சூர்யாவின் கூரிய விழிகளால் ராம்கோபால் வர்மா ரத்தம் தொட்டு எழுதியிருக்கும் ஓர் உண்மை சரித்திரம்.... இந்த "ரத்த சரித்திரம்"
ஹிந்தி தெலுங்கு மொழிகளில் இரண்டு பகுதிகளாக வெளிவந்த கதையை ஒரே படமாக சுருக்கித்தந்திருக்கிறார் தமிழுக்காக!
இரண்டு சட்டி அளவுக்குக் கிண்டிய காரக் குழம்பை கொதிக்க வைத்தே ஒரு சட்டிக்கு வற்ற வைத்துப் பரிமாறியிருப்பதால்... காரம் காய்ச்சி எடுத்திருக்கிறது.... அதுவும் மசாலா காரமில்லை... அசல் மிளகாய்க் காரம்!!
டூ இன் ஒன் பழிவாங்கல் கதை! வில்லனும் ஒரு ஹீரோதான்... ஹீரோவும் வில்லனுக்கு வில்லன்தான்!!!
பழிக்குப் பலிவாங்க அரிவாள் தூக்கும் கதைகளின் யுனிவர்சல் விதிகள் இரண்டு உள்ளன...
ஒன்று... குத்திக் குடலறுக்கும் கத்திக்கு ரத்தருசி திகட்டிவிட்டாலும் பகையையும் பழியையும் மிச்சம் வைத்துவிட்டு வரக்கூடாது...
இரண்டு... பலிபோடும் படுகொலைக்களத்தில் பெண்களும் குழந்தைகளும் பலியாகக் கூடாது..!
புகை மூண்டதும் இருள் வந்து சூழ்வதுபோலவே பகை மூண்டதுமே அரசியல் வந்து சூழ்ந்துவிடுவதும் ஒரு நிகழ்கால நிதர்சனம்தான்...! தூக்கிவளர்த்த அப்பா நல்லவரோ கெட்டவரோ கண்முன்னே கொடூரமாய்க் கொல்லப்பட்டு சிதைந்த உடலாய்க் கிடக்கும்போது மகன் கத்தியைத் தூக்கத்தான் செய்வான் ரத்தம்பார்க்க... இங்கே முதலில் அரிவாள் தூக்கும் மகன் விவேக் ஓபராய்... அம்மாவின் கண்முன்னேயே கழுத்தில் அரிவாள் இறக்கிச் சாகடிக்கப்படும் அப்பாவைப் பறிகொடுக்கும் அடுத்த மகன் சூர்யா!! (வெட்டுபவன் விவேக் ஓபராய்!) சூர்யாவோ தானும் உடனே ஆயுதம் தூக்காமல் கொல்லத் துடிக்கும் தன் தம்பியையும் அடக்குகிறார் தன் அம்மா மற்றும் தங்கைக்காக.... ஆனால் பழிவாங்கலின் இரண்டாம் விதையை (!) ஓபராய் மீறிவிட யாருக்காக சூர்யா அடங்கிப்போகிறானோ அவர்களையே சிதறிப்போன துண்டுகளாய்க் கண்முன்னே பறிகொடுத்தபின் ஓபராயின் உயிரை வாங்குவதற்காக மட்டுமே மீதமிருக்கும் உயிரைப் பணயம் வைக்கிறான்..."சாகுறதுக்கு பயப்படவில்லை அவனை சாகடிக்காம செத்துவிடுவேனோன்னுதான் பயப்படுறேன்" என்று சூர்யா உருமும்போது அந்தக் கண்களில் ஜீவனே இல்லாத கொலைவெறி மிரட்டும்.... எதிரிகளையெல்லாம் வேரறுத்துவிட்டு அரசியலில் ஆலமரக்கன்றாய் விழுதுவிடும் முயற்சியில் இருக்கும் ஓபராய்க்கு எதிரியாய் வேர்விட்டு முளைக்கிறான் சூர்யா.... ஓபராய் பிழைத்தானா..... சூர்யா ஜெயித்தானா... அதுதான் ரத்தசரித்திரம்!!
சூர்யா....... "நேருக்கு நேர்" படத்திலும் இவரின் முகத்தில் இரண்டு விழிகள் இருந்தன!
ஒரு சங்குப் பாலில் மிதக்கும் ஒற்றைத் திராட்சையாக மிதந்த கருவிழி களங்கமில்லாத கண்ணில் அங்கும் இங்கும் உருண்டு கேமரா வெளிச்சத்துக்குக் கண்கூசி கலவரப்பட்டது! அதே சூர்யாவின் அதே பால்விழிகளில் நஞ்சைக் கலந்தது பாலாவா? கௌதமா? இல்லை ராம்கோபால் வர்மாவா?? காந்தசக்தியால் இழுத்து நிறுத்தியதுபோல் கொலைவெறி பளபளக்கும் கண்கள் குத்தி நின்று மிரட்டுவது முற்றிலும் புதிது! சூர்யவின் கண்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள கேமராவின் மெனக்கிடலை அந்தப் பார்வையின் இன்டென்ஸிட்டியைத் திரையில் காணும்போது புரிந்துகொள்வீர்கள்!
விவேக் ஓபராய்.... எதிர்பார்த்திருக்கவில்லை இந்த முகம் பாரித்தால ரவிபோன்றதொரு எக்ஸ்ப்ளோஸிவ் பெர்சனாலிடியாக இத்தனை பவர்ஃபுல்லாக வெளிப்பட்டிருக்கும் என்று... வெறியைக் காட்டுவதில் விவேக் ஓபராய் தன்னுடைய மேக்ஸிமம் பொட்டன்ஷியல் காட்டியிருந்தாலும் டிஸ்கவரி சேனலில் பார்த்திருக்கும் வேட்டைச் சிங்கப் புலிகளின் கண்ளில் எறியும் தீயைமிஞ்சும் பார்வையால் சூர்யா இவரை ஓவர்டேக் செய்துவிடுகிறார் என்றாலும் விவேக் ஓபராயின் கதாபாத்திரம் காட்டும் மெருகேறிய மெச்சூரிட்டி அபாரம்! இறுதிக்காட்சியில் திடீரெனக் கண்முன் தோன்றி நிற்கும் சூர்யாவை நோட்டம்விடும் காட்சியில் அந்தக் குட்டிக் கண்களால் தானும் ஏதோ செய்திருப்பார்! தனக்கெதிராக ப்ரியாமணி தேர்தலில் போட்டிபோடுகிறார் என்று தெரிந்ததும் தன் மீசையின் ஒற்றைமுடியை நறுக்கிப்போடும் அலட்சிய பாடிலேங்குவேஜ் செம வில்லத்தனம்!
சுதீப் கிடைத்திருக்கும் ரொம்பச் சிறிய வாய்ப்பிலும் தன்னுடைய மேன்லினஸ்ஸைக் காட்டியிருக்கிறார் ஆனால் இழுத்துவைத்து வீண்டிக்கப்பட்டிருக்கிறார் இந்த கன்னட ஸ்டார்! மேக்கப் இல்லாத இயல்பான பளபளப்பினால் ப்ரியாமணி கவர்கிறார் தன்னுடைய பாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார்... குத்துவிளக்கைப் போல ராதிகா ஆப்தே இரண்டு காட்சியில் மட்டும் நடக்க வாய்ப்பு... நிறைவாகத் துடித்திருக்கும் ஹோம்லி ப்யூட்டி! கிட்டி, கோட்டாசீனிவாசராவ், வித்யார்த்தி என எல்லாமே பெரிய டிக்கெட்டுகள் சின்னச் சின்ன சந்துபொந்துகளிலும் புகுந்து மிரட்டுகின்றனர் பெருசுகள்!!
ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தை ரசித்தேன்... நாட்டில் ஒரு காட்டுவாழ்க்கையைப் படம்பிடித்திருக்கும் மனிதர் இவ்வளவு ரா ஆக்ஷனை சாவுவிழுங்கும் தருணத்தின் விழிகளின் மிரட்சியாலும், வெறியில் ஆடும் முகத்தின் தசைகளாலும், ஒவ்வொரு கொலையின் வீரியத்தையும் வெவ்வேறு கோணத்தில் காட்சிப்படுத்தி புஜங்களைத் துடிக்கவைத்திருக்கிறார் பார்வையாளனுக்கும்! நடிகர்களை நம்பி க்ளோஸப் காட்சிகளாலேயே ஃபோர்ஸ் காட்டியிருப்பது AN RGV Film! என்று மார்தட்டுகிறது!
இசை... பாடல்களையே பின்னணி இசையாய்ப் பயன்படுத்தியிருப்பது படத்தைக் காப்பாற்றியிருக்கிறது (ஒரு பாடல்காட்சி இருந்திருந்தால் கூட படம் பப்படம்தான்!) அதைத்தவிர சொல்லிக்கொள்ளும்படி இசையில் ஒன்றும் இல்லை பட் பாஸ்மார்க் வாங்கியிருப்பது நிதர்சனம்..... ஃபெயிலாவது ரதோட்டின் ஒளிப்பதிவுதான் :-( க்ளோஸ் அப் காட்சிகளில் துல்லியத்தைத் தவறவிட்டிருக்கிறார்.... கோணங்களில் இயக்குனரின் கண்ணாக அவதனித்து இருந்தாலும் ஆழப்பார்வையைக் காட்ட சரியான லென்ஸ்களைப் பயன்படுத்தத் தவறவிட்டுவிட்டாரோ எனத் தோன்றுகிறது.... சூர்யா- விவேக் ஓபராய் சந்தித்துக்கொள்ளும் காட்சியில் இருட்டுடன் கைகோர்த்து விளையாடியிருப்பதை மட்டும் ரசிக்கமுடிகிறது... சூர்யாவின் கண்களிடம் கேமரா தோற்றுப்போகிறது... ரதோட் கலர் மற்றும் ஷேட்களுடன் இன்னும் கொஞ்சம் தனித்துவமாக வெளிவந்திருந்தால் ரத்தம் இன்னும் சூடாகக் கொத்திருக்கும்.....
எடிட்டிங் மிக நன்று... இரண்டு திரைக்கதைகளாக எழுதி இயக்கிவிட்டு மீண்டும் எடிட்டர் ரூமில் உட்கார்ந்து கத்திரிபோட்டு ஒரு திரைக்கதையாய் எப்படித்தான் வடித்தாரோ ஆர்ஜிவி! இருப்பினும் மாறிமாறி வெட்டுவதும்... ஸ்கெட்சுகூடப் போடாமல் சினிமாத்தனமாக அடுத்தடுத்து போட்டுத்தள்ளுவதும் நிச்சியம் டெம்போ குறைந்து நெழியவைத்துவிடுகிறது.... ஸ்லோமோஷன் காட்சிகளையெல்லாம் நார்மல் ஸ்பீடில் காட்டியிருந்தால் படத்தின் நீளம் பாதியாய்க் குறைந்திருக்கும்! அந்தளவுக்கு படம்முழுக்க ஒன் பை டூ ஸ்பீடில்தான் நகர்கிறது.... அடிக்கடி தலைகீழாகக் சுழலும் கேமரா ஆமைவேகத்தில் சுழன்று கழுத்தை நெறிக்கிறது... ஒரு கேமரா யுக்தியாக முயற்சி செய்திருக்கும் விஷயம் தியேட்டர் ஆபரேட்டரின் தவறோ என்று யோசிக்க வைப்பது அபத்தம்!
பழிவாங்கலைப் படம் வரைந்து விளக்குவதற்கு இந்திய சினிமாவின் ரைட் பர்சன் ராம்கோபால்வர்மாதான் என்று மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் என்று சொல்லமுடியும்.... அவ்வளவுதான்!
நான் பல காட்சிகளை ரசித்தேன் சில சமயம் நெழிந்தேன்... சூர்யாவை மட்டுமே முழுக்க முழுக்க வெறித்து ரசித்தேன்... அடுத்த சூர்யாவின் படத்துக்கு அநேகமாக அவர் திரையில் தோன்றும் முதல்காட்சிக்கு விசில் அடிப்பேன் என்று நினைக்கிறேன்...!
மீண்டும் ஒருமுறை.....
இது சூர்யாவின் விழிக்கூர்மையில் ரத்தம் தொட்டு எழுதப்பட்டிருக்கும் ஓர் உண்மை சரித்திரம்!
ரத்தசரித்திரம் - Worth watching but watch at your own risk... ;-)
அன்புடன்
பிரபு எம்

payamaa irukke. ennai maathiri kuzhanthainga paakkalaamaa?
ReplyDeleteவிமர்சனம் நல்லா இருக்குங்க..
ReplyDeleteஅதிலும்... அந்த ரெண்டு சட்டி காரக்குழம்பு... உதாரணம்.. செம செம.. :-)))
பழிவாங்கலைப் படம் வரைந்து விளக்குவதற்கு இந்திய சினிமாவின் ரைட் பர்சன் ராம்கோபால்வர்மாதான் என்று மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் என்று சொல்லமுடியும்.... அவ்வளவுதான்!
ReplyDelete.....படத்துல "கொலைவெறி" தாண்டவம் ஆடுதாமே!
ஹாய் ரமேஷ்....
ReplyDeleteநல்லவேளை நண்பா ஞாபகப் படுத்தினீங்க....
படத்துக்கு சென்சார் சர்டிஃபிகேட் "A" அதை ப்ரீச் பண்ணிட்டு குழந்தைகளைக் கூட்டிட்டுப் போகவேண்டாம்...
அந்த அனுபவம் உங்களுக்கே நல்லா இருக்காது...
அதுசரி... ட்ரைலரைப் பார்த்துட்டும் குடும்பத்தோட போற டெரர் குடும்பங்கள் நம்ம ஊரில் இருக்குதா என்ன??!!
//விமர்சனம் நல்லா இருக்குங்க..
ReplyDeleteஅதிலும்... அந்த ரெண்டு சட்டி காரக்குழம்பு... உதாரணம்.. செம செம.. :)))//
ஆனந்தி அவர்களுக்கு வணக்கம்.. :)
ரொம்ப நன்றிங்க உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்...
hahhaa... உண்மைதாங்க... படம் ஆந்திரா காரம்!! :-) நன்றி :)
//.....படத்துல "கொலைவெறி" தாண்டவம் ஆடுதாமே! //
ReplyDeleteஹாய் சித்ரா அக்கா...
ஆமா அக்கா... கொலைவெறி, ரத்தவெறி எல்லாமே ரொம்ப அதிகம்தான்...
ஆனா நெஜத்துல நடந்ததும் நடக்குறதும்தான் என்பதையும் மறந்துவிடக்கூடாது...
கத்தியையும் அரிவாளையும் ஸ்டைலாகத் தூக்கிப்போட்டு கேட்ச் பிடித்து சிரிச்சுக்கிட்டே கொலைசெய்யுற மாதிரி மசாலா படங்களைவிட... ரத்தச் சக்தியையும் கொலைசெய்யுற கண்களையும் அப்படியே காட்டி அருவருக்கச் செய்து சாதாரண மனுஷன் அண்டாத தூரத்துல இருக்குற இந்த மாதிரி சம்பவங்களை அந்த தூரத்திலேயே வெச்சுக் காட்டுறது பரவாயில்லன்னு தோணுது...
//ரத்தசரித்திரம் - Worth watching but watch at your own risk... ;-)/
ReplyDeletewe dont want to take high risk shotssssssssss....whether it is best bowl...:)))
//we dont want to take high risk shotssssssssss....whether it is best bowl...:)))//
ReplyDeleteWell said my clever sister.. :-)
mokka padam.. idhukku ippdi oru review-a?
ReplyDeleteரத்த சரித்திரம் படத்துக்கு உங்கள் விமர்சனம் 'சரித்திரம்'.
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றி எம் எல் ஏ சார் :-)
ReplyDeleteடைரிக் குறிப்புகள் எழுதி ரொம்ப நாள் ஆச்சே....
அடுத்த பதிவு எப்போ நண்பா?