Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, September 22, 2025

"பொய்"யெனப் பெய்யும் மழை! - பகுதி -1

சிலந்திகளின் உமிழ்நீரைப் போன்றவை மனிதனின் பொய்கள்!

சில பொய்கள் சிலருக்கு நிஜ உலகின் தோல்விகளிலிருந்துத் தப்பித்து ஒளிந்துகொள்ளத் தனக்குத்தானே சுயசொர்க்கங்களாக செயலாற்றும்..... அடுத்தவருக்கு நேரடியாக தீங்குவிளைவிக்காத பொய்கள் இவை!

சில பொய்கள் ஆசைவலையை சிலந்தி வலையாய் விரித்து அதில் சிக்கும் சிறுபூச்சிகளை விழுங்கி உண்டு உடல்வளர்க்கும்! கவர்ச்சிகரமான இந்தப் பொய்கள்தான் இருப்பதிலேயே கேவலமானவை!

பொய்களில் இப்படிப் பலவகைகள் இருக்கலாம் ஆனால் அவற்றில் அற்பமாக வீழாமலிருக்க சற்றே விழிப்புடன் அறிவைச் சரியாகப் பயன்படுத்தினாலே போதும் அன்றாடம்  தனிப்பட்ட வாழ்வில் நாம் சந்திக்கும் பொய்களை எளிதில் கண்டறிந்தோ அல்லது வெறுமனே கடந்தோ சென்றுவிடலாம். ஆனால்..... ஒரு குழுவாய், இனமாய், குடிமக்களாய் நாம் பங்குபெறும் பொதுவாழ்வில் பரவும் அதாவது அனுதினமும் திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்களை இப்படி எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதுதான் கசப்பான நிஜம் ஏனெனில் அவை மிகவும் ஆபத்தானவை! பெருகிவரும் பேராபத்தாகப் பொதுவெளியில் பகிரங்கமாய்ப் பகிரப்படும் சமகால சமூகப் பொய்கள் மற்றும் அரசியல் பொய்களின் அபாயங்களைப் பற்றி ஆழமாக எச்சரிக்கவே இந்தப் பதிவு தொடங்கப்படுகிறது!




ஆட்சியை அபகரிக்க எவ்வளவு அசிங்கமான பொய்களையும் அனாயாசமாக அள்ளிவீசும் தலைவர்கள் அன்றும் கூட அரசியலில் இருக்கத்தான் செய்தார்கள், ஆனால் அவர்களின் பொய்கள் எல்லாம் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு மெய்யியலின் (reality) அடிப்படையிலாவது இருக்கும். அதாவது சந்தேகங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஆளுமைகளாகத் தங்களை அறிவித்துக்கொண்ட அந்தக்காலத் தலைவர்கள் தங்கள் மீதான வசீகரம் மற்றும் கண்மூடித்தனமான நம்பிக்கையைக் கடுகளவும் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளத் தெரிந்து வைத்திருந்தார்கள், அதன் காரணமாக மக்கள் அவர்களின் பொய்களை மெய்யென்று "நம்பித்தான்" மோசம் போய்க்கொண்டிருந்தார்கள்! ஆனால் இப்போதோ, ஒருவன் தன் அபிமானத் தலைவர் கூறுவது எல்லாம் அப்பட்டமான பொய்கள் என்று அவன் அறிவாலேயே தெளிவாக உணர்ந்தாலும், அதைப் பொய்யாகவே உள்வாங்கி அந்தப் பொய்யைக் காப்பாற்றத் தானும் அதில் பங்குகொண்டு மேலும் அதில் பல பொய்களைச் சேர்த்து, வெறும் தன் அபிமானத்தைக் கவர்ந்த கூட்டத்திடம் அதிகாரம் இருப்பதற்காகத் தன் வருங்கால அபிவிருத்திகளை எல்லாம் கூட அசராமல் அடகுவைக்கத் தயாராக இருக்கும் இந்த மனநிலைதான் இன்று நாம் பொதுவெளியில் சர்வசாதாரணமாகப் பார்க்கமுடிகிற பெரும் அவலம்! மேலுக்கு விசித்திரமாய்த் தோன்றும் இந்த ஆபத்தான போக்குதான் பல்வேறு நாடுகளிலும் பரவி, உலகையே தற்போது பேரழிவை நோக்கி அழைத்துச் செல்கிறது என்பது ஆழமான உண்மை! காரணம் மேலே குறிப்பிட்ட, சமகாலத்தின் அந்தவொரு வெறித்தனமான அபிமானமானது மக்கள் கூட்டத்தைப் பிரிவினைகளால் பிளவுபடுத்தி அதை ஒன்றுக்கு எதிராக மற்றொன்றைக் கட்டமைக்க விஷம் எனத்தெரிந்தும் தூவப்பட்ட பொய்விதைகளால் விளைவிக்கப் பெற்றது என்பதுதான் நஞ்சேறிய நிஜம்!

சிலந்திகளின் உமிழ்நீரைப் போன்றவைதான் மனிதனின் பொய்கள் என்று மேலே சொன்ன வாசகம் கூட அறிவியல்ரீதியாக ஒரு பொய்தான்! பெரும்பாலோனோர் நினைப்பது போல சிலந்தி தன் உமிழ்நீரால் கூடு கட்டுவதில்லை... அதன் அடிவயிற்றுப்பகுதியிலிருக்கும் ஒரு பிரத்யேக சுரப்பி (spinnerets) யில் சுரக்கும் "சிலந்திப் பட்டு" என்றழைக்கப்படும் ஒரு விதமான நூலால்தான் தன் கூட்டைக் கட்டுகின்றது! 
இப்படிச் சாதாரணமாக நாம் உண்மையென்று நம்பும் விஷயங்களே கூட ஆய்ந்து பார்த்தால் பொய்யெனத் தெரியும் சமகாலத்தில், நம் வாழ்க்கையையே நிர்மூலமாக்கும் வல்லமைபெற்ற பெரும் பொய்களைத் தயக்கமின்றி நுகரவும் அவற்றை மேலும் அலங்கரித்துப் பகிரவும் ஒரு பெருங்கூட்டம் தயாராக இருக்க, ஐடி செல்களும் மற்றும் வாட்ஸப் பல்கலைக்கழகங்களும் "பெய்" என்றால் பெய்யும் பெருமழையாகப் பொய்மழை விடாது பொழிந்து சமூகத்தின் குண்டு குழிகளிலெல்லாம் தேங்கி ஊரை, நாட்டை ,ஏன் உலகையே நாசப்படுத்தி வருகிறது! இந்தப் பொய்களின் அடிப்படையில் தொடங்கி ஆபத்து வரை தோண்டிப்பார்த்து அதைப் பதியவேண்டும் என்பதே எண்ணம்... இதில் எந்தவொரு அரசியல் கட்சியையோ, தலைவரையோ அல்லது நாடுகளையோ பெயரைக் குறிப்பிடாமல் எழுதுவதே நேர்மையாக இருக்கும்....

"பொய்"யெனப் பெய்யும் மழை... தொடரும்....!

உண்மையுடன்,
பிரபு எம்  


Tuesday, September 19, 2023

"நம்பிக்கை நாயகன்" நம் உயிர்த்தோழன் பாபு!












பரிச்சயம் இல்லாதோர் கூட அவரை "என் உயிர்த் தோழன்" பாபு என்றுதான் சொல்ல வேண்டும்! "சூப்பர் ஸ்டார்", "மக்கள் செல்வன்", எட்சட்ராக்களை எல்லாம் விட ஓர் அணுக்கமான விளிப்பு ஒரு பட்டமாகவே தங்கிவிட்டது பாபுவுக்கு!
அவரே சம்பாதித்த பல உயிர்த்தோழர்களின் அன்பும் அணுசரணையும், வாழ்வின் கடைசி நாள் வரை அவரைத் தாங்கிப் பிடித்திருந்தது அந்தப் பட்டப் பெயரையும் காரணப் பெயராக்கி விட்டது! 

ஒரு பார்வையாளனாக பாபுவை நினைத்துப் பார்க்கும் போது, அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் போராட்ட குணம் இரண்டுமே அதீதத்துக்கும் அதிகமாக இருந்ததாகத்தான் உணர முடிகிறது.... அவை அவருக்கு அவரது வாழ்நாளின் வலிமிகுந்த வருடங்களை மட்டுமே பரிசளித்திருந்தாலும் சக மனிதர்களான நமக்கு மிகப்பெரிய பாடங்கள்! 

நடிப்புத் தொழிலில் நாயக வேடம் என்பது வெகுசிலருக்கு அதிர்ஷ்டம், உள்ளிருந்து போராடும் பலருக்கோ அது தவப்பயன்! சம்பந்தமே இல்லாமல் வெளியிலிருக்கும் பல கோடிப்பேருக்கும் கூட அது ஒரு கனவாக இருப்பதைப் புரிய முடிகிறபோது முயற்சி தவத்தின் கடுமை புலனாகிறது! பாபுவுக்குக் கடுந்தவப் பயனாகத்தான் நடிப்பு வாய்ப்புகள் கிடைத்திருக்க வேண்டும்! அதைத் தக்கவைப்பதில்தான் மனிதர் தன் அர்ப்பணிப்பை அளவுகளை மீறி செலுத்திவிட்டார்.... விளைவு, ஒரு சண்டைக் காட்சி சாகசம் ஏற்படுத்திய விபரீதம் அவரைப் படுக்கையிலேயே பல வருடம் கிடத்தி, இன்றைய தினம் அவர் நீத்த இன்னுயிரின் இறுதி மூச்சைக் கூட அதே படுக்கைக்குள் முடக்கித்தான் விடைகொடுத்திருக்கிறது! 

 தண்டுவடம் தடம்புரண்டுவிட்ட போதும் தன்னம்பிக்கையைத் தவற விடவில்லை பாபு! அவ்வப்போது தன்னம்பிக்கை தரும் தலைப்புச் செய்திகளில் வலம் வந்து கொண்டுதான் இருந்தார்! 

விரல்கள் முற்றிலும் விரைத்துவிடும் முன்பாக நடிகர் விஜய்க்கு அவருடைய இளம் வயதில் இறந்து விட்ட அவருடைய தங்கையுடன் நிகழ்கால விஜய் இருப்பது போன்ற ஓர் ஓவியத்தை வரைந்து கொடுத்தார்! தொலைக்காட்சியில் கண்டு நெகிழ்த்த ஒரு தருணம் அது! 

 "ஆனந்த விகடனில் "மனமே மந்திரம் உடலே எந்திரம்" என்று ஒரு தொடர் 2000ங்களின் தொடக்கத்தில் இடம்பெற்றிருந்தது. ஃபிட்னஸ் வித்வான்களாக வலம் வரும் சில கலைஞர்களும், தலைவர்களும், காவல்துறை அதிகாரிகளும் தங்கள் ஃபிட்னஸ் மந்திரங்களை வாசகர்களுக்கு வாரம் ஒருவராக வழங்கிவந்த ஒரு சுவையான தொடர் அது! அதில் ஒரு வாரம் இடம்பெற்று ஆச்சர்யப்படுத்தினார் பாபு! படுத்த படுக்கையாய்க் கிடக்கும் போதும் படுத்த வண்ணமே எடைப் பயிற்சி செய்துத் தன் தோள்பட்டை, மார்பு, மற்றும் கைத்தசைகளை உறுதிப் படுத்தி அவற்றைப் பதிவு செய்திருந்தார்! "மருதநாயகம்" படத்துக்குத் தன்னைக் கமல் தயாராகச் சொல்லிருப்பதாகத் தன்னம்பிக்கை துளிர்க்க பாபு அன்று பதிவு செய்த வரிகள் இப்போது கண்ணீர்த் துளிகளைத் துளிர்க்கச் செய்கின்றன! 

 கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ஒற்றைக் கட்டிலில் முடங்கி இன்று தன் வாழ்க்கையை முடித்து விட்டார்.... இத்தனை ஆண்டு காலம் இப்படி உயிர்த்திருப்பது உள்ளும் புறமும் உற்சாகமின்றி நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை உணர்ந்துதான் அதீதம் என்று நாம் அழைக்கும் அளவுகளைத் தாண்டிய போராட்ட குணம் கொண்டிருந்தார் என்று முதலில் குறிப்பிட்டிருக்கிறேன்! 

 சில கேள்விகளுக்குக் காலத்திடம் பதில் இருப்பதில்லை அப்படிப்பட்ட ஒரு கேள்விக்குறியாய்க் காலம் குறுக்கினாலும் ஒரு horizontal ஆச்சர்யக் குறியாய் வாழ்ந்து மறைந்திருக்கிறார் பாபு! 

 Rest in peace பாபு! 

 நம் வாழ்வின் நம்பிக்கை குன்றும் தருணங்களில் எல்லாம் நம் மனக்கண்ணில் உதித்து நம்பிக்கை நல்க என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் இந்த நம் உயிர்த் தோழன் பாபு! 

 வருத்தத்துடன், 
 பிரபு எம்


Sunday, November 29, 2020

Inside Out [U] (2015)

 Inside Out (2015)




Genre: Animation
Direction: Pete Docter
Produced by: Disney and Pixar

மகிழ்ச்சியில் திளைக்கும்போதும்.... துயரத்தில் துவழும்போதும்..... பயத்தில் உறையும்போதும்.... கோபத்தில் கணன்று எரியும்போதும்.... நம் மனதிற்கு உள்ளே கேட்கும் அந்த மந்திரக்குரல் யாருடையது?!

இதோ இவர்களுடையது என்று அனிமேஷனில் காட்டும் அற்புத க்ரியேஷன் தான் டிஸ்னி மற்றும் பிக்ஸாரின் இணைத்தயாரிப்பில் 2015ஆம் ஆண்டு வெளிவந்த "Inside Out" திரைப்படம்.





ரேய்லீ எனும் அழகான குழந்தை அமெரிக்காவின் ஒரு மாகாணத்தில் பிறக்கின்றது... குழந்தை சிரிக்கின்றது..... அப்போது அந்த குழந்தையின் அகத்தில் உள்ளே அழகான ஒரு சிறுமி "ஜாய்" எனும் பெயரில் உருப்பெறுகிறாள், அவள்முன் இருக்கும் ஒரு சிறிய கண்ட்ரோல் பேனலில் ஒரு குட்டி பட்டனை ஜாய் அமிழ்த்த அமிழ்த்த வெளியே மகிழ்ச்சியில் சிரிக்கிறாள் ரேய்லீ! திடீரென்று ரேய்லீ அழுகும்போது சோகமே உருவாய், நீல நிறத்தில் இன்னொரு உருவம் மெதுவாக நடந்துவந்து "நான் தான் "சோகம்"(sadness)" என்று ஜாயிடம் அகத்தில் அறிமுகம் செய்துகொள்கின்றது! ரேய்லீ மெல்ல மெல்ல வளர்கிறாள்... உற்சாகமாக ஓட்டம் பிடிக்கும்போது நடுவே இருந்த ஒரு மின்கம்பியைப் பார்த்ததும் "பயம்"(fear) எனப்படுபவன் ஊதா கலரில் உள்ளே முளைத்து பெரும் அலறல் அலறிக் கடைசி நிமிடத்தில் கஷ்டப்பட்டு ப்ரேக்கைப் பிடித்து இழுத்து, அந்த மின்கம்பியை மிதிப்பதில் இருந்து ரேய்லீயைக் காக்கிறான்! பிடிக்காத உணவுப் பொருளை வெறுப்பதற்கு பச்சை நிறத்தில் "அருவருப்பு"(disgust) தோன்றுகிறாள், அவளது பட்டன்கள் இயக்கப்படும்போதெல்லாம் ரேய்லீ வெறுப்பையும் அருவருப்பையும் கலந்து வெளிப்படுத்தத் துவங்குகிறாள்... வெறுப்பை வெளிப்படுத்தியும் அந்த உணவு தன் பெற்றோரால் திணிக்கப்படும்போது கருஞ்சிவப்பில் கடுகடுவென முணுக் கென்று தீ பற்றிக்கொள்ளும் "Mr.கோபம்" ரேய்லியின் மனதுக்குள் தோன்றித் தன் பங்குக்கு ரேய்லீயை அவ்வப்போது கோபப்படவும் வைக்கிறார்....!




இவ்வாறாக உணர்ச்சிகளுக்கு உருவம் கொடுத்து அவற்றின் கண்ட்ரோல் பேனலின் பட்டன்களுக்கு ஆடும் பொம்மைகள்தான் நாம் என்று அழகாகக் காட்சிகள் மூலம் கதைக்களம் அமைத்தது மட்டுமின்றி, உணர்ச்சிகள் குடியிருக்கும் மனித மனப்பரப்பின் பிரம்மாண்ட அமைப்பினை அனிமேஷன் மூலம் ஓர் அனிமேஷன் உலகமாகக் கட்டமைத்துக் காட்சிப்படுத்திய விதத்தில்தான் பார்வையாளனை வெகுவாய் அசத்தியிருக்கிறார் பிரபல அனிமேஷன் பட இயக்குனர் பீட் டாக்டெர்!




மனதுக்குள் மகிழ்ச்சி, கவலை, பயம், கோபம், வெறுப்பு என்று உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டில், வெளிஉலகத்தில் சஞ்சரிக்கும் ரேய்லியின் அன்றாட வாழ்வில் அவளது உணர்வுக்கேற்ப சம்பவங்கள் நிகழ்கின்றன... அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஞாபகமாக, ஒவ்வோர் உணர்ச்சியின் நிறத்தில் ஒளிரும் கண்ணாடிப் பந்துகளாக அன்றைய நாளின் அடுக்குகளில் இடம்பிடித்துக்கொண்டேயிருக்கும்! அந்த ஒவ்வொரு நினைவின் வாயிலாகவும் தூரத்தில் ரேய்லியின் மனவெளியில் குடும்பம், நட்பு, அவளுக்கு மிகவும் பிடித்த ஹாக்கி விளையாட்டு போன்ற தனித்தீவுகள் தோன்றி அவை சார்ந்த சம்பவங்கள் மற்றும் நினைவுகள் மலரும்போதெல்லாம் அந்த தீவுகள் ஜெகஜோதியாய் மிளிர்வதை உணர்ச்சிப் பாத்திரங்கள் பார்த்து மகிழ்வர்! ஒவ்வொரு நாளின் முடிவிலும் அன்றைய நாளின் கலர் கலர் ஞாபகப் பந்துகள் மூளை நரம்புப் பாதைகளில் ஓங்கியெறியப்பட்டு ரேய்லியின் Longterm memoryயில் பிரம்மாண்ட அடுக்குகளில் அடுக்கிவைக்கப்படும்! இதையெல்லாம் இரண்டு நிமிட அனிமேஷனில் காட்சிகளாய் விரியும்போது சுவாரஸ்யம் நம்மைத் தொற்றிக்கொள்ளாமல் இருக்காது!





வெளிஉலகத்தில் ரேய்லியைச் சுற்றிக் கதையும் அவ்வப்போது நகர்ந்துகொண்டுதான் இருக்கும்... அவ்வகையில் ரேய்லியின் தந்தைக்கு பணி நிமித்தமாக மிகவும் அமைதியான அவர்களின் வாழிடத்தைவிட்டு படுபிஸியான சான்ஃபிரான்சிஸ்கோவுக்கு ரேய்லியின் குடும்பம் இடம்பெயரும்!
மனதுக்கு இனிக்காத அந்த இடமாற்றத்தோடு, ரெய்லீயின் மன நிலையில் பதின்மவயது குழப்பங்களும் சேர்ந்துகொள்ள ஒட்டுமொத்தமாக ரெய்லீயின் personalityயே மாற்றம் காணத்துவங்கும். அதனால் ரெய்லீயின் பெற்றோரைவிட அதிகம் கலவரம் அடைவது என்னவோ ரெய்லீயின் மனதுக்குள் குடியிருக்கும் கதை நாயகியான ஜாய்தான்! காரணம் மனதுக்குள் அத்தனை உணர்ச்சிகள் இருந்தாலும் மகிழ்ச்சியின் உருவகமான "ஜாய்"தான் தானாகவே தலைமைப் பொறுப்பை எப்போதும் நிர்வகிப்பாள்! அவளுக்கு ரெய்லீயின் நினைவுகள் எல்லாமே மகிழ்ச்சியின் நிறத்தில் ஜொலிக்கவேண்டும் என்று பேராசை! எப்படியாவது ரெய்லீயை மகிழ்ச்சிப்படுத்த ஜாய் எப்போதும் முயற்சி செய்துகொண்டே இருப்பாள், மற்ற உணர்ச்சிகளை இதற்காகத் தன் கட்டுப்பாட்டில் வைக்கத் தன்னுடைய இனிமையான சுபாவத்தையும் மீறிய பரபரப்புடன் திகழ்வாள் மகிழ்ச்சியின் உருவகமான "ஜாய்"! அதனால் ரேய்லீயின் core memoryயை முழுக்கத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பாள் ஜாய்... அது முழுக்கவும் மகிழ்ச்சியான நினைவுகளால் ஆனதாக இருக்கும்! ஒரு கட்டத்தில் கவலை (sadness) தன் கட்டுப்பாட்டை இழந்து அந்த core memory பந்துகளில் ஒன்றில் கையைவைக்க அது கவலையின் நிறமான நீல நிறத்தில் மாறுகிறது அதனைத் தடுக்க ஜாய் பாய ஏற்படும் களேபரத்தில் ஒருகட்டத்தில் அன்றைய நினைவுப்பந்துகள் longterm memoryயை நோக்கித் தூக்கியெறியப்படும்போது தவறுதலாக ஜாயும், sadnessஉம் சேர்ந்து மனவெளியின் தூரதேசங்களுக்குப் போய் விழுந்துவிடுவார்கள்! அடிப்படை உணர்ச்சிகளான மகிழ்ச்சியும் துக்கமும் இல்லாமல் ரெய்லீயின் பதின்ம வயது வாழ்க்கைத் தடுமாற..... ஆழ்மனதின் அடுக்குகளில் தொலைந்துபோகும் மகிழ்ச்சி மற்றும் துயர உணர்ச்சிகள் எப்படியெல்லாம் முயன்று மீண்டு வருகிறார்கள் என்பதுதான் அனிமேஷன் படங்களுக்குரிய ஹியூமர் மற்றும் அட்வென்சர் கலந்து க்ரியேட்டிவாக சொல்லப்பட்டிருக்கும் inside out-ன் மீதிக்கதை!




ஜாய் மற்றும் sadnessஇன் பயணம் ரேய்லியின் மறந்துபோன குழந்தைகால நினைவுகள், அவள் உறங்கும்போது உற்சாகமாக செயல்படும் அவளின் கனவுகளின் படப்படிப்புத் தளம், மூளைக்குள் உணர்வுகளுக்கும் அறிவுக்கும் இடையேயான தளத்தில் ஓடும் எக்ஸ்ப்ரஸ் ட்ரெயின் என்று மனதின் வெவ்வேறு விசித்திர அடுக்குகளுக்குள் ஓர் அட்வெஞ்சராகப் படம் நகர்ந்தாலும் மனித மனதையே பாகுபலியின் மகிழ்மதி போன்று ஓர் உலகமாக்கிக் காட்சிப்படுத்தும் பிரம்மாண்டம்,  திரைக்கதை சற்று சலிப்படையவைத்தாலும், தொடர்ந்து நம்மை ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கும்!

வழக்கமான ஓர் அனிமேஷன் படமாக inside out ஐச் சுருக்கிவிட முடியாது.... இது குழந்தைகளுக்கான படம் என்று சொல்வதைவிட, இப்படத்தை ஆறுமுதல் பன்னிரண்டு வயதுடைய குழந்தைகள் பெற்றோருடன் சேர்ந்து பார்ப்பது மிகவும் அழகான அனுபவத்தையும் அதையும்தாண்டிய ஒரு புரிதலையும் ஏற்படுத்தக்கூடியது... அந்த வகையில்தான் இது ஒரு முக்கியமான படைப்பாக உருப்பெறுகிறது!




உணர்ச்சிகளின் பிடியில்தான்  பெரும்பாலும் நாம் நமது உறவுகளையும் நட்புகளையும் காயப்படுத்திவிடுகிறோமே தவிர அது நம் இயற்கையான இயல்பு இல்லை என்பதை விஷுவலாக மனதில் பதியவைக்கும் வாய்ப்புப் பெற்ற ஓர் அதிசிய அனிமேஷன் இது... அதுமட்டுமன்றி சமகால உலகம் எப்போதுமே "மகிழ்ச்சி" "நிம்மதி" "பாஸிட்டிவிட்டி" என்று நேர்மறை உணர்வுகளின்மேல் ஒருவிதமான obsessionல் வெற்றியை நோக்கி மிகவும் தீவிரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் எதிர்மறை உணர்வுகளாக அறியப்படும் "கவலை" "அச்சம்" "கோபம்" போன்ற உணர்ச்சிகளின் அத்தியாவசியத்தையும் சரியான வகையில் பதிவுசெய்தவிதத்தில் மனிதனின் emotional quotient-ன் சமநிலையை மிகமிக அழகாக இந்தப் படம் புரியச்செய்கிறது!




அது இன்பமோ துன்பமோ பயமோ கோபமோ வெறுப்போ காமமோ.... உணர்ச்சிகள் நம் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவா அல்லது நாம் உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறோமா என்பதை வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் உறுதிசெய்துகொள்ளப் படத்தின் அகப் பாத்திரங்கள் கையாளும் அந்த "கண்ட்ரோல் பேனலை" ஒருமுறை மனக்கண்முன் நிறுத்திப் பார்த்தாலே போதுமானது!

ஒரு நல்ல ஃபேமிலி வாட்ச்சிங் அனுபவத்தைக் கொடுக்கும் படம் "Inside Out" இதுவரைக் காணும் வாய்ப்புக் கிட்டாதவர்கள், டிஸ்னி ஹாட்ஸ்டாரில் குடும்பத்துடன் குழந்தைகளுடன் பார்த்து மகிழுங்கள்... நடு நடுவே சற்று போரடித்தாலும் குழந்தைகளுடன் படத்தில் பங்கெடுத்துப் பார்ப்பது நிச்சியம் சிறந்த அனுபவமாகவே இருக்கும்!

Have a nice family time with "Inside Out"!

அன்புடன்,

பிரபு எம்


Monday, March 02, 2020

ஜாலியன் வாலாபாக் சமயத்தில் தற்போதைய மீடியா இருந்திருந்தால்.........

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது ஜெனரல் டயர் என்ற கோழையால் கொடூரமான முறையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட அகோர வன்முறை சம்பவமான ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபோது இப்போதுள்ள மீடியாக்கள் மற்றும் சோஷியல் மீடியா இருந்திருந்தால்..... என்று ஒரு கற்பனை.... இது  நகைச்சுவை பதிவு அல்ல என்பதை சோகத்துடன் சொல்லிக்கொள்கிறேன்!

ஜாலியன் வாலாபாக் சம்பவம் நடந்துவிட்டது அதன் முதல் ரிப்போர்ட்  ஒரு செய்திச் சேனலில்.......

காக்க..காக்க படத்தின் டைட்டில் இசையைப் போன்றதொரு வேகமான இசையை பேக்ரவுண்டில் போட்டுக்கொள்க.... ஒரு ரெட் கலர் பேக்ரவுண்டில் சுமார் இருபது நிமிடங்களுக்கு..... ப்ரேக்கிங் நியூஸ் என்று கொட்டெழுத்தில் வந்து வந்து போகும்....

பிரேக்கிங் நியூஸ்: 

ஜாலியன் வாலாபாக்கில் வன்முறை! போலீஸ் துப்பாக்கிச்சூடு......

சுதந்திரப் போராட்டக்காரர்கள் நடத்திய கூட்டத்தில் போலீஸ் தாக்குதல்.... துப்பாக்கிச்சூடு நடந்திருப்பதாகத் தகவல்!


பக்கத்து சேனலில் ”திருடா... திருடா...” பட தீம் மியூஸிக் போல வேறொரு டெரர் மியூசிக்குடன்....

பிக் பிரேக்கிங்....

ஜாலியன் வாலாபாக்கில் போலீஸூக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல்..... துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி பலர் படுகாயம்... பலி எண்ணிக்கை உயரலாம் என அச்சம்!

சேனல்-1 ல் செய்தியாளர்:  ஜாலியன் வாலாபாக்கிலிருந்து முதல் காட்சிகள் வெளிவந்திருக்கின்றன அவை உங்கள் பார்வைக்கு.....

காட்சி: துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்துக்கு அருகில் கேமரா வைக்கப்பட்டுள்ளது... தரையில் ரத்தக்கறைகளும் பத்துப் பதினைந்து தோட்டாக்களின் ஷெல்களும் தெரிகின்றன... அடுத்த ஃபுட்டேஜில்  நான்கைந்து சடலங்கள் அப்புறப்படுத்தப் படுவது தூரத்தில் தெரிகிறது.... போலீஸ் இங்குமங்கும் ஓடுகிறார்கள்....
பத்திரிக்கையாளர்களைப் போலீஸ் விரட்டுகிறார்கள்......

இந்த ஐந்து ஃபுட்டேஜ்களை 24 முறை ஒளிபரப்புகிறார்கள்...

பேக்ரவுண்டில் செய்தியாளர்: காவல்துறை எச்சரிக்கையையும் மீறி இன்றும் ஜாலியன் வாலாபாக்கில் போராட்டக்காரர்கள் பெருமளவில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது... அப்போது காவல்துறை அவர்களைக் கலைந்து செல்லுமாறு கூறியபோது அங்கு லேசான மோதல் நடைபெற்றதாகத் தெரிகிறது அதன்பிறகு ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தெரிகிறது... உறுதியான தகவல்களைத் தெரிந்துகொள்ள எமது செய்தியாளர் சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கிறார் விரைவில் அவரிடம் நேரடியான விவரங்களை அறிந்துகொள்ளலாம்....

சேனல்-2ல் ஓர் அரங்கு அமைக்கப்பட்டுவிட்டது.......

மூத்த பத்திரிக்கையாளர்..
சுதந்திரப் போராட்டக்காரர்
காந்தியவாதி
பிரிட்டிஷ் ஆதரவாளர்
பிரிட்டிஷ் இண்டியாவின் ஓய்வு பெற்ற கலெக்டர்

அமர்ந்திருக்கிறார்கள்......

தொகுப்பாளர்: ஜாலியன் வாலாபாக் போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து அங்கு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 8 பேர் பலியாகியிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது... இது மேலும் உயரக்கூடும் என்றும் தெரிகிறது.... நான் முதலில் சுதந்திரப் போராட்டக்காரரிடமிருந்து ஆரம்பிக்கிறேன்... (அவரை நோக்கி) வணக்கம்... நீங்க இந்த சம்பவத்தை எப்படிப் பாக்குறீங்க ?

சுதந்திரப்போராட்டக்காரர்: என்ன சார் வன்முறை, துப்பாக்கிச்சூடுனு சொல்லுறீங்க? போராட்டத்துல எங்கசார் வன்முறை நடந்துச்சு?? அமைதியா போராடுன மக்களைக் கொடூரமா சுட்டுக்கொன்னுருக்காங்க ஜாலியன் வாலாபாக் படுகொலைன்னு சொல்லாம ஜாலியன் வாலபாக் வன்முறை சம்பவம் - போலீஸ் துப்பாக்கிச்சூடுன்னு சொல்லிட்டு இருக்கீங்க...

பிரிட்டிஷ் ஆதரவாளர்: சார்... வன்முறை நடக்கலைன்னு எப்படி சொல்லுறீங்க? போனவாரம் போராட்டம் நடக்குறதுக்கு முன்னாடி மூணு பிரிட்டிஷ் அதிகாரிகளைத் தாக்கத் திட்டம் போட்டு வாட்ஸப்-ல பரப்பியிருக்காங்க... போராட அனுமதி மறுத்ததுக்கு அப்புறமும் இத்தனை பேர் ஓரிடத்தில் குவிஞ்சா எந்த நேரமும் வன்முறையாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்குது சார்... சட்ட ஒழுங்கை அப்புறம் யார் பாதுகாக்குறது??

 நெறியாளர்: (சுதந்திரப் போராட்டக்காரர் மற்றும் காந்தியவாதியை அமைதி காக்க சொல்கிறார்) சரி இந்தப் போராட்டத்துக்கு முறைப்படி அனுமதி வாங்கலன்னு ஒரு விஷயத்தைப் பதிவு செய்கிறார்  நம்ம நண்பர்.... இதை நீங்க எப்படிப் பாக்குறீங்க சார்....

பிரிட்டிஷ் இண்டியா முன்னாள் கலெக்டர்: ப்ரோட்டாக்கால் படி ஒரு போராட்டத்துல துப்பாக்கி சூடு நடந்திருக்குன்னாலே அங்க கலவரம் தூண்டப்பட்டிருக்குன்னு தான் அர்த்தம்.. சும்மா உணர்ச்சிவசப்பட்டுப் பேசுறதுல அர்த்தம் இல்ல... தன்னிச்சையா முடிவு பண்ணி இப்படி ஒரு துப்பாக்கிச்சூடு நடத்திட முடியாது.... கலவரத்தைத் தூண்டும்படியா அங்க சம்பவங்கள் நடந்திருக்கும் நிச்சியமா....

இப்படியாகப் பேசிக்கொண்டிருக்கும்போது அடுத்த ப்ரேக்கிங் நியூஸ்:

ஜாலியன் வாலாபாக் வன்முறையில் துப்பாக்கிச்சூடு: நாடு முழுவதும் பல்வேறு வன்முறை சம்பவங்கள் - அவசர நிலை பிரகடனம்...
போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்காமல் அறவழியில் போராடுமாறு ட்விட்டரில் காந்தி வேண்டுகோள்!


இதனையடுத்து ஃபேஸ்புக்கில் “ நாட்டாமை” பட மிக்சர் மீமில் காந்தியை வைத்து அதிக அளவில் மீம்கள் பகிரப்பட்டு வைரல் ஆகிறது...
பொறுத்தது போதும் பொங்கி எழு தீமிலும் பல்வேறு மீம்கள் வைரல் ஆகிறது.....

#மிக்சர் காந்தி என்று ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்யப்படுகிறது..
#I_stand_with_Gandhi என்று இன்னொரு ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகிறது...
#கொலைகார_பிரிட்டிஷ்_அரசு என்று ஒரு ஹேஷ்டேக் சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆக பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாகவும் சில ஹேஷ்டேக்குகள் இந்தியாவில் அரசு ஆதரவாளர்களால் ட்ரெண்டாக்கப் படுகிறது....(#கொலைகார_பிரிட்டிஷ்_அரசுஹேஷ்டேக் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தானிலிருந்து உருவாக்கப்பட்டிருப்பதாக  பிரிட்டிஷ் அரசு ஆதரவாளர்கள் பேட்டி கொடுக்கிறார்கள்!)

உயிரிழந்தோர் எண்ணிக்கை இப்போது 100 ஐத் தாண்டிவிட்டது....

சமூக வலைதளங்களும் சேனல்களும் பயங்கர பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன....

நிற்க......

இதற்குமேல் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை சமகாலத்தில் மீடியாக்களோடும் சமூக வலைதளங்களிலும் தொடர்பில் இருப்பவர்களால் எளிதில் கிரஹித்துக் கொள்ள முடியும்!

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஏப்ரல் 13, 1919ம் ஆண்டு இருந்த தொழில் நுட்ப வளர்ச்சிக்கு அந்த சம்பவம் பற்றிய செய்தி தமிழகம் வந்து சேர்வதற்கே ஒரு வாரம் கூட ஆகியிருக்கலாம்! ஆனாலும்கூட வரலாற்றில் எவ்விதக் குழப்பமும் இல்லாமல் ஜாலியன் வாலாபாக் படுகொலை (Jalian Wala Bhag Massacre) என்று தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது அந்த சம்பவம்!  அன்றைய செய்திகள்தான் இன்றைய வரலாறுகளாக நமக்கு பதிந்து தரப்பட்டுள்ளது... ஆனால் இன்றைய செய்திகள் நாளைய தலைமுறைக்கு எப்படிப்பட்ட வரலாறுகளாக போய்ச் சேரும் என்று யோசித்துப் பார்த்தால் அவரவர் சார்ந்திருக்கும் கட்சி, சித்தாந்த, சாதி மற்றும் மத சார்பு நிலைகளுக்கு ஏற்றவாறு,  நாட்டில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்துக்கும், தரவுகளைத் தரும் மீடியாக்களும் இணையதளப் பதிவுகளும் தாரளமாய்க் கிடைக்கின்ற சமகாலத்தில் வாழ்ந்துவரும் நமக்கு சிரிப்பதா அழுவதா என்று இனம் புரியாத உணர்வுதான் எழுகிறது!

ஒரு சாதாரண மனிதன்கூட நொடிக்கு நொடி நடக்கும் சம்பவங்களை லைவ் டெலிகாஸ்ட் செய்யும் அளவு வளர்ந்துவிட்ட மீடியா தொழில் நுட்பத்தினால் செய்திகளும் தகவல்களும் வேகமாகப் பரவுகிறதே தவிர துல்லியமாக சென்றடைகிறதா என்னும் கேள்விக்கு மோர்ஸ் கோடுகளிடம் , வாட்ஸப் ஃபார்வோர்டுகள் தலைகுனிந்துதான் நிற்க வேண்டும்!
வந்தந்திகள் பரப்பப் பயன்படும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் செய்திகளைப் பகிரப் பயன்படுத்துக்கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு ஆபத்தானது?

மேலும் ஜாலியன் வாலாபாக் படுகொலை என்று இப்போது எல்லா வரலாறுகளிலும் (பிரிட்டிஷ் பதிவுகள் உட்பட) தெளிவாக இடம்பெற்றிருக்கும் அந்தக் கொடூர சம்பவம் இப்போது நடந்தால் ஒருசில மீடியாக்களின் ஆசீர்வாதத்தினால் ஜாலியன் வாலாபாக் வன்முறை சம்பவமாகவும் ஜாலியன் வாலாபாக் என்கவுண்டர் என வெவ்வேறு நாமகரணங்கள் பெற்றிருந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை என்றே தோன்றுகிறது!

பதிவின் நீளம் கருதி இதோடு முடிக்கிறேன்.....
சமகால மீடியா சாதனங்களின் மீதான பொதுப்படையான விமர்சனமாகவே இந்தப் பதிவைப் பதிகிறேன் இது தொடர்பாக உங்களின் நேர்மறை/எதிர்மறைக் கருத்துக்களையும் தயவுசெய்து பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்.... 

அன்புடன்,
பிரபு எம்.


Monday, February 24, 2020

க்வேடென் பேய்ல்ஸ் - ஆஸ்திரேலியாவின் அழகு மகன்!

 தினம்தினம் தன்மேல் புரளும் ஆயிரமாயிரம் அசிங்கங்களையும் அருவருப்புகளையும் ஒரே நாளில் கழுவிக்கொண்டது இணையம், உலகெங்கும் பிரிந்துகிடக்கும் மனிதங்களையெல்லாம் நொடிப்பொழுதில் இணைக்க முடிந்த தன் வியத்தகு ஆற்றலால்! எந்தவொரு கடவுளுக்கும் அந்த வீடியோவைப் பார்த்த கணம், அந்தக் குழந்தையை அரவணைத்து அடுத்த நொடியே அவனை மகிழ்விக்கத் தான் என்ன செய்யவேண்டும் என்கிற தவிப்புதான் மேலோங்கியிருக்கும்... ஆனால் கடவுளர்களின் குற்ற உணர்வு ஒருவேளை அவர்களைத் தாமதித்திருக்கலாம்..... மனிதர்களின் உடல்ரீதியான ஊணங்கள் கடவுளின் ”படைத்தல் பிழை” என்று சொல்வதுண்டு ஆனால் இங்கு கடவுளின் குற்ற உணர்ச்சிக்குக் காரணம் ஊணங்களைப் படைத்துவிட்ட பிழைக்காக இருந்திருக்காது மாறாக உடல்ரீதியான தோற்றக் குறைபாடுகளை முன்வைத்து இன்றும்கூட நெஞ்சங்களை நசுக்கும் அருவருப்பான ஜந்துக்களுக்கு உயிர்கொடுத்த பாவத்துக்காகத்தான் இருக்கும்!

                            



கடவுள்களின் தாமதம் நல்லதாகிப்போனது, அந்தப் பொறுப்பை இணையத்தால் இணைந்த இதயமுள்ள மனிதர்களே கையிலெடுத்து, சில மனிதர்களின் அருவருப்பான செயல்பாடுகளால் ஆரம்பித்த கதைக்கு அழகான ஒரு முடிவைக் கொடுத்து நெகிழவைத்து விட்டார்கள்! அண்டவெளியில் உயிர்கள் வாழும் பூமிக்கோளில் ஒரு மகத்தான நாள் நேற்று என்றுதான் இதைச் சொல்லவேண்டும்!

கடந்த 19ம் தேதி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பகுதியில் 9 வயது சிறுவன் க்வேடென் பேய்ல்ஸ் தனது உடல்ரீதியான தோற்றக் குறைபாட்டின் காரணமாக சக மாணவர்களால் கடுமையான முறையில் துன்புறுத்தலுக்கு ஆளானதில் பள்ளியிலிருந்து அவனை அழைக்கவைந்த தன் அம்மாவிடம், காரில் வெடித்து அழுதிருக்கிறான்.... ஆற்றாமையில் உழன்ற அந்தத் தாய் தன் குழந்தையின் குற்றமற்ற வேதனை உணர்ச்சிகளை உலகத்துக்கு ஓளிபரப்ப..... ( நான் அந்த வீடியோவைப் பார்க்கவில்லை பார்க்கப்போவதுமில்லை!) உலகெங்கும் வேற்றுமைகள் மறந்து வெறும் மனித உணர்வுகளால் தழுதழுத்து, உணர்ச்சிவேகத்தில் அந்த அழுகையை நிறுத்தி அவனைப் புன்னகைக்க வைக்க என்ன செய்யவென்று தெரியாமல் என்னென்னல்லாமோ செய்து திக்குமுக்காட வைத்துவிட்டது! :-)

                                



சம்பவம் நடந்த இரண்டொரு நாட்களில் ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையேயான ரக்பி பந்தயத்தில் ஆஸ்திரேலிய அணியை முன்னடத்தி அழகாக நடந்துவந்தான் க்வேடென் பேய்ல்ஸ் அந்த அணியினரின் சீருடையில்,  ஆஸ்திரேலிய கேப்டனின் கையைப் பற்றிக்கொண்டு! அந்தப் புகைப்படம் உலகளவில் கோடிக்கணக்கான முறை மகிழ்வுடனும் திருப்தியுடனும் பகிரப்பட்டது.... இதுதவிர, யாரோ ஒரு நபர் க்வேடெனின் பெயரில் ஒரு "Gofundme" பேஜை உருவாக்கி.... க்வேடனை நான் டிஸ்னிலேண்டிற்கு அழைத்துச் சென்று அவனை மகிழ்விக்க வேண்டும் பத்தாயிரம் டாலர் பணம் நன்கொடை தருக என அறிவிக்க மணிப்பொழுதில் அந்தப் இணையப் பக்கத்தில் சுமார் நான்கு லட்சம் டாலர்கள் பணம் குவிந்திருந்தது! மேலும் மேலும் பல gofundme pages க்வேடனின் பெயரில் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி உருவாக்கப்பட்டன.... ஓர் அழுகையை ஆனந்தமாக்கிவிட உலகெங்கும் மனிதர்கள் அறிவு, அர்த்தங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உணர்ச்சிவசப்பட்டு சகட்டுமேனிக்கு செய்த காரியங்கள் எல்லாம் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு எதிர்கால உலகத்தின் மேல் நம்பிக்கையை விதைத்தது!

Body shaming என்று சொல்லப்படும் அசிங்கமான பழக்கத்தை இன்றும் உலகம் தொடர்வது மிகமிகக் கேவலமானது. நிறம், உடல்பருமன், உயரக்குறைவு, முடிஉதிர்தல் போன்ற இயற்கையான தோற்ற நிலைகளை ஒரு குற்றத்தைப் போல் முன்னிருத்தி வாழ்நாள் முழுதும் ஒருவிதமான பாதுகாப்பாப்பற்ற மன நிலையோடே சம்பந்தப்பட்டவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் வதைத்தெடுக்கும் அருவருப்பான பழக்கத்தைத் தயவுசெய்து விட்டொழிக்கவேண்டும்....!

ஓர் அழகான (relatively deceptive!) பெண்ணையோ ஆணையோ பார்க்கும்பொழுது மனித மூளையின் எந்தப் பகுதியில் நியூரான்கள் கிளர்ந்து எழுகின்றன எந்த உணர்வை எழச்செய்யும் எந்தெந்த ஹார்மோன்கள் உடலளவில் செயல்படுத்தப்படுகின்றன எனும் தகவல்கள் வரை விஞ்ஞானம் கட்டுடைத்து பப்ளிஷ் செய்துவிட்டது ஆனால் இன்னும் “அழகு”, ”அசிங்கம்” என்கிற, மிகமிக அற்பமான , இடம் பொருள் சூழல் வயது போன்ற அடிப்படைகள் மாற மாற, அதுசார்ந்த அர்த்தமும் அளவீடுகளும் மாறக்கூடிய, உபயோகமற்ற டிஸ்ட்ராக்‌ஷன்களைக் (distraction!) கூட இன்னும் மனித இனம் இத்தனை நூற்றாண்டுகளில் கடக்க முடியாததை எண்ணும் போது ஆறறிவு உயிரனம் இயற்கையால் ஏளனம் செய்யப்படத் தகுந்ததாகவே தோன்றுகிறது.... இந்த தோல் நிறம், சதை பலம், எலும்புமண்டல அமைப்பு, இவற்றையெல்லாம் தாண்டி ஊடுறுவிச் சென்றபின் தான் மனம், அறிவு, குணம் போன்ற மனிதனின் நிஜ அடையாளங்கள் குடிகொண்டுள்ளன... அதை இன்னும் அணுகக்கூட பெரும்பாலான ஜனம் எத்தனிப்பதில்லை என்ற அவமானகரமான உண்மைதான் வெளிப்படுகின்றது இதுபோன்ற body shaming அவலங்கள் உலகெங்கும் அடிக்கடி நிகழும்போது!

இவையெல்லாம் அதிகம் நிகழ்வது பள்ளிக்கூடங்களில் என்பதுதான் மேலும் வேதனையான விஷயம்.....பெற்றோர்கள் இதுபோன்ற விஷங்களை கவனத்துடன் கையாண்டு ஓர் ஆரோக்கியமான பார்வையைத் தங்கள் பிள்ளைகளிடத்தில் விதைத்திட வேண்டும், அது தவறும் பட்சத்தில், கல்விமுறைகளும், ஆசிரியர்களும்  மூர்க்கமான முறையில் இதனைத் தடுத்திட வேண்டும்! இதற்கு சட்டங்களும் துணைசெய்ய வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்..... க்வேடன் பேய்ல்ஸ் இப்போது தன்னைத் துன்புருத்திய கோமாளிகளுக்கு சிரித்துக்கொண்டே நன்றி சொல்வான் தன்னை உலகமே கொண்டாட வாய்ப்பளித்த அவர்களின் அற்பத்தனத்துக்காக! 

க்வேடென்களை க்வேடென்களாக இயல்பாய் அழகாய் வாழ இயற்கை வழிசெய்கிறது அதனைத் தொந்தரவு செய்யும் கேவலமான செய்கைகளை மட்டும் நாம் தவிர்த்தால் போதும்!

அன்புடன்,
பிரபு எம்



Sunday, February 16, 2020

மனசுல பட்டது -2: சிஏஏ பல கேள்விகளும் ஒரே பதிலும்!

ஒரு ஜனநாயகத்தின் ஆரோக்கியம் சாமானியர்களால் தொடர்ந்து எழுப்பப்படும் கேள்விகளால் பாதுகாக்கப் படுகிறது என்று முன்பொருகாலத்தில் (பழைய )இந்தியாவில் நம்பப்பட்டுவந்தது! புதிய இந்தியாவில் கேள்வி கேட்பதை எல்லாம் கிட்டத்தட்ட தேசவிரோத செயல்பாடுகளில் சேர்த்தாகிவிட்டது! அதையும் தாண்டி கேள்வி எழுப்பும் ஆண்டி-இண்டியன்களுக்குக் கிடைக்கும் பதில்கள் என்னவோ “என்ன கையபுடிச்சு இழுத்தியா???” ரக பதில்களே!

”குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால் இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது”

இதுதான் சிஏஏ ஆதரவாளர்களின் ஒரே பதில்! நீங்கள் எந்தவொரு கேள்வியை எந்தமாதிரி முன்வைத்தாலும் உங்களுக்குக் கிடைக்கப்போகும் “திரும்பத் திரும்பப் பேசுற நீ..” பதில் இது ஒன்று மட்டுமே!

இந்த பதிலோடு கொஞ்சம் ஆக்‌ஷன் கொஞ்சம் செண்டிமெண்ட் சேர்த்து சமீபத்தில் ஒரு வசீகரமான ஆண் குரலொன்று சென்னையில் ஒலித்தது! அதாவது.... இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது, நாங்கள் பாகிஸ்தான் செல்லமாட்டோம் இங்குதான் இருப்போம் என்று முடிவெடுத்து இங்கேயே இருந்த இந்தியர்கள்தான் இந்திய முஸ்லீம்கள் என்று ஒரு செண்டிமெண்ட் டச் வைத்து அவர்களுக்கு ஒரு பிரச்னை என்று சொன்னால் முதல் ஆளாக நின்று போராடுவேன் என்று ஒரு ஆக்‌ஷன் பஞ்சும் வைத்து முழங்கியதைக் கேட்க மிகவும் அற்புதமாக இருந்தது.... ஆக சிஏஏவினால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை... (அடப் பாவிகளா என்னையும் சொல்ல வெச்சுட்டீங்களேடா இதே பதிலை!) அப்படியே ஆபத்து வந்தாலும் அவர்களுக்காகப் போராட ஒரு பாட்ஷாவும் இருக்கிறார்! இனிமேல் என்ன பிரச்னை என்னும் நிலையில் ஒரு சின்ன டவுட்டு வந்தது அது என்னன்னா....

பிரிவினையின் போது பாகிஸ்தானுக்குச் செல்ல மாட்டேன் என்று முடிவெடுத்து இந்தியன் என்னும் நிலையில் இந்திய முஸ்லீம்கள் உறுதியாக இருந்தார்கள் என்று சொல்லும்போது சிலிர்க்கிற அதே வேளையில்..  அதே பிரிவினையின் போது...... இந்தியா வந்துவிட முழுமையான வாய்ப்பிருந்தும், அன்பாக அரவணைத்துக்கொள்ள இந்தியா தயாராக இருந்தபோதும், எங்களுக்கு இந்தியா வேண்டாம், பாகிஸ்தான் தான் வேண்டும் என்று முடிவெடுத்த பாகிஸ்தானிய இந்து, கிறிஸ்தவ, சமண, சீக்கியர்கள் எல்லாருமே முழு விசுவாசமுள்ள பாகிஸ்தானியர்கள்தானே....!

சாதாரணமாக அரசை நோக்கி ஏதாவது கேள்விகேட்டாலோ அல்லது நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பற்றிப் பேசினாலோ கூட, நீ இந்தியன் இல்லை பாகிஸ்தானி.... பாகிஸ்தானுக்குப் போ என்று சீறும் திடீர் தேசபக்தர்கள், இந்தியாவை நிராகரித்து, பாகிஸ்தானைத் தங்கள் தேசமாக்கிக்கொண்ட விசுவாசமுள்ள பாகிஸ்தானியர்கள்மீது வெறும் மதத்தின் அடிப்படையில் அதீத அக்கறையும் கரிசனமும் கொண்டு அன்புக்கரம் நீட்டி வரவேற்கும் போக்குதான் மிக ஆபத்தானதொரு முரண்பாடு! கிரிக்கெட் போட்டிகளில் கூட ஒரு போரின் ஆக்ரோஷத்துடன் மோதிக்கொள்ளும் பகை நாடாக உச்சரிக்கப்படும் நாட்டைச் சேர்ந்தவர்களைக்கூடத் தன் மத அன்பர்களாக அங்கீகரிக்க முனைய முடிகிறது சில “தேச பக்தர்களால்”... அப்படியென்றால் தேசம் இங்கு மிகத் தெளிவாக இரண்டாம் பட்சம் தான் என்பதுதானே மிக அலட்சியமான நடையில் பதிவாகிறது.

இதைக் கேட்டாலும் அதுதான் இந்தியாவில் வாழும் முஸ்லீம்களுக்கு என்றுதான் ஆரம்பிப்பார்கள்... கேள்விகளால் இனி ஒன்றும் ஆகப்போவதில்லை வெறும் எலக்‌ஷன் மட்டும் நடக்கும் இந்தப் பெரும்பான்மை ஜனநாயகத்தில்!

பிரபு எம்




Tuesday, March 13, 2018

மனசுல பட்டது - 1 : ”குரங்கனி காட்டுத்தீ விபத்து”.

குரங்கனியில் ஏற்பட்ட காட்டுத்தீயில், மலையேற்றப் பயிற்சிக்காகச் சென்ற குழுவினர், சிக்கிக்கொண்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது... ஆழ்ந்த வருத்தத்துக்குரியது.

இந்த துர்சம்பவத்தை எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் இறுதியில் இது ஒரு “விபத்து”தானே தவிர இதில் காற்றையும் நெருப்பையும் தாண்டி வேறு எவரையும் குற்றம் சொல்வது மனிதாபிமானமற்ற மாபெரும் தவறாகும். அப்துல் கலாம் முதல் ஸ்ரீ தேவி வரை அத்தனை மரணங்களையும், முகாந்திரம் இல்லாத சந்தேகங்களை முன்வைத்து சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும், கொச்சைப் படுத்துவதைத் தொழிலாகவே சிலர் செய்துவரும் இத்தகைய துரதிர்ஷ்டவசமான நிகழ்காலத்தில்  வாழ்ந்துவரும் பரிதாபத் தமிழர்கள் நாம்! குற்றம், குறை, சந்தேகம் என்றே பரபரப்புக்குப் பலியாய்க் காத்திருக்கும் நமது ஊடகங்கள்,  கோரமான இந்த விபத்தையும் ஆரம்பம் முதலே, அரசாங்கம் முதல் இந்த மலையேற்றப் பயிற்சியை ஏற்பாடு செய்த அமைப்பு வரை யாரையாவது  குற்றஞ்சாட்டும் நோக்கிலேயேதான் தகவல்களைப் பதிந்து வருகிறார்கள். உடனே பயந்துபோன இந்த மூடர்கூடமும் (அதாவது ஈபிஎஸ்-ஓபிஎஸ் அரசாங்கம்), ”முறைப்படி அனுமதி பெறாமல் அவர்கள்  மலையிலேறியிருக்கிறார்கள்” என்று அறிவிக்கிறது..... உடனே அந்த கிளப் உறுப்பினர்கள் தலைமறைவு என ஊடகங்கள் பரபரப்பேற்றுகின்றன!

ஏன் இவ்வளவு வன்மம் பிடித்து அலைகிறோம்? இந்த விபத்தில் மிகக் கடினமான மீட்புப்பணியானது இன்னும் நடந்துகொண்டிருக்கின்றது. தீக்காயங்களுடன் உயிர்பிழைத்த இளைஞர்களின் வாழ்க்கை எப்படி இருக்கப்போகிறது? என்பது மிகவும் வேதனையான கேள்விக்குறி! அப்படியிருக்கையில், இந்த சம்பவத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் மட்டுமே மிகுதியாக உண்டு......

இதனை எதிர்பாராத ஒரு விபத்தாகப் பார்த்து, இந்த விபத்து நமக்குக் கொடுத்திருக்கும் அதிர்ச்சிகளை ஆராய்ந்து அவற்றைத் தவிர்ப்பதற்கான எதிர்கால நடைமுறைகளை அரசாங்கமோ/ அமைப்புகளோ செய்ய வற்புறுத்தும் விதமாகத்தான்  நமது சமூக வலைதளப் பதிவுகள் இருக்கவேண்டுமே தவிர, பொறுப்பற்ற  நமது ஊடகங்களின் வியாபாரத்துக்கு நாம் பலியாகிவிடக்கூடாது!

என்ன நடந்தாலும் அதற்கு ஒரு வில்லனைத் தேடுவதும், கிடைக்காவிட்டால் உருவாக்கிவிடுவதும் ஓர் ஆபத்தான வன்ம மனநிலை. இது இப்படியே தொடர்ந்தால், ஒரு சமுதாய மனச்சிதைவையே உருவாக்கிவிடும். ஆகவே, விபத்துகளை விபத்துகளாகப் பார்ப்போம்.... சம்பவங்களைக் கதாபாத்திரங்களாக்குவதைத் தவிர்ப்போம்!

உயிரிழந்த காயமடைந்தவர்களுக்காக ஆழ்ந்த வருத்தத்துடன்,

பிரபு எம். 

Monday, October 09, 2017

கல்லீரல் , கிட்னி மற்றும் பரோல்!

ஒருபுறம் சிறைச்சாலை.... பரோல்....

மறுபுறம் மருத்துவமனை..... உறுப்புதானம்!

ஒரு கணவன்... ஒரு மனைவி... மற்றும் சில உறவினர்கள்...


இந்த விஷயத்தையொட்டி, நடந்த, நாமனைவரும் அறிந்த சம்பவங்களின் தொகுப்பு மட்டுமே இந்தப் பதிவு அதன்பிறகு ஒரு சின்ன சந்தேகம் அவ்வளவுதான்....

சிறைச்சாலைப் பின்னணியில் ஷாப்பிங் போன சர்ச்சை வீடியோ ஆதாரங்களுடன் வெளியானது....  "5 ஸ்டார் ஜெயில்" போன்ற விஷயங்கள் நமது மூளையின் ஞாபக அறைகளில் எந்த அடுக்கில் உள்ளது என்பதை ஒருமுறை சரிபார்த்துக்கொள்க:( லைட்டா மறந்தமாதிரி இருக்குல்ல??!!)

1)  "பரோல் மறுக்கப்பட்டது" என்று ஒரு தலைப்புச் செய்தி தொடர்ந்து எல்லா சேனல்களிலும் இணையங்களிலும் அடுத்த நாள் செய்தித்தாள்களிலும் முறையே பிரேக்கிங் நியூஸ் மற்றும் தலைப்புச் செய்தி ஆனது!

உள்ளே வாசித்துப் பார்த்தால் மெடிக்கல் சர்டிஃபிகேட் இணைக்கப் படவில்லை என்று ஒரு காரணம் சிறைத்துறையில் இருந்து கொடுக்கப்படுகிறது! (இது என்ன பெரிய பிரச்னையா? வீக்கென்ட் (Weekend) முடிந்தவுடனேயே மருத்துவச் சான்றிதழை இணைத்து மீண்டும் விண்ணப்பத்தால் எளிதில் கிடைக்கப்போகிறது அவ்வளவுதானே! என்று தோன்றியது)

2 ) சிவப்புக் கட்சியில் இருப்பதாக சொல்லப்படும் ஒரு மூத்த தலைவர் "பரோல் மறுக்கப்படுவது மனிதாபமானமற்ற செயல்" என்று சம்பந்தமே இல்லாமல் கூவுகிறார்! இவரது நிறம் சிவப்புதான் ஆனால் கடந்த சில வருடங்களாகவே "இலை"யுடன் பாக்கு,சுண்ணாம்பு சேர்த்து குதப்பினால் மட்டுமே "சிவப்பு" தோன்றும் என்று உறுதியான நம்பிக்கையுடன் செயலாற்றும் கிழவராகத்தான் இவர் திகழ்கிறார்!

3) 'பரோல் கிடைப்பதில் மட்டுமல்ல, உறுப்புகள் கிடைப்பதிலும் பல்வேறு இடைஞ்சல்களை சந்தித்து வருகிறோம், இதையெல்லாம் யார் செய்கிறார்கள் ஏன் செய்கிறார்கள் என்பதற்குள் செல்லவில்லை ஆனால் இவை நல்லதல்ல' என்கிற ரீதியில் சம்பந்தப்பட்டவர்களின் முக்கிய உறவினர் ஒருவர் பேட்டி கொடுக்கிறார் அதுவும் பிரேக்கிங் நியூஸ் ஆகிறது!

4) உறுப்புகள் தானமாகக் கிடைக்கப்பெற்றதில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன!

5) அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிகிறது.....

6) பரோல் கிடைக்கிறது..... 15 நாட்கள் கேட்கிறார்கள் 5 நாட்கள் மட்டும் கிடைக்கிறது ... நிபந்தனைகளுடன்.... (ஒரு நிபந்தனை என்னவென்றால் யாரையும் தன்னிடம் வரவழைத்து சந்திக்கக்கூடாது ஆனால் தானாக வரும் நபர்களை சந்திக்கலாம்! யாருக்காவது தெளிவாகப் புரிந்தால் தயவுசெய்து விளக்குங்கள்!)

7) பல்வேறு செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.....

இவையெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்... பொதுவாகவே ஒரு விஷயம் அடிக்கடி சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது அது என்னவென்றால், பல்வேறு செய்திகளின் மூலம் "மக்களின் கவனத்தை திசை திருப்புவது" எனும் விஷயம்தான்! அதன் அடிப்படையில் எழுந்த சில சந்தேகங்கள் பின்வருமாறு:

1)  பரோல் நிராகரிக்கப்பட்டது பிரதான தலைப்புச் செய்தியாக கொட்டெழுத்தில் வந்தது, செய்தியின் உள்ளே சிறிய எழுத்துகளில் அதற்கான உப்புசப்பற்ற காரணம் இருந்தது அதன்பிறகு பரோல் கிடைத்தபோதும் 15 நாட்கள் கேட்டதற்கு 5 நாட்கள்தான் கிடைத்திருக்கிறது மேலும் நிபந்தனைகள் என்று எல்லாமே மிகவும் முறைப்படி ஒரு கண்டிப்புடன் நடப்பதுபோல் தோன்றுகிறதா இல்லையா? இவ்வளவு கண்டிப்பு காட்டும் அண்டை மாநில சிறை நிர்வாகம் ஏன் பழைய "ஷாப்பிங்" சர்ச்சையை இன்னும் தெளிவாக ஆதாரப்பூர்வமாக மறுக்கத் தயங்குகிறது??

2) உறுப்புகள் கிடைப்பதில் தாமதம் மற்றும் எண்ணற்ற இடைஞ்சல்கள் (அரசு தரப்பிலிருந்து என்னும் உள்ளர்த்தத்துடன்) கொடுக்கப்பட்டது என்னும் சேதி முதன்மை ஊடகங்களில் தெளிவாகப் பதியப்பட்டது.... ஆனால் உறுப்பு மாற்றத்தையொட்டி வெளிவந்த பல விதிமீறல்கள் நேரடியாகப்  புலனாய்வு பத்திரிக்கைகளின் கன்டென்டுக்கு சென்றுவிட்டதே? ஏன்?

உடல்நிலை சம்பந்தப்பட்ட நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு தரப்பு கடுமை காட்டுவதாக ஒருபுறம் செய்திகள் அழுத்தமாகப் பதியப்படும்போது, "விதிமீறல்கள்" விஷயத்தில் இதுவரை அரசுதரப்பில் இருந்து எந்தக் கேள்வியும் எழுப்பப்பட்டதாகத் தெரியவில்லை! இரு தரப்புகளுக்கிடையே கடுமையான மோதல் இருக்கும்போது "மனிதாபிமானம்" இல்லாத அளவுக்குக் கடுமைகாட்டும் அரசு, எதிர்த்தரப்பில் இருக்கும் வெளிப்படையானதொரு லூப்-ஹோலை (Loop hole) இவ்வளவு எளிதாக எப்படி விட்டுவைத்திருக்கிறது??? முதலில், அரசுத் தரப்பின் ஒப்புதலும் ஒத்துழைப்பும் இல்லாமல் இப்படி கல்லீரல் மற்றும் கிட்னி கிடைப்பதில் சீனியாரிட்டி முதல் மொத்த உடலையும் அவசர விமானத்தில் எடுத்துச்சென்றது வரை இவ்வளவு சந்தேகத்துக்குரிய ஒரு விஷயம் நடந்திருக்க வாய்ப்பு உண்டா??

நிகழ்காலத்தில் அமைச்சர்களின் மங்குனித்தனமான ஸ்டேட்மெண்டுகளைப் பார்த்தால், உண்மையிலேயே இவர்கள் மோதிக்கொள்கிறார்களா? அல்லது இதுவும் சும்மாக்காச்சுக்கு சண்டைதானா? என்று எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா என்று தெரிந்துகொள்ள மட்டுமே இந்தப் பதிவு!

எந்தவொரு பெரிய பிரச்னை எழும்போதும், பிரிந்துகிடக்கும் அணிகளுக்குள்ளே ஏதாவது ஒரு கோமாளித்தனமான சர்ச்சை கிளம்பி பரபரப்புப் பிரியர்களையெல்லாம் இந்த சர்ச்சைகளுக்குள்ளே இழுத்துப் புதைத்துவிடுகின்றதாகவும் எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா?? புரியவில்லை......!

அன்புடன்,
பிரபு எம்

Sunday, October 01, 2017

Eternal Sunshine of the spotless mind (2004) - ஹாலிவுட் திரைப்படம்

Starring:       Jim Carrey, Kate Winslet, Kristen Dunst
Written by:   Charlie Kaufman
Directed by: Michael Gondry


”நினைக்கத் தெரிந்த மனமே... உனக்கு மறக்கத் தெரியாதா?!
 பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?”

”ஆனந்த ஜோதி”(1963) திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் - தேவிகா காதலுக்காகக்  கண்ணதாசன் எழுதிய எவர்கிரீன் “ப்ரேக்-அப்” சாங் இது! "Eternal sunshine of the spotless mind" ஜிம்கேரி-கேட்வின்ஸ்லெட் நடிச்ச படமாச்சே... என்று குழம்ப வேண்டாம்! (கொஞ்சம் லேட்டாக) மேட்டருக்கு வந்துவிடுகிறேன்...



மனித உறவுகளில் தாய், தந்தையில் தொடங்கி நண்பர்கள் வரைக்கும் இருக்கும் எல்லா உறவுகளாலும் வாழ்வில் சிலருக்கு  “ஏமாற்றங்கள்”   நிகழத்தான் செய்கின்றன..... சிலவற்றை மன்னிக்கிறோம் பலவற்றை மறந்து உறவுகளில் கலந்தும்விடுகிறோம்... ஆனால் “ஏமாற்றம்” ஏற்பட்ட உடனேயே  சம்பந்தப் பட்டவர்களை நினைவுகளைவிட்டே நாம் அழித்துவிடத் துடிப்பது உடைந்துபோன காதல் உறவுகளில் மட்டும்தான்!

 மற்ற உறவுகளால் எப்பேர்ப்பட்ட துரோகத்தை சந்தித்தாலும், பரம விரோதிகளாகிப் போனாலும் கூட அவர்களுடனான நினைவுகள் மூளையின் ஏதோ ஒரு மூலையில் இருந்துவிட்டுப் போவதை யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.... ஆனால் பெரும்பாலும் காதலர்கள் மட்டும் ஏனோ தெரியவில்லை “ப்ரேக்-அப்” ஆகிவிட்டால் அதுவரை அவர்கள்  நேசித்தவர்களின் நினைவுகளை, ஸ்பரிஸங்களை, மனதில் தங்கிவிட்ட அவர்களின் உருவங்களை ஏன் நெருங்கி முகர்ந்த மணங்களைக் கூட மனதைவிட்டு மொத்தமாக அழித்துவிடத் துடிப்பார்கள்! என்னதான் முனைந்தாலும் எவ்வளவுதான் முயன்றாலும் மனித மனதில் "Backspace" பட்டன் இல்லாததை நினைத்து வருந்தித் தவிப்பார்கள்! அவர்களுக்காகத்தான் நினைவுகளைச் சேகரிக்கத் தெரிந்த மனதிற்கு அவற்றை மறக்கும் மெக்கானிஸம் தெரியவில்லையே என்று காதலின் வலியைக் கம்ப்யூட்டர் காலத்துக்கு முன்பாகவே நுணுக்கமாகப் பதிவுசெய்திருக்கிறார் கவியரசர் கண்ணதாசன், ரியல் ஜீனியஸ்!

இங்கே, 2004-ஆம் ஆண்டு Michael Gondry இயக்கத்தில்,  வெளியான Eternal Sunshine of the Spotless Mind படத்திலும் கிட்டத்தட்ட அதே பிரச்னைதான் காதலர்களான ஜிம்கேரிக்கும் - கேட் வின்ஸ்லெட்டுக்கும்!

இந்தப் படத்தின் திரைக்கதை நகர்வதும், காட்சிகள் இடம்பெறுவதுமான கதைக்களமே நாயகனின் மனம்தான்! அதுதான் படமாக்கலின் மிகப்பெரிய  ஹைலைட்டான அம்சம்! திரைக்கதையில் இடம்பெறும் இடங்கள், மாந்தர்கள், பொருட்கள் உட்பட எல்லாமே கதை நாயகனின் மனதில் அவை பதிந்திருக்கும் விஷுவல் பதிவுகளாகத்தான் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும்! உருவமில்லாத மனித மனத்தை வண்ணங்களின் துணைகொண்டு மாடர்ன் ஓவியங்களாக ஓவியர்கள் வடித்தெடுத்திருக்கிறார்கள், இங்கே திரைக் கலைஞர்கள் அகக் கண்ணுக்கு  மட்டுமே புலப்படும் மனதின் ரூபங்களை ஆடியன்ஸின் கண்களுக்குத் திரை விருந்தாக்கியிருப்பதுதான், மேலுக்குச் சாதாரணமாய்த் தோன்றும், இந்தக் காதல் கதைக்கு "Cult" அந்தஸ்துக் கிடைத்திருப்பதன் காரணம்!

ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம் போலவே காட்சியமைப்புகள் மிரட்டினாலும், இது ஓர்அக்மார்க் காதல்கதை என்பதுதான் க்ளைமேக்ஸ் வைத்திருக்கும் சர்ப்ரைஸ் ட்விஸ்ட்!

ரொம்பவே சாதாரணனாகக் காட்சியளிக்கும் ஜிம்கேரி ஒரு சாதாரண நாளில் தனது ஆஃபிஸுக்குக் கட் அடித்துவிட்டு சம்பந்தமேயில்லாமல் Montauk என்னும் இடத்துக்கு செல்லும் ட்ரெயினில் ஏறிப் பயணிப்பார்.... அதே ட்ரெயினில் கேட் வின்ஸ்லெட்டைப் பார்ப்பார். பார்த்த மாத்திரத்திலேயே இருவருக்குமிடையே பரிச்சியம் ஏற்பட்டுவிடும். இயல்பாக ஒட்டிக்கொள்ளும் ஒரு நல்ல ஜோடியாகப் பளிச்செனப் பதிந்துவிடுவதாகத்தான் காட்சிகள் நகரும்..... ஆனால் சில நிமிடங்கள் கழித்துதான், ஜிம்கேரியும் - கேட் வின்ஸ்லெட்டும் ஏற்கெனவே காதலித்து இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து காதல் வாழ்க்கை கசந்துப் பிரிந்தவர்கள், என்று குழப்பமான Non-Linear காட்சிக்கோர்வையின் மூலம் திரைக்கதை நமக்கு உணர்த்தும்! அதனை அடுத்த ஒரு காட்சியில், ப்ரேக்-அப் ஆன வலியில் ஜிம்கேரி முழுமையாக மீண்டுவிடாத வேளையில் கேட்வின்ஸ்லெட்டை அவுட்டோரில் சந்திப்பார் அப்போது கேட் வின்ஸ்லெட் ஜிம்கேரியிடம் அவரை முற்றிலும் யாரென்றே தெரியாததுபோல் நடந்துகொள்வார்..... அப்போதுதான் தெரியவரும்  கேட் வின்ஸ்லெட் Lacuna, INC என்னும் (கற்பனை)கம்பெனியின் உதவியுடன் தன்னை மிகவும் தொல்லை செய்யும் தன் பழைய காதலன் ஜிம்கேரியின் நினைவுகளை மொத்தமாகத் தன்னுடைய மூளையிலிருந்து டெக்னாலஜிக்கலாக அழித்துவிட்டார் என்று! இதனால் மேலும் மனமுடைந்து போகும் ஜிம்கேரி, தன்னுடைய  நினைவுகளில் இன்னும் பழைய காதலியாக வாழும் கேட் வின்ஸ்லெட்டின் தடங்களைத் தானும் அழித்துவிட அதே கம்பெனியின் உதவியை நாடுகிறார்!

Lacuna-வில் ஜிம்கேரியின் மனதிலிருந்து கேட்வின்ஸ்லெட்டின் நினைவுகளை அழிக்கும் procedure-ன் போது அங்கு அரங்கேறும் வித்தியாசமான சம்பவங்களும், ஜிம்கேரியின் மனதின் நினைவுகளின் காட்சிப்பதிவுகளும்தான் கிட்டத்தட்ட எண்பது சதவீத திரைக்கதை! அழிக்கப்படும் மனதின் பதிவுகளை விஷுவலாகக் காட்டுவதில் நிகரற்ற கற்பனைவளமும் க்ரியேட்டிவிட்டியும் நம்மை பிரமிக்கவைக்கும்... (என்ன நடக்குது... என்ன சொல்லவர்றாய்ங்கன்னு மூளையையும் பிஸியாக வைத்திருக்கும்!)

கேட்வின்ஸ்லெட்டின் நினைவுகளை மொத்தமாக அழிக்கும் ப்ராசஸ்ஸுக்காக (process) சக்திவாய்ந்த sedation கொடுக்கப்பட்டு ஜிம்கேரி ஆழ்நிலைத் தூக்கத்தில் இருக்க, ஜிம்கேரியின் மூளை நரம்புகளுடன் இணைக்கப்பட்ட கணினியின் துணையோடு அவர் காதலியின் தடங்கள் பதிந்திருக்கும் நினைவுகளைப் பிரித்து அவற்றை முற்றிலுமாக  அழிக்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கும்.... அந்த நேரம் பார்த்து, ஜிம்கேரிக்கு தன்னுடைய காதலியின் நினைவுகளை முழுமையாக அழித்துவிட மனம் ஒப்புக்கொள்ள மறுக்கப் பிரச்னை ஆரம்பிக்கிறது. பாதிக்குப் பாதி அழிந்துவிட்ட நிலையில் அவரது மூளை, ஆழ்நிலை மயக்கத்தில், இவர்களின் மறக்கவைக்கும் மெக்கானிஸத்துக்கு எதிர்ப்பு காட்ட ஆரம்பிக்கிறது! இன்னொரு பிரச்னை என்னவென்றால் அதே நேரத்தில் Lacuna கம்பெனிக்குள்ளும் பல உள்ளடிப் பிரச்னைகள் வெளிச்சத்துக்கு வருவதுதான்!

 ஜிம்கேரியின் நினைவுகளை அழிக்கும் பணியிலிருக்கும் நிபுணர்களான ஸ்டேனுக்கும் மேரிக்கும் இடையே காதல் என்கிற பெயரில் காமப் பகிர்வுகள், ஜிம்கேரி உறங்கவைக்கப்பட்டிருக்கும் அதே அறையிலேயே, அரங்கேறிக்கொண்டிருக்கும்.... ஒருகட்டத்தில்  அன்-கான்ஷியஸில் வைத்து காதலியின் நினைவுகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென ஜிம்கேரியின் மூளை (conscious brain) தன் காதலியின் நினைவுகளை மறக்க மறுத்து எதிர்வினை ஆற்ற ஆரம்பிக்க க்ளினிக்கலாக   ஜிம்கேரியின் நிலை மிகுந்த சிக்கலுக்குள்ளாகிவிடும். அப்போது ஒரு high risk situation-ல்  Lacunaவின் தலைவரான டாக்டர்.ஹாவோர்ட் அந்த நள்ளிரவு வேளையில் தானே நேரில்வந்து சிக்கலான இந்த கேஸில் troubleshoot செய்ய வருகிறார். அப்போது நேரும் மேலும் பல குழப்பங்களுக்கிடையே,  மேரியுடன் ஏற்கெனவே டாக்டர் ஹார்வோர்ட் தவறான உறவுகொண்டிருந்ததும் பின்பு அந்த நினைவுகளை மேரியின் மூளையிலிருந்து அவரே அழித்ததும் தெரியவருகிறது! தற்சமயம் அவள் காதல் வயப்பட்டிருக்கும் ஸ்டேனும் அதேரீதியில்தான் தன்னை ஜஸ்ட் பயன்படுத்திக் கொண்டிருப்பதும் மேரிக்கு புலப்படும்!  அங்கே பணிபுரியும் இன்னொரு இளைஞனான பேட்ரிக், ஜிம்கேரியின் நினைவுக் குறிப்புகளின் மூலம் கேட்வின்ஸ்லெட்டின் விருப்பு வெறுப்புகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு நடந்து கேட்டை அடைவதற்காக  வலைவிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதும் இன்னொரு ட்ராக்கில் அம்பலமாகும்!

  டாக்டர். ஹார்வோர்ட் மற்றும் Lacuna கும்பலின் துரோகத்தைத் தாங்க முடியாத மேரி (Kristen Dunst),  Lacuna மூலம் தங்கள் பழைய நினைவுகளை அழித்துக்கொண்ட அத்தனை கஸ்டமர்களுக்கும் அவர்களின் அழிக்கப்பட்ட உறவுகளின் தகவல்களையும் அப்போது பதிவுசெய்யப்பட்ட டேப்களையும் ரகசியமாக மேரி தபால் மூலம் அவர்களுக்கே அனுப்பிவிடுகிறாள். கேட் வின்ஸ்லெட்டுக்கும் ஜிம்கேரியுடனான, தான் அழித்துவிட்ட நினைவுகளைத் தாங்கிக்கொண்டிருக்கும் அந்த தபால் வந்தடைகிறது!

ஜிம்கேரி - கேட்வின்ஸ்லெட் தங்கள் வாழ்வில் முதன்முறையாக சந்தித்துக்கொண்டபோது கேட்வின்ஸ்லெட் சொல்லும் ஒற்றை வாக்கியமான "Meet me in Motauk" ,  இத்தனைக் கலவரத்திலும் அழியாத காதலின் சாட்சியாய், மறக்காத வாக்கியமாய் இருவர் மனதிலும் தங்கிவிடுவதுதான் ஒருவருக்கொருவர் முற்றிலுமாய் மறந்துவிட்ட பழைய காதலர்களான அவர்களை சம்பந்தமேயில்லாமல் நிகழ்காலத்தில் Montauk  நோக்கிப் பயணிக்கச் செய்கிறது! ஞாபகங்களுக்குள்ளே கண்ணாம்பொத்தியாடும் ஒரு ஹை-டெக் காதல் விளையாட்டு முடிச்சுகள் எல்லாம் தெளிவாய் அவிழ்ந்த ஒரு விருவிருப்பான கட்டத்தில் அழகாய் முடிகின்றது!

ஓர் ஆண் மனதின் பதிவுகளுக்குள் புகுந்து அதில் அவன் காதலியைப் பிரித்தெடுத்து அவற்றை  நினைவிலிருந்து அழிப்பதும், அதற்கு தூக்கத்திலிருக்கும் காதலன் மனம் மறக்க மனமில்லாமல் அழிந்து கொண்டிருக்கும் நினைவுகளுக்கு மீண்டும் உயிர்கொடுக்கப் போராடுவதையும் ஓர் அரைத்தூக்கக் கனவாக, விஷுவலாக, உயிர்கொடுக்கும் காட்சியமைப்புக்காகவும்,  இத்தனைக் குழப்பமான கதைக்கு நேர்த்தியான திரைக்கதையமைத்து கடைசியில் குழப்பமுமின்றி நிறைவானதொரு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் திரைஎழுத்து வித்தைக்காகவும்தான் திரையுலகம் இந்தப் படத்தை இடைவிடாது கொண்டாடுகிறது!

Eternal Sunshine of the Spotless Mind! மனமும் மனம் சார்ந்ததுமான கருப்பொருள் படைப்பு - A poly-chromatic Dream in Technicolor!

எண்ணங்கள் வண்ணங்களாய் விரியும் திரைப்பட ஊடகத்தில் வண்ணங்கள் எண்ணங்களாய் திரைவிரியும் அதிசிய மேக்கிங்கை அவசியம் கண்டுகளியுங்கள்!

நினைத்தலும் மறத்தலும் என அழுத்தமான திரைப்படத்தைப் பார்த்துமுடித்தபின் மீண்டும், கண்ணதாசனே காதில் கவிதை வாசித்தார்.....

 நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா? என்று!

டெயில் பீஸ்:

இந்தப் பதிவை எழுதிமுடித்திருந்த நேரத்தில் சமீபத்தில் இசை வெளியாகியிருக்கும், இன்னும் சில நாட்களில் ரிலீஸாகப் போகும் “மேயாத மான்” (தயாரிப்பு: கார்த்திக் சுப்புராஜ்) படத்தின்  பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.... அதில் ஒரு பாடலில் வரும் பின்வரும் வரிகளைப் பாருங்கள்.....

“உன் ஞாபகம் தீயிட, விறகாயிரம் வாங்கினேன்...
அறியாமலே நானதில் அரியாசனம் செய்கிறேன்...”

ஹாஹா... இந்த ஞாபகப் பிரச்னை ரொம்பப் பெரிய பிரச்னையாத்தான் இருக்கும்போலயே!

அன்புடன்,

பிரபு எம்



















Tuesday, September 12, 2017

தமிழகத்தில் ஹிந்தி வளர்ந்து வருகிறதாம் - “தமிழ் இந்து” சொல்லிடிச்சு!

கடும் எதிர்ப்பு, போராட்டங்களை மீறி
தமிழகத்தில் வளர்ந்து வருகிறது இந்தி

இப்படியொரு தலைப்புடன் ஒரு செய்தியை இன்று (செப்டம்பர் 12,2017) தேதியிட்ட “தமிழ் இந்து” செய்தித்தாளில் 11-ம் பக்கத்தில் பார்த்தேன்... அது செய்தியா இல்லை விளம்பரமா அல்லது ஏதேனும் கட்டுரையா என்று பார்த்தவுடன் புரியும்படி இல்லை! சரி.. ஓர் ஒப்பீட்டுப் புரிதலுக்காகப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு செய்தியைப் பார்த்தேன்


காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்து சூழ்நிலை முன்னேறி உள்ளது

  • உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

என்று இருந்தது! இந்த செய்தி உறுத்தவில்லை..... “காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்து சூழ்நிலை முன்னேறி ப்ளா ப்ளா ப்ளா.... என்று தலைப்பு பார்த்தவுடனேயே செய்தித்தாள்களைப் படித்து பழக்கப்பட்ட கண்கள் சொன்னது யார் என்று தேட ஆரம்பித்தது அதற்குள் மூளையும், யாருப்பா அது பழைய ஹோம் மினிஸ்டர் ராஜ்நாத் சிங்கா அல்லது புது ராணுவ அமைச்சர்  நிர்மலாவா? என்று "probables" யோசிக்க ஆரம்பித்தது.... அங்கும் இருக்கவே இருந்தது உப தலைப்பு “உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்” என்று... ஒருவேளை இந்த ஒரு ஸ்டேட்மெண்ட்டை எதிர் முகாமிலிருந்து  ப.சிதம்பரம் போன்ற ஒருவர் சொல்லியிருந்தார் என்றால் படிப்பதற்கு ஒரு சுவாரஸ்யமாய்க் கண்கள் விரிந்திருக்கும் என்பது வேறு விஷயம்! சரி விஷயத்திற்கு வருவோம்!

இப்படித்தான் செய்தித்தாள்களுடன் உறவாடி வந்திருக்கிறோம் தலைமுறைகளாக...! தலைப்பு என்பது விஷயத்தைப் பொட்டில் அறைந்தாற்போல் சொல்லிவிடும் மேலும் யார் சொன்னது.... எந்த சூழ்நிலையில் சொன்னது போன்ற விவரங்களை உபதலைப்புகள், புல்லட் பாயிண்டுகள் போன்றவை விளக்கிவிடும்! மெயின் தலைப்புக்கு மேலே சற்று சிறிய எழுத்துருவில் அந்த செய்திக்கான பின்னணியையும் வழங்கிவிடுவார்கள். ஆக... செய்தித்தாள்களுடன் கையில் காஃபி மக்குடன் நாம் அளவளாவி மகிழும் ஓர் அரைமணி நேர ஸ்பரிசத்துக்கு என்று பலவிதப் புரிதல்களும், சமிக்ஞைகளும் உண்டு என்பதை யாரும் மறுப்பதற்கில்லை!

இப்போது மெயின் விஷயத்திற்கு வருவோம் அதாவது “தமிழகத்தில் ஹிந்தி வளர்ந்து வருகிறது” என்னும் செய்தி!

இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன், சொன்னது யார்? என்று கண்கள் தேடின... பதில் இல்லை..... சரி இது ஏதும் ஆய்வு முடிவா? தெளிவில்லை!
ஸ்போக்கன் ஹிந்தி விளம்பரமா?? பார்த்தால் அப்படித் தெரியவுமில்லை! 

தலைப்புக்கு மேலே “கடும் எதிர்ப்பு, போராட்டங்களை மீறி”

என்று ஒரு பின்னணி வேறு அச்சிடப்பட்டிருந்தது! எனக்குத் தெரிந்து தமிழகத்தில் இப்போது கடும் எதிர்ப்பு, போராட்டங்களை மீறி  நடைமுறையில் இருப்பது நீட் தேர்வு மட்டுமே! இந்தி வளர்வதற்குக் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்ற போது நான் பிறக்கவில்லை என் தந்தைகூட ஏழாம் வகுப்போ எட்டாம் வகுப்போதான் படித்துக்கொண்டிருந்திருப்பார்! 

சரி... ஏதாவது ”back to the future" சமாச்சாரம் போலிருக்கிறது என்று படித்துப் பார்த்தேன்.....

அதாகப்பட்டது......

“தமிழகத்தில் நிலவும் கடும் எதிர்ப்பை மீறி அங்கு இந்திமொழி வளர்ந்து வருவது தெரியவந்துள்ளது” என்றது முதல் பத்தி.

மேலும் அதில் உள்ள செய்தி என்னவென்றால்....

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் இந்தி இயக்குனரகத்தின் கீழ் தொலைதூரக் கல்வி மையத்தில் தொலைதூரக் கல்வி முறை மூலம் ஹிந்தி மொழி கற்றுக்கொள்ள விண்ணப்பத்தவர்களின் எண்ணிக்கைத் தமிழகத்தில் கணிசமாக (அதிகபட்சம் சுமார் 7000 பேர்!) அதிகரித்திருக்கிறதாம்!

இதுதான் செய்தி..... ஆனால் இப்போது இந்தப் பதிவின் துவக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பைப் பாருங்கள்......

”தமிழகத்தில் வளர்ந்து வருகிறது இந்தி” (அதுவும் கடும் எதிர்ப்பு, போராட்டங்களை மீறியாம்!) 

இதில் ஓர் ஈனத்தனமான அரசியலோ அல்லது கீழ்த்தரமான ஒரு எண்ணமோ இருப்பது உங்களுக்குப் புலப்படுகிறதா??

”தொலைதூரக் கல்வி வழியே ஹிந்தி கற்றுக்கொள்ள தமிழகத்தில் ஆர்வம் கணிசமாக உயர்வு” : இந்தி இயக்குனரக தொலைதூரக் கல்வி மையம் தகவல்

என்று வந்திருக்க வேண்டிய செய்தித் தலைப்பு எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்... மற்றவை யாவும் தங்களின் சிந்தனைக்கே.....!

சரி... இப்பொழுது ஓர் ஆசுவாசத்துக்காக ஒரு சின்ன கேள்வி... இந்த வாரம் செய்திகளைப் பின் தொடர்ந்தவர்கள் இந்தப் புகைப்படக் கேள்விக்குப் பதில் தெரிந்த துரதிர்ஷ்டசாலிகளாக இருக்கலாம்!



இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் யார்??

இந்தப் பெண்ணின் புகைப்படம் கடந்த இரு நாட்களாக பெரும்பாலான ஆங்கிலப் பத்திரிக்கைகளில், தமிழ் நாளேடுகளில் வெளிவந்துள்ளது....

அனைத்து ஊடகங்களிலும் இவரது படம் அதுவும் ANI (Asian News International) மைக்கில் ஏதோ பேசிக்கொண்டிருக்கும் படம் என்றால் இவர் ஒரு புதிய சமூகப் போராளியாக இருப்பாரோ?! அல்லது ஏதேனும் புரட்சிகரமான வழக்குத் தொடுத்து சட்டப் போராட்டம் நடத்தியிருப்பாரோ? ஏதாவது துணிச்சலான கருத்து சொன்னவராகக் கூட இருக்கலாம் என்று யோசிக்கிறீர்களா.... மிகவும் சரிதான்..... செய்தித்தாள்களில் ஒருவரின் புகைப்படம் வெளிவருவது அவ்வளவு எளிதா என்ன? ஏதாவது ஒரு சாதனை செய்திருந்தால் தானே ஊடக வெளிச்சம் பொதுஜனம் மீது விழும்! இந்தப் பெண்மணி செய்த சாதனைதான் என்ன??

இந்த கிரேட் இண்டியன் லேடியின் பெயர் கஞ்சன் படேல்..... இவருக்குக் கடந்தவாரம் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்திருக்கின்றன அவைகளுக்கு அவர் “காரவி, சாஞ்சி, தாரவி” என்று பெயர் சூட்டியிருக்கிறார்!
ஓ..அப்படியா... மகிழ்ச்சி! சரி... இதில் என்ன சாதனை என்று கேட்கிறீர்களா? குழந்தைகளின் பெயர்களை நாம் கவனிக்கவேண்டுமாம்.....

Garvy, Saanji, Taravi - அதாவது GST!

இந்தக் கேடுகெட்ட அரசாங்கம் கொண்டுவந்த GST வரி இந்த அம்மையாரைக் கவர்ந்துவிட்டதாம் அதனால் தன் குலக் கொழுந்துகளுக்கு அதே முதலெழுத்துகளில் பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கிறாராம்.....

இந்தக் கருமத்துக்குத்தான் இத்தனைப் பெரிய அங்கீகாரம், சேனல்கள் முதல் செய்தித்தாள்கள் வரை அம்மையாருக்குப் புகைப்படத்துடன் கூடிய பதிவேற்றங்கள்! ஜிஎஸ்டி பற்றி இந்தப் பெண்ணுக்கு என்ன தெரியும்? எந்த விஷயத்தில் இவர் ஜிஎஸ்டி மீது இத்தனை ஈர்க்கப்பட்டார்? இவரின் கல்வித் தகுதி மற்றும் வணிகச் செய்திகளின் புரிந்துணர்வு எத்தகையது? போன்ற விஷயங்களை யாரோ ஒரு சாதாரண நிருபர் அலட்சியமாகக் கேள்வி கேட்டால் கூடத் தோலுறிக்கப் பட்டிருக்கும். ஆனால் அப்படியில்லாமல் போனது, இதுபோன்ற விளம்பர மோகம் மற்றும் அருவருப்பான மீடியா வியாபாரங்கள் எல்லாம் எப்படி நகர்கின்றன அல்லது மக்களை எப்படி நகர்த்துகின்றன என்பதற்கான அவல ஆதாரமாய்ப் பதிவு செய்யப்பட்டு இந்த அபார சாதனை சர்வதேச செய்தியாக உலக ஊடகங்களின் பார்வைக்குப் போயிருக்கிறது!

ஏன் பிரதர், நம்ம ஊரு உருப்படும்னு நினைக்கிறீங்க??!

 நன்றி!

பிரபு எம்.


Friday, December 18, 2015

இளையராஜாவின் கோபமும் தீபிகா படுகோனின் பப்பிஷேம் பேட்டியும்!



”ஆனாலும் இளையராஜா இப்படிக் கோபப் பட்டிருக்கக் கூடாது…. அந்தக் கேள்வியைப் பக்குவமாகக் கையாண்டிருக்கணும்” என்று இளையராஜாவுக்கு ஆளுக்கு ஆள் ஃப்ரீ அட்வைஸ் கொடுத்துக்கொண்டிருக்க……. தீபிகா படுகோனின் சமீபத்திய பத்திரிக்கைப் பேட்டி ஒன்று என் கண்ணில் பட்டுத்தொலைத்தது!



”டைம்ஸ் ஆஃப் இந்தியா” என்று ஒரு பத்திரிக்கை இருக்கிறதல்லவா… (அதை ஏன்  நீ படிக்குற??ன்னு கேட்கக்கூடாது பெங்களூரு டீக்கடையில் கண்ணில் பட்ட விஷயம் இது!) பல “பெருமை”களுக்குச் சொந்தமான அந்தப் பத்திரிக்கையில் அழகும் ஒய்யாரமுமாய் அரைமுதுகு காட்டிச் சிரிக்கும் தீபிகாவின் ஒரு ஆளுயுரப் புகைப்படம் அருகே மிகப்பெரிய எழுத்துகளில் சில வார்த்தைகள்…… 

“I can be Naked in front of Ranveer He wont hurt me!”

இதற்கு என்ன அர்த்தம்?? என்று இப்போதே ஒருமுறை அனைவரும் அவரவர் புரிதலுக்கு ஏற்ப மனதில் இந்த வார்த்தைகளை translate செய்துகொள்ளுங்கள! செய்வீர்களா?? செய்வீர்களா?? ச்ச்சீ….. ஸாரி பாஸ் க்ராஸ் டாக்….!! ஸோ மனதுக்குள் translate செய்து வைத்துக்கொள்ளுங்கள் சரியா! எனக்குத் தனிப்பட்ட முறையில் தீபிகாவின் அழகைவிட அவரின் சமுதாய எதிர்கொள்ளலும் அனாயச ஆங்கிலமும் பிடிக்குமாதலால் அந்த டீக்கடையில் மலையாள சேட்டன் அவரது டிரேட்மார்க்கான ஓர் அடிப்பொளி சாயாவைப் தயார் செய்து கொண்டிருக்கும் இடைவெளியில், அதே இதழில் தீபிகாவின் அந்த முழுப்பேட்டியையும் படித்தேன்.... படித்தால் உள்ளே பேட்டியில் ஒரு நான்கைந்து கேள்விகளுக்குப் பிறகான ஒரு கேள்விக்கு தலைப்பையொட்டிய பதில் இருந்தது..... இங்கே எப்படி இருக்கிறது என்று பாருங்கள்...... (ஸ்க்ரீன் ஷாட்டில் க்ளிக் செய்து பார்க்கவும்)

“I’m very sensitive It’s easy to hurt me………..bla bla bla………..… I CAN BE SO NAKED IN FRONT OF RANVEER HE WON’T HURT ME!”



ஹ்ம்ம்ம்…. இப்போது மெதுவாக ஒரு குட்டி ரீவைண்ட் செய்து இதற்கு முன்னால் செய்தித் தலைப்பில் கொடுத்திருந்த வாக்கியத்தையும் அதனை நீங்கள் மனதுக்குள் translate செய்ததையும் இங்கு உள்செய்தியில் இருக்கும் இந்த வாக்கியத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! “SO” என்கிற இரண்டெழுத்து இடைச்சொல்லை மட்டும்  நீக்கிவிட்டு பத்துமடங்கு அதிகமான சைஸ் எழுத்தில் தலைப்பு கொடுத்து எப்படி கல்லா கட்ட அடிபோடுகிறார்கள் என்று புரிகிறதா?! 

ஹிஹி….இவ்ளோதான் பாஸ் விஷயம் இந்த மட்டமான, beep song-க்கு இணையான வக்கிரத்துடன் கூடிய வியாபாரத்தைத்தான் ரொம்பவே ஸ்டைலாக “Contemporary Journalism” என்று பீட்டர் விட்டுக்கொண்டிருக்கிறோம்….. இதைச் சொன்னால் 'இரண்டெழுத்தில் அர்த்தம் எப்படி மாறுகிறது பாருங்கள்!' என்று ஒருவருக்கொருவர் ஆங்கில வகுப்பு எடுக்கத் துவங்கிவிட்டார்கள் உடனிருந்த நண்பர்கள்…. டேய் டேய் உங்களையெல்லாம் ஆயிரம் பெரியார் ஓ ஸாரி இவனுங்க பீட்டர்ஸ்.... பெரியார் வேண்டாம் ஆயிரம் ஆபிரகாம் லிங்கன் வந்தாலும் திருத்த முடியாதுடா…..! என்று நினைத்துக்கொண்டே சேட்டனின் சாயாவை உறிஞ்சத் துவங்கினேன்…….!

இத்தோடு முடியவில்லை கச்சேரி….. நமது விகடனார் இருக்கிறாரல்லவா?? ஆனந்த விகடனார்…… அவரும் அந்த பப்பி ஷேம் பேட்டித் தலைப்பைப் படித்திருக்கிறார் போலும்…. என்ன கிறக்கமோ அவரும் முழுப்பேட்டியைப் படிக்கவில்லையா அல்லது படித்தும் புரியவில்லையா என்று எனக்குத் தெரியவில்லை இந்த வார விகடனில் என்ன வெளிவந்திருக்கிறது என்று அப்படியே காப்பி பேஸ்ட் செய்கிறேன் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்…..



அவர்முன்னால் நான் ஆடை இல்லாமல் இருந்தால்கூட என் மேல் உரிமை எடுத்துக்கொள்ளமாட்டாராம்!! டேய்…டேய்…. ஃபேஸ்புக் ட்விட்டர் மற்றும் சில ஆன்லைன் செய்திகளில் இருந்து செய்தி சேகரிக்கும் copy+paste journalism-னு ஒன்றைக் கண்டுபிடிச்சீங்க ரைட்டு இப்போ அதையும் உங்க வசதிக்கு ட்விஸ்ட் பண்ணி கமர்ஷியலா “அதுக்கும் மேல” போறீங்களேம்மா….. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா……!!

"NAKED" என்கிற ஒரு வார்த்தை கிடைத்தவுடனேயே.... அது என்ன ஏதென்று ஆராயாமல் வெறுமனே பச்சையாக நிர்வாணம் என்கிற ரீதியில் அர்த்தம் கொண்டு.....ஒரு பெண் அதுவும் நடிகை என்று ஓர் ஊடகனே இப்படித்  துடித்துக் களமிறங்கிவிட்டால்..... இயல்பிலேயே கீழ்த்தர ரசனையுடையவர்கள் ஏன் பீப் சாங்-களைப் பதிவேற்ற மாட்டார்களாம்??!

இப்படியெல்லாம் ஆயிரமாயிரம் தில்லாலங்கடி பேட்டிகளையும் ப்ரஸ்மீட்களையும் சாதாரணமாக செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்களே மேற்கோள் காட்ட முடியும்…. நமது மீடியாவின் தரம் எந்தளவு தரைமட்டமானது என்பதை சிரமேற்கொண்டு விளக்கத் தேவையில்லை அது கண்ணாடி தேவைப்படாத கைப்புண் தான்…. ஆனால் புண்கள் புரையோடிப் புற்றுவைத்துவிட்டால் எதிர்ப்படும் ஆபத்துகளையும் நாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதும் மறுப்பதற்கல்ல…..!



இப்போது இளையராஜா விஷயத்துக்கு வருவோம்……. ”அவன் நிருபர் அப்படித்தான் கேட்பான் இவரு ஏன் இப்படி டென்ஷன் ஆகுறாரு…. ஒரு பக்குவம் வேண்டாமா??” என்கிற ரீதியிலான அட்வைஸ் மழைகள் ஒருபுறம் இளையராஜாவை நோக்கிப் பொழிந்துகொண்டிருக்க…… இன்னொருப்புறம் அவரது ரசிகர்களும் தங்கள் தலைவனுக்காகத் தரம் தாழ்ந்தும் இறங்கியடிக்கத் தயாராக இருக்கும் இசைவிசிறிகள் அடிக்கும் கூத்துக்கள் அதைவிட மோசம்! இதுகுறித்து திரு. ஞானி அவர்களின் கீழ்க்கண்ட ஃபேஸ்புக் போஸ்ட் ஏற்புடையதாக இருந்தது!




எல்லாம் சரிதான்…… ஆனால் சென்னை மழை நிவாரணம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில்தான் இளையராஜாவை நிருபர்கள் சந்தித்திருக்கிறார்கள் அதில் இப்படி ஒரு சர்ச்சையான ஃபுட்டேஜ் கிடைத்தவுடனேயே அவர்கள் கவரேஜ் செய்யப்போன விஷயத்தை அப்படியே சென்னை வெள்ளத்தில் விட்டுவிட்டு செம்பரம்பாக்கம் ஏரியில் பீப் சாங் சர்ச்சையைக் கலந்து விட்டார்களே இந்த மீடியா தர்மத்தை யாருமே கண்டுகொள்ளவில்லையே!!!

 நம்மல்லாம் நல்லா வருவோம் பாஸ்……

அன்புடன்,
பிரபு எம்.




Thursday, December 04, 2014

ஃபிலிப் ஹ்யூஸின் மரணமும்..... மைக்கேல் க்ளார்க்கின் அற்புதமான அஞ்சலி உரையும்!





ஓர் 21 வயது ஆஸ்திரேலிய இளைஞன் "Baggy Green"   அணிந்து ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேச கிரிக்கெட் ஆடுவது அத்தனை எளிதான காரியமல்ல‌...... காரணம் அத்தனை வலுவானது ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட்டின் உள்கட்டமைப்பு! கில்கிறிஸ்ட், ஹேடன் போன்ற எத்தனையோ பேட்டிங் ஜாம்பவான்கள் தங்களின் சர்வதேச கேரியரின் முடிவில் அசாத்தியமான நம்பர்களைக் கைவசம் கொண்டிருக்காததின் காரணம் வயதின் அடிப்படையில் சற்று தாமதமாக தேசிய அணியில் இடம்பிடித்ததுதான்! அப்படிப்பட்ட ஆஸ்திரேலிய அணியில் இருபத்துஒன்று வயதே ஆன இளைஞனாகக் களமிறங்கிய ஓர் இளம் கிரிக்கெட் வீரன் இதோ தனது  25 வயதிலேயே, அணித்தலைவன் மைக்கேல் கிளார்க் உட்பட, எட்டுபேர் சுமக்கத் தனது இறுதிஊர்வலத்தையே முடித்துக்கொண்டு கல்லறைப் பெவிலியனில் உறங்கச் சென்றுவிட்டான்...... அந்தப்போட்டியில் அவனது ஸ்கோர் 63* ( நாட் அவுட்!)



23 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷான் அபாட் ஒரு மரணத்துக்குக் காரணமாகப்போகும் அந்த பயங்கர பவுன்சரை வீசியபோது நிச்சியம் உணர்ந்திருக்க மாட்டார் இந்தப் பந்தை ஏன் வீசினோமெனக் காலத்துக்கும் நினைத்து மருகப்போகிறோம் என்று! இன்னும் ஒரே வாரத்தில் 26  வயதில் அடியெடுத்து வைக்கவிருந்த ஃபிலிப் அந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 161 பந்துகளை சந்தித்து 63 ரன்களுடன் வலுவான அடித்தளத்துடன் பிட்சில் ஊன்றி நின்றுகொண்டிருக்கிறார்......
அபாட்டின் அதிவேகமான அந்தப் பந்து ஒரு துல்லியமான பவுன்ஸர்...... மிகச்சரியான அளவில் ஷார்ட்-லெங்தில் தரையைத் தொட்ட வேகத்தில் மேலெழும்பி எகிறியது!  பொதுவாகவே "ஹுக்" ஷாட்டில் வல்லவரான ஃபிலிப் ஹ்யூஸ் களத்தில் "இன்-ஃபார்"மில் நின்றுகொண்டிருக்கும்போது அந்தப் பவுன்சரைத் தற்காப்புடன் விலகிக்கொண்டு விட்டுவிட நினைக்கவில்லை....... லெக் ஸைடில் "ஹூக்" செய்ய பொஸிஷன் பிடித்தார்...... நேர்த்தியான ஃபுட் வொர்க்-குடன் சரியாகவே மட்டை வீசினாலும் அவரது கணிப்பு துளியளவு மிஸ்ஸானதற்குத்தான் தன் வாழ்க்கையையே விலையாகக் கொடுத்து விடைபெற்றிருக்கிறார் ஃபில்! பந்து வீசப்பட்ட வேகத்தை வைத்து ஷாட்டைக் கணித்த ஃபிலிப்பை, அபாட்டின் பந்து பிட்சில் குத்தி எகிறும்போது தனது வேகத்தை சற்று இழந்ததுதான் கொஞ்சம் ஏமாற்றிவிட்டது....... முழுவீச்சில் ஃபில் சுழற்றிய மட்டையில் சிக்காமல் லெக்-திசை நோக்கி முகம் திருப்பிய ஃபிலிப்பின் பின்னந்தலையை ஹெல்மெட்டையும் மீறிப் பந்து பதம் பார்த்தது! பந்தில் அடிபட்டு மிகச்சில நொடிகளே சுயநினைவுடன் இருந்தார்.... அரை நொடி நேரத்தில் மூளை செயலிழந்து ஓர் உடலாக "சொத்"தென்று ஃபிலிப் விழும் காட்சியைக் காணொளியில் கண்ட என்னாலேயே மறக்கமுடியவில்லை நேரடியாகக்கண்ட ஷான் அபாட் எப்படித்தான் அதை மறந்து மீண்டெழுந்து தன் கிரிக்கெட் வாழ்வைத் தொடரப் போகிறாரோ என்று தெரியவில்லை!

ஃபிலிப் இறுதிவரை சுயநினைவுக்குத் திரும்பாமலேயே விடைபெற்றுவிட்டார் ஒரேயடியாக!



ஃபிலிப்பைக் காப்பாற்றிவிடக் கடுமையாகப் போராடிய மருத்துவர்கள் இறுதியில் "பந்து தலையின் எந்தப் பகுதியைத் தாக்குகிறது என்பது மிகவும் முக்கியம்!" என்று சொல்லியிருக்கிறார்கள்.... செரிப்ரத்துக்குச் செல்லும் முக்கியமான மென்மை நரம்பை இந்த பவுன்சர் கடுமையாகத் தாக்கியதின் விளைவுதான் இந்த மரணம்! மேலும் மருத்துவர்கள்,' ஒரு மில்லிமீட்டர் விலகித் தலையில் பட்டிருந்தாலும் ஃபிலிப் உயிர்பிழைத்திருக்கலாம்' என்று அரிதினும் அரிதான அடிபட்டு ஃபிலிப் ஹ்யூஸ் த‌ன்னுயிர் இழந்திருப்பதாக இவ்விளையாட்டு விபத்தை விவரிக்கின்றனர்!



கிரிக்கெட் உலகமே ஸ்தம்பித்துப் போயிருக்கிறது....... ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் க்ளார்க் ஃபிலிப்புடன் மிகவும் தோழமையான உறவைக் கொண்டிருந்தவர் என்கிற முறையில் ஒவ்வொரு முறை இந்த மரணத்தைப் பற்றித் தான் மீடியாவுக்கு அறிவிக்கவேண்டியபோதும் உடைந்து அழுததை நாம் பார்த்தோம்! மேலும் நேற்று நடந்த இறுதி ஊர்வலத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் க்ளார்க் தனது ஆட்டக்கள சகோதரனான‌ ஃபிலிப் ஹ்யூஸின் நினைவுகளைத் தழுவி அழகான ஆங்கிலத்தில் ஓர் இலக்கிய உரையாற்றியுள்ளார் இந்த‌ இளம்வீரனின் இறுதி அஞ்சலிக் கூட்டத்தில்!



அந்தவுரையின் சாராம்சம் தமிழில்: 

" அவனுக்கு என்றுமே மேக்ஸ்வைலைப்  (ஃபிலிப்பின் சொந்தஊர்) பற்றியதொரு பெருமித உணர்வு உண்டு... அதன் காரனத்தை இதோ இப்பொழுது மிக எளிதாக உணர முடிகிறது!

வெறும் 25 வயதில் நம்மிடமிருந்து முழுமையாக எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டபோதும்........ எந்தவொரு நிமிடமும் அவனிடமிருந்து  வரக்கூடிய அவனது அழைப்புக்காகவோ அல்லது ஏதோவொரு மூலையில் அவன்முகம் தெரியப்போகும் கணத்திற்காகவோ நான் காத்திருக்கத்தான் போகிறேன்! இதனை அபத்தமென்று அறிந்திருந்தாலும் இதைத்தான் நாம் அவனது "ஆன்மா"வென்று அழைப்போமேயானால் அந்த அவனது "ஆன்மா" இன்னும் என்னுள் இருக்கின்றது அது என்றும் என்னைவிட்டு அகலாது!

வியாழனன்று இரவு சிட்னி மைதானத்தில் நடந்துபோய் அதன் நடுப்பகுதியில், அந்த ஆடுகளத்தில் சற்றுநேரம் நிற்கலானேன்!  அந்தப் புல்முனைகளில் என் பாதங்கள் நின்றிருக்க..... அதே புல்முனைகளின் மேல்பரப்பில் அவனும் நானும் மேலும் எத்தனையோ எங்கள் அணிவீரர்களும் பகிர்ந்துகொண்ட எவ்வளவோ பேட்டிங் பார்ட்னர்ஷிப்புகள்..... சிறுவர்களாக கிரிக்கெட் கனவுடன் எங்கள் தலையில் நாங்களே எழுதிக்கொண்ட கனவினை வாழ்ந்த தருணங்கள்....... இங்கிருந்து அவன் சேர்த்த ரன்களுக்காக இதோ சற்றே தொலைவிலிருக்கும் ஸ்டாண்டில் எழுந்து நின்று அவனுக்காய் ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம்...... இதோ இந்த ஆடுகளத்திலிருந்து அவன் பவுண்டரிக்குப் பந்துகளை எத்தனையோமுறை  அடித்தனுப்பிய சந்தோஷப் பொழுதுகள்.....! என்று எத்தனை நினைவுகள் இந்த ஆடுகளத்தில் பதிந்துகிடக்கின்றது! இன்று..... அவன் வாழ்வில் மீண்டெழமுடியாமல் வீழ்ந்துகிடந்ததும் இதே ஆடுகளப் புற்களின்மீதுதான்! அதே புற்களின் மேல் முழங்காலிட்டு ஒருமுறை அவற்றைத் தொட்டுப்பார்த்தேன்...... நாங்களிருவரும் இங்கு பேட்டிங் செய்த நாட்களில் ஃபிலிப்புடனான உரையாடல்கள்..... " தேநீர் இடைவேளைவரை நாமிருவரும் விக்கெட்டில் நிலைத்திருக்கவேண்டும்...."  என் அவன் சொன்ன தருணம்.... இன்னொரு தருணத்தில் நான் ஆடிய ஒரு லூஸ் ஷாட்டைப் பற்றி இதே ஆடுகளத்தில் அவன் அறிவுருத்தியது...... அன்றைய ஆட்டம் முடிந்ததும் இரவு என்ன படம் பார்க்கவேண்டுமென நாங்கள் பேசிக்கொண்டது.....மேலும் அர்த்தமில்லாத எத்தனையோ உரையாடல்களை நினைவுகூர்ந்தவனாய் நின்றிருந்தேன்!

"The heart of a man who lived his life for this wonderful game we play, whose soul enriched not just our sport but all of our lives."

"ஒரு மனிதனின் ஆனமா அவன் கால்பதித்த நிலங்களில் தன்னை இணைத்துக்கொள்கிறது" என்று பொதுவாகவே ஆஸ்திரேலியர்கள் நம்புகிறார்களே அதைத்தான் இந்த உணர்வு ஊர்ஜிதப்படுத்துகிறதா?! அவர்களின் கூற்று சரியானதுதான் என்றே நான் உணர்கிறேன் சிட்னி ஆடுகளத்தில் நின்றுகொன்டிருக்கும் இவ்வேளையில்..... அவனது ஆன்மா இந்த ஆடுகள நிலத்தைத் தொட்டிருக்கின்றது மேலும் இந்த ஆடுகளம் என்றும் என் வாழ்வில் புனிதமானதாகவே நினைவில்கொள்ளப்படும்..... அவனது உடனிருப்பை நான் என்றும் உணரும் களம் இது! மேலும் அவன் எப்படி இன்று உலகம் முழுதுமுள்ள இத்தனையாயிரம் மனித உள்ளங்களைத் தொட்டுவிட்டான் என்று எனக்கு எப்போதும் சொல்லப்போகும் நிலம் இது!

Is this what we call the spirit of cricket?!! கராச்சியில் வாழும் ஒரு சிறுமி தன் கைகளில் ஓர் எரியும் மெழுகுவர்த்தியை ஏந்தியவளாக என் சகோதரனுக்குத் தனது  அஞ்சலி செலுத்துகிறாள்.....  இந்த கிரிக்கெட் விளையாட்டின் மாஸ்டர்களான டெண்டுல்கரும், ஷேன் வார்னும், லாராவும் அவனது இழப்பினால் விழையும் தங்கள் துயரத்தை உலகுடன் பகிர்கிறார்கள்..... இதோ இந்த கிரிக்கெட்டின் ஆன்மாதான் எங்கள் அனைவரையும் ஒன்றாகப் பிணைக்கின்றது!

உலகக் கிரிக்கெட்டர்கள் அனைவரும் பகிரும் இந்த பிணைப்புதான் இன்று உலகின் அத்தனை கிரிக்கெட் வீரர்களையும் இன்று தங்கள் பேட்டைத் தொடவிடாமல் நிறுத்துகின்றது......... ஃபிலிப் யாரென்றே அறியாத மக்களைக் கூட லார்ட்ஸ் மைதான முகப்பில் அவனுக்காக மலர்களைக் குவிக்கச் செய்திருக்கின்றது..... இந்தப் பூமியில் கிரிக்கெட் ஆடப்படும் ஒவ்வொரு நாட்டிலும் ஃபிலிப்பிற்காகத் தங்களின் இதயப்பூர்வமான அஞ்சலிகளைக் காற்றில் கரைத்திருக்கின்றது! மேலும் எத்தனையோ வீரர்களை ஃபிலிப் தன் உயிருக்குப் போராடியபோது அவனைத் தேடி வரவைத்தது!

This is what makes our game the greatest game in the world.

நமது கிரிக்கெட்டில் கரைந்து என்றும் நிலைத்திருக்கப்போகும் ஃபிலிப்பின் ஆன்மா இதோ களத்தில் நாம் காதலிக்கும் இந்த ஆட்டத்தின் காவல்தெய்வமாக நிலைத்து நிற்கப்போகிறது.....  நாம் அவன் ஆன்மாவிற்கு செவிகொடுக்கவேண்டும்.....  ஆடுகளத்தில் அவன் ஆன்மாவுடன் கழித்த பொழுதுகளை அதே சந்தோஷத்துடன் உள்வாங்கி உளம்மகிழவேண்டும்..... அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்!


அமைதியில் உரைந்திடு என் இளைய சகோதரனே......... நானும் உன்னை சந்திப்பேன்! "


இந்த அற்புதமான உரையைத் தன் உயிர் மூச்சானது உணர்வுகளால் உதற, உணர்ச்சிப்பூர்வமாக வாசித்துமுடித்தார் மைக்கேல் க்ளார்க்!

உயிர்..... உன்னதமானது! வாழ்க்கை நிரந்தரமற்றது....... ஆன்மா அழிவில்லாதது! இந்த இளைஞன், இளம் வயதில் இன்னுயிர் நீத்துவிட்டபோதிலும், தன் ஆன்மாவைத் தனது சாதனைக் களத்தின் நிலப்பரப்பில் இணைத்துக்கொண்டுவிட்டான் ! இன்றுவரை வாழ அனுமதிக்கப்பட்டிருக்கும்  நமது சாம்பல்களும் என்றோ ஒருநாள் கங்கையிலோ காவிரியிலோ கரையட்டும்.... உடல்களும் மண்ணோடு உரமாகட்டும்...ஆனால் அழிவிலா நம் ஆன்மாக்கள் மட்டும்  நம் வினைகளாய் காற்றில் கரைந்து என்றென்றும் வாழட்டும்........ சம அலைவரிசைகளில் அது பேசிக்கொண்டே இருக்கட்டும்..... நாமும் அறியோம் என்று மறைவோமென்று......!

ஃபிலிப் ஹ்யூஸின் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலுடன்,

பிரபு எம்

Saturday, November 22, 2014

ருத்ரய்யா..... "அவள் அப்படித்தான்" [A] (1978)

ருத்ரய்யா..... 



ஒரு சிறந்த இயக்குனர் காலத்தால் அழியாத பெயரெடுக்க ஒரேயொரு படம் எடுத்திருந்தால் கூட போதும் என்பதற்கு மௌனசாட்சியாய் இந்த வாரம் வரை வாழ்ந்துவந்த‌ இயக்குனர் ருத்ரய்யா இப்பொழுது உயிருடன் இல்லை...... தமிழ் சினிமாவுக்கு இவரது இழப்பு முழுமையாக 1980லேயே ஏற்பட்டுவிட்டதினால் இப்போது அது இறுதியாக ஒருமுறை ஊர்ஜிதமாகியிருக்கிறது அவ்வளவுதான்..... ஆனாலும் ரசிகர்களுக்கு இவர் இயக்கிய 1978 ல் வெளிவந்த "அவள் அப்படித்தான்" படம் பார்த்திருந்தால் இவரின் இந்தப் பிறவியை வெறும் இரண்டு திரைப்படங்களுடன் இழந்துவிட்டது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை உணரலாம்.......

சிலரை உலகம் "அவர் அல்லது அவள் அப்படித்தான்" என்று முடிவுசெய்து தீர்ப்பு வழங்கிவிடும் அப்படியான முடிவுகள் ஒன்று விதிகளைத் தளர்த்திக்கொள்ளும் ஒரு தனிப்பட்ட சலுகையாகவோ அல்லது ஒட்டுமொத்த புறக்கணிப்பாகவோ அமைந்துவிடும்.....


"அவள் அப்படித்தான்" , "கிராமத்து அத்தியாயம்" என்ற இரண்டு படங்களை இயக்கிவிட்டு திரையுலகைவிட்டு ஒதுங்கிக்கொண்டவர் இன்று 34 ஆண்டுகள் கழித்து நிலவுலகைவிட்டும் நீங்கிச்சென்றிருக்கிறார்.......  ஏன் அவர் மூன்றாவது படம் எடுக்கவில்லை? என்பதற்குத் தெளிவான காரணமெதுவும் பதிவுசெய்யப்படவில்லை என்று நினைக்கிறேன்..... கேட்டால் ஒருவேளை சொல்லுவார்கள் "அவர் அப்படித்தான்" என்று!


"அவள் அப்படித்தான்" [A]  (1978)





"அன‌ந்துவுக்கு...." என்ற ஒற்றை வார்த்தை சமர்ப்பணத்துடன் தொடங்கும் இந்தப் படம் மனிதர்களின் பல்வேறு நிறங்களை அப்படியே தனக்குள் அள்ளிக் கொண்டுவந்து சேர்த்த ஒரு  "கலர்ஃபுல்" கருப்புவெள்ளைத் திரைப்படம்!

படம் துவங்கியதுமுதல்  முடியும் வரை "அப்படியே" இருக்கும் அந்த "அவளின்"திரைப்பெயர் மஞ்சு நிஜப்பெயர் ஸ்ரீப்ரியா! தன்னையும் மஞ்சுவையும் திரையில் ஒரு கணம் கூட பிரித்துப்பார்க்க அனுமதிக்கவில்லை ஸ்ரீப்ரியா..... எளிமையாக "மஞ்சுவாக ஸ்ரீப்ரியா வாழ்ந்திருக்கிறார்" என்ற அந்த க்ளிஷே வரியை உபயோகிக்கலாம்தான் ஆனால் அதையெல்லாம் தாண்டியதாய் அமைந்திருக்கிறதே ஸ்ரீப்ரியாவின் இந்த "மஞ்சு" அவதாரம்!

அழகான மஞ்சுவை அணுகுவது கடினம்.... காரணம் அவளைச் சுற்றி அவளே அமைத்துக்கொண்டிருக்கும் நெருப்பு வளையங்கள்!..... காரணம் ஆதரவற்ற நிலையில் ஓர் அழகான பெண் இருந்தால் அவளுடன் உறவைப் பகிர்ந்துகொள்வதைவிட உணர்வுகளுக்காக உபயோகப்படுத்திக்கொள்ளத்தானே அல்லாடும் ஆண்மனம்!

மஞ்சுவின் தாயின் நடத்தையின் அசுத்தம் ஊருக்கே வெளிச்சம் அந்த வெளிச்சத்தில் நிர்வாணமாய்க் கூனிக்குருகும் அவள் கணவன்..... இந்த ஓட்டைகளுக்குள் நுழைந்து, அறிந்தும் அறியாமலும் அல்லாடும் மஞ்சுவிடம் அத்துமீற "மாமன்" ஒருவன் எத்தனிக்கும்போது மஞ்சு பள்ளிமாணவி!

" நேத்து உங்க அம்மாகூட ஒருத்தர் வந்தாரே.... உயரமா.....குண்டா.....அவரு யாரு உங்க அப்பாவா??" என்று பதில்தெரிந்துகொண்டே நக்கலாகக் கேட்கும் உடன்பயிலும் மாணவிக்கு மௌனத்தைப் பதிலாகத் தந்து நகரும் மஞ்சுவின் பிஞ்சுமனம் மேலும் மேலும் அவமானங்களாலும் அத்துமீறல்களாலும் இறுகிப்போன‌ கடினமான ஸ்ரீப்ரியாவாக  மொத்தப்படத்திலும் உலவவிட்டிருப்பார் ருத்ரய்யா,.....!

ஆவணப்பட இயக்குனர் அருணாகக் கமல்ஹாசன்! ஆங்கிலத்தில் genuine என்ற வார்த்தைக்கு synonymous படத்தில் கமல்! தனது தொழில், காதல் உட்பட எல்லாவற்றிலும்! மஞ்சு பணிபுரியும் விளம்பரக் கம்பெனியின் பாஸ் ரஜினி! "டேய் மாப்புள......" என்று படு அலட்சியமாகத் துவங்கிக் கமலுக்கு வாழ்க்கையைப் பற்றியும் முக்கியமாகப் பெண்களைப் பற்றியும் அவ்வப்போது பாடம் எடுக்கும் ஒரு திறந்த புத்தகம் ...... தன் இளமைக்கு இணையாக‌ இன்பத்தை நிறுத்தித் தானே சரியென்று வாழும் Casual இளைஞன் ரஜினி!ஆவணப்படம் எடுக்கவரும் தன் நண்பன் கமலுக்கு உதவிவாக இருக்கச்சொல்லி ஸ்ரீப்ரியாவைக் கமலுக்கு அறிமுகம் செய்துவைப்பார் ரஜினி!

கமலின் ஆவணப்படத்துக்கான ஆராய்ச்சிப் பொருள் "பெண்கள்"!  கிட்டத்தட்ட‌ முப்பதாண்டுகால முற்போக்கான பளிச் பளிச் வசனங்கள்தான் அன்று இந்தப்படம் புறக்கணிக்கப்பட்டதற்கும் இன்றும் நிலைத்து கம்பீரமாய் நிற்பதற்கும் ஒற்றைக் காரணம்!

"இந்த படமெடுக்குறதுல நல்ல பணம் கிடைக்கும்ல......" என்று ஸ்ரீப்ரியா கமலுடன் ஒரு காஃபி உரையாடலில் மேம்போக்காகக் கேட்பார்...... முகம் சிவக்கும் கமல், "பணம் பண்ணுறது மட்டும் என்னோட நோக்கமில்ல...." என்று அழுத்தமாக ஆரம்பிக்கும்போதே சட் டென்று ஸ்ரீப்ரியா "இப்படி வித்தியாசமாத் தன்னைக் காட்டிக்கிறது ஒரு ஃபேஷன்..!" என்று உரையாடலை முள்தைத்து முடித்துவைப்பார்!

வீட்டுக்கு வந்த ஸ்ரீப்ரியாவை "காஃபி சாப்பிடுறீங்களா?" என்று கமல் கேட்கும்போது "வேற என்ன பண்றது சொல்லுங்க....." என்று ஸ்ரீப்ரியாவை அஸால்டாகக் கேட்கவிட்டு அடுத்த ஃப்ரேமில் கையில் காஃபியுடன் சீன் வைத்திருப்பார் ருத்ரய்ய்யா.....!

எதிரில் அமர்ந்திருக்கும் கமலின் உணர்வுகளைத் தன் கூர் வார்த்தைகளால் படு ஈஸியாகக் காயப்படுத்தும் ஸ்ரீப்ரியாவுக்குத் தக்க பதிலைக் கொடுக்க கமலின் உதடுகள் துடித்திடும் ஆனால் அதற்கு வாய்ப்புக் கொடுக்காமல் மைக்ரோசெகண்டில் அந்த உரையாடலையே முடித்துக்கொண்டு கிளம்பிவிடுவார் ஸ்ரீப்ரியா...... மெதுமெதுவாகக் கமல் ஸ்ரீப்ரியாவைப் புரிந்துகொண்டு காதலிக்க ஆரம்பித்தாலும் கமலுடன் சேர்ந்து பார்வையாளர்களுக்கும்கூட எளிதில் புலப்படாது கமல் குறித்த ஸ்ரீப்ரியாவின் மனவோட்டம் எப்படிப் போகுமென்று...... அதுவரை சில மின்னல் வசனங்களை அவ்வப்போது சப்ளை செய்துகொண்டே இருப்பார் ருத்ரய்யா பார்வையாளனின் புன்சிரிப்புக்காக!

ஒரு சீனில் கமலும் ஸ்ரீப்ரியாவும் ரோட்டில் நடந்து செல்லும்போது கமல் சொல்லுவார், " நம்ம ரெண்டுபேரும் ஒண்ணா நடந்துட்டுவந்தாலும் நீங்கமட்டும் தனியாவர்ற மாதிரி இருக்கு" இது சாதாரணமான வசனம்தான் என்றாலும் ஏதோ காரணத்துடன் டல்லாக இருக்கும் மஞ்சுவைப் பேசவைக்கக் கமல் எடுக்கும் பிரயத்தனமாகக் கமல் தவிப்புடன் டெலிவர் செய்யும் விதம் அத்தனை இதமாக இருக்கும்!

கமலின் ஆவணப்படத்துக்காகக் குட்டிபத்மினியைப் (படத்தின்படி அவர் ஒரு க்ளாமர் நடிகை) பேட்டியெடுப்பார்கள்...... "இப்படி ஆடியன்ஸுக்காக அதிலும் குறிப்பாக ஆண்களுக்காக இப்படி மேக்-அப், க்ளாமரான ஆடை போட்டுக்கறது உங்களுக்கு ஒரு மாதிரி அடிமைத்தனமா தெரியலயா?" என்று கமல் கேட்க.... அலட்டிக்கொள்ளாமல் பதில்வரும் நடிகையிடமிருந்து. "மிஸ்டர், அருண் உங்களுக்கு நிறைய நேரம் இருக்குதுபோல..... இவ்ளோயெல்லாம் யோசிக்கிறீங்க?? (லேசான சிரிப்புடன்) இதோ இப்போ ஒரு குடும்பப்பெண் வேடம் ஈவ்னிங் அடுத்த ஷூட்டிங்ல அப்படியே ஆப்போஸிட்.... ப்ராஸ்டிடியூட் வேஷம்.... யோசிக்கவெல்லாம் டைம் இல்ல...." இப்படி யதார்த்தங்களை அளவுகோலாக வைத்துப்பார்த்தால் படம் வந்த சமகாலத்து கே.பாலசந்தர் படங்கள்கூட முற்போக்கில் அவள் அப்படித்தானுடன் மிகவும் தள்ளித்தான் நிற்கமுடியும்.... ஆனால் அப்போது அதனை "ஆபாசம்" என்று தள்ளிவைத்துவிட்டோம்..... நாமெல்லாம் கண்ணகி மைந்தர்கள் ஆயிற்றே! இப்பொழுது ருத்ரய்யாவை வியந்தும் "அவள் அப்படித்தான்"-ஐக் கொண்டாடி எழுதும் விகடனாரே அப்போது இந்தப் படத்துக்குப் போட்ட மார்க்கையும் எழுதிய விமர்சனத்தையும் படித்தால் விழுந்து சிரிக்கலாம் அந்த நிறமாற்றத்தைப் பார்த்து!

ருத்ரய்யா சாகாவரம்பெற்று நிமிர்ந்து நிற்பது மஞ்சுவின் பாத்திரப்படைப்பில்தான்! மேலுக்கு அவள் ஏதோ மிகக்கடினமான வித்தியாசமான பெண் போலத் தோற்றமளித்தாலும், ஒரு சாதாரணப்பெண்ணின் தவிப்புகளும் தன்மீது விழும் துச்சாதன விமர்சனங்களுக்கு அவளுக்கு எழும் சீற்றங்களும் அனைத்துமே அப்படியே அசலாக நாம் சாதரணமாக உடன்வாழும் பெண்மைகளைத்தான் பறைசாற்றும்! ஆனால் அவளது பேச்சுக்களும் மிகமிக மெச்சூர்டாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் நடவடிக்கைகளும் அவளாக உருவாக்கிக்கொண்ட வெறும் செயற்கை அரண்கள்தான் என்பது பார்வையாளனுக்குத் தெளிவாகத் தெரியும்,....... ஒரு பெண்ணின் insecurity-யை இத்தனை நெருக்கமாக விளைவுகளுக்கும் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அவளின் தயாரிப்புளுக்கும் மையம்வைத்து உருவாக்கிய ஒரு படைப்பை அவ்வளவு எளிதாகத் தமிழில் கூகுளால் கூட கண்டுபிடித்து சொல்லிவிடமுடியாது!

மஞ்சுவைக் கமல் திருமணம் செய்துகொண்டால் ஒரு குடும்பஸ்த்ரியாக எப்படி இருந்திருப்பாள் என்று படத்தின் நடுவே ஒரு நிமிடம் Pause போட்டு சிந்தித்தால் நிச்சியமாக ஒரு பாங்கான சராசரி குடும்பப்பெண்ணாக அருமையான ஒரு மனைவியாகத்தான் மஞ்சு இர்ந்திருப்பாள் என்றுதான் மனது சொல்லும் இத்தனைக்கும் ஒரு கே.பி பட ஹீரோயினைவிட நூறுமடங்கு அதிகமாக புரட்சியும் சுதந்திரமும் பேசும் பாத்திரம் இது..... சில பவர்ஃபுல் காட்சிகளால் மஞ்சுவின் இத்தனை மெனக்கிடல்களையும் மீறி அவளையும் ஒரு Girl Next Door -ஆக‌ப் பார்வையாளனின் மனதில் நிலை நிறுத்தியதைத்தான் ஒவ்வொருமுறை இந்தப் படம் பார்க்கும்போதும் ருத்ரய்யாவை வியந்து, கமலைப் போலவே நானும் மஞ்சுவைக் காதலிக்கிறேன் மௌனமாக.......!

தவறான நபர்களிடம் காதலித்து ஏமாற்றத்தையும் அருவருப்பையும் சம்பாதித்துக்கொண்ட விரக்தியில், மஞ்சு தான் தேடுவதும் ஒரு நல்ல துணையைத்தான் என்பதை அவளுடன் நெருக்கமாகப் பழகும் தோழிக்கோ, அவளைப் பற்றி மிகத் தீர்க்கமான ஒரு புரிதலில் இருக்கிறோம் என்று நம்பும் ரஜினிக்கோ ஏன் அவளை அப்படியே ஏற்றுக்கொண்டு அவளாகவே அவளைக் காதலிக்கும் கமலுக்கே கூடப் புரியாதவாறு தான் உருவாக்கிக்கொள்ளும் சிக்கலான இமேஜில் தானே சிக்குண்டு பொக்கிஷமாகக் கிடைத்த ஒரேயொரு துணைவனையும் இழந்து தூரத்தில் தனியாக நிற்பாள் மஞ்சு அந்தக் கடைசி காட்சியில்.......

முதலில் கூறியவாறு பார்வையாளனும் கமல்ஹாசனும் மஞ்சுவின் தேவை மற்றும் காதல் பற்றிய நிலைப்பாடில் ஒரேமாதிரியான‌ குழப்பமான மனநிலையில் இருப்பதாகச் செல்லும் திரைக்கதையில் ஒரு பகுதியில் பார்வையாளன் மஞ்சுவின் "சாதாரணத்தை"ப் புரிந்துகொண்டு அவளின் அடிமனதில் கமல்மீது தோன்றும் காதலையும் எளிதாக உணரத் துவங்கிவிடுவான் ஆனால் கமலுக்கு அது இறுதிவரைக்கும் குழப்பமாகவே மிஞ்சிவிடுவதுதான் இந்தத் திரைக்கதையின் யதார்த்த மந்திரம்!

திரைக்கதையைவிட அதி நவீனமானது இந்தப் படத்தின் ஒளிப்பதிவு...... ஒரு கருப்பு-வெள்ளைப் படத்தில் கேமரா இவ்வளவு விளையாடமுடியுமா?? என்று கர்ணன், பி.எஸ். லோக்நாத், அஷோக்குமார் போன்ற ஜித்தர்களைப் பார்த்து மிரண்டிருக்கிறேன் ஆனால் இந்தப் படத்தில் நல்லுசாமி-ஞானசேகரன் கேமராவைக் கையாண்டிருக்கும் கோணங்களும் வண்ணங்கள் இல்லாமலேயே க்ரியேட் செய்யும் மூட்-களும் அபாரமானவை...... பெரும்பாலும் க்ளோஸ்-அப் கள்தான் ஆனாலும் ஒன்றுக்கொன்று அதிக அழுத்தமாகவும் ஆழமாகவும் பெர்ஃபார்மன்ஸையும் சரி உணர்வுகளையும் சரி நேரடியாக முழுவதுமாக அள்ளிக்கொண்டேயிருக்கும்!

நடிப்பு என்று சொன்னால்........ ஸ்ரீப்ரியாவின் நடிப்பை ஏற்கெனவே சொல்லிவிட்ட்டேன் முழுமையாக என்னால் எழுதிவிடமுடியாவிட்டலும்! கமலிடம் இந்தப் படத்தில் மிக அதிகமாக ரசித்தது........ ரஜினியிடமும் ஸ்ரீப்ரியாவிடமும் உரையாடல்களில் நேர்மாறான கருத்துகள் கொண்டவராகத்தான் அநேகக் காட்சிகளில் கமல் இருப்பார் ஆனாலும் அவர்கள் இருவரும் எதிர்மறைக் கருத்துகளைக் கேட்பவர்களே இல்லை பாத்திரப்படைப்புகளில்! தனது கருத்து முரண்பட்ட நிமிடத்திலேயே பேச்சை இருவரும் முடித்துக்கிளம்பிவிடுவார்கள்..... அப்போது அந்த ஒவ்வொரு சீனிலும் அடுத்து தான் பேச வேண்டிய பத்துவரி வசனத்தைத் தனது ஒற்றை முகபாவத்தாலேயே பேசுவார் கமல்..... நிறைய சீன்களில் கமலிடமிருந்து வெளிப்படும் இந்த மௌன நடிப்பு வெகுவாகக் கவரும்........!

ரஜினியின் தெளிவான படு இயல்பான நடிப்பு படத்திற்கு பெரும்பலம்....... "நேச்சுரல் ஆக்டிங்"கில் இந்திய சினிமாவுக்கு ஒரு மாபெரும் முன்னோடி ரஜினிகாந்த் ஆனால் ஸ்டைலுக்காக மட்டுமே நினைவுகூரப்பட்டுவருகிறார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக! இந்த ஆதங்கம் எழுவதைத் தவிர்க்கமுடியாது இந்தப் படம் பார்க்கும்போது! ரஜினியின் ஸ்டைலும் வேகமும் இந்தப் படத்தில் அவர் ஏற்றிருக்கும் தியாகு கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கும் பாங்கினையும் பார்த்துப் பார்த்து ரசிக்கலாம்! சில காட்சிகளில் நன்றாகப் பயன்படுத்தியிருப்பார் ருத்ரய்யா.....!

இன்னொரு முக்கியமான ஆட்ட நாயகன் இளையராஜா! மஞ்சுவின் ஆழத்தை மிகச் சரியாகப் புரிந்துகொண்ட இன்னொரு ஜீவன் இளையராஜாவாகத்தான் இருக்கமுடியும் அத்தனை தேர்ந்த இசையை வழங்கியிருப்பார்..... "உறவுகள் தொடர்கதை...." ஒரு பாடல்போதும் இளையராஜாவின் இத்தனை சிரத்தையான இசையமைப்பை சர்வசாதாரணப் படங்கள் அத்தனை எளிதில் பெற்றிடமுடியாது அனுபவித்து இசை வழங்கியிருப்பார் பெரும்பான்மை மௌனங்களுடன்!

நான் ருத்ரய்யாவின் இரண்டாவது படமான "கிராமத்து அத்தியாயங்கள்" பற்றி அதிகம் கேள்விப்பட்டதுகூட கிடையாது..... ஒரு பத்து ஆண்டுகளுக்குமுன்பாக விகடனில் அவரது பேட்டி ஒன்றைப் படித்தேன்.... ஒரு பிடிவாதக்காரராக அடையாளம் காட்டப்பட்டிருந்தார்........ அவரது பேச்சும் விடாப்பிடியாகத்தான் தெரிந்தது...... ரஜினி-கமல்.... அஜித்... விக்ரம் வரை அவரின் பார்வை பதியப்பட்டிருந்தது அந்தப் பேட்டியில் அதன்பிறகு அவரது மரணச்செய்தியைத்தான் கேள்வியுற்றேன்.......

ருத்ரய்யாவின் இந்தப் பிறவியில் அவர் எடுத்திருப்பது இரண்டே படங்கள்தான் என்றாலும் "அவள் அப்படித்தான்" அடுத்த நூற்றாண்டிலும் பேசப்படும் ஒரு தமிழ்ப்படமாக இருக்கும்!

இந்தப்படத்தை ஒரு ஜப்பான் அல்லது கொரிய மொழியில் டப் செய்து சப்-டைட்டிலுடன் வெளியிட்டிருந்தால் நம்மவர்கள் கொண்டாடிப்பார்த்திருப்பார்கள் ஓர் உலகசினிமாவாக........!


ருத்ரய்யாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகளுடன்......

பிரபு . எம்