ள விக்கெட்டுகளைச் சம்பிரதாயமாய் சரித்துவிட்டு!

மோஹித் ஷர்மா மற்றும் அஷ்வினின் பந்துவீச்சு பங்களிப்பு நன்றாகக் கைகொடுத்தது தனிச்சிறப்பு!

ஹைலைட்டுகள்:

* நேற்றைய போட்டியில் இந்தியாவிடம் மிகவும் ரசித்தது மிக வேகமான களத்தடுப்பாட்டம்.... சில த்ரோக்களும் கடினமான கேட்ச் வாய்ப்புகளையும் தவறவிடுவதில்கூட பிழையில்லை களத்தில் இத்தனை ஆக்ரோஷமான தாக்குதல் தடுப்பாட்டத்தில் மொத்த அணியும் திமிரும்போது! நேற்று இந்தியாவின் ஃபீல்டிங் முனைப்பு அட்டகாசம்!

* என்னதான் ரஹானே இன்று ஓர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிக வலுவாக அணியை நிலை நிறுத்தியிருந்தாலும் கடைசி ஓவர்களில் இன்றும் சீட்டுக்கட்டாக சரிந்தது இந்திய அணி! தோணி தனது ஹெலிகாப்டரைப் பழுதுபார்த்தே ஆகவேண்டும் மிக விரைவில்!

*  ஏபி டி வில்லியர்ஸின் கேப்டன்ஸியில் நேற்று நான் ரசித்தது உற்று நோக்கியது இரண்டு விஷயங்களை...

ஒன்று...... அவர் ஃபீல்டிங் பொஸிஷன்களைத் தேர்த்து வழங்குவதன் சைக்காலஜி! மிடில் ஓவர்களில் ஷார்ட்-தேர்ட் மேனாக (ஃப்ளை ஸ்லிப்) மார்னே மார்கலை நிறுத்தினார்.... ஸ்லிப்பைத் தாண்டி தூக்கியாடும் வாய்ப்பினை அடியோடு தவிர்க்க ரஹானேவைத் தீவிரமாக உந்தியது மார்க்கெல்லின் உயரம்! அதே போல பொதுவாகவே ஒரு நாள் போட்டிகளில் மிகவும் பயனளிக்காத ஷார்ட் கவர் , ஷார்ட் எக்ஸ்ட்ரா கவர் பொஸிஷன்களில் அவர் தொடர்ந்து ஃபீல்டர்களை நிறுத்தியவிதத்தில் அருகில் இருக்கும் ஃபீல்டர்களால் ஏதோ ஒருவகையில் டிஸ்டர்ப் ஆகத்தான் செய்தார்கள் பேட்ஸ்மேன்கள்......

இன்னொரு விஷயம்.... தனது வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்விங்கில் தேர்ந்தவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு தென்னாப்பிரிக்கர்கள் பந்து சிக்கும்போது எல்லாம் விடாத கவனுத்துடன் பந்தின் ஒருபகுதியின் பளபளப்பைப் பாதுகாத்துக்கொண்டே இருந்தது! இப்போதெல்லாம் கேப்டன்கள் அதிகம் மறக்கும் யுக்தி இது..... டெத் ஓவர்களில் டேல் ஸ்டெயினால் ரிவர்ஸ் ஸிவிங் கச்சதமாக டெலிவர் செய்ய முடிந்தது இந்த வித்தையினால்தான்! மற்றபடி திட்டமிடுதல்.... சேஸீங் அழுத்தத்தைக் கையாளுதல் என எதிலும் எவ்விதப் புதுமையோ அல்லது உத்வேகமோ இல்லாத ஃப்ளாட் (Flat)  செயல்பாடுதான் ஆக்கிரமித்திருந்தது தென்னாப்பிரிக்காவை இம்முறை!

* இந்தியாவைப் பொறுத்தவரை இது அற்புதமான எழுச்சி..... இனிமேல் வரும் ஆட்டங்களில் பெரும்பாலும் அஸோஸீயேட் டீம்களுடன் தான் மோதவிருக்கிறோம்..... இந்த ஆட்டங்களில் நமது பெஞ்சில் இருக்கும் வீரர்களை ஆடப் பணித்து நமது பெஞ்ச் ஸ்ட்ரெந்தையும் ஊர்ஜிதம் செய்து கொள்ள சிறந்த வாய்ப்பு இருந்தாலும் தொடர் வெற்றிகளின் தேவையைக் குறைத்து எண்ணும் வழியில்லை! UAE அயர்லாந்து வெஸ்ட் இண்டீஸ் ஜிம்பாப்வே எனப் போகும் பயணத்தைப் பார்த்து ரசிப்போம்!

இந்தியாவுக்கு சூடு பற்றிக்கொள்ளப் போவதென்னவோ இனிமேல் க்வார்ட்டர் ஃபைனலில்தான்......!

அடுத்த போட்டியில் சந்திப்போம்!

அன்புடன்,

பிரபு எம்.

Wednesday, February 18, 2015

உலகக்கோப்பை 2015 - இந்தியா v பாகிஸ்தான் : அழுத்தங்களை எதிர்கொள்ளல்!

இந்தப் பதிவை ஆட்டம் நடந்த மறுநாளே பதிந்திருக்க வேண்டியது சிலபல காரணங்களால் முடியாமல் போய்விட்டது.... தாமதத்திற்கு மன்னிச்சூ!




முதல்சீனிலேயே க்ளைமேக்ஸ் ரேஞ்சுக்குப் பரபர காட்சி வைக்கப்படும் ஜேம்ஸ்பாண்ட் படம் போல அமைந்துவிட்டது இந்த உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவுக்கு! முதல் போட்டியே பாகிஸ்தானுடன் என்ற நிலையில் வீரர்களைவிட ரசிகர்கள் அதிகமான பதற்றத்துடன் இருந்துவந்தனர்..... முடிவு நல்லவிதமாக வந்தவகையில்தான் எத்தனை நிம்மதி... நேற்றைய போட்டியின் ரிசல்ட் ஒரு "வெற்றி"யின் மகத்துவத்தை உணர்த்துவதாக அமைந்தது...! முழுமையான திருப்தி கொடுத்த ஆட்டத்தில் இந்திய அணியின் கூட்டு செயல்பாடு மிகவும் செழுமையாக இருந்தவிதத்தில் தேசமெங்கும் நம்பிக்கை விதைகள் துளிர்க்க ஆரம்பித்துள்ளதும் நிஜம்....!

நேற்றைய‌ ஆட்டத்தின் முன்பான இந்திய மனநிலையில் இத்தனை நம்பிக்கை இருந்திருக்கவில்லை என்பதே உண்மை! காரணம் மிகவும் அதிகப்படியான அழுத்தங்கள் படிந்திருந்தன கேப்டன் தோனியின் மீது....... யுவ்ராஜ் சிங் உட்பட சீனியர் வீரர்கள் யாவரும் முற்றிலுமாக தேசிய அணியைவிட்டு ஒதுக்கப்பட்டது மட்டுமன்றி அவ்வாறு நீக்கப்பட்ட அனுபவ வீரர்களுக்கு மாற்றுத் தேர்வுகளான‌ அம்பத்தி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி, அக்ஸர் படேல் போன்ற இளம்வீரர்களுக்கும் உலகக்கோப்பை விளையாடுமளவு அனுபவம் சுத்தமாக வாய்த்திருக்க‌வில்லை அதிலும் ஆஸ்திரேலிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஆடும் பக்குவம் பெற்றிருக்க இந்திய இளம் வீரர்களுக்கு அத்தனை எளிதான சாத்தியமுமல்ல! இதுவரையிலான உலகக்கோப்பை இந்திய அணிகள் களத்தில் முன்பின் இருந்திருந்தாலும் காகிதத்தில் மிகவும் வலுவான அணிகளாகவே இருந்துள்ளன.... இந்த உலகக்கோப்பை இந்திய அணிதான் இதற்கும் விதிவிலக்காக அமைந்துவிட்டது! பேப்பரில் பெயர்களைப் பார்த்தபோது எந்தவொரு இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கும் திருப்தியோ நம்பிக்கையோ ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லாததொரு அணித்தேர்வு இம்முறை! இவை அனைத்திற்கும் பொறுப்பாளராக எண்ணற்ற குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்தது எப்போதும் போல தேர்வுக்குழு அல்ல மாறாக கேப்டன் தோனி! ஆக.... தொடர் தோல்விகள், புதுமைகள் இல்லாத சோர்வான கேப்டன்சி, சீனியர் வீரர்களின் புறக்கணிப்பு என ஏகப்பட்ட விமர்சனங்களுடன் மிக அதிகமான அழுத்தத்துடனும் உலகக்கோப்பையில் களமிறங்கினார் எம்.எஸ் தோனி! இருந்தாலும் ஃபர்ஸ்ட் லுக்கில் மிக யதார்த்தமான உடல்மொழியை தோனி வெளிப்படுத்திய விதத்திலேயே அவரது தனிப்பட்ட ரசிகர்களுக்கு நேற்று நம்பிக்கை பிறந்திருக்கும்!

பாகிஸ்தானை வீழ்த்தியாக வேண்டும் என்ற உணர்ச்சிப்பூர்வமான இலக்கு முதல்போட்டியிலேயே do or die போன்றதொரு நாக்-அவுட் சூழலை உருவாக்கிவிட்டது அதைவிட அதிகப்படியான அழுத்தம் பாகிஸ்தான் மீது திணிக்கப்பட்டிருந்ததும் நிதர்சனம்! பற்றாக்குறைக்கு அந்த "மோக்கா மோக்கா" டிவி விளம்பரம் வேறு! இரு அணிகளின் மீதான அளப்பெரிய அழுத்தம் திணிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் எந்த அணி அதனை சிறப்பாக எதிர்கொள்கிறதோ அதில்தான் இருந்தது வெற்றியின் சூட்சமம்!

கேப்டன் கூல்:




தோனியும் சரி மிஸ்பாவும் சரி இருவருமே நிதானத்தில் தேர்ந்தவர்கள்...... ஆனால் தோனியின் ஆளுமையில் அவர் தனது கூல் ஆட்டிட்யூடை அணிவீரர்களுக்கும் கடத்திவிடுவார் அங்குதான் சொதப்பிவிட்டார் மிஸ்பா.... தான் மட்டும் கூலாக களத்தில் நின்றுவிட்டால் வெற்றிக்குப் போதாது என்பதைத் தான் அவர் உணர்ந்து செயலாற்றவேண்டும் அடுத்த போட்டிகளில்! டாஸில் வென்று சென்டிமென்டலாக பேட்டிங்கைத் தேர்வு செய்தபோது க்ளீன் ஷேவில் அத்தனை புத்துணர்வு தெரித்தது தோனியிடம்.... முந்தைய தொடரின் தோல்விகளையெல்லாம் அவர் முற்றும் மறந்திருந்த துள்ளல் உடல்மொழி தந்த நம்பிக்கையே அலாதியாக இருந்தது! இந்தப் போட்டியில் நான் தோனீயிடம் ரசித்த விஷயங்கள்......

1) வெற்றிக்கென அமைத்த வியூகங்களை மிகவும் எளிமையானதாக அமைத்துக்கொண்ட விவேகம்.

2) களத் தடுப்பில் மிக வெளிப்படையான அணுகுமுறையால் அத்தனை பெரிய மைதானத்தில் மொத்த அணியையும் தெளிவான புரிதலுடன் இயக்கிய விதம்.

3) சுறுசுறுப்பான ஃபீல்டிங் வியூகங்கள்.... வேகவேகமாக தோனியால் நேற்று ஃபீல்டிங் அமைப்பினை மாற்ற முடிந்தது மிகச் சிறப்பான ஆளுமை.... பாக். பேட்ஸ்மேன்கள் செட்டிலாவதற்குக் கடும் சவாலாக இருந்தது தோனியின் இந்த அணுகுமுறை

ஒரேயொரு நெகடிவ் அம்சம் என்னவென்றால்...... துவக்க ஓவர்களில் தடுமாறிய வேகப்பந்துவீச்சாளர் முகம்மது ஷமியை விக்கெட் கீப்பிங் பொஸிஷனில் இருந்து தோனியால் பேக்-அப் செய்ய முடியவில்லை.... பொதுவாக இதுபோன்ற வேளைகளில் ஜாகிர்கான் தலைமைப் பண்புடன் செயலாற்றுவார் பவுலர் தடுமாறும்போது தானே முன்வந்து சில டிப்ஸ் வழங்கி லைனை முறைப்படுத்துவார் ஆனால் பவுலிங் டிபார்ட்மென்டில் "ஸ்பியர்ஹெட்" இல்லாத சூழ்நிலையில் கேப்டன் தோனிதான் இதனை வரைமுறைப் படுத்தியாக வேண்டும் ஒருவேளை பாகிஸ்தானின் துவக்கவீரர்கள் சொதப்பாமல் எடுத்த எடுப்பிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தால் நிலைமை மோசமாகிப்போயிருக்கும்!

இன்றியமையாத நிலையில் ஷிகார் தவான் கண்டிருக்கும் கம்-பேக்:




ஷிகார் தவானின் ஆட்டம் நேற்று வயிற்றில் பீரை வார்த்தது! ஸ்கோர் செய்வதைவிட அடுகளத்தில் நிலைத்து ஆடுவதே மிகவும் முக்கியம் என்று எக்ஸ்பர்ட்கள் அறிவுறுத்துவார்கள் அவுட் ஆஃப் ஃபார்ம் பேட்ஸ்மேன்களை.... தொடர்ந்து சொதப்பிவந்த தவான் நேற்று சரியான டச்-சில் இருந்தார்..... ஸ்கொயர் கட் ஷார்ட்களை அவர் கனெக்ட் செய்த விதம் நம்பிக்கையை வாரி வழங்குவதாய் அமைந்திருந்தது..... வெற்றிகரமான 2003 மற்றும் 2011 உலகக்கோப்பைத் தொடர்களில் சச்சின்-சேவாக் இணைந்து கொடுத்த துவக்க நிலையை இப்பொழுது ஏற்றிருப்பது ரோஹித் ஷர்மா - ஷிகார் தவான் இணை என்று நினைத்துப்பார்க்கையில் இவர்களின் பொறுப்பு புரியும் இவ்வகையில் தவான் தனது இயல்பான ஆட்டத்தை முதல் பவர்ப்ளேயில் சிறப்பாக வெளிப்படுத்துவது அத்தியாவசியம்! முதல்போட்டியில் தவான் வெளிப்படுத்திய ஃபார்ம் தொடர்கையில் பெரிய வெற்றிகளுக்கு அடித்தளம் அமைத்துத்தர அவரால் முடியும்.... நம்பிக்கையுடம் காத்திருப்போம் குடுமி வாலாவின் சாகசங்களுக்காக!

கோலி மேஜிக்:



கோலியின் பேட்டிங் திறமை உலகம் அறிந்தது..... சச்சின் டெண்டுல்கரின் இடத்தை விராட் கோலியை வைத்துதான் இந்தியா நிரப்புவதாக ரமீஸ் ராஜா நேற்று வெளிப்படையாகவே கோலியிடம் சொல்ல விராட்டுக்கு வாயெல்லாம் ஒரே புன்னகை... நிற்க.. பேட்டை சுழற்றுவதில் கோலியின் இயற்கையான திறமையும் சர்வதேச அளவில் விளையாட ஆரம்பித்தபின் தனது ஃபார்மை இவ்வளவு வலுவாக நிறுவியிருக்கும் கோலியின் அர்ப்பணிப்பையும் யாரும் சந்தேகிக்கப்போவதில்லைதான் ஆனாலும் கன்ஸிஸ்டன்ஸிதான் சச்சினைத் தொடர்ந்து உலகக்கோப்பை நாயகனாக நிலைநிறுத்தியிருந்தது என்பதை கோலி உணர்ந்து செயலாற்ற வேண்டும்.. நேற்றைய போட்டியில் கோலியின் பாஸிடிவ் பேட்டிங் கண்களைக் கவரும் விதமாக இருந்தது...... சுழல்பந்துவீச்சை அழகாக ஆன்டிஸிபேட் செய்து அட்டகாசமாய் ஆடினார்.... அதீத தற்காப்புடன் அவர் ஆடிய பெரிய ஷாட்களை ரசித்தபோதும் பொறுமையிழக்காமல் தொடர்முழுக்க ஆடவேண்டுமே என்கிற பயமும் மிரட்டிக்கொண்டேதான் இருக்கிறது!

ரெய்னா:




என்னைப் பொறுத்தவரை இந்த உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரெய்னா தான்! அதிரடியானாலும் நிலைத்து ஆடவேண்டுமென்றாலும் நிலைமைக்கு ஏற்ப தன்னை செயல்படுத்தும் திறமும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட டீம் ப்ளேயர்..... கடந்த உலகக்கோப்பையில் யுவ்ராஜ் சிங்கின் இடத்தை நிரப்பும் பொறுப்பு ரெய்னாவிடம்தான் இருக்கிறது..... ரெய்னாவின் பழகிய பிரச்னைகளான ஸ்லோ பவுன்சர் பந்துகள் மற்றும் க்விக் ரன் அவுட்கள் போன்றவற்றைச் சரியாக அணுகும்பட்சத்தில் ரெய்னாவால் இந்தியாவுக்கு பெரிய வெற்றிகளைப் பெற்றூத்தர முடியும்!

அஷ்வினின் மெய்டன்கள்:




நேற்று அஷ்வினின் பவுலிங் சார்ட்டை வெறுமனே பார்த்தால்... 8 ஓவர்களில் 41-1 என்று 5.13 எகானமி ரேட்டில் சர்வ சாதாரணமாகத்தான் தெரியும் ஆனால் அஷ்வின் வீசிய மூன்று மெய்டன் ஓவர்கள் ஆட்டத்தில் இந்தியாவை வெற்றிபெற வைத்தது என்பதே நிஜம்! அவர் வீசிய மெய்டன்களின் கணக்கிற்கு அஷ்வினின் பிந்தைய ஓவர்களில் மிஸ்பா பவுண்டரிகளை விளாசி சரிக்கட்டிவிட்டார் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கதறினாலும்.... அந்த மெய்டன் ஓவர்கள் சேஸிங்கில் பாகிஸ்தான் மீது திணித்த கூடுதல் அழுத்தமே தொடர்ந்த விக்கெட்டுகளுக்குக் காரணம்.... என்னைப்பொறுத்தவரை நேற்றைய மேன் ஆஃப் தி மேட்ச் மூன்று மெய்டன்களுக்காக ரவிச்சந்திரன் அஷ்வின்தான்!

உமேஷ் யாதவ் - மோஹித் மற்றும் ஷமி:

இதே பாகிஸ்தானுக்கு எதிரான 2011 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியின் முடிவில் தோனி சொன்னார், "எங்களிடம் அச்சுருத்தும் வேகம் இல்லை, திணறடிக்கும் ஸ்விங் பவுலிங்கும் இல்லை அதனால் நாங்கள் தேர்ந்துகொண்ட ஆயுதம் "டிசப்ஷன்" என்று! அதாவது லைன், லெங்த் மற்றும் பேஸ் களில் வேரியேஷன் மூலமாக பேட்ஸ்மேன்களை ஏமாற்றித்தான் விக்கெட்டுகளை வீழ்த்தினோம்" என்று! நான்கு வருட இடைவெளியில், அப்போதைய வேகப்பந்துவீச்சாளர்களான ஜாஹிர்,முனாஃப், நெஹ்ரா மூவருமே இப்போது அணியில் இல்லை..... ஆனாலும் அவர்களின் மாற்று வீரர்களான உமேஷ்-மோஷித்-மொஹமத் ஷமி யைப் பார்க்கும்போது இவர்களிடம் மட்டும் வேகமோ, ஸிவிங்கோ இருக்கிறதா என்று கேட்டால் என்ன பதில் வரும் என்று எல்லாருக்கும் தெரியும்.... உமேஷ் தொடர்ந்து 140 kmph க்கு மேல் வீசுகிறார்தான் என்றாலும் கண்ட்ரோலில் அவ்வளவு போதிய ஆளுமையில்லாததால் அச்சுருத்த முடியவில்லை! மேலும் இவர்களிடம் அனுபவமும் இல்லை.....! நேற்றைய போட்டியில் இவர்களின் செயல்பாடு ஓரளவு நன்றாக இருந்தது ஆனால் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற அணிகளுடன் இவர்களது பவுலிங் எடுபடவேண்டும் என்பது பெரும் சவால்!
மேலே குறிப்பிட்டதைப் போல ஜாஹிர்கான் இல்லாத நிலையில் தோனி இந்த பவுலர்களை நெருக்கடி நேரங்களில் பேக் செய்ய வேண்டும்.... முஹம்மத் ஷமி தான் இழந்த ஃபார்மை மீட்டெடுப்பது அடுத்த போட்டியிலேயே கட்டாயம்!

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்தப் போட்டியில் கிரிக்கெட் ஸ்கில்களை விட "இந்தியா-பாகிஸ்தான்" என்னும் அழுத்தத்தைக் கையாளும் விதத்தில்தான் வெற்றி-தோல்வி இருந்தது அந்த வகையில் வெற்றி தோனிக்குத்தான்..... பேட்டிங் சிறப்பாக அமைந்ததில் அதிகமான நம்பிக்கை மேலோங்கியிருக்கின்றது..... ஃபீல்டிங் அற்புதமாக இருந்தது மிக நல்ல விஷயம்.... தோனி இதே துடிப்புடன் தொடர்ந்து அணியை வழி நடத்தும்போது ஏதாவது அதிசியத்தை எதிர்பார்க்கலாம் இந்தியாவிடமிருந்து! ஆனால் கடைசி ஓவர்களில் சரிந்து விழும் மிடில்-ஆர்டரும், பந்துவீச்சு பலவீனமும் இப்போதும் தொடர்கதையாகத் தொடர்ந்துகொண்டேதான் வருகிறது என்பதையும் மறக்கமுடியவில்லை... வழக்கம்போல் நேற்றைய போட்டியிலும் 20-30 ரன்கள் குறைவாகத்தான் நாம் ஸ்கோர் செய்திருந்தோம் என்பது கண்கூடு! இருந்தாலும் இந்த ஒரு வெற்றி பலவிதங்களில் சிறப்பானது...... நம்பிக்கை தந்த வீரர்களுக்கு நாம் தட்டும் ஒவ்வொரு கைத்தட்டலும் அவர்களது வெற்றிக்கு வாழ்த்தாய் தோள்களில் தட்டிக்கொடுக்கும்!

காத்திருப்போம்...... தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டியில் சந்திப்போம்.....

Pictures Courtesy: Espncrcinfo.com

அன்புடன்
பிரபு எம்

Friday, January 02, 2015

வெல்கம் 2015!!


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....




புத்துணர்ச்சி தரும் எந்தவொரு துவக்கமும் மகிழ்ச்சியான தருணங்களே!

பளபளக்கும் புது காலண்டர்கள்.. மொத்த பக்கங்களும் நம் பதிவுகளுக்காகக் காத்திருக்கும் குண்டு டைரிகள்..... அத்தனை நாட்கள் நம்மை பாதித்துவந்த செய்திகள் யாவும் ஓரங்கட்டப்பட்டு திடீரென்று கடந்து வந்த பாதைகளாகச் சென்ற 12 மாதத்தின் அலசல்கள்..... ப்ரச்னைகளுக்கு சடன் ப்ரேக் போட்டுக்கொண்ட கொண்டாட்டங்கள்..... என நம் உலகில்  புத்தாண்டு என்பது ஒவ்வொரு தனிமனித மனத்தையும் மிக எளிதாக புத்துணர்வுடன் சிலிர்க்கவைத்துவிடுகிறது!

தனிமனித வாழ்க்கையாகட்டும் பொதுவாழ்க்கையாகட்டும் ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வாழ்வுக்கென்று ஒரு பாதை அதன்வழியே மட்டும் பயணம் என்பதுதான் நியதி..... ஜன்னலோர வேடிக்கைகளாக அல்லது எதிர்ப்படும் காட்சிகளாகத்தான் அடுத்த மனிதர்களின் வாழ்க்கைப் பயணங்களைப் பார்க்கவோ சில நேரங்களில் பகிரவோ வாய்ப்பு கிடைக்கின்றது...... நண்பர்கள், பகைவர்கள், நீண்டகால உறவுகள், குறுகியகால உடன்பாட்டுடன் ஒட்டுறவாடும் தோழமைகள்..... என சக பயணிகள் பலவகைப்பட்டாலும் ஒரு நாளை முடித்து மறுநாளைத் துவங்கும்போது நம்மில் பெரும்பாலானோருக்கு வாழ்க்கை என்னவோ மாற்றங்கள் இல்லாத அன்றாடமாகவே இருக்கின்றது!

என்றோ நடக்கப்போகும் தாக்குதலுக்காக எங்கெங்கோ விழிப்புடன் இயங்கும் போலீஸுக்கும்......  என்று தாக்கப்போகிறோம் என்று தெரிந்துவைத்துக்கொண்டு அன்று வரை சந்தேகமின்றி சாதாரணமாக உலவும் தீவிரவாதிக்கும் ஜனவரி 1 நடு நிசி 12 மணி என்பது இன்னுமொரு நாள்.... இன்னுமொரு நிமிடம் மட்டுமே! ஆக புத்தாண்டு பிறந்த நொடியில், நிமிடத்தில் மகிழ்ச்சியை அனுபவிப்போர் பாக்கியசாலிகளே! அந்தவொரு ஸ்பெஷல்  நிமிடத்தில் எங்கோ தொலைதூரத்திலிருந்தோ அல்லது நம்வீட்டின் இன்னொரு அறையிலிருந்தோ ஒரு வாழ்த்துச் செய்தியைப் பெற்றிருப்போமேயானால் வாழ்வின் ஸ்பெஷலான தருணங்களை நம்முடன் பகிர்ந்துகொள்ள சகபயணிகள் இருக்கிறார்கள் என்றே அர்த்தம்.... அது தரும் மகிழ்வும் அலாதிதான்........

"இன்று புதிதாய்ப் பிறந்தேன்" எனும் அழகான மன நிலைப்பாட்டை எல்லா நாளும் அடைவது சாதாரணர்களுக்கு அத்தனை சாத்தியமில்லை ....... அந்த வகையில் சாமானியனும் தன் பயணத்தைப் புதிதாகத் திட்டங்களுடனும் மறு சீரமைப்புடனும் ரீஸ்டார்ட் செய்ய எத்தணிக்கும் இந்த புத்தாண்டுக்கு நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

மகிழ்ச்சியாகவே 2015-ஐத் துவங்கியிருக்கிறோம்..... அதேவேளையில் மன நிறைவுடன் 2014-க்கு விடைகொடுத்திருக்கிறோமா?! என்று எண்ணிப்பார்த்தால் இந்தப் புத்தாண்டு துவக்கத்திற்குப் புது அர்த்தங்களும் கிடைக்கும்....... இந்த சந்தோஷப் புத்தாண்டு அடுத்த டிசம்பர் 31-ல் நிறைவான நிம்மதியான ஆண்டாகவும் இருக்க பிரார்த்தனைகளும்.... முனைப்புகளும். முயற்சிகளும் சிறக்கட்டும்.....

Wish you all a Very Happy New Year 2015!!!!

அன்புடன்,
பிரபு எம்