Tuesday, September 19, 2023

"நம்பிக்கை நாயகன்" நம் உயிர்த்தோழன் பாபு!












பரிச்சயம் இல்லாதோர் கூட அவரை "என் உயிர்த் தோழன்" பாபு என்றுதான் சொல்ல வேண்டும்! "சூப்பர் ஸ்டார்", "மக்கள் செல்வன்", எட்சட்ராக்களை எல்லாம் விட ஓர் அணுக்கமான விளிப்பு ஒரு பட்டமாகவே தங்கிவிட்டது பாபுவுக்கு!
அவரே சம்பாதித்த பல உயிர்த்தோழர்களின் அன்பும் அணுசரணையும், வாழ்வின் கடைசி நாள் வரை அவரைத் தாங்கிப் பிடித்திருந்தது அந்தப் பட்டப் பெயரையும் காரணப் பெயராக்கி விட்டது! 

ஒரு பார்வையாளனாக பாபுவை நினைத்துப் பார்க்கும் போது, அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் போராட்ட குணம் இரண்டுமே அதீதத்துக்கும் அதிகமாக இருந்ததாகத்தான் உணர முடிகிறது.... அவை அவருக்கு அவரது வாழ்நாளின் வலிமிகுந்த வருடங்களை மட்டுமே பரிசளித்திருந்தாலும் சக மனிதர்களான நமக்கு மிகப்பெரிய பாடங்கள்! 

நடிப்புத் தொழிலில் நாயக வேடம் என்பது வெகுசிலருக்கு அதிர்ஷ்டம், உள்ளிருந்து போராடும் பலருக்கோ அது தவப்பயன்! சம்பந்தமே இல்லாமல் வெளியிலிருக்கும் பல கோடிப்பேருக்கும் கூட அது ஒரு கனவாக இருப்பதைப் புரிய முடிகிறபோது முயற்சி தவத்தின் கடுமை புலனாகிறது! பாபுவுக்குக் கடுந்தவப் பயனாகத்தான் நடிப்பு வாய்ப்புகள் கிடைத்திருக்க வேண்டும்! அதைத் தக்கவைப்பதில்தான் மனிதர் தன் அர்ப்பணிப்பை அளவுகளை மீறி செலுத்திவிட்டார்.... விளைவு, ஒரு சண்டைக் காட்சி சாகசம் ஏற்படுத்திய விபரீதம் அவரைப் படுக்கையிலேயே பல வருடம் கிடத்தி, இன்றைய தினம் அவர் நீத்த இன்னுயிரின் இறுதி மூச்சைக் கூட அதே படுக்கைக்குள் முடக்கித்தான் விடைகொடுத்திருக்கிறது! 

 தண்டுவடம் தடம்புரண்டுவிட்ட போதும் தன்னம்பிக்கையைத் தவற விடவில்லை பாபு! அவ்வப்போது தன்னம்பிக்கை தரும் தலைப்புச் செய்திகளில் வலம் வந்து கொண்டுதான் இருந்தார்! 

விரல்கள் முற்றிலும் விரைத்துவிடும் முன்பாக நடிகர் விஜய்க்கு அவருடைய இளம் வயதில் இறந்து விட்ட அவருடைய தங்கையுடன் நிகழ்கால விஜய் இருப்பது போன்ற ஓர் ஓவியத்தை வரைந்து கொடுத்தார்! தொலைக்காட்சியில் கண்டு நெகிழ்த்த ஒரு தருணம் அது! 

 "ஆனந்த விகடனில் "மனமே மந்திரம் உடலே எந்திரம்" என்று ஒரு தொடர் 2000ங்களின் தொடக்கத்தில் இடம்பெற்றிருந்தது. ஃபிட்னஸ் வித்வான்களாக வலம் வரும் சில கலைஞர்களும், தலைவர்களும், காவல்துறை அதிகாரிகளும் தங்கள் ஃபிட்னஸ் மந்திரங்களை வாசகர்களுக்கு வாரம் ஒருவராக வழங்கிவந்த ஒரு சுவையான தொடர் அது! அதில் ஒரு வாரம் இடம்பெற்று ஆச்சர்யப்படுத்தினார் பாபு! படுத்த படுக்கையாய்க் கிடக்கும் போதும் படுத்த வண்ணமே எடைப் பயிற்சி செய்துத் தன் தோள்பட்டை, மார்பு, மற்றும் கைத்தசைகளை உறுதிப் படுத்தி அவற்றைப் பதிவு செய்திருந்தார்! "மருதநாயகம்" படத்துக்குத் தன்னைக் கமல் தயாராகச் சொல்லிருப்பதாகத் தன்னம்பிக்கை துளிர்க்க பாபு அன்று பதிவு செய்த வரிகள் இப்போது கண்ணீர்த் துளிகளைத் துளிர்க்கச் செய்கின்றன! 

 கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ஒற்றைக் கட்டிலில் முடங்கி இன்று தன் வாழ்க்கையை முடித்து விட்டார்.... இத்தனை ஆண்டு காலம் இப்படி உயிர்த்திருப்பது உள்ளும் புறமும் உற்சாகமின்றி நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை உணர்ந்துதான் அதீதம் என்று நாம் அழைக்கும் அளவுகளைத் தாண்டிய போராட்ட குணம் கொண்டிருந்தார் என்று முதலில் குறிப்பிட்டிருக்கிறேன்! 

 சில கேள்விகளுக்குக் காலத்திடம் பதில் இருப்பதில்லை அப்படிப்பட்ட ஒரு கேள்விக்குறியாய்க் காலம் குறுக்கினாலும் ஒரு horizontal ஆச்சர்யக் குறியாய் வாழ்ந்து மறைந்திருக்கிறார் பாபு! 

 Rest in peace பாபு! 

 நம் வாழ்வின் நம்பிக்கை குன்றும் தருணங்களில் எல்லாம் நம் மனக்கண்ணில் உதித்து நம்பிக்கை நல்க என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் இந்த நம் உயிர்த் தோழன் பாபு! 

 வருத்தத்துடன், 
 பிரபு எம்


No comments:

Post a Comment

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)