Monday, September 22, 2025

"பொய்"யெனப் பெய்யும் மழை! - பகுதி -1

சிலந்திகளின் உமிழ்நீரைப் போன்றவை மனிதனின் பொய்கள்!

சில பொய்கள் சிலருக்கு நிஜ உலகின் தோல்விகளிலிருந்துத் தப்பித்து ஒளிந்துகொள்ளத் தனக்குத்தானே சுயசொர்க்கங்களாக செயலாற்றும்..... அடுத்தவருக்கு நேரடியாக தீங்குவிளைவிக்காத பொய்கள் இவை!

சில பொய்கள் ஆசைவலையை சிலந்தி வலையாய் விரித்து அதில் சிக்கும் சிறுபூச்சிகளை விழுங்கி உண்டு உடல்வளர்க்கும்! கவர்ச்சிகரமான இந்தப் பொய்கள்தான் இருப்பதிலேயே கேவலமானவை!

பொய்களில் இப்படிப் பலவகைகள் இருக்கலாம் ஆனால் அவற்றில் அற்பமாக வீழாமலிருக்க சற்றே விழிப்புடன் அறிவைச் சரியாகப் பயன்படுத்தினாலே போதும் அன்றாடம்  தனிப்பட்ட வாழ்வில் நாம் சந்திக்கும் பொய்களை எளிதில் கண்டறிந்தோ அல்லது வெறுமனே கடந்தோ சென்றுவிடலாம். ஆனால்..... ஒரு குழுவாய், இனமாய், குடிமக்களாய் நாம் பங்குபெறும் பொதுவாழ்வில் பரவும் அதாவது அனுதினமும் திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்களை இப்படி எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதுதான் கசப்பான நிஜம் ஏனெனில் அவை மிகவும் ஆபத்தானவை! பெருகிவரும் பேராபத்தாகப் பொதுவெளியில் பகிரங்கமாய்ப் பகிரப்படும் சமகால சமூகப் பொய்கள் மற்றும் அரசியல் பொய்களின் அபாயங்களைப் பற்றி ஆழமாக எச்சரிக்கவே இந்தப் பதிவு தொடங்கப்படுகிறது!




ஆட்சியை அபகரிக்க எவ்வளவு அசிங்கமான பொய்களையும் அனாயாசமாக அள்ளிவீசும் தலைவர்கள் அன்றும் கூட அரசியலில் இருக்கத்தான் செய்தார்கள், ஆனால் அவர்களின் பொய்கள் எல்லாம் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு மெய்யியலின் (reality) அடிப்படையிலாவது இருக்கும். அதாவது சந்தேகங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஆளுமைகளாகத் தங்களை அறிவித்துக்கொண்ட அந்தக்காலத் தலைவர்கள் தங்கள் மீதான வசீகரம் மற்றும் கண்மூடித்தனமான நம்பிக்கையைக் கடுகளவும் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளத் தெரிந்து வைத்திருந்தார்கள், அதன் காரணமாக மக்கள் அவர்களின் பொய்களை மெய்யென்று "நம்பித்தான்" மோசம் போய்க்கொண்டிருந்தார்கள்! ஆனால் இப்போதோ, ஒருவன் தன் அபிமானத் தலைவர் கூறுவது எல்லாம் அப்பட்டமான பொய்கள் என்று அவன் அறிவாலேயே தெளிவாக உணர்ந்தாலும், அதைப் பொய்யாகவே உள்வாங்கி அந்தப் பொய்யைக் காப்பாற்றத் தானும் அதில் பங்குகொண்டு மேலும் அதில் பல பொய்களைச் சேர்த்து, வெறும் தன் அபிமானத்தைக் கவர்ந்த கூட்டத்திடம் அதிகாரம் இருப்பதற்காகத் தன் வருங்கால அபிவிருத்திகளை எல்லாம் கூட அசராமல் அடகுவைக்கத் தயாராக இருக்கும் இந்த மனநிலைதான் இன்று நாம் பொதுவெளியில் சர்வசாதாரணமாகப் பார்க்கமுடிகிற பெரும் அவலம்! மேலுக்கு விசித்திரமாய்த் தோன்றும் இந்த ஆபத்தான போக்குதான் பல்வேறு நாடுகளிலும் பரவி, உலகையே தற்போது பேரழிவை நோக்கி அழைத்துச் செல்கிறது என்பது ஆழமான உண்மை! காரணம் மேலே குறிப்பிட்ட, சமகாலத்தின் அந்தவொரு வெறித்தனமான அபிமானமானது மக்கள் கூட்டத்தைப் பிரிவினைகளால் பிளவுபடுத்தி அதை ஒன்றுக்கு எதிராக மற்றொன்றைக் கட்டமைக்க விஷம் எனத்தெரிந்தும் தூவப்பட்ட பொய்விதைகளால் விளைவிக்கப் பெற்றது என்பதுதான் நஞ்சேறிய நிஜம்!

சிலந்திகளின் உமிழ்நீரைப் போன்றவைதான் மனிதனின் பொய்கள் என்று மேலே சொன்ன வாசகம் கூட அறிவியல்ரீதியாக ஒரு பொய்தான்! பெரும்பாலோனோர் நினைப்பது போல சிலந்தி தன் உமிழ்நீரால் கூடு கட்டுவதில்லை... அதன் அடிவயிற்றுப்பகுதியிலிருக்கும் ஒரு பிரத்யேக சுரப்பி (spinnerets) யில் சுரக்கும் "சிலந்திப் பட்டு" என்றழைக்கப்படும் ஒரு விதமான நூலால்தான் தன் கூட்டைக் கட்டுகின்றது! 
இப்படிச் சாதாரணமாக நாம் உண்மையென்று நம்பும் விஷயங்களே கூட ஆய்ந்து பார்த்தால் பொய்யெனத் தெரியும் சமகாலத்தில், நம் வாழ்க்கையையே நிர்மூலமாக்கும் வல்லமைபெற்ற பெரும் பொய்களைத் தயக்கமின்றி நுகரவும் அவற்றை மேலும் அலங்கரித்துப் பகிரவும் ஒரு பெருங்கூட்டம் தயாராக இருக்க, ஐடி செல்களும் மற்றும் வாட்ஸப் பல்கலைக்கழகங்களும் "பெய்" என்றால் பெய்யும் பெருமழையாகப் பொய்மழை விடாது பொழிந்து சமூகத்தின் குண்டு குழிகளிலெல்லாம் தேங்கி ஊரை, நாட்டை ,ஏன் உலகையே நாசப்படுத்தி வருகிறது! இந்தப் பொய்களின் அடிப்படையில் தொடங்கி ஆபத்து வரை தோண்டிப்பார்த்து அதைப் பதியவேண்டும் என்பதே எண்ணம்... இதில் எந்தவொரு அரசியல் கட்சியையோ, தலைவரையோ அல்லது நாடுகளையோ பெயரைக் குறிப்பிடாமல் எழுதுவதே நேர்மையாக இருக்கும்....

"பொய்"யெனப் பெய்யும் மழை... தொடரும்....!

உண்மையுடன்,
பிரபு எம்  


No comments:

Post a Comment

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)