எழுதும் ஆர்வம்தான் என்னை இந்த வலைப்பூ தொடுக்க வைத்தது. உங்கள் வாசிப்பினாலும், விமர்சனங்களாலும், நட்பினாலும் மெருகேறக் காத்திருக்கும் என் எழுத்துகள்..
Monday, April 23, 2018
மெர்க்குரி [U/A] (2018)
தெர்மோமீட்டர் திரவத்தின் கோரமுகத்தை வசனங்களைத் தவிர்த்துவிட்டு அலறும் பின்னணி இசையுடன் வழங்கியிருக்கும் சத்தமான “சைலண்ட்” ஃபில்ம்! படத்தில் உள்ளும் புறமும் அவ்வளவு சத்தம்! (இசையைப் பற்றிப் பிறகு பார்ப்போம்.)
அட்டகாசமான கதைக்களம் அமைத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்!
நாயகர்கள் மற்றும் நாயகியின் உலகம் நிசப்த மயமானது... அவர்களைத் துரத்தும் “பேய்” வில்லனின் உலகமோ முழு இருட்டானது! இந்த வாழ்நாள் இருளையும் நித்திய நிசப்தத்தையும் ஏற்படுத்திவிட்டு, அந்த ஊரில் 84 உயிர்களையும் காவுவாங்கிவிட்டு, முழு அமைதியில் மரண ஓலங்களை உள்ளடக்கிய, சிதலமடைந்த நரகமாய் எழுந்து நிற்கும் அந்த ”கார்பரேட் எர்த்” ஃபேக்டரிதான் கதையில் அரங்கேறும் “Wrong War"-ன் பெர்ஃபெக்ட் போர்க்களம்!
”மெர்க்குரி” எனும் பெயரையும் Mercury poisoning எனும் படம் சொல்லும் மைய விஷயத்தையும் கார்த்திக் சுப்பராஜைப் போலவே பார்வையாளர்களும் ஒதுக்கி அப்புறப்படுத்திவிட்டு, ஹாலிவுட் சாயலில் ஒரு சாதாரண ஹாரர் படத்தைப் பார்ப்பதற்கான மன அமைப்புடன் கரை ஒதுங்கிவிடுவது மிகவும் நலம்...! தலைப்பையும் கருவையும் வைத்துக்கொண்டு சராசரி ரசிகன் கற்பனை செய்துகொள்ளக்கூடிய ஃபேக்டரியின் அவலங்களைச் சொல்லப்போகும் க்ளிஷே ஃப்ளாஷ்பேக் சீக்வென்ஸ் படத்தில் வரவே வராது! பாத்திரங்கள் பேசாமல் படம் பேசுவதுதான் மௌனப் படம் என்றால் படம் மௌனமாகப் பேசியிருக்கும் முக்கியமான விஷயம் இந்தப் படத்தில் இதுதான்! (மற்றபடி சைகை மொழியில் வசனங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!)
சல்லைத் தனமான சேட்டைகளால் ஒரு கொலையைச் செய்துவிட்டு சட்டத்திடமிருந்து தப்பிக்கக் காய் நகர்த்துகிறார்கள் நாயகர்களும் நாயகியும்..... அடுத்த நாளில், தங்களால் கொலை செய்யப்பட்டவரிடமே அந்த ஃபேக்டரிக்குள் மாட்டிக்கொண்டு அல்லல் படுகிறார்கள்.... அடித்துத் துவைக்கும் அந்த ”ஆவி”யிடம் கதை மாந்தர்களோடு சேர்ந்து நாமும் மாட்டிக்கொள்ள முக்கால் வாசிப் படத்தில் சுவாரஸ்யமே இல்லாத ”ஒருதலை மோதல்” (அதாவது சண்டையில் ஒருவர் மட்டுமே அடித்துக்கொண்டிருப்பார் அடிவாங்குபவர்கள் கடைசிவரை அகிம்சையைக் கடைபிடித்து செம்ம அடி வாங்கிச் சாகிறார்கள்!) மட்டுமே நிகழ்கிறது... ஆனால் அடித்து அடித்து டயர்டாகிப் போகிற ”பேயி”ன் கோபம் தீரும் கணத்தில் வெளிப்படும் நெகிழ்ச்சியான காட்சிகளும், அருமையான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தப்படும் அழகான ஈர உணர்வுகளும்தான் முடிவுரையை மட்டும் முழு நிறைவாய் எழுதி முடித்திருக்கின்றன!
கடைசிக் காட்சிகளை உணர்ச்சிப் பூர்வமாக எழுதியிருப்பது போலவே ஆரம்பக் காட்சிகளை ரசிக்கும்விதமாக அமைத்திருந்தால் இதமான அனுபவம் தந்திருக்கக்கூடிய சாத்தியங்கள் அதிகம்... ஆனால் கதாநாயகர்களின் சல்லித் தனமான செய்கைகளை ரசிக்கமுடியவில்லை.....
வசனங்கள் இல்லாத படத்தில் முக்கியமான சில காட்சிகளை சைன் லாங்குவேஜ் மற்றும் புத்திசாலித்தனமான காட்சியமைப்புகளால் சிறப்பாக நகர்த்தியிருக்கும் சாமர்த்தியத்துக்குக் கார்த்திக் சுப்பராஜை நிச்சியம் பாராட்ட வேண்டும். (”மொழி” படத்தில் நமக்கு ஏற்கெனவே கொடுக்கப் பட்டிருக்கும் சைகை மொழிக்கான பேஸிக் ட்ரெயினிங் இந்தப் படத்திற்கு நன்கு உதவியிருக்கிறது!) தமிழ் வெர்ஷனில் சப்-டைட்டில்கள் போடுகிறார்களாமே?? (எதுக்கு!) நான் பார்த்த பிராந்திய மொழி வெர்ஷனில் சப்-டைட்டிலும் “ஒரு மர நிழலில்...” பாடலும் இல்லை... இல்லாததே நலம்.... சப்-டைட்டில் போடுவது நிஜமென்றால் படத்துல பேசிட்டுப் போயிடலாமே....! எதுக்கு வீண் பிடிவாதம்??!
காட்சிகளில் கவிதை வாசிக்கவும் கார்த்திக் சுப்பராஜ் தவறவில்லை...... “மான்கள் நடமாடுமிடம்” என்று ஒரு சைன் போர்டு ஓர் இடத்தில் வரும்.... படத்தின் மனிதர்கள் ஒரு குற்றத்தை செய்துகொண்டிருக்கும்போது, குற்ற உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் ஒரு முற்றிலும் குற்றமற்ற கண்களிடமிருந்து விழும் ஒரு பார்வை! அது நம்மையும் சேர்த்து சில்லிட வைக்கும்... அந்தக் காட்சியில் சாந்தமே சர்வமுமாய் வாழும் கொம்புகள் கொண்ட மான் ஒன்று மிரட்சியுடன் குத்திப் பார்த்துக்கொண்டிருக்கும் கதை நாயகர்களை.... சிலிர்ப்பேர்ப்படுத்தும் காட்சிக் கவிதை அது!
ஆங்காங்கே வெளிப்படும் இதுபோன்ற திரைமொழி மெனக்கிடல்களை ஏன் படம் முழுக்க பரப்பவில்லை என்பதுதான் நியாயமாக மனதில் எழும் கேள்வி.
நடிப்பைப் பொறுத்தவரை மொத்தமே 10-12 பேர்தான் படத்தில். அதில் பிரபுதேவாவின் நடிப்புக்கு இரண்டாமிடம் தான் கதையிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை அவர் வேறு யாருக்கும் விட்டுக்கொடுத்துவிடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அம்சமாக நடித்திருக்கிறார்..... முதலிடம் வெல்வது அழகான கதை நாயகியான இந்துஜாதான்....
ஸ்கோப்பும் அவருக்குத்தான் அதிகம் ஆனால் அதைவிட மொத்தப் படத்தையும் சுமக்கப் போகும் பொறுப்புணர்வை சரியாகப் புரிந்து கடைசி காட்சிகளில் வெளிப்பட வேண்டிய அளவில்லாத எமோஷனை அளவறிந்து கொடுத்து அப்ளாஸ் அள்ளியிருக்கிறார் இந்துஜா! மற்றவர்களின் நடிப்பு நன்றாக இருந்தாலும் சைலண்ட் ஃபில்ம் என்பதற்காக சற்று மீட்டரை ஏற்றிவைத்தே ரியாக்ஷன்களை வழங்குகிறார்கள் அது சில இடங்களில் செயற்கையாகத் தெரிவது மட்டுமின்றி நடிகர்களின் அனுபவமின்மையையும் காட்டுகிறது!
ஒளிப்பதிவாளர் திரு வின் கேமரா எப்பொழுதுமே இயக்குனரின் கண்களாகச் சுழன்று 360 டிகிரியில் திரையைத் தத்ரூபக் காட்சிகளால் நிரப்பக்க்கூடியது. இந்தப் படத்தில் மிகவும் அதிகமான சவால்களை நிச்சியம் சந்தித்திருக்கிறார் திரு.... படத்தில் உரையாடல்கள் இல்லாததினால் வழக்கமான மாஸ்டர் ஷார்ட்... க்ளோஸ்-அப், ஓவர் தி ஷோல்டர் என்று சிம்பிளாக முடித்துவிட முடியாது, ஒவ்வொரு அணுக்கத்திற்கும் ஓர் ஆங்கிள் பிடித்தாக வேண்டும்... மேலும் மௌனப் படங்களில், எந்த இடத்தில் “கட்” சொல்வதென்பது இயக்குனருக்கே சவாலான விஷயம் அதற்கு ஈடுகொடுத்துத் தன் டிஜிட்டல் கேமராவில் படத்தை அழகாக அள்ளியிருக்கிறார் திரு...!
எவ்வளவு காட்சிகளை அள்ளிச்சென்று எடிட்டிங் டேபிளில் கொட்டினார்களோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் ஆனால் படத்தின் எந்தக் குறையும் பார்வையாளனுக்கு க்ளைமேக்ஸ் நெகிழ்ச்சிக்குப் பிறகு உருத்தலாகவே இருக்காததற்கு ஒரே காரணம் மெரிக்குரியைக் கடைந்து குறுகத் தரித்துக் கொடுத்த விவேக் ஹர்ஷனின் எடிட்டிங்தான்.... கத்திரி விழுந்த காயங்களின்றி கச்சிதமாய்த் தவழ்ந்து செல்கின்றன காட்சிகள்!
இது சைலண்ட் ஃபில்ம் அல்ல “சப்தப் படம்” என்கிற ரீதியில் முதல் பத்தியில் சொல்லியிருந்தேன்... அதற்காக படத்தின் சத்தத்தை அதாவது இசையைக் குறை சொல்ல்விடக்கூடாது.....சந்தோஷ் நாராயணனின் இசை இந்தப் படத்திற்கு சில முக்கியமான காட்சிகளில் இல்லாத உணர்வுகளையெல்லாம் சேர்த்துக் கொடுத்திருக்கிறது...... நட்புக்குள் ஒளிந்திருக்கும் மௌனக் காதல் சொல்லும் தீமில் (Theme) மென்மையாகக் கடத்தும் இசை கடைசிக் காட்சியில் கண்ணீர் கசியவைக்கும் வயலின் இசையாக மனதைப் பிடித்து உலுக்கியெடுக்கவும் தவறவில்லை.... படத்தின் நடுப்பகுதியில்தான் இசை மொத்தமும் வெறும் சத்தமாய் கேட்கிறது ஆனால் அந்தக் காட்சிகளே இரைச்சலானவைதான் திரைக்கதையில்.... உலகத் தரத்திலான இசையை மீண்டுமொருமுறை வழங்கியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.
சிதலமடைந்த அந்த ஃபேக்டரியின் புரடக்ஷன் டிசைனிங்கில் கார்த்திக் சுப்புராஜின் கற்பனையின் கருப்பொருளில் நுணுக்கம் தெறிக்கின்றது....! அதை அப்படியே கண்முன் கொண்டுவந்த ஆர்ட் டிபார்ட்மெண்டுக்கும் கணிணி கட்டுமானர்களுக்கும் அவார்டு நிச்சியம் கிடைக்கும்....! அந்த நீளமான ஃபேக்டரி “ஒருதலை மோதலில்” அணுக்கம் அணுக்கமாக ஒவ்வொரு ப்ராபர்டியும் உபயோகப்படுத்தப் பட்டிருக்கின்றது.... (ஆனால் அடிவாங்கும் இளைஞர்களுக்குத் தங்களைத் தாக்குபவரை அடிக்கவும் இரும்புக் கம்பிகள் தொடங்கி ஏகப்பட்ட சாதனங்கள் கையில் கிடைத்துக்கொண்டே இருக்கிறது ஆனால் சாகும் தருவாயிலும் எதிரியைத் தாக்கக்கூடாது என்று இயக்குனருக்கு செய்துகொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றி அடிவாக்கிச் சாகிறார்கள்!)
டெக்னிக்கலாக “மெர்க்குரி” வேறொரு தளத்தில் கம்பீரமாக நிற்கின்றது. உலகுக்கே பொதுமொழியான மௌனம் பேசும் இந்த “மெர்க்குரி” ஒரு தமிழ்ப்படமாக எந்தளவு ஈர்க்கிறது என்பதுதான் விவாதத்துக் குரியதே தவிர, மற்றபடி திரைப்பட விழாக்களிலெல்லாம் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளில் விரிவடையும் மனிதம் பேசும் உணர்வுகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத்தான் செய்யும்..... அந்தளவு தரமான படைப்பாகக் கடைசி பத்து நிமிடங்களில் நிலை நிறுத்திவிடுகிறார்கள்.
எந்தவொரு இண்டஸ்ட்ரியிலும் செய்யப்படும் பரிசோதனைகளானது இறுதியில் வெளிவரும் ப்ராடக்டின் (Product) மேம்பாட்டில்தான் முழுமையடைகிறதே தவிர, ” இது ஒரு பரிசோதனை முயற்சி” என்று லேபிள் ஒட்டி விற்பதினால் எந்தப் பொருளையும் நுகர்வோர் எவரும் காம்ப்ரமைஸ் செய்துகொண்டு வாங்க ஆர்வம் காட்டமாட்டார்கள் எனும் நிதர்சனத்தைப் பரிசோதனைப் படைப்பாளிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று மட்டும் தோன்றியது எனக்கு! அந்த வகையில் “மெர்க்குரி” பெர்ஃபெக்டான திரைப்படம் இல்லை.... ”நல்ல முயற்சி” என்னும் விமர்சனமும் வெறும் ஆறுதல் பரிசாக அமைந்துவிடும்.... ஆனால் மெர்க்குரியின் கலரிலேயே இருக்கும் வெள்ளிப் பதக்கம் பெரும் அளவுக்குப் படம் நிச்சியமாய் இருக்கிறது.... தங்கத்துக்கு சத்தியமாக வாய்ப்பில்லை!
வேதியியிலின் ஒரே திரவ உலோகமான (Liquid metal) ”மெர்க்குரி” அதற்கேற்ற கணத்துடன் இருந்தாலும் வழுக்கிச் சென்றுவிடுகிறது ஓரங்களில் ஒட்டாமல்!
அன்புடன்,
பிரபு எம்
Labels:
கார்த்திக் சுப்புராஜ்,
திரைப்படம்,
திரைவிமர்சனம்,
பிரபுதேவா,
விமர்சனம்
Tuesday, March 13, 2018
மனசுல பட்டது - 1 : ”குரங்கனி காட்டுத்தீ விபத்து”.
குரங்கனியில் ஏற்பட்ட காட்டுத்தீயில், மலையேற்றப் பயிற்சிக்காகச் சென்ற குழுவினர், சிக்கிக்கொண்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது... ஆழ்ந்த வருத்தத்துக்குரியது.
இந்த துர்சம்பவத்தை எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் இறுதியில் இது ஒரு “விபத்து”தானே தவிர இதில் காற்றையும் நெருப்பையும் தாண்டி வேறு எவரையும் குற்றம் சொல்வது மனிதாபிமானமற்ற மாபெரும் தவறாகும். அப்துல் கலாம் முதல் ஸ்ரீ தேவி வரை அத்தனை மரணங்களையும், முகாந்திரம் இல்லாத சந்தேகங்களை முன்வைத்து சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும், கொச்சைப் படுத்துவதைத் தொழிலாகவே சிலர் செய்துவரும் இத்தகைய துரதிர்ஷ்டவசமான நிகழ்காலத்தில் வாழ்ந்துவரும் பரிதாபத் தமிழர்கள் நாம்! குற்றம், குறை, சந்தேகம் என்றே பரபரப்புக்குப் பலியாய்க் காத்திருக்கும் நமது ஊடகங்கள், கோரமான இந்த விபத்தையும் ஆரம்பம் முதலே, அரசாங்கம் முதல் இந்த மலையேற்றப் பயிற்சியை ஏற்பாடு செய்த அமைப்பு வரை யாரையாவது குற்றஞ்சாட்டும் நோக்கிலேயேதான் தகவல்களைப் பதிந்து வருகிறார்கள். உடனே பயந்துபோன இந்த மூடர்கூடமும் (அதாவது ஈபிஎஸ்-ஓபிஎஸ் அரசாங்கம்), ”முறைப்படி அனுமதி பெறாமல் அவர்கள் மலையிலேறியிருக்கிறார்கள்” என்று அறிவிக்கிறது..... உடனே அந்த கிளப் உறுப்பினர்கள் தலைமறைவு என ஊடகங்கள் பரபரப்பேற்றுகின்றன!
ஏன் இவ்வளவு வன்மம் பிடித்து அலைகிறோம்? இந்த விபத்தில் மிகக் கடினமான மீட்புப்பணியானது இன்னும் நடந்துகொண்டிருக்கின்றது. தீக்காயங்களுடன் உயிர்பிழைத்த இளைஞர்களின் வாழ்க்கை எப்படி இருக்கப்போகிறது? என்பது மிகவும் வேதனையான கேள்விக்குறி! அப்படியிருக்கையில், இந்த சம்பவத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் மட்டுமே மிகுதியாக உண்டு......
இதனை எதிர்பாராத ஒரு விபத்தாகப் பார்த்து, இந்த விபத்து நமக்குக் கொடுத்திருக்கும் அதிர்ச்சிகளை ஆராய்ந்து அவற்றைத் தவிர்ப்பதற்கான எதிர்கால நடைமுறைகளை அரசாங்கமோ/ அமைப்புகளோ செய்ய வற்புறுத்தும் விதமாகத்தான் நமது சமூக வலைதளப் பதிவுகள் இருக்கவேண்டுமே தவிர, பொறுப்பற்ற நமது ஊடகங்களின் வியாபாரத்துக்கு நாம் பலியாகிவிடக்கூடாது!
என்ன நடந்தாலும் அதற்கு ஒரு வில்லனைத் தேடுவதும், கிடைக்காவிட்டால் உருவாக்கிவிடுவதும் ஓர் ஆபத்தான வன்ம மனநிலை. இது இப்படியே தொடர்ந்தால், ஒரு சமுதாய மனச்சிதைவையே உருவாக்கிவிடும். ஆகவே, விபத்துகளை விபத்துகளாகப் பார்ப்போம்.... சம்பவங்களைக் கதாபாத்திரங்களாக்குவதைத் தவிர்ப்போம்!
உயிரிழந்த காயமடைந்தவர்களுக்காக ஆழ்ந்த வருத்தத்துடன்,
பிரபு எம்.
இந்த துர்சம்பவத்தை எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் இறுதியில் இது ஒரு “விபத்து”தானே தவிர இதில் காற்றையும் நெருப்பையும் தாண்டி வேறு எவரையும் குற்றம் சொல்வது மனிதாபிமானமற்ற மாபெரும் தவறாகும். அப்துல் கலாம் முதல் ஸ்ரீ தேவி வரை அத்தனை மரணங்களையும், முகாந்திரம் இல்லாத சந்தேகங்களை முன்வைத்து சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும், கொச்சைப் படுத்துவதைத் தொழிலாகவே சிலர் செய்துவரும் இத்தகைய துரதிர்ஷ்டவசமான நிகழ்காலத்தில் வாழ்ந்துவரும் பரிதாபத் தமிழர்கள் நாம்! குற்றம், குறை, சந்தேகம் என்றே பரபரப்புக்குப் பலியாய்க் காத்திருக்கும் நமது ஊடகங்கள், கோரமான இந்த விபத்தையும் ஆரம்பம் முதலே, அரசாங்கம் முதல் இந்த மலையேற்றப் பயிற்சியை ஏற்பாடு செய்த அமைப்பு வரை யாரையாவது குற்றஞ்சாட்டும் நோக்கிலேயேதான் தகவல்களைப் பதிந்து வருகிறார்கள். உடனே பயந்துபோன இந்த மூடர்கூடமும் (அதாவது ஈபிஎஸ்-ஓபிஎஸ் அரசாங்கம்), ”முறைப்படி அனுமதி பெறாமல் அவர்கள் மலையிலேறியிருக்கிறார்கள்” என்று அறிவிக்கிறது..... உடனே அந்த கிளப் உறுப்பினர்கள் தலைமறைவு என ஊடகங்கள் பரபரப்பேற்றுகின்றன!
ஏன் இவ்வளவு வன்மம் பிடித்து அலைகிறோம்? இந்த விபத்தில் மிகக் கடினமான மீட்புப்பணியானது இன்னும் நடந்துகொண்டிருக்கின்றது. தீக்காயங்களுடன் உயிர்பிழைத்த இளைஞர்களின் வாழ்க்கை எப்படி இருக்கப்போகிறது? என்பது மிகவும் வேதனையான கேள்விக்குறி! அப்படியிருக்கையில், இந்த சம்பவத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் மட்டுமே மிகுதியாக உண்டு......
இதனை எதிர்பாராத ஒரு விபத்தாகப் பார்த்து, இந்த விபத்து நமக்குக் கொடுத்திருக்கும் அதிர்ச்சிகளை ஆராய்ந்து அவற்றைத் தவிர்ப்பதற்கான எதிர்கால நடைமுறைகளை அரசாங்கமோ/ அமைப்புகளோ செய்ய வற்புறுத்தும் விதமாகத்தான் நமது சமூக வலைதளப் பதிவுகள் இருக்கவேண்டுமே தவிர, பொறுப்பற்ற நமது ஊடகங்களின் வியாபாரத்துக்கு நாம் பலியாகிவிடக்கூடாது!
என்ன நடந்தாலும் அதற்கு ஒரு வில்லனைத் தேடுவதும், கிடைக்காவிட்டால் உருவாக்கிவிடுவதும் ஓர் ஆபத்தான வன்ம மனநிலை. இது இப்படியே தொடர்ந்தால், ஒரு சமுதாய மனச்சிதைவையே உருவாக்கிவிடும். ஆகவே, விபத்துகளை விபத்துகளாகப் பார்ப்போம்.... சம்பவங்களைக் கதாபாத்திரங்களாக்குவதைத் தவிர்ப்போம்!
உயிரிழந்த காயமடைந்தவர்களுக்காக ஆழ்ந்த வருத்தத்துடன்,
பிரபு எம்.
Labels:
அரசியல்,
அனுபவம்,
இரங்கல்,
ஊடகம்,
காட்டுத்தீ,
குரங்கனி விபத்து
Subscribe to:
Posts (Atom)
