Monday, February 24, 2020

க்வேடென் பேய்ல்ஸ் - ஆஸ்திரேலியாவின் அழகு மகன்!

 தினம்தினம் தன்மேல் புரளும் ஆயிரமாயிரம் அசிங்கங்களையும் அருவருப்புகளையும் ஒரே நாளில் கழுவிக்கொண்டது இணையம், உலகெங்கும் பிரிந்துகிடக்கும் மனிதங்களையெல்லாம் நொடிப்பொழுதில் இணைக்க முடிந்த தன் வியத்தகு ஆற்றலால்! எந்தவொரு கடவுளுக்கும் அந்த வீடியோவைப் பார்த்த கணம், அந்தக் குழந்தையை அரவணைத்து அடுத்த நொடியே அவனை மகிழ்விக்கத் தான் என்ன செய்யவேண்டும் என்கிற தவிப்புதான் மேலோங்கியிருக்கும்... ஆனால் கடவுளர்களின் குற்ற உணர்வு ஒருவேளை அவர்களைத் தாமதித்திருக்கலாம்..... மனிதர்களின் உடல்ரீதியான ஊணங்கள் கடவுளின் ”படைத்தல் பிழை” என்று சொல்வதுண்டு ஆனால் இங்கு கடவுளின் குற்ற உணர்ச்சிக்குக் காரணம் ஊணங்களைப் படைத்துவிட்ட பிழைக்காக இருந்திருக்காது மாறாக உடல்ரீதியான தோற்றக் குறைபாடுகளை முன்வைத்து இன்றும்கூட நெஞ்சங்களை நசுக்கும் அருவருப்பான ஜந்துக்களுக்கு உயிர்கொடுத்த பாவத்துக்காகத்தான் இருக்கும்!

                            



கடவுள்களின் தாமதம் நல்லதாகிப்போனது, அந்தப் பொறுப்பை இணையத்தால் இணைந்த இதயமுள்ள மனிதர்களே கையிலெடுத்து, சில மனிதர்களின் அருவருப்பான செயல்பாடுகளால் ஆரம்பித்த கதைக்கு அழகான ஒரு முடிவைக் கொடுத்து நெகிழவைத்து விட்டார்கள்! அண்டவெளியில் உயிர்கள் வாழும் பூமிக்கோளில் ஒரு மகத்தான நாள் நேற்று என்றுதான் இதைச் சொல்லவேண்டும்!

கடந்த 19ம் தேதி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பகுதியில் 9 வயது சிறுவன் க்வேடென் பேய்ல்ஸ் தனது உடல்ரீதியான தோற்றக் குறைபாட்டின் காரணமாக சக மாணவர்களால் கடுமையான முறையில் துன்புறுத்தலுக்கு ஆளானதில் பள்ளியிலிருந்து அவனை அழைக்கவைந்த தன் அம்மாவிடம், காரில் வெடித்து அழுதிருக்கிறான்.... ஆற்றாமையில் உழன்ற அந்தத் தாய் தன் குழந்தையின் குற்றமற்ற வேதனை உணர்ச்சிகளை உலகத்துக்கு ஓளிபரப்ப..... ( நான் அந்த வீடியோவைப் பார்க்கவில்லை பார்க்கப்போவதுமில்லை!) உலகெங்கும் வேற்றுமைகள் மறந்து வெறும் மனித உணர்வுகளால் தழுதழுத்து, உணர்ச்சிவேகத்தில் அந்த அழுகையை நிறுத்தி அவனைப் புன்னகைக்க வைக்க என்ன செய்யவென்று தெரியாமல் என்னென்னல்லாமோ செய்து திக்குமுக்காட வைத்துவிட்டது! :-)

                                



சம்பவம் நடந்த இரண்டொரு நாட்களில் ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையேயான ரக்பி பந்தயத்தில் ஆஸ்திரேலிய அணியை முன்னடத்தி அழகாக நடந்துவந்தான் க்வேடென் பேய்ல்ஸ் அந்த அணியினரின் சீருடையில்,  ஆஸ்திரேலிய கேப்டனின் கையைப் பற்றிக்கொண்டு! அந்தப் புகைப்படம் உலகளவில் கோடிக்கணக்கான முறை மகிழ்வுடனும் திருப்தியுடனும் பகிரப்பட்டது.... இதுதவிர, யாரோ ஒரு நபர் க்வேடெனின் பெயரில் ஒரு "Gofundme" பேஜை உருவாக்கி.... க்வேடனை நான் டிஸ்னிலேண்டிற்கு அழைத்துச் சென்று அவனை மகிழ்விக்க வேண்டும் பத்தாயிரம் டாலர் பணம் நன்கொடை தருக என அறிவிக்க மணிப்பொழுதில் அந்தப் இணையப் பக்கத்தில் சுமார் நான்கு லட்சம் டாலர்கள் பணம் குவிந்திருந்தது! மேலும் மேலும் பல gofundme pages க்வேடனின் பெயரில் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி உருவாக்கப்பட்டன.... ஓர் அழுகையை ஆனந்தமாக்கிவிட உலகெங்கும் மனிதர்கள் அறிவு, அர்த்தங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உணர்ச்சிவசப்பட்டு சகட்டுமேனிக்கு செய்த காரியங்கள் எல்லாம் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு எதிர்கால உலகத்தின் மேல் நம்பிக்கையை விதைத்தது!

Body shaming என்று சொல்லப்படும் அசிங்கமான பழக்கத்தை இன்றும் உலகம் தொடர்வது மிகமிகக் கேவலமானது. நிறம், உடல்பருமன், உயரக்குறைவு, முடிஉதிர்தல் போன்ற இயற்கையான தோற்ற நிலைகளை ஒரு குற்றத்தைப் போல் முன்னிருத்தி வாழ்நாள் முழுதும் ஒருவிதமான பாதுகாப்பாப்பற்ற மன நிலையோடே சம்பந்தப்பட்டவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் வதைத்தெடுக்கும் அருவருப்பான பழக்கத்தைத் தயவுசெய்து விட்டொழிக்கவேண்டும்....!

ஓர் அழகான (relatively deceptive!) பெண்ணையோ ஆணையோ பார்க்கும்பொழுது மனித மூளையின் எந்தப் பகுதியில் நியூரான்கள் கிளர்ந்து எழுகின்றன எந்த உணர்வை எழச்செய்யும் எந்தெந்த ஹார்மோன்கள் உடலளவில் செயல்படுத்தப்படுகின்றன எனும் தகவல்கள் வரை விஞ்ஞானம் கட்டுடைத்து பப்ளிஷ் செய்துவிட்டது ஆனால் இன்னும் “அழகு”, ”அசிங்கம்” என்கிற, மிகமிக அற்பமான , இடம் பொருள் சூழல் வயது போன்ற அடிப்படைகள் மாற மாற, அதுசார்ந்த அர்த்தமும் அளவீடுகளும் மாறக்கூடிய, உபயோகமற்ற டிஸ்ட்ராக்‌ஷன்களைக் (distraction!) கூட இன்னும் மனித இனம் இத்தனை நூற்றாண்டுகளில் கடக்க முடியாததை எண்ணும் போது ஆறறிவு உயிரனம் இயற்கையால் ஏளனம் செய்யப்படத் தகுந்ததாகவே தோன்றுகிறது.... இந்த தோல் நிறம், சதை பலம், எலும்புமண்டல அமைப்பு, இவற்றையெல்லாம் தாண்டி ஊடுறுவிச் சென்றபின் தான் மனம், அறிவு, குணம் போன்ற மனிதனின் நிஜ அடையாளங்கள் குடிகொண்டுள்ளன... அதை இன்னும் அணுகக்கூட பெரும்பாலான ஜனம் எத்தனிப்பதில்லை என்ற அவமானகரமான உண்மைதான் வெளிப்படுகின்றது இதுபோன்ற body shaming அவலங்கள் உலகெங்கும் அடிக்கடி நிகழும்போது!

இவையெல்லாம் அதிகம் நிகழ்வது பள்ளிக்கூடங்களில் என்பதுதான் மேலும் வேதனையான விஷயம்.....பெற்றோர்கள் இதுபோன்ற விஷங்களை கவனத்துடன் கையாண்டு ஓர் ஆரோக்கியமான பார்வையைத் தங்கள் பிள்ளைகளிடத்தில் விதைத்திட வேண்டும், அது தவறும் பட்சத்தில், கல்விமுறைகளும், ஆசிரியர்களும்  மூர்க்கமான முறையில் இதனைத் தடுத்திட வேண்டும்! இதற்கு சட்டங்களும் துணைசெய்ய வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்..... க்வேடன் பேய்ல்ஸ் இப்போது தன்னைத் துன்புருத்திய கோமாளிகளுக்கு சிரித்துக்கொண்டே நன்றி சொல்வான் தன்னை உலகமே கொண்டாட வாய்ப்பளித்த அவர்களின் அற்பத்தனத்துக்காக! 

க்வேடென்களை க்வேடென்களாக இயல்பாய் அழகாய் வாழ இயற்கை வழிசெய்கிறது அதனைத் தொந்தரவு செய்யும் கேவலமான செய்கைகளை மட்டும் நாம் தவிர்த்தால் போதும்!

அன்புடன்,
பிரபு எம்



Friday, February 21, 2020

2019 - எனக்குப் பிடித்த டாப் 10 மூவிஸ்


தட் என்னது இந்திராகாந்தியக் கொன்னுட்டாங்களா?! மொமண்ட்தான்.... பட் என்ன பண்ணுறது.... எப்பவோ எழுதியிருக்க வேண்டியது... இப்போதான் நேரம் கிடைத்தது!
ஏற்கெனவே ரொம்ப லேட்டு அதனால்...எந்தக் கதையும் பேசாமல் நேரடியாக லிஸ்டுக்குள் சென்றுவிடுவோம்... 

10. மான்ஸ்டர்:

Image result for monster tamil film


”ஒரு நாள் கூத்து” படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நெல்சன் வெங்கடேஷின் இரண்டாவது படம்.. S.J சூர்யா, ப்ரியா பவானிசங்கர், கருணாகரன் எனப் பொறுத்தமான கேஸ்டிங்குடன் வந்திருந்தது... ஒர் எலியினால் பிரச்னைக்குள்ளாகும் இளைஞன் எனும் சிம்பிளான லைனுக்குள், வள்ளலாரின் ஜீவகாருண்யம் தொடங்கி அரேஞ்ட் மேரேஜ் அழகியல்கள் வரை வசந்தமான சின்ன சின்ன சுவாரஸ்யங்களை வைத்துப் படம் முழுக்க மென்மையான கதைசொல்லலில் “மான்ஸ்டர்” மிகவும் கவர்ந்தது... எஸ்.ஜே சூர்யா - ப்ரியா பவானிசங்கரின் பாந்தமான நடிப்பு படத்தை இலகுவாக நகர்த்தியது.... கதையோடிணைந்த அளவான நகைச்சுவையும் திரைக்கதையில் அலுப்பில்லாமல் பார்த்துக்கொள்ள, இறுதிக்காட்சியில் அந்த எலி எதற்காக எஸ்.ஜே சூர்யாவை விடாமல் துரத்தவேண்டும் எனும் கேள்விக்கு ஓர் ஈரமான பதிலையும் வைத்து நிறைவாகவே முடித்திருந்தார்கள்... சிறுசிறு குறைகளைத்தவிர நிம்மதியான ஃபேமிலி வாட்சிங் கொடுத்த படம்.

9. பேட்ட

Image result for petta

"கபாலி”, “காலா” என்று வேற ரூட்டில் போயிக்கொண்டிருந்த ரஜினியை மீண்டும் கமர்ஷியல் டிராக்கில் பக்காவாக ஃபிட் செய்த படம்! கார்த்திக் சுப்பராஜ் முழுக்க முழுக்க ரஜினி ரசிகனாக இருந்து மொத்த ஸ்க்ரீனையும் ரஜினிஃபை செய்திருந்தார்.. அனிருத்தின் வெறித்தனமான இசையில், ஜில்லென்ற ஹில்ஸ்டேஷனில் நடக்கும் ஃபர்ஸ்ட் ஹாஃபில் படு ஃப்ரெஷ்ஷான ரஜினியை ”லவ்”வோட சமையல் செய்ய வைத்ததிலிருந்து மதுரைப் பின்னணியில் மேளத்துக்கு ஆடிக்கொண்டே வந்து பொட்டென்று வில்லனைப் போட்டுத்தள்ளுவது, ரஜினி பட விண்டேஜ் காட்சிகளை நினைவு படுத்தியது , கடைசியில் எவர்கிரீன் ”ராமன் ஆண்டாலும்..” பாட்டுக்கு குத்தாட்டம் போட்டது வரை ரகளையான ஒரு ரஜினி சினிமாவை அதற்கேற்ற எளிமையான கதைக்களத்தை அமைத்து ட்விஸ்ட்டுகளோடு சிறப்பாக அரங்கேற்றியிருந்தார் கார்த்திக் சுப்பராஜ். நவாசுதீன் சித்திக், விஜய சேதுபதி, குருசோமசுந்தரம், சசிகுமார், த்ரிஷா, சிம்ரன் போன்று ஆச்சர்யமான கேஸ்டிங்கும் ரஜினி பொங்கலுக்கு அலப்பறை கூட்டியது! டோட்டல் ரஜினிஃபிக்கேஷன்!

8. சூப்பர் டீலக்ஸ்:


                                                      Image result for super deluxe

விஜயசேதுபதி, ஃபகத் பாசில், ரம்யா கிருஷ்ணன் என ஒருபக்கம் நடிப்பு அசுரர்கள்... மறுபக்கம் சமந்தா, மிஷ்கின், பக்ஸ் என்று ஸர்ப்ரைஸ் பேக்கேஜ்! ”ஆரண்ய காண்டம்” வந்து நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தியாகராஜன் குமாரராஜா இயக்கம் என எதிர்பார்ப்புகளைத் தெறிக்கவிட்ட படம் ஆனால் வெளிவந்த பிறகு வேறுவிதமாக திருப்தியளித்தது! படுசிக்கலான கதைக்களத்தில் சூப்பர் டீலக்ஸ் டீல் செய்த எமோஷன் “எம்பாரஸ்ஸ்மெண்ட்” என்று ஆங்கிலத்தில் தெளிவாக அர்த்தம்பெறும் உச்சபட்ச சங்கடம்! வாழ்வின் அதிகபட்ச சங்கடத்தில் ஒவ்வொரு பாத்திரத்தையும் சிக்கவைத்து அதைவிட மேலதிகமான சங்கடத்தில் பார்வையாளனையும் நெழிய வைத்துக் கிட்டத்தட்ட “என்னடா எடுத்து வெச்சிருக்கான்??” என்று எகிறப்போகிற கணத்தில்  வில்லன் பக்ஸ்ஸின் தலையில் சிறுவர்கள் உடைத்த LED டிவி விழ... நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்த மொமண்ட் நமக்கு.... அதன்பிறகு கதையில் விரியும் தெளிவுநிலையானது விளிம்பு நிலையில் வைத்து நிம்மதி ஹார்மோன் சுரக்க வைப்பதாக இருந்தது! மீண்டுமொருமுறை தனது பயங்கரமான மெச்சூரிட்டியால் திரையுலகைத் தெறிக்கவிட்டிருந்தார் தியாகராஜன் குமாரராஜா இருந்தாலும் மொத்தமாக எதற்காக “சூப்பர் டீலக்ஸ்”? எனும் கேள்வி எழத்தான் செய்தது எக்கச்சக்கமாக எம்பாரெஸ் ஆனதில்! - Oddly Satisfying Movie!

7.  நேர்கொண்ட பார்வை:

                                                      Image result for ner konda paarvai


சென்ற வருடத்தின் ஆகச்சிறந்த ரீமேக் படம் என்றால் அது “நேர்கொண்ட பார்வை”தான்! ”NO" எனும் சொல் ஒரு வார்த்தை மட்டுமல்ல அது ஒரு வாக்கியம் என்று சொல்லி, ஜஸ்ட் ”வேண்டாம்” என்ற மென்மையான மறுத்தலை மீறுகின்ற வன்செயல் எவ்வளவு பெரிய குற்றம் என்கிற ரீதியில் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த “பிங்க்” படத்தின் ரீமேக்! அமிதாப் படத்தில் அஜித்தா??!! என்று திகைத்த அத்தனை பேரையும் திரைக்கதையில் அனாயசமாக சின்னச் சின்னதாய் மாற்றங்களை நுழைத்து மிகச் சிறப்பாக அஜித்திற்குப் பொருத்திக்காட்டினார் சமகாலத்தின் மிக முக்கியமான இளம் இயக்குனர் H.வினோத் என்றால் அஜித் தன் பங்குக்குத் தோற்றம், நடை, தளர்வு, நிதானம், ரௌத்ரம் என அந்த பாத்திரத்தை கம்பீரமாக நடித்துக்காட்டியது அபாரம்! முக்கியப் பாத்திரங்களான மூன்று பெண்களும் மிகத் துல்லியமான நடிப்பைத் துணிவுடன் கொடுத்தது மேலும் சிறப்பு! எல்லாவற்றுக்கும் மேலாக மூன்று “கெட்ட” பெண்களின் உரிமைக்குக் குரல் கொடுத்த பேராண்மை முயற்சி இந்தப் படம்! சமூகம் பெண்களுக்கென்று சில அளவீடுகளை வைத்திருக்கிறது அதை மீறீவிட்டால் வன்கொடுமைக்கு ஆளாகி எரித்துக் கொல்லப்பட்டாலுமே அந்த அவலத்துக்கு அவளேதான் பொறுப்பேற்க வேண்டும் அதையெல்லாம் மீறி பெரும்பான்மைப் பார்வையில் மிகமிகக் கெட்ட பெண்களின் “NO" வை பெருங்குரல்கொண்ட பேரொலியாய் சமூகத்தின் கேடுகெட்ட சுவர்களில் மோதி எதிரொலிக்கவிட்டது “ நேர்கொண்ட பார்வை”! மேலும் அந்த “கெட்ட” பெண்களுக்குக்கூட அவர்களின் அந்தரங்கத்துக்கு மதிப்பளித்து அழகாய் அணுகும் சட்டம் கொண்டது இந்த நாடு (அதாவது பழைய இந்தியா!) என்ற அடித்தளமும் அமைதியாய் ஒலித்திருக்கும் படத்தில்!  மிகமிக முக்கியமான படைப்பு!

6. கைதி:

                                              Image result for kaithi

அங்குமிங்கும் அசைவில்லாமல் எடுத்த எடுப்பில் டாப் கியரைப்போட்டு கேப் விடாமல் புகுந்து அடித்த ஓர் அதிரடி ஆக்‌ஷன் படம் கைதி! 90s Hollywood ஸ்டைல் கதை.... (கிட்டத்தட்ட Con-Air படத்தின் இன்வெர்ஸ் மாடல் திரைக்கதை என்று சொல்லலாம்!) அதைத் தமிழ்ப்படுத்துகிறேன் என்று சேஸிங்கில் பேக்ரவுண்டில் ஐடம் சாங் வைக்காமல் திரைக்கதையில், வேகமெடுக்கும் அந்த அரைப்பாடி லாரி, உடைக்கமுடியாத பிரிட்டிஷ்காரன் கட்டிடம், பிரியாணித் தூக்கு, க்ளைமேக்ஸ் Gun blaze என்று புதுப் புது ஐட்டங்களை உள்ளே புதைத்து முழுக்க முழுக்க வில்லன்களுக்கு சாதகமான களத்தில் குறைந்தபட்ச சாத்தியங்களுடன் ஹீரோ க்ரூப் விடாது போராடி ஜெயிக்கும் சீட் நுனி அத்தியாயங்களால் ஜொலித்தது “கைதி” லோகேஷ் கனகராஜ் இனி அனைத்து உச்ச நட்சத்திரங்களுக்கும் செல்லப்பிள்ளையாக வலம் வருவார்.... கார்த்தி, நரேன் மற்றும் ஜார்ஜ் மரியான் மூவரின் நடிப்புமே பிரமாதமாகப் படைக்கப்பட்ட பாத்திரங்களை சுமக்கத் திரைக்கதை லாரி சிரமமின்றி சீறிப்பாய்ந்தது....கார்த்திக்கு இது முக்கியமான செஞ்சுரி இன்னிங்ஸ்! அக்மார்க் ஆக்‌ஷன் விருந்து!

5. மகாமுனி:


Image result for magamuni
”மௌனகுரு” வாய்க் காணாமல்போன சாந்தகுமார் திரும்பி வந்தது 2019ல்  மகாமுனியாய். அழுத்தமும் திருத்தமுமான திரைமொழி பேசிய மிக முக்கியமான திரைப்படம் “மகாமுனி”! மைக்ரோஸ்கோப் நுணுக்கத்தில் புனைந்த திரைக்கதையைக் கூரான உளியாய்ச் செதுக்கி வடித்திருந்தது படத்தின் வசனங்கள்! பேருந்து ஜன்னலோரங்களில் திடீரெனத் திகைக்க வைக்கும் தமிழ் நாட்டின் மிஸ்டிக் பியூட்டி நிலப்பரப்பிலெல்லாம் பிரேக் அடித்து இறங்கி, ரசித்து, கேமராவில் பதிந்து வந்து பொறுமையாகப் பல தத்துவங்கள் பேசும் த்ரில்லர் ஜானரில் பிசிரே இல்லாமல் சுவாரஸ்ய ஸ்கெட்சுபோட்டிருந்தார் சாந்தகுமார். ஆர்யா நடிப்பில் தான் விட்டதையெல்லாம் பிடித்து ஒரே படத்தில் தமிழ்சினிமாவில் தன் சீட்டில் தானே வந்து மீண்டும் அமர்ந்துவிட்டார்.... அருண் பத்மனாபனின் ஒளிப்பதிவில் தமிழ்த்திரை கண்டிராத இயற்கை அழகு கொஞ்சியது படத்தின் கடுமையான நிகழ்வுகளுக்கு இடையிலும்! மென்மையும் வன்மையும் இரண்டறக் கலந்து திகைப்பூட்டிய நிதானமான திரைக்கதையில் கடைசியில் மட்டும் ஏன் அவ்வளவு அவசரம் என்றுதான் புரியவில்லை... காட்சிகளால் மொத்தக் கதையையும் சொல்லிவிட்டு மிச்சமுள்ள க்ளைமேக்சை மட்டும் எழுதிவைத்து வாசித்து முடித்து வைத்தது, மொத்த உழைப்புக்கும் படம் சேர்ந்திருக்க வேண்டிய தூரம் செல்லவிடாமல் தடுத்ததுதான் துன்பமான துரதிர்ஷ்டம்..... மகாமுனி - ஆழ்நிலை தியானம்!

4. அசுரன்:

                                                Image result for asuran

A Signature adapted screenplay from Vetrimaran!
ஆழமும் தீர்க்கமுமாய் ஓர் அசுரன் 2019ன் கடைசிக் காலாண்டில் வந்து திரையுலகத்தை மட்டுமின்றி இலக்கியம் அதையும் தாண்டி அரசியல் வரைப் புரட்டிப் போட்டான் என்று சொன்னால் அது உண்மையே! இந்தப் படம் பாராட்டப்பெற்ற விதத்தில் ஓர் இடைத்தேர்தல் முடிவு வரை ஊடுறிவிப் பாதித்தது! அதைத்தாண்டி முக்கிய எதிர்க்கட்சியை இன்றுவரை ஆளாளுக்குச் சீண்டிப் பார்க்கும் ஓர் அரசியல் சிண்டு முடிவதற்கு ஆதாரமாக நிற்பவனும் இதே அசுரனே! அசுரன் பேசிய அரசியல் மற்றும் அடக்குமுறைக்கு எதிராக உண்டாக்கிய அதிர்வலைகள் அவ்வளவு ஆழமானவை! ஒரு நாவலையும் , சில வரலாற்று உண்மைகளையும் ஒருங்கிணைத்து ஓர் ஆக்‌ஷன் சினிமாவாகவும் திரை இலக்கியப் பதிப்பாகவும் ஒருங்கே கொடுத்திருக்கும் வெற்றிமாறனுக்கு ஒரு சல்யூட்டும் அதற்கு முழுமையாக உயிர் கொடுத்த தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி உள்ளிட்ட நடிகர்களுக்கு வீரவணக்கங்களும் செலுத்தத் தமிழ் ரசிகன் தவறவில்லை..! ஜீவி பிரகாஷின் தீப்பிடிக்கும் இசைப் படத்தின் உஷ்ணத்தைக் குறையாமல் பார்த்துக்கொண்டது! அசராமல் அடித்து ஜெயித்தவன் இந்த அசுரன்!

3. தடம்:

                                                       Image result for தடம்
மகிழ்திருமேனியின் இயக்கத்தில் வெளிவந்த அறிவார்ந்த ஆக்‌ஷன் த்ரில்லர்...  விக்ரமுக்கு அடுத்து நீண்ட வருடங்கள் நம்பிக்கையோடும் தயாரிப்போடும் காத்திருந்து வெற்றிபெற்றவர் அருண்விஜய்... அவருக்குத் “தடையறத் தாக்க” மூலம் ஸ்டார் அந்தஸ்து வாங்கிக்கொடுத்த மகிழ்திருமேனி மேலும் ஒரு டபுள் பவர் 5 ஸ்டார் படத்தினை அருண்விஜய்க்கு சென்ற வருடம் பரிசளித்தார்! எழில், கவின் என்று வலிமையிலும் அறிவிலும் ஒருவருக்கொருவர் டஃப் கொடுக்கும் ஐடெண்டிக்கல் ட்வின்ஸ் எனும் சூப்பர் பாத்திரப்படைப்புக்கு ஏற்றவாறு சிக்ஸ்பேக்குடன் சிக்கென்று வந்து நின்று, நடிப்பிலும் மேனரிஸத்திலும் எளிதாக இரண்டு பாத்திரங்களையும் வேறுபடுத்திக் காட்டினார் அருண் விஜய் என்றால்..... அறிவுப்பூர்வமாகத் திரைக்கதையை முன்னெடுத்துச் செல்ல மகிழ்திருமேனிக் கொட்டிய உழைப்பில் அவரது மூளைத் தசைகளில் சிக்ஸ்பேக் தோன்றியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...! மையக்கதையில் பலப்பல புத்திசாலித்தனமான முடிச்சுகள் ஒன்றன்பின் ஒன்றாக சுவாரஸ்யமாகக் கட்டவிழும் விதமாகத் திரைக்கதையை அமைத்திருந்தார் ஆனாலும் கூட படம்  கதைக்குள்ளே நுழைவதற்கு முந்தைய அடித்தளக் காட்சிகளுக்குக் கூட ரசிக்கும் படியான ஐடியாக்களை வாரி இரைத்திருந்தார். அறிவார்ந்த கதை சொல்லலில் இது ஓர் அழியாத தடம்! 

2. ஒத்த செருப்பு சைஸ் 7:

                                                       Image result for ஒத்த செருப்பு  

பார்த்திபனின் எக்ஸ்பெரிமெண்ட் ஒன்று  நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு ஒர்க் அவுட் ஆனதில் ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் ஒருசேர சங்கமித்து வாழ்த்துமழை பொழிந்தது “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்துக்கு! பொதுவாக புத்தகம், ரேடியோவுக்கு இருக்கும் மரியாதை விஷுவல் மீடியங்களான டிவி மற்றும் சினிமாவுக்குக் கிடையாது.. டிவியை ”இடியட் பாக்ஸ்” என்று இன்றுவரை பாப்புலராகப் பழித்துரைக்கும் குரல்கள் இருக்கத்தான் செய்கின்றன! இதற்கு ஒரு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது... ஒரு புத்தகத்தை வாசிக்கும்போதோ அல்லது ரேடியோவில் கேட்கும்போதோ நாம் உள்வாங்கும் விஷயங்களை, ஓர் இணைகோட்டில் நமது கற்பனையில் காட்சிவடிவம் பெற்றுக்கொண்டே இருக்கும்.... அதுவே விஷுவலாகவே ஒரு கதையையோ அல்லது செய்தியையோ பார்க்கும்போது நமது கற்பனை சக்திக்கு எதுவும் வேலை இருப்பதில்லை காட்டுவதைப் பார்த்துவிட்டு உணர்ச்சிவசப்பட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறோம் என்று கற்பனை வளத்தை மட்டுப்படுத்துவதாக சினிமா மீதும் டிவி மீதும் காலம்காலமாக ஒரு கம்ப்ளைண்ட் இருந்துவருகிறது...! ”ஒத்த செருப்பு” அந்த விஷயத்தை முறியடித்தது என்றே சொல்லவேண்டும் ஏனென்றால் படம் பார்த்தவர்கள் சட்டென்று சிந்தித்துப் பாருங்கள் பார்த்திபனின் மகனாக நடித்தக் குட்டிப்பையன் யார் என்று? அந்த நல்ல போலீஸ் ஆஃபீஸர், சைக்கியார்ட்ரிஸ்ட் லேடி, அந்த எம்.எல்.ஏ யார் யார் என்று? நிச்சியம் முகங்கள் மனதில் தோன்றத்தான் செய்யும்! ஒரு த்ரில்லர் கதையைக் கதையோட்டத்தின் கயிற்றைப் பிடித்த இறுக்கம் சற்றும் தளராமல் ட்விஸ்ட் & டர்ன்களோடு சொன்னவிதத்தில், விஷுவலாகப் பார்த்திபன் கண்முன்னே திரையில் கதையை ஒரு தனி நபர் வாக்குமூலமாகச் சொல்லிக்கொண்டே இருந்தாலும் நம் மனத்திரையில் அந்தக் கதையின் உலகம் எந்தத் தடங்கலுமின்றி காட்சிகளாக விரிந்துகொண்டே இருந்தது...வாவ் என்ன ஓர் இதமான கதைசொல்லி இந்தப் பார்த்திபன்! என்று மனம் நிறைந்த திருப்தி கிடைத்தது பார்த்திபனின் இந்த ஒன் மேன் ஷோவில்! ஒத்த செருப்பு பத்த வெச்ச நெருப்பு அணைய லேட்டாகும்!

1. சில்லுக்கருப்பட்டி:

                                                   Image result for சில்லுக்கருப்பட்டி

2019ம் வருஷத்தின் அழகழகான படங்களிலெல்லாம் ஆகச்சிறந்தபடம் என்னைப் பொறுத்தவரை வருஷம் முடிவதற்கு நான்கு நாட்கள் மிச்சமிருக்கும்போது வந்த இந்தத் தித்திப்பு ஓலைப்பெட்டிப் பொக்கிஷம்தான்!  நான்குப் பருவ மனிதர்கள், நான்கு கதைகள்.... ”காதல்” என்ற உணர்வை மையக்கோடாகக் கொண்டு அதைச்சுற்றியே தொட்டும் தொடாமலும் அலையாடும் குட்டிக் குட்டிப் பெயரற்ற உணர்வுகளை நான்கு பருவத்து ஆண் - பெண்களை வைத்துக் கடத்திய அற்புதமான இரண்டேகால் மணி நேரமாக இதமாகச் சிந்தையில் கரைந்தது இந்தச் “சில்லுக்கருப்பட்டி”! அதனைத் திகட்டாமல் வழங்கிய ஹலீதா ஷமீமுக்கு இனிமையான நன்றிகள்!  
 நிஜ வாழ்வை அதன் முழு யதார்த்தத்தோடு கமர்ஷியல் சினிமாவுக்குள் கடத்துவது மிகமிக சவாலானது காரணம் எந்த இடத்தில் ரசம் சரியாக சேர்க்கவேண்டும் எந்தெந்த இடங்களை அதன் போக்கில் அப்படியேவிட வேண்டும் என்று தெள்ளத்தெளிவாக உணர்ந்து எழுதவேண்டும். அதை அத்தனை அழகாகக் கையாண்டிருந்தார்கள் ஒட்டுமொத்த குழுவும்..... நடிகர்களின் பங்களிப்புகள் மீட்டரில் நூறு சதவீதத்தையெல்லாம் அனாயசமாகத் தாண்டியது! பிங்க் பேக் அத்தியாயத்தில் மாஞ்சா தன் குப்பைவிடு தூதில் மிட்டியைக் கண்டுபிடித்தபோது பற்கள் தெரிய சிரிக்கும் அந்த அழகான க்ளோஸ்-அப்பில் அவன் கண்களும் புருவமும் கூட சேர்ந்து சிரிக்கும்! யஷோதாவாக வரும் லீலா சாம்சன் சருக்கில் சருக்கும் காட்சியில் காட்டும் முதிர்ந்த நாணம் அந்த பார்க்கில் இருக்கும் சருக்கைவிட வழுவழுப்பாக அந்தக் காட்சியை நெகிழவைக்கும்! கதாபாத்திரங்களின் >100% நடிப்பை இம்மி தவறாது அள்ள கேமரா என்னென்ன கோணங்களைப் பிடிக்க எந்தெந்த பொசிஷன்களில் வைக்கப்பட்டதோ என்று ஆச்சர்யப்படுத்திய ஓளிப்பதிவை வழங்கியிருந்தார்கள் ஒளிப்பதிவாளர்கள்! இந்தப் படத்தில் ஒளிப்பதிவின் அழகியலில் கேமராக்களால் நுணுக்கமாகக் கவரப்பட்டது மனித முகங்கள்..... முகங்களின் நவரசங்கள்! எல்லாவற்றுக்கும் மேல் சில்லுக்கருப்பட்டிக்குப் பின்னணி இசை சேர்த்தது யார்? என்று கண்ணைமூடிக்கொண்டு கேட்டால் இளையராஜா என்றுதான் சொல்லியிருப்பேன்! ஆனால் கண்ணைத் திறக்கவைத்த இசை பிரதீப்பினுடையது! இசையின் சத்தம் திரையின் மென்மையான தருணங்களில் கதாபாத்திரங்களைத் தொந்தரவு செய்துவிடக்கூடாது என்பதுபோல் அத்தனை அணுக்கமான இசை! சத்தங்களே இல்லாத இசையானது கிரங்கவைக்கும் சுகத்தில் மௌனத்தின் இசையை ரசிக்கத் துவங்குவதாய் உணர்ந்தேன்... பிரதீப்பின் இசையமைப்பில் ஒரு கவிஞனின் பேனாமுனையும் ஓவியனின்  தூரிகையும் ஒருசேர இசையாய் சங்கமித்திருப்பதைக் கண்டு மிரண்டுபோனேன்! இப்படித்தான் “சில்லுக்கருப்பட்டி” பார்த்ததிலிருந்தே எக்கச்சக்கமாய் பேசிக்கொண்டே இருக்கிறேன்.... தனிப்பதிவுதான் எழுதணும்! கே.பாலசந்தர் 20 வருடங்களுக்கு முன்பு திரையில் பதிந்த மனித உறவுகளின் சில சுவையான சிக்கல்களை இப்போதைய அப்கிரேடேஷனோடு அழகாக தன்னுடைய சிக்னேச்சரோடு பதிந்திருக்கிறார் மிக அழகாக ஹலீதா ஷம்மீம் சென்ற வருடத்துக்கான என்னுடைய முதலிடம் சந்தேகமின்றி “சில்லுக்கருப்பட்டி”க்கே!



அன்புடன்,

பிரபு எம்




  











Monday, February 17, 2020

Parasite (2020) - Strictly NO spoilers - கதை வெளிப்படுத்தப் படவில்லை!

Parasite (ஒட்டுண்ணி) எனும் பதத்தின் அகராதி அர்த்தம்:

parasite
/ˈparəsʌɪt/
noun
  1. 1.
    an organism that lives in or on an organism of another species (its host) and benefits by deriving nutrients at the other's expense.


பெரிய உயிரினங்களின் உடல்களுக்கு உள்ளே குடியிருந்தோ அல்லது வெளிப்புறமாக உடலின்மீது ஒட்டிக்கொண்டு வாழ்ந்தோ, தன் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை வளங்களையும் அந்தப் பெரிய உயிரனத்திடமிருந்தே பெற்றுவாழும் அற்ப உயிரினங்களே ஒட்டுண்ணிகள்!





மனிதத் தலைமுடியில் ஒட்டிக்கொண்டு ரத்தத்தை உறிஞ்சி வாழும் பேன்களும் ஒட்டுண்ணிகள்தான்... அதேபோல் குடிலுக்குள் குடியிருக்கும் குடற்புழுக்களும் ஒட்டுண்ணிகள்தான்....  (படம் பார்த்தவர்களுக்கு இதுவரையிலான வார்த்தகளின் அர்த்தம் தெளிவாகப் புரியும்!)

இந்த ஒட்டுண்ணி தத்துவம் சில மனித மனநிலைகளுக்கும் பொருந்தும் என்பதைச் சொல்ல கொரியன் மொழிக்கு சப்-டைட்டில் தேவையில்லை! சமுதாயத்தின் பணம் மற்றும் அதிகாரம் படைத்த பெரிய மீன்கள் (big fishes) எல்லாரையுமே தெரிந்தோ தெரியாமலோ சிலபல ஒட்டுண்ணி மனிதர்கள் அவர்களைச் சுற்றியே தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்வதை சாதாரணமாக நாம் இன்றும் காணமுடியும்! சரி படத்துக்கு வருவோம்...

பொதுவாகத் திரைக்கதைகளில் பிரதான கதாபாத்திரங்கள் ஆள்மாறாட்டமோ அல்லது ஏதாவது ஓர் ஏமாற்றுவேலை செய்து சொகுசாக வாழ்வதுபோன்று கதையமைப்பு இருந்தாலே அந்தக் கதாபாத்திரம், தான் ஏமாற்றுபவர்களிட்ம் மாட்டிக்கொள்வதுதான் முக்கியத் திருப்பமாக இருக்கும்.... பார்வையாளர்களும் சரி திரைக்கதை ஆசிரியரும் சரி அந்த மாட்டிக்கொள்ளும் சம்பவத்தை எதிர்நோக்கி ஓர் அவசரத்திலேயேதான் இருப்பார்கள்..... அதேதான் இங்கும்..... ஆனால் அந்தப் புள்ளியில்  ஏற்படும் ஆச்சர்யமும் அதனால் விளையும் எதிர்பாராத அதிர்ச்சி சம்பவமும்... கடைசியில் பார்வையாளர்களால் மட்டுமே யூகிக்கமுடிந்த, ஆனால் திரையில் கதாபாத்திரங்களால் கடைசிவரை கற்பனைசெய்ய முடியாத அந்த முடிவுப் பகுதியும்.... படம் முடிந்தும் தொடர்கின்ற தத்துவார்த்தமான பதில்களற்ற கேள்விகளும் ஆஸ்கரில் புதிய சரித்திரம் படைத்திருக்கும் இந்தக் கொரியப் படத்தின் தொடுவானம் நோக்கிய பயணத்தின் மைல்கற்கள்!

கதையை நான் சொல்லப் போவதில்லை காரணம் இதுபோன்ற படங்களை உணர்வுகளாக உள்வாங்குவது சிறந்த அனுபவமாக இருக்கும்.... இதனை வாசிக்கும் நண்பர்கள் படத்தைப் பார்க்க ஆர்வம் கொண்டால் மகிழ்வேன்!

காட்சிகளால் உணர்வை மட்டுமின்றி கதாபாத்திரன் இயல்புகளையும் துல்லியமாகக் கடத்த முடிந்திருக்கிறது பாங் ஜூன் - ஹோ வால்! முக்கியக் கதாபாத்திரங்கள் தொடர்ந்து தவறான விஷயங்கள் செய்தாலும் முதலாளிகளிடம் சிக்கிக்கொள்ளக் கூடாதே என்கிற சிறிய ஆர்வம் கூட நமக்கு லேசாக எழும் படத்தின் நடுவில்... இந்த வெளிப்புற ’ஒட்டுண்ணிகள்’ அடுத்தகட்டத்தில் என்ன செய்வார்களோ என்று பதற்றமும் இருந்துகொண்டிருக்கும் அந்த நேரத்தில்தான் படத்தின்  உடம்பிற்குள் வாழும் ஒரிஜினல் ஒட்டுண்ணி யாரென்று கட்டவிழும்.... அதன்பிறகு நடப்பதெல்லாம் சாதாரண மனித உணர்வுகளின் விபரீதப் பின்னல்கள்தான்...... 

மரியாதையும் ஊதியமும் அள்ளிக்கொடுத்தாலும்கூட ஒருவிதமான அருவருப்பு மனப்பான்மையை வறியவர்களின் அழகியலற்ற வாழ்க்கைமுறைமீது கொண்டிருப்பவர்கள், தங்களுடைய அவ்வாறான செயல்பாடுகள் மூலம் தனக்குக்கீழ் வாழும் அந்த எளிய மனிதர்களின் ஆழ்மனதில் எந்த அளவுக்குக் கடுமையான காழ்ப்பை விதைக்கிறோம் என்பதை சுயமதிப்பீடு செய்துகொள்ள பேரஸைட் எச்சரிக்கை மணி அடிக்கிறது! உதாரணத்துக்கு உடலிலிருந்து வரும் துர்நாற்றத்துக்கு முகம் சுளிக்கும்போது சம்பந்தப்பட்டவரின் துர்நாற்றத்துக்கான காரணம் முதுமையாகவோ அல்லது நோயாகவோ இல்லாமல் வறுமையாகவோ அல்லது தொழிலாகவோ இருந்தால் சுளிக்கின்ற முகங்களில் எத்தனை கருணையும் அன்பும் இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறிய கடுமையான வெறுப்புதான் எதிர்முனை மூளையில் ஆழப்பதிகிறது என்பதை அந்த இறுதிக்காட்சி அதிர்ச்சி சம்பவம் உணர்த்திவிடும்!

கதையில் வெறும் பெயராக மட்டுமே வரும் ஒரு மிகப் பிரபலமான கட்டிடக்கலை நிபுணர் தன் சிக்னேச்சர் ஆர்க்கிடெக்சரில் செய்துவைத்த சிறு சிறு ரகசியக் கலைநயங்கள்தான் மொத்தக் கதையின் ஆச்சர்யம் + அதிர்ச்சிக்கு மூலக்கூறு என்பது ஒரு முக்கியமான சுவாரஸ்யம்!

ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டிருக்கும் சம்பவங்கள், காட்சியமைப்புகள் மற்றும் ஒன்றுடன் ஒன்றாகத் தொடர்புபடுத்தி நகரும் கதைமாந்தர்களின் மனஓட்டங்களையும் மொத்தமாக ஒரு நேர்க்கோட்டில் வடித்திருப்பது   திரைக்கதையை ஒரு விரிவான பதிவாக அழுத்திப் பதியவைத்துவிடுகிறது ஓர் அதிசியமாய் அற்புதமாய்........

எல்லாவற்றையும் தாண்டி... எத்தனை டெக்னாலஜி.... காலமாற்றம் பொருளாதார முன்னேற்றம் என அத்தனைக்கும் மேலும் இன்றும் புருவங்களை உயர்த்தும் உன்னதப் படைப்புகளாய் உலகையே திரும்பிப் பார்க்க வைப்பவை எல்லாம் இன்னமும் மனித உணர்வுகளைச் சரியாகப் பதிவு செய்யும் படைப்புகள் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை தீர்க்கமாகவும் நேர்த்தியாகவும் உணர்த்தியிருக்கிறது பேரஸைட்....

கடைசி காட்சியில் விழும் கடுமையான சுருக்கு முடிச்சுக்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கும் அது என்னவென்றால் புத்திசாலி பேரஸைட் இப்போது கம்பீரமான வெர்டபிரேட்டாக (vertebrate) சமூகத்தில் ஒரு கால அளவுக்குள் பிரம்மாண்டமாய் எழுந்து நின்றாக வேண்டும்.... அதுதொட்டு மனதில் எழும் எண்ணங்களே பார்வையாளனின் மூளைக்குள் ஒரு பேரஸைட்டாக ஓரிரு நாட்களுக்குக் குடிகொண்டு  நம் எண்ணங்களின் ஒரு பகுதியைத் தின்னும் ஸ்க்ரீன் மேஜிக்...

எண்ணற்ற குறும்புகளும் குறியீடுகளும் படத்தின் போக்கிலேயே இழையோடும் பார்ப்பவர்களின் மகிழ்வுக்காக.... அதனையெல்லாம் டீகோட் செய்து உரை எழுத விருப்பமில்லாத காரணத்தினால் இந்த இடத்தில் இந்தப் பதிவு முற்றுப்பெறுவதே நேர்மையானதாக இருக்க முடியும்!

Parasite - Redefined, most humanly!

குறிப்பு:

கதையை வெளிப்படுத்திவிடக்கூடாது என்று மிகக் கவனமாய் எழுதப்பட்டிருக்கும் பதிவு இது.... இந்தப் பாணியில் ஸ்பாய்லர்கள் இல்லாதவகையில் பாதுகாப்பானதாகத் தோன்றினாலும் வாசிக்கும் முனையில் சட்டென்று அலுப்பை வரவைத்துவிடக் கூடிய ஆபத்தும் கலந்தே உள்ளது... உங்கள் கருத்துரைகளை வைத்தெ இதனைத் தொடர்வதா வேண்டாமா என்று முடிவெடுக்க முடியும்!

அன்புடன்,

பிரபு எம்



Sunday, February 16, 2020

மனசுல பட்டது -2: சிஏஏ பல கேள்விகளும் ஒரே பதிலும்!

ஒரு ஜனநாயகத்தின் ஆரோக்கியம் சாமானியர்களால் தொடர்ந்து எழுப்பப்படும் கேள்விகளால் பாதுகாக்கப் படுகிறது என்று முன்பொருகாலத்தில் (பழைய )இந்தியாவில் நம்பப்பட்டுவந்தது! புதிய இந்தியாவில் கேள்வி கேட்பதை எல்லாம் கிட்டத்தட்ட தேசவிரோத செயல்பாடுகளில் சேர்த்தாகிவிட்டது! அதையும் தாண்டி கேள்வி எழுப்பும் ஆண்டி-இண்டியன்களுக்குக் கிடைக்கும் பதில்கள் என்னவோ “என்ன கையபுடிச்சு இழுத்தியா???” ரக பதில்களே!

”குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால் இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது”

இதுதான் சிஏஏ ஆதரவாளர்களின் ஒரே பதில்! நீங்கள் எந்தவொரு கேள்வியை எந்தமாதிரி முன்வைத்தாலும் உங்களுக்குக் கிடைக்கப்போகும் “திரும்பத் திரும்பப் பேசுற நீ..” பதில் இது ஒன்று மட்டுமே!

இந்த பதிலோடு கொஞ்சம் ஆக்‌ஷன் கொஞ்சம் செண்டிமெண்ட் சேர்த்து சமீபத்தில் ஒரு வசீகரமான ஆண் குரலொன்று சென்னையில் ஒலித்தது! அதாவது.... இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது, நாங்கள் பாகிஸ்தான் செல்லமாட்டோம் இங்குதான் இருப்போம் என்று முடிவெடுத்து இங்கேயே இருந்த இந்தியர்கள்தான் இந்திய முஸ்லீம்கள் என்று ஒரு செண்டிமெண்ட் டச் வைத்து அவர்களுக்கு ஒரு பிரச்னை என்று சொன்னால் முதல் ஆளாக நின்று போராடுவேன் என்று ஒரு ஆக்‌ஷன் பஞ்சும் வைத்து முழங்கியதைக் கேட்க மிகவும் அற்புதமாக இருந்தது.... ஆக சிஏஏவினால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை... (அடப் பாவிகளா என்னையும் சொல்ல வெச்சுட்டீங்களேடா இதே பதிலை!) அப்படியே ஆபத்து வந்தாலும் அவர்களுக்காகப் போராட ஒரு பாட்ஷாவும் இருக்கிறார்! இனிமேல் என்ன பிரச்னை என்னும் நிலையில் ஒரு சின்ன டவுட்டு வந்தது அது என்னன்னா....

பிரிவினையின் போது பாகிஸ்தானுக்குச் செல்ல மாட்டேன் என்று முடிவெடுத்து இந்தியன் என்னும் நிலையில் இந்திய முஸ்லீம்கள் உறுதியாக இருந்தார்கள் என்று சொல்லும்போது சிலிர்க்கிற அதே வேளையில்..  அதே பிரிவினையின் போது...... இந்தியா வந்துவிட முழுமையான வாய்ப்பிருந்தும், அன்பாக அரவணைத்துக்கொள்ள இந்தியா தயாராக இருந்தபோதும், எங்களுக்கு இந்தியா வேண்டாம், பாகிஸ்தான் தான் வேண்டும் என்று முடிவெடுத்த பாகிஸ்தானிய இந்து, கிறிஸ்தவ, சமண, சீக்கியர்கள் எல்லாருமே முழு விசுவாசமுள்ள பாகிஸ்தானியர்கள்தானே....!

சாதாரணமாக அரசை நோக்கி ஏதாவது கேள்விகேட்டாலோ அல்லது நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பற்றிப் பேசினாலோ கூட, நீ இந்தியன் இல்லை பாகிஸ்தானி.... பாகிஸ்தானுக்குப் போ என்று சீறும் திடீர் தேசபக்தர்கள், இந்தியாவை நிராகரித்து, பாகிஸ்தானைத் தங்கள் தேசமாக்கிக்கொண்ட விசுவாசமுள்ள பாகிஸ்தானியர்கள்மீது வெறும் மதத்தின் அடிப்படையில் அதீத அக்கறையும் கரிசனமும் கொண்டு அன்புக்கரம் நீட்டி வரவேற்கும் போக்குதான் மிக ஆபத்தானதொரு முரண்பாடு! கிரிக்கெட் போட்டிகளில் கூட ஒரு போரின் ஆக்ரோஷத்துடன் மோதிக்கொள்ளும் பகை நாடாக உச்சரிக்கப்படும் நாட்டைச் சேர்ந்தவர்களைக்கூடத் தன் மத அன்பர்களாக அங்கீகரிக்க முனைய முடிகிறது சில “தேச பக்தர்களால்”... அப்படியென்றால் தேசம் இங்கு மிகத் தெளிவாக இரண்டாம் பட்சம் தான் என்பதுதானே மிக அலட்சியமான நடையில் பதிவாகிறது.

இதைக் கேட்டாலும் அதுதான் இந்தியாவில் வாழும் முஸ்லீம்களுக்கு என்றுதான் ஆரம்பிப்பார்கள்... கேள்விகளால் இனி ஒன்றும் ஆகப்போவதில்லை வெறும் எலக்‌ஷன் மட்டும் நடக்கும் இந்தப் பெரும்பான்மை ஜனநாயகத்தில்!

பிரபு எம்